தீராக் காதலன்
ஓவியம்: மு. சுந்தரன்
தான் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டிற்காக இறுதி வரை திருமணமே செய்துகொள்ளாத ராம் மனோகர் லோகியா தொடங்கியது பிரஜா சோசலிஸ்ட் கட்சி. கொடுமுடி க.ரா. நல்லசிவம் அதன் தொண்டராக இருந்து, சட்டமன்ற உறுப்பினராகிப் பின்னர் கட்சியின் அகில இந்தியத் தலைவரானவர். நல்லசிவத்துடன் கூடவே இருந்தவர் சென்னிமலை தொட்டம்பட்டி சின்னத்தம்பி. தமிழ் மொழிக்காகப் போராடிக் கோவைச் சிறையில் இருந்தவர்; மொழிப்போர் தியாகி.
முழுநேர அரசியல் ஈடுபாடு காரணமாகக் குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்தார் சின்னத்தம்பி, மூன்று பெண் ஒரு ஆண் குழந்தை கொண்ட குடும்பப் பொறுப்பு முழுதையும் துணைவியரான அருக்காணி அம்மாள் சுமந்தார். 1957இல் பிறந்த அந்த ஆண் குழந்தைதான் கதிர்வேல். சி.
அப்பாவின் அரசியல் தொடர்பு காரணமாக வீட்டில் இருந்த துண்டுப் பிரசுரங்கள், கூட்ட அழைப்பிதழ்களைப் பார்த்தும் கட்சிக்காரர்களின் விவாதங்களைக் கேட்டும் வளர்ந்தார். சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் பள்ளியில் 11ஆம் வகுப்புவரை பிற்காலத்தில் தேவிபாரதியாக உருமாறிய ராஜசேகரனுடன் பயின்றார். இருவரும் தம் பாடசாலைப் படிப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டனர்.
பள்ளிக்காலத்தில் இருந்தே தேவிபாரதியையும் கதிர்வேலையும் அன்பும் வறுமையுமே இணைத்து இருக்கின்றன; பிணைத்து இருக்கின்றன. பள்ளிக் காலத்தில் பலநாட்கள் மதிய உணவாக ஒரே ஒரு ‘பிளம்கேக்’ கை இருவரும் பகிர்ந்துண்டு பசியாறி இருக்கிறார்கள். ஆமாம், அதற்குக் காசு? இரவெல்லாம் தேவிபாரதி திரையரங்கின் முறுக்கு விற்பனையாளர் அல்லவா? அந்தப் பெரும் செல்வத்தைக் கொண்டுதான்.
தேவிபாரதியின் தொடர்பால் இலக்கிய நூல்களை வாசித்த கதிருக்கு அது தந்த பார்வையாலும் வீட்டுச் சூழல் தந்த சிந்தனையாலும் இடதுசாரி இயக்கத்தின்பால் ஈர்ப்பு ஏற்படுகிறது. இருவரும் முழுக்க முழுக்க இடதுசாரி இயக்கத்திற்காகத் தங்களை அர்ப்பணிக்கிறார்கள். கட்சியோடு இணைந்து சென்னிமலை, பெருந்துறைப் பகுதிகளில் கூட்டங்கள், நாடகங்கள், உரையாடல்கள் நிகழ்த்தி வந்தனர். மக்களை ‘அரசியல் விழிப்புணர்வு’ பெறச் செய்தே தீருவது என்ற மாபெரும் வேள்விக்குத் தங்கள் மெய்யை உருக்கி ஊற்றிக்கொண்டனர்.
இன்னும் தீவிரச் செயல்பாடு தேவையென்பதை உணர்ந்ததால் தமிழ்நாடு மார்க்சிய லெனினிஸ்ட், புரட்சிகர முன்னணி எனத் தங்களை இணைத்துக்கொண்டு காவல்துறையின் தேடுதல் பட்டியலில் வரும் அளவு உயர்ந்தனர். அப்போது, இவர்களோடு ஓவியர் உலகநாதனும் இணைந்திருந்தார்.
சென்னிமலைப் பகுதியின் ஒதுக்குப்புறமான திரையரங்கு ஒன்றில் தொடர்ந்து ஆபாசப் படம் திரையிடப்பட்டு வந்தது. கதிர்வேல் சார்ந்த இயக்கத்தினர் “ஆபாசத் திரைப்படங்களைத் திரையிடாதே! காவல்துறையே கண்டும் காணாமல் இருக்காதே!” எனச் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். கலைத்தாகத்தைத் தீர்த்துவந்த திரையரங்கத்தினர் காவல்துறையோடு இணைந்து வழக்குத் தொடுத்தனர். வழக்கினை விசாரித்த குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி இவர்களை விடுவித்துத் தீர்ப்பு வழங்கிவிட்டு இவர்களைத் தனியாக அழைத்து, “இப்படியெல்லாம் காவல்துறை வழக்குப் போடுகிறதே எனப் பயப்படாதீர்கள். ஊருக்கு உங்களைப்போல் நாலு பேராவது வேணும்” எனக் கூறியிருக்கிறார்.
கதிர்வேலிற்குப் பள்ளிப் பருவத்தில் ஓவிய நாட்டம் இருந்துள்ளது. தாமாகவே முயன்று பயிற்சி எடுத்து வரைந்து பழகியிருக்கிறார். அரசியல் ஈடுபாட்டுக்கு நிகராகக் கலையின் மீதும் பற்றுக்கொண்டிருந்தார். இந்த ஓவியக் கலையை வளரும் இளம் தலைமுறையினர் வசம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறைகொண்டிருந்தார்.
தேவிபாரதி ஈரோடு வந்த பிறகு கதிர்வேலின் நட்பு வட்டம் விரிகிறது. ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில் டெலோ இயக்கம் நடத்திய விடியல் இதழுக்காகக் கவிஞர் (பாரதிவண்ணன்) கு. ரவிச்சந்திரன் மூலம் நான்கைந்து அட்டைப் படங்கள் வரைந்து தந்திருக்கிறார். ஈரோட்டுத் தொடர்பால் விடியல் திரைப்படச் சங்கத்தின் வழக்கறிஞர் சிதம்பரன்.கி, மருத்துவர் வெ. ஜீவானந்தம், மனித உரிமைச் செயற்பாட்டாளர் கண. குறிஞ்சி ஆகியோரோடு நட்பு ஏற்படுகிறது. இந்நட்பால் விடியல் திரைப்படச் சங்கம் (திரைப்படம் திரையிடல்), தமிழர் கொற்றம் (ஆலயங்களில் தமிழ்), தூரிகை ஓவிய அமைப்பு (பயிற்சிப் பட்டறைகள், கண்காட்சிகள்), பார்வை இலக்கிய அமைப்பு (இலக்கிய ரசனையை மக்களிடம் ஏற்படுத்துதல்), மக்கள் சிவில் உரிமைக் கழகம் (உரிமைக்கான எல்லாப் போராட்டங்களிலும் பங்கு பெறுதல்), சமூக நீதிக் கூட்டமைப்பு அமைத்தல், (செப்டம்பர் 17 சமூக நீதி நாள் ஊர்வலங்கள்), சிந்தனையாளர் மன்றம் உருவாக்குதல் (கருத்தரங்குகள்), உலகத் தாய்மொழி நாள் ஊர்வலம் நடத்துதல் ஆகியவற்றுடன் மருத்துவர் ஜீவா நடத்தும் சூழல் சார்ந்த கூட்டங்கள், தேவிபாரதி அல் அமீன் பள்ளியில் நடத்திய கலைத்திருவிழா என இயக்கங்கள் - அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகள், கூட்டங்கள்,போராட்டங்கள், பேரணிகள், விழாக்கள் என அனைத்திலும் தன்னலமற்ற அர்ப்பணிப்பான தொண்டால் கதிர்வேல் பங்கு பெறவும் பணியாற்றவும் முடிந்திருக்கிறது.
1990களில் அருங்காட்சியகமும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழுவும் இணைந்து ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கான ஓவியப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தின. பயிற்சி தர மதுரையிலிருந்து ரபீக் அகமது, கே.சி. முருகேசன் ஆகிய இரு ஓவியர்கள் வந்திருந்தனர்.
பயிற்சியில் பங்கேற்க வைப்பதற்காக எங்கள் பள்ளியின் மாணவர்களை அழைத்துச் சென்றிருந்தேன். கதிர்வேல் தன் சொந்த முயற்சியில் சில மாணவர்களைப் பயிற்சிக்குக் கூட்டிவந்திருந்தார். இதுவே நான் கதிர்வேலைச் சந்தித்த முதல் நிகழ்வு.
இரு நாட்கள் நடைபெற்ற பயிற்சியின் முடிவில் “நீங்களெல்லாம் இணைந்து ஏன் ஒரு ஓவிய அமைப்பைத் தொடங்கக் கூடாது?” என்று ரபீக் உரையாடலைத் தொடங்கினார். பயிற்சிக்கு வந்திருந்த ஓவியர்கள் சிலரும் அக்கருத்திற்கு உடன்பட்டோம்.
விரைவில் ஒருங்கிணைப்பு தொடங்கியது. மருத்துவர் ஜீவா, சிதம்பரம். கி, கண. குறிஞ்சி ஆகியோரின் வழிகாட்டுதலோடும் ஒத்துழைப்போடும் தூரிகை ஓவிய அமைப்பு தொடங்கப்பட்டது. கதிர்வேல் அதன் செயலர். உலகநாதனும் நானும் துணைச் செயலாளர்கள்.
ஈரோட்டில் தொடங்கப்பட்ட தூரிகை அமைப்பு பிறகு பலகாலம் செயல்படாமல் இருந்தாலும் ‘தூரிகை’ யைக் கைவிடாது தனது தனிப்பட்ட முயற்சியில் இறுதிவரை சென்னிமலையில் தொடர்ந்து மாணவர்களுக்குப் பயிற்சி தந்துகொண்டுதான் இருந்தார் கதிர்வேல். மேலும் சில அமைப்புகளோடு இணைந்து கண்காட்சிகள் நடத்தி மாணவர்களுக்கு, இளம் ஓவியர்களுக்கு ஊக்கம் தரும் செயலைத் தொய்வின்றிச் செய்தார்.
தேவிபாரதி காலச்சுவடின் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் இவர் அந்த இதழுக்கு விற்பனைப் பிரதிநிதியாகச் சில காலம் பணியாற்றினார். புத்தகக் கண்காட்சிகளில் காலச்சுவடு அரங்கிற்குப் பொறுப்பாளராக இருந்தார். அக்காலகட்டத்தில் பள்ளி நூலகங்களில் அவ்விதழைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று சந்தாதாரர்கள் ஆக்கினார். ஒரு முறை கதிர்வேலும் நானும் அப்போது ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த பொன். குமாரைச் சந்தித்து இதுகுறித்துப் பேசியிருக்கிறோம்.
கதிர்வேல் பள்ளிக் காலம் தொட்டு இறக்கும்வரை தேவிபாரதியின் உற்ற தோழராக இருந்தார்.
தேவிபாரதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தபோது தேவிபாரதியின் துணைவியாரும் கதிர்வேலும் அவரை மாதக்கணக்கில் பார்த்துக்கொண்டனர். தேவிபாரதியும் கதிர்வேலும் உடலும் உயிருமாகவே இருந்தனர்.
கதிர்வேலைப் பற்றித் தனி நூல் ஒன்றை எழுதும் அளவு நட்பும் தொடர்பும் நினைவுகளும் கொண்டவர் தேவிபாரதி. அவர் அதை ஒருநாள் செய்வார் என நம்புகிறேன். அவர் ஏற்கெனவே எழுதிய ‘புழுதிக்குள் சில சித்திரங்கள்’ நூலில் கதிர்வேல் உலாவருகிறார்.
கதிர்வேலைப் பற்றி எழுத எழுதித் தீராத பல செய்திகள் இருப்பினும் எல்லாவற்றின் சாரம்: அன்பு, அதிர்ந்து பேசாத குணம், சிரித்த முகம், எளிமை, தன்னலமற்ற தன்மை, உதவும் மனப்பான்மை ஆகியவைதான் இருக்கும்.
இவ்வளவு பண்பு நலன்கள் இருந்தும் இறுதிவரை கதிர்வேல், ராம் மனோகர் லோகியா போல திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்குக் காதல் இருந்து கைகூடாமல் போயிருக்குமோ? அப்படியில்லை. கட்சி, கலை, கருணை என்றே வாழ்ந்த அவருக்குக் கொள்கை. ஓவியம், தொண்டு என மூன்று காதலிகள் இருந்தனர். அவர்களோடுதான் அவர் இறுதிவரை முரண்பாடின்றி வாழ்ந்தார்.
கதிர்வேல் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு, பனியம்பள்ளி சிவகுமாரின் பராமரிப்பில் மருத்துவமனையில் படுத்திருந்தபோது கண. குறிஞ்சி அவரைக் காணச் சென்றார். பேச இயலா நிலையில் கதிர்வேலின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு வழிந்திருக்கிறது. அக்கண்ணீர், “இனி நான் குறிஞ்சிக்கு உதவ இயலாதா?” என்றே வழிந்திருக்கும்.
கொடுமணலைக்கூட அகழ்ந்து ஆய்ந்தால்தான் மணிகள் கிட்டும். ஆனால், தொட்டம்பட்டியின் மேற்பரப்பிலேயே ஒரு கலை நன்மணி உலவிக்கொண்டிருந்தது. இப்போது அதையும் புதைத்துவிட்டோம்.
மின்னஞ்சல்: nilasundaran@gmail.com