தீண்டாமையின் வேர்களைத் தேடி
சந்நியாசமும் தீண்டாமையும்
(சமூக வகைப்பாடுகள், சமூகக் குழுமங்கள்
பற்றி சில குறிப்புகள்)
ராமாநுஜம்
பரிசல் வெளியீடு
அரும்பாக்கம்
சென்னை
பக்.244
ரூ.190
ராமானுஜத்தின் ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ நூல் அடிப்படையில் தீண்டாமை, சாதி ஆகியவற்றின் தோற்றக் காரணம் பற்றி விவாதிக்கிறது. சுந்தர் சருக்கை, வீணா தாஸ், பேட்ரின் ஒலிவெல் ஆகியோரின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு துறவறம், தீண்டாமை ஆகியவற்றின் தோற்றம், பண்பு மாற்றம் பற்றிய தீவிர விசாரணையை மேற்கொள்கிறது. ஆறு பகுதிகளைக் கொண்டுள்ள இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் அடர்த்தியான கருத்தாக்கங்களையும் முந்தைய சாதி, தீண்டாமை பற்றிய ஆய்வுகளையும் கொண்டு பண்டைய பிரதிகள் வாயிலாக விவரிக்கிறது.
சாதியம் பற்றிய ஆய்வுகள் சுத்தம்-அசுத்தம் சார்ந்தும் பார்ப்பனியப் பிரதிகள் சார்ந்தும் விவாதிக்கப்படுகின்றன. வேதப் பார்ப்பனியத்தை எதிர்க்க துறவற மரபைப் பௌத்தம், சமணம் போன்றவை முன்வைத்தபோது துறவறம் எவ்வாறு எதிர்ப்பு வடிவமானது, அதன் தோற்றம் என்ன, சமூகப் பங்களிப்பு என்ன போன்றவற்றை ராமானுஜம் விவரிக்கிறார்.
பொதுவாகத் தோற்றம் பற்றிய ஆய்வுகளால் எதையும் ஸ்தூலமாக நிரூபிக்க இயலாது. அவை தன்னளவில் விவாதங்களை மட்டுமே முன்வைக்க இயலும். இங்கு துறவறத்தின் தோற்றம் பற்றி விவாதிக்க இந்தோ-ஆரியக் குழுமங்களின் குடும்பப் பரிமாற்ற வளர்ச்சி பற்றிய எந்த விவாதங்களையும் ராமானுஜம் முன்வைக்கவில்லை. இதற்கான போதிய மானுடவியல், வரலாற்றுத் தரவுகளை முன்மொழியாமல் சென்று விடுவதால் இவ்வாதம் ஓர் அனுமானமாகவே தெரிகிறது.
அசோகர் காலத்தில் காடுகளில் சமூக உறவற்று வாழும் முனிவர்கள் (மாற்றுக் கலாச்சாரம்), ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழாமல் சமூகத்தொடர்பு கொண்டு பிச்சை பெற்று வாழும் துறவிகள் (எதிர்-கலாச்சாரம்) என இரண்டு வகையான துறவற முறைகள் இருந்ததாக ஒலிவெல்லின் ஆய்வு உள்ளது. எதிர்-கலாச்சாரம், ஒரு கலாச்சாரத்தைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. தன்னளவில் எதிர்-கலாச்சாரம் நிலைத்திருக்கும் கலாச்சாரத்திற்கு ஒரு மாற்றாவது இல்லை. எவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும் எவற்றையெல்லாம் நிராகரிக்க வேண்டும் என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. இதனால்தான் எதிர்கலாச்சாரம் எதனை எதிர்க்கிறதோ அதனை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எதிர்கலாச்சாரம் நிலைத்திருக்கும் கலாச்சாரத்துடன் ஓர் உரையாடலை இணைத்துக்கொள்ளும். மாற்றுக் கலாச்சாரம் சமூகத்தையோ குடும்பத்தையோ நிராகரிக்க வில்லை. மாறாக உற்பத்தியிலிருந்து துண்டித்துக் கொள்கிறது. இந்த வகைப்பாடு சமகால அரசியல், பண்பாட்டில் தாக்கம் செலுத்தும் மாற்று சமூகக் காரணிகளைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவும்.
கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கங்கைக் கரையில் வணிக எழுச்சி பெற்றதால் புதிய நகரங்கள் உருவாயின. நகர வாழ்விற்குத் தனிநபர் பண்பு அடிப்படையானதாகிறது. அதனால் இக்கால கட்டத்தில் பெண்கள்கூடத் தனிநபர் சார்ந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிந்தது. வேள்வி, மறு உற்பத்தி ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட கிராமம் சார்ந்த வேத சிந்தனைக்குப் புதிய நகரச் சூழல் சவாலாகவும் பொருத்தமற்றதாகவும் இருந்திருக்கிறது. கிராமம் சார்ந்த வேத பார்ப்பனியத்தைச் சமணமும் பௌத்தமும் எதிர்த்தது போலவே நகரப் பார்ப்பனர்களும் எதிர்த்தனர். பார்ப்பனியத்தினுள்ளேயே ‘நகரம்-கிராமம்’ என்ற முரண்பாட்டைக் காண முடிகிறது.
கிராமம்-நகரம் என்ற முரண்பாடு புத்தரின் தாக்கத்திற்கு முன்பே பார்ப்பனீயச் சிந்தனை மரபிற்குள் தோன்றியது; இதற்கான சான்றுகளை, பிருஹதாரண்யக உபநிடதத்திலிருந்தும், முண்டக உபநிடதத்திலிருந்தும் முன்வைக்கிறார் ஆசிரியர்.
கிராமம் கேள்விக்குள்ளானதால் பார்ப்பனீயம் என்ற கோட்பாடு தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கத் தனக்கெதிரான ‘ஆரண்யம்’ என்ற கருத்தாக்கத்தைக் கிராமத்திற்குள் கொண்டுவர வேண்டியிருந்தது. அதாவது கருத்தியல் ரீதியாகத் துறவியை இல்லறத்திற்குள் கொண்டுவர வேண்டியிருந்தது; இதனை ஒரு திட்டமிடல்போல் ராமானுஜம் கூறுகிறார். ஆனால் சமூக மாற்றங்கள் திட்டமிடலாக ஏற்படுவதில்லை. பெரும்பாலான சமூக-பண்பாட்டு விளைவுகள் தற்செயல்களால் தீர்மானிக்கப்படுவதாகின்றன. தற்செயல்களால் உந்தப்பட்ட சமூக மாற்றத்தைச் சமூக மேலாண்மை செய்யும் காரணிகள் அதனைத் தமக்கேற்றார்போலப் பயன்படுத்தும்.
பார்ப்பனியக் குழுமங்கள் ‘தீண்டப்படாதவர்கள்’ என்ற வகைப்பாட்டோடு தொடர்புபடுத்தி எவ்வாறு தமக்கான அர்த்தத்தைப் பெறுகின்றன என்பதை ‘பார்ப்பனரும் லௌகீகமும்’ என்ற பகுதியில் விவாதிக்கிறார். பௌதீக வெளியானது சமூக வெளியாக மாற்றமடைவதற்கும் பௌதீக உடல் சமூக உடலாவதற்கும் பார்ப்பனர்கள் இடைத்தரகர்களாகப் பங்காற்றுகிறார்கள். இதனை விவாதிக்க தர்மாரண்ய புராணத்தை எடுத்துக்கொள்கிறார்.
நூலின் இப்பகுதியில் பார்ப்பன, பனியா சமூகங்கள் முரண்பட்ட காலத்தில் சாதியத் தோற்றப் புராணங்கள் உருவானது பற்றிய தகவல்களைக் கொடுக்கிறார். சாதியப் படிநிலையில் உயர்வு கோரும் சமூகங்கள் தோற்றப் புராணங்களைப் படைப்பது, அதற்கான சூழல் புதிய பொருளாதார ஏற்றம்பெற்ற சூழலாக இருப்பது ஆகியவை தனித்த ஆய்வுக்குட்பட்டது. இவ்விரண்டையும் ஆய்வுச் சமூகம் கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும்.
வீணா தாஸின் ஆய்வுகளின்படி குறிப்பிட்டு மத்திய கால இந்துச் சட்டகம் அரசர்கள், பார்ப்பனர்கள் (கிரகஸ்தன், சந்நியாசி), பார்ப்பனரல்லாதவர் என்ற மூன்று பகுதிகளாகக் கட்டமைக்கப்படுகிறது. இதில் பார்ப்பனர்கள் மட்டுமே உள்ளார்ந்த ஆன்மீக மதிப்புக் கொண்டவர்கள் என வரையறுத்துக்கொள்கின்றன. அரசன், பார்ப்பனரல்லாதவர் உள்ளார்ந்த ஆன்மீக மதிப்புக்காகப் பார்ப்பனரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இங்கு பார்ப்பனர்கள் மட்டும் கிரகஸ்தன், சந்நியாசி ஆகிய இருநிலையிலும் தங்களைப் பொருத்திக்கொள்ள முடிவதுடன் இவ்விரு நிலைக்கும் இடைத்தரகராகவும் செயல்பட்டார்கள். பார்ப்பனர்கள் மட்டுமே குழுமமாகவும் தனிமனிதனாகவும் இருக்கும் வாய்ப்பைப் பெற்றனர். பார்ப்பனரல்லாதவர்கள் தனிநபராகும்போது கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். இதற்கு ‘நந்தன் கதை’யைப் பொருத்தமான உதாரணமாகக் குறிப்பிடுகிறார். நந்தன் ஆன்மீகச் சமத்துவம் கோரியதாலேயே தண்டிக்கப்படுவது முக்கியமானது.
சாதியத்தைப் படிநிலை அமைப்புடன் பொருத்தி ஒற்றை மயமாகப் பார்க்கும் பார்வையிலிருந்து விலகி வீணா தாஸ் குறிப்பிடும் இந்து மதத் தொகுப்பில் சாதிக் குழுமங்கள் ஒன்றையொன்று சார்ந்திராமல் ‘பார்ப்பனர்- அரசன்- சந்நியாசி’ என்ற கட்டமைப்போடான உறவைச் சார்ந்திருக்கின்றன என்பதை வழிமொழிகிறார். வகைப்பாடுகளின் பண்பிற்கும் குழுமங்களின் பண்பிற்கும் இடையே பிணைப்பைத் தக்கவைப்பதற்குத் தங்களின் வரையறையைப் பார்ப்பனர்கள் மீள்வாசிப்பிற்கு உட்படுத்துகிறார்கள். முதலாவதாக, பார்ப்பனர்களுக்குக் கீழாக உள்ள வர்ணத்தாருக்கு வேள்வி செய்வதில்லை, அவர்களிடயிருந்து தானங்கள் பெறுவதில்லை என்று முடிவுசெய்கிறார்கள். இங்கு வண்ணார்கள், தோல் தொழிலாளர்கள், கூத்தாடிகள், தோல்வாத்தியக் கலைஞர்கள், பரதவர்கள், பில் இனத்தவர் போன்றவர்கள் கீழ்வர்ணத்தினராக விவரிக்கப்படுகிறார்கள்.
கலியுகத்தில் பார்ப்பனர்கள் தீண்டப்படாதவர்களுக்கு யாகங்கள் செய்யக் கூடாது என்ற விதி உருவாக்கப்படுகிறது. இங்கு யாகங்கள் சடங்கியல் ரீதியான அர்த்தத்தில் முன்வைக்கப்படுவது பொருளாதாரத் தேவை என்ற அர்த்தத்தில் இல்லை. தீண்டப்படாதவர்களுக்குச் சடங்கு ரீதியிலான சேவை தடை செய்தது ‘ஒதுக்குதல்’ என்ற அர்த்தத்தில் இல்லாமல் தீண்டப்படாதவர்களுக்குச் சேவை செய்யும்போது பார்ப்பனர் ‘அசுத்தமாகிறான்’ என்று அர்த்தப்படுகிறது. பார்ப்பன வகைப்பாடு ‘அரசதிகாரம்- பார்ப்பனர்- சந்நியாசி’ என்று தன்னை அர்த்தப்படுத்திக் கொள்கிறது என்றால் பார்ப்பனக் குழுமம் ‘அரசதிகாரம் - பார்ப்பனன்- தீண்டப்படாதவர்’ என்று தன்னை அர்த்தப்படுத்திக்கொள்கிறது என்ற நிலைமாற்றம் நூலில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
தர்மசாஸ்திரத்தில் பெரும்பாலான சொற்கள் மனித உடலை விட்டு வெளியேறும் வஸ்துக்கள்மீதே அதிக கவனம் செலுத்துகின்றன. பெரும்பாலான சொற்கள் சுத்தத்தை மீட்டெடுப்பது குறித்ததாகக் காணப்படுகின்றன. சுத்தம் - அசுத்தம் தொடர்பான சொற்கள் தனிநபர் சார்ந்தோ, குழுமங்கள் சார்ந்தோ, வர்ணம் அல்லது சாதி சார்ந்தோ பயன்படுத்தப்படவில்லை. சுத்தம் - அசுத்தம் பற்றிய பார்ப்பனீயப் பார்வையை அறிந்துகொள்ள தர்மசாஸ்திரங்களைப் பிரதானமாகக் கொண்டு சொற்பயன்பாடு சார்ந்த ஆய்வை ஒலிவெல் மேற்கொள்வதாக ராமானுஜம் குறிப்பிடுகிறார்.
தர்மசாஸ்திரத்தில் சண்டாளர்கள், பாவம் செய்தவர்களைச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டியவர்களாகவும் அசுத்தமானவர்களாகவும் சொல்லப்பட்டுள்ளது. இங்கு விலக்கி வைத்தல் பிறப்பு சார்ந்தோ குழுமம் சார்ந்தோ இல்லாமல் தனிநபர் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் தர்மசாஸ்திரத்தைப் பொருத்தவரை எந்தவொரு தனிநபரும் அசுத்தமாக இயலும்; அசுத்தமானவர்கள் அவர்களுடைய சுத்தநிலையை மீட்டெடுக்க இயலும். இதனால் வர்ணக்கோட்பாடானது மேல்-கீழ் என்பதைச் சார்ந்ததே தவிர சுத்தம் - அசுத்தம் சார்ந்ததாயில்லை.
சாதி குறித்த ஆய்வுகள் நிறைய மேற்கொள்ளப் பட்டிருந்தும் தீண்டாமை பற்றிய தத்துவார்த்த விவாதத்தை சுந்தர் சருக்கை முன்வைக்கிறார். அத்துடன் சுந்தர் சருக்கை குறிப்பிடும் தொற்றிணைப்பு (Contact) என்பதற்கும் தீண்டுதல் (Touch) என்பதற்குமான வேறுபாட்டை முன்வைக்கிறார். தொற்றிணைப்பு இரண்டு சாரங்களின் சேர்க்கையில் உள்ளது. தொற்றிணைப்பு என்பது தீண்டுவோர், தீண்டப்படுவோர் என்று இரு சாராரிடமும் காணப்படும் குணாம்சமாக உள்ளது. அவை சமதன்மையிலான உறவில் இருக்கின்றன என்று அர்த்தமாகிறது. ஆனால், தீண்டுதல் என்ற செயலின் ஒரு பொருளைத் தீண்டுபவர் அந்தப் பொருளால் தீண்டப்படாமல் இருக்கும் ஒரு சமனற்ற தன்மையைக் கொண்டுள்ளது.
ஸ்தூலமான உடல், சூச்சுமமான உடல் என்று சாங்கியம், அத்வைதம் பிரிக்கிறது. புலன் உறுப்பு களோடு தொடர்புபடுத்தப்படும் குணங்கள் ஸ்தூலமான உடலோடு மட்டுமே தொடர்புடையதாக மட்டுப்படுத்தப் படுவதில்லை. தீண்டா உணர்வு தீண்டப்படாத வர்களிடம் காணப்படுகிறது என்று உடலைக் கடந்து நிலைத்திருக்கும் பண்பைக் கொண்டதாகிறது என்று குறிப்பிடுவது கில்ஸ் டெல்யூஸின் ‘உறுப்புகளைக் கடந்த உடல்’ (The Body without Organs) என்ற கோட்பாட்டுடன் தொடர்புபடுத்தக்கூடியதாகச் சிந்திக்க இயலும்.
மின்னஞ்சல்: rkarthick15@gmail.com