வேறு உலகின் மலர்கள்
”அஞ்சலிக் குறிப்பு எழுத வச்சிடாத.”
உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்த ஏதோவொரு பேச்சினிடையே விளையாட்டான எச்சரிக்கையாகவும் ஒன்றைச் சொல்லிவிட்டால் அது நிகழாது என்ற பிரத்யேக முன்னூகத்தின் அடிப்படையிலும் அந்த வார்த்தை களைச் சொன்னேன்.
“நீ எழுதாம வேற யார் எழுதுவா?”
அப்படியான பதில் அல்லது அதைச் சுட்டும் ஒரு சிரிப்பு. அந்தப் பேச்சின் விதமாகவே இது இப்போது நிகழ்வது என் வாழ்க்கையின் மிகத் துயரார்ந்த கணங்களில் ஒன்று. இருவரும் அறிமுகமாகி அவனுடைய மறைவுவரையான பத்தொன்பது ஆண்டுகாலப் பயணம் இலக்கிய நட்புக்கும் மேலாக முதிர்ந்து அவனுடைய வார்த்தைகளில் ஒருநாள் இப்படியாகக் கனிந்தது.
“எங்க வீட்டு ரேஷன் கார்டுல மட்டும்தான் அவன் பேர் இல்ல.”
அவனுடைய குழந்தைகளால் ஆபூக்குட்டி என்றும் நண்பர்களால் பாபு என்றும் அழைக்கப்பட்ட தக்கை வே.பாபு எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை இலக்கியத்தில் அவன் செயல்பட்ட காலத்தை ஒப்பிடும்போது மிகக்குறைவு.தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கவிதைகள் எழுதுவதில் அவனுக்கிருந்த வேகத்தையும் ஈடுபாட்டையும் லௌகீகச்சூழல் மட்டுப்படுத்திக்கொண்டே இருந்தாலும் கவிதையின் சிறிய அகலொளியைத் தன்னுள் அணையாமல் வைத்திருக்க எப்போதும் அவன் முயன்றதுண்டு.
ஜவுளித் தொழில்நுட்பத்தில் பட்டயப்படிப்பு முடித்து நூற்பாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய பாபு சில காரணங்களால் வேலையை உதறிவிட்டு சேலத்திற்கே திரும்பியிருந்த நாட்கள் அவை.
பிறகு தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதிக் கொண்டோம். மதிய உணவிற்காகக் கல்லூரி விடுதி மெஸ்ஸிற்கு வருகையில் கடித மேசையில் தபால் அட்டைகளைக் கண்கள் தேடும். கடிதம் இருந்துவிட்டால் அதில் கிடைத்த அளவற்ற மகிழ்ச்சி, அவனுடைய மறைவு வரையான காலத்தில் ஒவ்வொரு சந்திப்பின் முதல் கணத்திலும் தொடர்ந்தது. அதே ஆண்டு அவனைச் சந்திக்கச் சேலத்திற்குச் சென்றேன். நாள் முழுக்க இலக்கியம் பேசினோம். அவன் தாயார் வயிறார மதிய உணவு பரிமாறினார். கிளம்பும்போது பிரமிள் கவிதைகள், சிலைகளின் காலம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட நவீன கவிதைத் தொகுதிகளை வாசிப்பதற்குக் கொடுத்தான். சிறுவயதிலிருந்தே இலக்கியப்பித்து இருந்தாலும் அத்தொகுதிகளைப் பெற்ற கணம்தான் அவனுடைய கைப்பிடித்து நவீன கவிதைக்குள் நான் நுழைந்த கணம்.
படித்த புத்தகங்களைப் பற்றிய குறிப்புகள், கவிதையைக் குறித்த கருத்துகள், அபிப்ராயங்கள் போன்றவை எங்கள் கடிதங்களின் பிரதான உள்ளடக்கமாக இருந்தன. அன்றைய காலத்தில் கவிதைகள் தவிர்த்து பாபுவிற்கு மார்க்சிய விமர்சனங்களில் அதிக ஆர்வம் இருந்தது. இன்றைக்கு அக்கடிதங்களை மீள வாசிக்கையில் அன்றைக்கே முதிர்ந்த மனவமைப்பு வாய்க்கப் பெற்றிருந்த அவனுடைய கடிதங்களில் இடதுசாரிச் சார்பை அவதானிக்க முடிகிறது.
கடிதங்களின் வழியே தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெளியாகிய பல சிறு இதழ்களையும் சிற்றிதழ்களையும் பாபு அறிமுகப்படுத்தினான். குறைவான பக்கங்களிலும் உள்ளங்கையளவான அகலத்திலும் கவிதைக்கென மட்டும் வெளியான அவற்றிற்குக் கவிதைகளை அனுப்பச்சொல்லி அவை வெளியாகவும் செய்தன. இளம்பருவக் கவிஞனின் மனோகரமான உளநிலைக்கும் அப்பருவத்திற்கான அடர்த்தியான வாழ்வனுபவத்திற்கும் பாபு பிரதான காரணமாக இருந்தான்.
சில தாள்களை முடிக்க முடியாத காரணத்தால் ஓராண்டு தடைபட்ட படிப்பு, மேற்படிப்பு சார்ந்த விஷயங்களினால் இலக்கிய ஆர்வம் சற்றே மட்டுப்பட்டாலும் பாபுவுடனான நட்புத் தொடர்பு நீடித்தது. ஸ்ரீரங்கத்தில் முதுகலை படித்த போது 2003/4 இல் திருச்சி வானொலி நிலையத்தில் கவிதை வாசிக்க பாபு வந்தான். நான் சிலமுறை சேலம் சென்று வீட்டில் தங்கி வந்ததுண்டு. அந்தத் தருணத்தில் இலக்கியம் சாராத பாபுவின் பால்ய நண்பர்கள் பலரும் அறிமுகமானார்கள்.
சேலத்தில் பாபு தனித்தும் நண்பர்களோடும் இணைந்தும் செய்த பணிகள் தெளிவாக நினைவிலில்லை.சேலம் நண்பர்கள் யாரேனும் நினைவுகூரக் கூடும். முக்கியமாக குழந்தைகள் நலம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்தோடு குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த ‘கருகும் அரும்புகள்’ என்ற சிறு வெளியீட்டை எழுதினான். குழந்தைகளுக்கான திரைப்பட இயக்கம் ஒன்றைச் சேலத்தில் நிறுவுவது இலக்காக இருந்தது. ஒரே நிகழ்விற்குப் பிறகு அதனைத் தொடர இயலவில்லை. சாகிப்கிரானோடு இணைந்து தக்கை அமைப்பும் சிற்றிதழ் முயற்சியும் உருவாயின.
பெங்களூருவில் வேலையில் அமர்ந்தபின் ஊருக்கான பயணங்கள் சேலத்தின் வழியேதான் என்பதால் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கும் மாதமொருமுறை தொடர்ச்சியாகச் சந்தித்தோம். ஒருகட்டத்தில் அந்த ஞாயிறு மாலைச் சந்திப்புகள்அவனுடைய இலக்கிய நண்பர்கள், பால்ய நண்பர்கள், தொழில்முறை நண்பர்கள் எனப் பலரும் இணையும் வெளியாக மாறியது. அதற்கு எதிர்நிலையில் வெகுதனிமையான மனோநிலையில் இருந்தவனை நான் மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றதுமுண்டு. வருவதாகச் சொல்லிவிட்டு அவன் வராத நாட்களில் வெறுமையுணர்வோடு வண்டியேறியதுமுண்டு.தனிமனிதனின் வழியே ஒரு நகரத்தையே சொந்தமாக உணர்வது பாபுவின் நண்பர்கள் எல்லோருக்குமே நிகழ்ந்தது.
சில தொழில்களின் தொடக்கம், நல்லமுறையில் வளரும் அவை ஏதேதோ காரணங்களால் குலைவது, சொந்த வாழ்க்கை அலைக்கழிப்புகள், அவனுடைய பிரத்யேக மனநிலை போன்றவற்றால் அவன் கவிதை எழுதுவது கிட்டத்தட்ட நின்று போயிருந்தது. கூட்டங்கள் ஏற்பாடு செய்வது போன்ற ஏதேனும் செயல்பாட்டின் மூலம் திரும்பவும் இலக்கிய மனோநிலைக்கு அவன் திரும்புவதுண்டு.
கவிதை சார்ந்த சிறுவெளியீடுகளைச் செய்யவேண்டு மென்று பாபுவுக்கு ஆர்வமிருந்தது. 2012 இல் அகச்சேரனின் ‘அன்பின் நடுநரம்பு’, என்னுடைய ‘கடல் நினைவு’ ஆகிய வற்றுடன் பாபுவின் ‘மதுக்குவளை மலர்’ ஆகியவற்றைத் ‘தக்கை’யின் மூலம் வெளியிட்டோம். தொழில்முறைப் பதிப்பகமாக அல்லாமல் வாய்ப்பும் தேவையும் ஏற்படுகை யில் நூல்களை, பிரதானமாகக் கவிதைகளை வெளியிடலாம் என்பது நோக்கமாக இருந்தது. சில குறிப்பிடத்தக்க தொகுப்புகளும் வெளியாகின.
தமிழ் இலக்கியச் சூழலில் சேலத்தில் பாபு ஒருங்கிணைத்த விமர்சன, அறிமுகக் கூட்டங்கள் மிக முக்கியமானவை.வெவ்வேறு இலக்கிய, அரசியல் மதிப்பீடுகள் கொண்டவர்களைக்கூட தன் நட்புணர்வு, அன்பின் மூலம் ஒரே வெளிக்குள் கொண்டுவர அவனுக்குச் சாத்தியமானது. மேலும் ஒவ்வொரு நண்பருக்கும் வெகு பிரத்யேகமானவனாக இருக்கும் தன்மையும் அவனிடம் இருந்தது. தொடர்ச்சியான அண்மை உருவாக்கும் சில அன்பின் உள்முரண்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவையெல்லாம் விழைவின் பாற்பட்டதன்றி வெறுப்பினால் அல்ல. வருத்தமான சூழல்களில்கூட எவரைக் குறித்தும் இங்கிதமற்ற சொற்களை அவன் சொன்னதேயில்லை.
ஒரு சாதாரண தங்கும் விடுதியைத் தமிழ் நவீன கவிதையில் பாடல் பெற்ற ஸ்தலமாக அவனால் மாற்ற முடிந்தது. அவை வெற்றுக் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு வடிவங்கள் குறித்த ஏராளமான பேச்சுக்களும் விவாதங்களும் அங்கு நிகழ்ந்திருக்கின்றன. இன்றைய சமகால மொழியாளுமைகளில் ஏராளமானவர்கள் அந்த விடுதிக்கு வந்திருக்கிறார்கள். அப்பேச்சின் அதிர்வுகள் படைப்பை நோக்கி அவர்களை இன்னும் உந்தியிருக்கின்றன.
அன்றாடத்தின் வெவ்வேறு காட்சிகளிலிருந்தும் மனோநிலைகளிலிருந்தும் கருக்கொண்ட பாபுவின் கவிதைகள் எளிமையானவை. அன்பின் நீர்மை பாவிய ஒரு மனம் தொடர்ந்து வாதையுறுவதை அடிப்படையாகக் கொண்டவை. அக்கவிதைகளில் தொடர்ச்சியாய் இடம்பெறும் கவிஞனின் நினைவிலுறைந்த ஒரு பெண்படிமத்தையும் இறுதியாக எழுதப்பட்ட அவனுடைய சில கவிதைகளில் ஊடாடும் நகுலனையும் தொடர்புறுத்தி அவன் நகர்ந்துகொண்டிருந்த மனோநிலையை யூகிக்க முடியும்.
சமகால தமிழ் இலக்கியத்துக்குள் ஒரு மனமாக பாபுவின் வருகையும் இருப்பும் அபூர்வம்தான். வேருக்கு நீர்பாய்ச்சும் செயல்பாட்டைக் கொண்டிருந்தவன் இன்றைக்கு வேறு உலகின் மலர்களைத் தொடுக்கச் சென்றுவிட்டான்.
மின்னஞ்சல்: gunakandasamy79@gmail.com