கடிதங்கள்
காலச்சுவடு ஜனவரி 2024 இதழில் நயன் ஜோக் லஹரியின் விரிவான நேர்காணல் படித்தேன். பண்டைய இந்தியாவைப் பற்றி தொடர்ச்சியாக ஆழ்ந்த பல நூல்களை எழுதி வரும் அவரிடம் மருதன் மேற்கொண்ட நேர்முகம் அருமை. குறிப்பாக மாமன்னன் அசோகர் பற்றிய அவரது ஆய்வு முடிவுகள் பல புதிய வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளன. ‘‘புத்தகத்துக்கு வெளியில்தான் வரலாறு நீண்டு படர்ந்திருக்கிறது” என்பது முக்காலும் உண்மை. ‘‘அசோகரின் மன மாற்றம் வியப்பூட்டுகிறதென்றால் மோடியின் மௌனம் அதிர்ச்சியூட்டுகிறது.” நாம் என்ன செய்யப்போகிறோம்? தமிழகத்தை ஆண்ட மன்னர்களை பற்றி இப்படிப்பட்ட விரிவான ஆய்வை எவரேனும் மேற்கொண்டால் தமிழருக்கு அது பெருந்தொண்டாக இருக்கும். ”ஆரியர், அந்நியர் என்றெல்லாம் இனியும் நாம் யாரையும் அழைக்க முடியாது; நாம் அனைவரும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் இல்லையா!” சரியான கேள்வி. இக்கருத்து இன்னும் தமிழக வரலாற்று ஆசிரியர்களிடமும் பாடப் புத்தகங்களிலும் சென்றடையவே இல்லை. அதனால் ஆரியர் திராவிடர் வெறுப்பு இன்னும் தொடர்கிறது. இது எப்போது மாறும்? இவரைப் போன்ற ஆய்வாளர்கள்தான் இதற்கு வழிகாட்ட வேண்டும். பேட்டி அருமையிலும் அருமை. ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள். லாகிரி நூல்களை இனிமேல்தான் நான் தேடிப் படிக்கப் போகிறேன்.
வைத்தியநாதேஸ்வரன்
நெய்வேலி
“வரலாறு முக்கியம் பாஸ்” என்பது இன்றைய தலை முறைக்கு அத்தியாவசியமான பஞ்ச் டயலாக். ஆனால் அக்காலப் புலவர்கள்முதல் இக்கால எழுத்தாளர்கள் வரை, எதிர்வாதத்தை ஏற்கும் பக்குவமில்லாத ஈகோ போரால் வாசகனுக்கு எந்த பிரச்சினையிலும் தீர்ந்த தீர்வு கிடைப்பதேயில்லையே! தமிழகம் வந்த காந்தியை, பாரதியார் சந்தித்தாரா என்பதுமுதல், நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்ற வதந்திவரை. அந்தவகையில் இளங்கோவனும் மாலனும் செய்த எதிர்விவாதத்தில் வாசித்தவனுக்குத் திருப்தி கிடைத்ததா என்பதையும் கவனிக்க வேண்டும். பிராமணீயத்தை முழுமூச்சாக எதிர்த்த பெரியார், மணியம்மை திருமணத்திற்கு ராஜாஜியின் கருத்துகேட்க திருவண்ணாமலைவரை போவானேன்? பிராமணரல்லாதவர்கள் யாரும் பெரியார் திடலில் கிடைக்கவில்லையா? கல்லுளி பட்டர் என்று கடுமையாகச் சாடிய திமுக, ராஜாஜியுடன் கூட்டணி வைத்துதான் ஜெயிக்க வேண்டுமா?
இந்தி எதிர்ப்புப் போராட்டமும், கடைசி காங்கிரஸ் முதல்வர் பக்தவத்சலம் ஆட்சியின் அவலமும், அரிசிப் பஞ்சமும், காமராஜர் போன்ற ஆளுமையின் தலைமை தொடராததும்தான், காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணமாகும். மொழி, இன உணர்வால் திராவிட இயக்கம் வலிமை பெற்றதால் இன்றைய தேர்தல் வெற்றிவரை தேசிய கட்சிகளுக்கு இடமில்லாமல் போனது. வரலாற்றுத் தகராறுகளுக்குச் சுருக்கமான முடிவோடு, அதன் வழியில் நெருங்கிவரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிகழ்காலத் தேவைகளுக்குத் தெளிவான தீர்வைக் காண்போமா?
அண்ணா அன்பழகன்
அந்தணப்பேட்டை.
பழ. அதியமான் பிப்ரவரி 2024 இதழில் எனது எதிர்வினைக்கு அளித்த விளக்கங்கள் சிலவற்றிற்குப் பதில் கூற விழைகிறேன்.
1967 காங்கிரஸ் தோல்விக்குப் பெரியார் காரணமென்று நாங்கள் தவறாக நினைத்துக் கொண்டதாகக் கூறுகிறார். அவரது கட்டுரையில், பெரியார் காங்கிரஸிலிருந்து விலகியபோது ராஜாஜி கூறிய கல், தலை ஒப்பீட்டைக் கூறியவர், ‘அதைத் தன் மண்டைச் சுரப்பால் மாற்றிக் காட்டியவர் பெரியார். தலை உடைந்ததா, கல் நொறுங்கியதா என்பது 1967இல் மக்களுக்குத் தெரிந்தது’ என்று கூறியதை, காங்கிரஸ் தோல்விக்குப் பெரியார் காரணமல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும் என்கிறாரா? பெரியாரின் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் கூடாது என்றும் கூறுகிறார்.
அன்றைய காங்கிரஸின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தவை அரிசித் தட்டுப்பாடு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடுகள், எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டது, திமுக அமைத்த ஏழு கட்சிக் கூட்டணி, அண்ணாதுரையின் ‘மூன்று படி அரிசி’ வாக்குறுதி ஆகியவை ஆகும் என்பது அரசியலை ஊன்றிக் கவனித்தவர்களின் முடிவாகும்.
ராஜாஜி தேர்தலில் போட்டியிட்டதில்லை என்பதற்கான எனது கருத்தைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். பட்டதாரிகளும் மக்கள்தானே! அத்தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை குறைவு என்று சொல்லலாம். அது மேலவைத் தொகுதி. அச்சென்னைப் பட்டதாரிகள் தொகுதியில் இருந்த 8000க்கு மேற்பட்ட வாக்காளர்களை மயிலாப்பூர் என்ற குறுகிய வட்டத்துக்குள் (மறைமுகமாக அவர்கள் அனைவரையும் ஒரு சாதிக்குள் அடக்குகிறார்) அடைத்தது என்ன நியாயம்?
சென்னை மாகாண சங்கம் எந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை என நான் கூறியதாகத் தவறாகக் கூறுகிறார். நான் கூறியதை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கட்டும். “ராஜாஜி ‘சென்னை மாகாண சங்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பினை ஏற்படுத்தினார் என்கிறார். ஆனால் எந்த ஆண்டு என்று தெரிவிக்கவில்லை” என்றுதான் நான் கூறியுள்ளேன். அதற்கான விளக்கமாக ஆர். முத்துக்குமாரின் நூலில் இருந்து ஆண்டினை எடுத்துக் கூறியதுடன், அது குறித்த மேலதிகத் தகவல்களையும் கூறியுள்ளேன். அதில் ராஜாஜி பெயர் இடம் பெறவில்லையென்றும் கூறியுள்ளேன். அப்படியிருக்க நான் முத்துக்குமாரையும் நம்பவில்லை என்ற முடிவுக்கு வந்தது எப்படியோ? ராஜாஜி தொடங்காத ஒரு சங்கத்தோடு அவரைத் தொடர்புபடுத்திப் பெரியார், பின்னாளில் குற்றம் சாட்டினாரென்றால் அது பொய்யான குற்றச்சாட்டு என்பது எனது வாதம். அதைப்பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. சேரன்மாதேவி சம்பவத்தில் பெரியார் ராஜாஜி குறித்துவைத்த விமர்சனத்தினையும் இதே கண்ணோட்டத்தில்தான் எடுத்துக்கொள்கிறேன்.
‘வைக்கம் போராட்டம்’ நூலை அவர் எழுதியதாகக் கூறியதைக் கேலி செய்கிறார். காலச்சுவடு வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் அட்டையில் அவரது பெயர் உள்ளதே, அது ஏன்? அப்புத்தகத்தை நான் முழுமையாகப் படிக்கவில்லையென்றாலும், கூகுளிலும் முகநூலிலும் அப்புத்தகத்தில் இடம் பெற்ற தகவல்களைப் படித்துள்ளேன்.
ஜனசங்கத்தை அடையாளப்படுத்த சோவின் பெயரை உபயோகப்படுத்தினேன் என்கிறார். ‘விவரமறிந்த காலச்சுவடு வாசகர்களுக்கு ஜனசங்கத்தின் அன்றைய இந்திய/மாநிலத் தலைவர்கள் பெயரைக் கூறினால் புரியாது, அக்கட்சியின் உறுப்பினராகக்கூட இல்லாத சோவின் பெயரைக் குறிப்பிட்டால் தான் புரியும்’ என்று ஆய்வு செய்து முடிவெடுத்ததை எண்ணி வியக்கிறேன். தமிழ்நாட்டில் ஜனசங்கத்தோடு காமராஜர் கூட்டணி வைக்கவில்லை என்ற எனது ஆதாரபூர்வத் தகவல் குறித்துப் பதில் இல்லை. அவரால் சமாளிக்க முடியாத விசயங்கள் குறித்து (1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியாரின் நிலை, ராஜாஜி திராவிட நாடு கோரிக்கையை ஆதரித்தார்) பழமொழியைக் கூறி நழுவுகிறார்.
சீ. இளங்கோவன்
பிப்ரவரி இதழில் வெளியான ‘பாவலரேறு ச. பாலசுந்தரனார்’ குறித்த சுடர்விழியின் கட்டுரையில் நினைவு நூற்றாண்டு என அச்சாகியிருந்தது. அது ‘நூற்றாண்டு’ என அச்சாயிருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம்.
- பொறுப்பாசிரியர்