கடிதங்கள்
ஆயர் ஃபிராங்கோவின் ஆன்மீக ஃபிராடுத்தனம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தங்களது வாழ்வை ஏசுவுக்கே அர்ப்பணித்துத் தியாகக் கோலம் கொண்டுள்ள கன்னியாஸ்திரிகளைப் பாலியல் வன்புணர்வு செய்து தங்களின் மதத்தை இழிவுபடுத்திய ஆயருக்கு அனுசரணையாகவே மேலிடம் நடந்துகொண்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தீவிரப் போராட்டத்திற்குப்பின் அவர் கைது செய்யப்பட்ட விதம் அப்பெண்களின் மனவுறுதியை உலகுக்கு உணர்த்துகிறது.தங்களின் மானம் பற்றிய எண்ணத்தைக் கடந்து, அடுத்து இப்படி மற்றவர்களுக்கு நடக்கக்கூடாது என்ற நல்லெண்ணம் மிளிர்கிறது. பாதிக்கப்பட்டோருக்குரிய நிவாரணம் கிடைக்கப் பெற வேண்டும். மதத்தின் பெயரால் நடக்கும் மடமைகள் களையப்பட வேண்டும்.
சிந்தாமணி ஹக்கீம், ஈரோடு - 4
தலையங்கம் நன்று. ஸ்டாலின் ராஜாங்கத்தின் காந்தியடிகளின் ஹரிஜன மேம்பாட்டு இயக்கம் பற்றிய கட்டுரையும் சிறப்பு. கோவையில் கூட்டுறவுத் தந்தை எனப்படும் டி.ஏ.இராமலிங்கம் செட்டியாரின் மகள் தில்லையம்மாள் நடத்தி வந்த சேவாலயா விடுபட்டுள்ளது.
ச.சீ. இராஜகோபாலன், மின்னஞ்சல் வழி
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பத்து முதல் ஐம்பது வயதுவரையுள்ள பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற பழைய பழக்கத்தை மாற்றக் கூடாது என்று பலர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சாமி ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் இந்தக் கட்டுப்பாடாம்.
பரிசுத்தமானவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாரது உடம்பிலும் வெளியேறாத மலம், மூத்திரம் எந்நேரமும் இருக்கத்தான் செய்யும்; நாற்றமடிக்கும் வியர்வை இருக்கும். இயற்கையாக உடல்நிலை இவ்வாறு இருக்கும்போது ஆண்களைப் புனிதர்களாகவும் பெண்களைத் தீட்டுப் பட்டவர்களாகவும் பார்க்கும் கண்ணோட்டம் தவறு.
மேல் தட்டு மக்கள், தங்களுக்குப் பிடிக்காத ஆண்களைப் பழி வாங்கவும் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும் ‘மீடூ’ அமைப்பைப் பயன்படுத்துகின்றனர். பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புழுதி வாரித் தூற்றுகிறார்கள். அப்படியே புகார் கொடுத்தாலும் இந்த மாதிரி விஷயங்களை நிரூபிக்க முடியாது. சம்பந்தப்பட்ட பெண்கள் மீது, மான நஷ்ட வழக்கு போட்டு, அவர்கள் வாலை ஒட்ட நறுக்க வேண்டும்.
பெண்தான் பாலியல் உறவுக்கு அழைத்தாள் என்று சொல்லிவிட்டால், அவள் வாய் திறக்க முடியாது. இந்த ‘மீடூ’ பூச்சாண்டிகளுக்கெல்லாம் ஆண்கள் பயப்படக் கூடாது.
எஸ். மோகன்,கோவில்பட்டி
‘காந்தியால் பிறந்த தலித்களுக்கான பள்ளிகள்’ என்ற கட்டுரை கவனிக்கத்தக்கது. தமிழக வரலாற்றில் குழந்தைகளுக்கான பள்ளிகள் என்ற நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் காந்தி செய்த பயணங்களில் முக்கியமானதாக தலித்களுக்கான பள்ளிகளைத் தோற்றுவித்ததும் இருந்துள்ளது. இவற்றைக் குறிப்பிட்டு மதுரை சேவாலய விடுதி பற்றிய கதையை இக்கட்டுரை பேசுகிறது. மறைக்கப்பட்ட மறைக்கப்படும் இது குறித்தான பதிவுகள் குறைவாக இருப்பதற்கு அரசியல் மயமாக்கப்பட்ட சூழலைச் சாடியது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் இதுபோன்ற ஆய்வுகளும் தொடர்ந்து வருவது வரவேற்கத்தக்கது; கட்டுரையாளருக்கும் இதழிற்கும் பாராட்டுகள்.
மயிலம் இளமுருகு,திருவேற்காடு
சந்திரா இரவீந்திரன் எழுதியுள்ள ‘கலையரசி’ படித்ததும் என்னுள் இறங்கிய உணர்வுகள், வெற்றியாய் முடிந்திருக்க வேண்டிய போர் வஞ்சகத்தாலும் துரோகத்தாலும் முள்ளிவாய்க்காலில் துன்பத்தையும் துயரத்தையும் தந்தது எப்படி என்பதை இதய நோவோடு நினைவுப்படுத்தின.
போர்க்களம், போருக்கான முன் தயாரிப்பு என்பன இந்தியத் தமிழர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களோடு நிறைவுபெற்றவை. கலையரசி போன்ற வீராங்கனைகளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய கதாசிரியருக்கு மனம் நிறைந்த நன்றி.
தொடர்பேயில்லாத அந்நிய நாடுகளும் ஈழப் போராளிகளுக்கு எதிராக ஆயுதமேந்தியது ஒருபுறம் என்றால், ‘இந்தியாதான் எங்களுக்காகப் போரை நடத்தியது’ என்று மகிந்த ராஜபக்சேவே வெளிப்படையாக அறிவித்த கொடுமை மறுபுறம்.
‘பரிதாபங்களை ஏற்றுக்கொள்ள விரும்பாத நிமிர்ந்த நடை, எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு கணீரென்று எழும் உற்சாகமான வார்த்தைகள், அதன் பின்னாலிருந்து இயங்கும் சிந்தனையின் வேகம், இழக்கக்கூடாதவற்றையெல்லாம் இழந்தவர்களின் அசுர மனோபலம் அதுவென்று தோன்றியது’ எனக் கலையரசியைப் பற்றிக் குறிப்பிடும்போது எம் நெஞ்சு பெருமிதத்தால் விம்முகிறது.
நிகழ்வுகளின்போது சில இதழ்களில் நான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘துரோகம் வெட்கமறியாது’ என்னும் தலைப்பில் ஏப்ரல் 2014இல் நூலாக்கினேன்.
‘வரலாற்றிலேயே முதன்முறையாகத் தமிழன் விமானப்படை வைத்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியைக்கூடப் பகிர்ந்து கொள்ள முடியாமல் ஓரக்கண்ணால் டில்லியைப் பார்க்க வெட்கமாக இல்லையா?
‘ஜனசக்தி’ 11.04.2017
‘எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகே ஆட்சியைப் பிடிக்க முடிந்த கலைஞர் சறுக்கிவிழுந்தது ஈழப் பிரச்சினையில். ஆட்சியை இழக்க நேர்ந்தாலும் இன்னல் பலவற்றைச் சந்தித்தாலும் அவனியெங்குமுள்ள பத்துக்கோடித் தமிழர்களின் இதயங்களில் அசைக்க முடியாத சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார் கலைஞர்; எத்தகைய பொன்னான வாய்ப்பு? நெருக்கடிநிலையின்போது தம் பேனாவாலும் நாவாலும் இயக்கத்தைக் கட்டிக் காத்தபோது வராத சோதனைகளா இனி வந்துவிடும்?
உலகெங்குமுள்ள தமிழர்கள் தங்கள் இதயங்களில் மறக்காமல் வைத்திருக்கும் பெயர்களில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, அந்தோணி, கலைஞர், ப. சிதம்பரம் ஆகியோர் முதன்மையானவர்கள்.
‘ஜனசக்தி’ 01.02.2011
இதற்கு மேல் என்ன எழுத முடியும்? ஈழப் போராளிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டபோது அதை நீர்த்துப் போகச் செய்யும் வேலையைக் கலைஞர் மேற்கொண்டதை வரலாறு மறுக்காது; மன்னிக்காது.
தெ. சுந்தரமகாலிங்கம்,வத்திராயிருப்பு - 626132
பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், மறுமலர்ச்சி, விழிப்புணர்வு என்றெல்லாம் வாய் கிழியப் பேசியும் எழுதியும் வந்த சில அதிமேதாவிகள், மறுக்கப்படும் பொதுவெளிகள் சார்ந்து அடக்கி வாசிப்பது ஏன் என்றுதான் புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த பத்தாம் பசலி நடைமுறைகள், முற்போக்காக மாறிவந்ததை ‘சமூக மாற்றம்’ எனக் கொண்டாடிய பலர், சபரிமலை விவகாரத்தில் மௌனம் காப்பதைச் சீரணிக்க முடியவில்லை. ‘பெண்கள் நுழைவதால் ஆலயத்தின் புனிதம் பாழாகுமென்றால், பெண்கள் குரலெழுப்பினால் அதிகாரம் நொறுங்குமென்றால், அந்தப் புனிதமும் அதிகாரமும் யாருக்கானவை?’ எனும் நியாயமான, பொருத்தமான கேள்விக்கு யார் விடையளிக்கப் போகிறார்களோ?
மீ டூ விவகாரம்; புற்றீசல்கள் போல் கிளம்பும் புகார்கள். சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல, தொலைக்காட்சிகளும் சரியான தீனி கிடைத்த சந்தோஷத்தில் விவாத மேடை அமர்க்களப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல்கள் நிகழும்போதெல்லாம் அதுகுறித்துத் திறந்த மனத்துடன் பேசுவதற்கான களமே இல்லாமல் இருந்ததை மீட்டுக்கொடுக்க ‘மீ டூ’ வந்திருக்கிறது என்றும் அதற்கு முதல் குரல் கொடுத்துத் தொடக்கி வைத்திருக்கும் சின்மயி துணிச்சல்காரர் மட்டுமல்ல, புதுமைப் பெண் என்றெல்லாம் குதூகலிக்கின்றன சில பத்திரிகைகள்.
ஆண்களைப் பீடித்திருக்கும் ஒரு வகை மனநோய் இது. ஆண்களுக்கு இதுவொரு பொழுதுபோக்கு. பெண்களோ மனரீதியாகப் பாதிக்கப்பட்டுத் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு நிமிடம் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் தன் துணைவி, மகள், சகோதரியை வைத்துச் சிந்தித்தால் அந்த வக்கிரப் புத்திக்காரர்களுக்கு உறைக்குமோ என்னவோ?
நவீன்குமார், நடுவிக்கோட்டை
தொடர்ந்து கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் என் போன்றோருக்கு எதை எழுதுவது, எதை எழுதாமல், விடுவதென்கிற குழப்பத்தை ஏற்படுத்தித் தந்த இதழ் இவ்விதழ் என்பதில் பொய்யில்லை.
‘மறுக்கப்படும் பொதுவெளிகள்’ இந்த நவீனத் தொழில்நுட்ப யுகத்திலும் கூட மாற்றம் காணத் தொடர்ந்து அடம்பிடித்துக்கொண்டிருக்கிற நமது ஆணாதிக்கச் சமூகம், தனது நிழலில் பெண்ணுரிமைகளின் சமத்துவவெளியை வெளிச்சத்துக்குட்படுத்தாமல் பால்பேத இருட்டறையில் அடைகாத்து வருவது வெட்கத்திற்குரியது. வேதனைக்குரிய இப்பொதுவெளியில் இன்னமும் பயணித்துக் கொண்டிருப்பது ஆணாதிக்க வெறியின் அவலமேயொழிய வேறென்ன?
ஒரு காலத்தில் பக்திக் கேந்திரமாக இருந்த ஐயப்பன் கோவில் நாளடைவில் ஆன்மீகச் சுற்றுலாத் தலமாக மாறியிருப்பதை அடிப்படையாகக் கோடிட்டுக் காட்டிப் பால் பேதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அரசியல் சட்டத்தை மதிக்காத பிஜேபி அரசின் மதச்சார்பு சாயம் வெளுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. பாலின நீதியைவிட வாக்கு வங்கி அரசியலுக்குத் துணைபோகிற ‘தமிழிசைகள்’ தமிழகத்தில் நிறைய இருப்பதே பெண்ணுரிமை பரவ லாக்கம் பெறுவதற்கான ‘முட்டுக்கட்டைகள்’ என்பதை உணரக் கூடவா தமிழகம் தயாரில்லை? பெண்ணுரிமைக்கான குரலின் பொதுவெளியைவிட மதத்துவேஷத்தை வளர்க்கும் மதவெறிக்கான குரலே ஓங்கி ஒலிக்கின்றது.
சிவசங்கர் எஸ்.ஜே. எழுதியுள்ள ‘மொழி காலத்தின் பிரதிநிதி’ 4ஜி கதைகள் - 3டி பார்வைகள், சிந்தனையை வெகுவாகத் தூண்டலுக்குட்படுத்தியுள்ளது. “Prose is architecture not interior decoration” ஹெமிங்வேவின் மேற்கோளோடு தொடங்கியுள்ளது. வாஸ்தவம்தான், பேசுகிற அவரவர் தாய்மொழியின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறது அழகியலின் வெளிப்பாடு. அதனால் அது பேசப்பட்டாலும் எழுதப்பட்டாலும் வெளிப்பாட்டுத் தளத்தில் பிசிறற்ற கலையின் உன்னதத்தைப் பேணுவதற்குரிய ஒன்றாய் உள்ளதில் பொய் இல்லை. ‘வாசகன்’ என்பவன் யார் என்கிற அடிப்படைக் கேள்வியோடு கட்டுரை விரிவு பெறுகிறது. அவன் முதலில் அறிந்து வைத்துள்ளது தாய்மொழி மட்டுமே. மொழியின் வாயிலாக (வாசிப்பதன் மூலம்) கதையின் வழியே வாழ்வியல் சார்ந்த எல்லா அளவையியலையும் தேடலுக்குட்படுத்திக் கொள்கிறான். தேடலின் விரிவாலும் புதிய அனுபவங்களின் நுகர்வாலும் அவன் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் எழுத்தாளன் ஆகிறான் என்பதும் மெய்தான். அவனது புறச்சூழலில் அச்சு ஊடகத்தைத் தவிர வலைதளங்களும் இணையமும் அவனை எழுத்தாளனாக்க வடிகாலாகியுள்ளன. அதனால்தான் ஒரு நல்ல வாசகனாக இருப்பவனைப் பட்டை தீட்டிய வைரமாக்க (அறிவுத் தேடலால்) முடிகிறது.
தன்னுடைய எழுத்தையும் சேர்த்து வாசிக்கிறவன் தனது நல்ல சிந்தனைக்காட்படுகிற எழுத்தால் மட்டுமே தன்னையும் மிஞ்சுகிற ஓர் எழுத்தாளனாக அவதரிப்பான் என்பதையும் எழுத்தைக் கலாபூர்வமாக அணுகாமல் வணிகப்பூர்வமாக அணுகுகிற எழுத்தாளனை நல்ல வாசகனொருவன் துண்டித்துக் கொள்வான் என்பதையும் நம் எழுத்தாளர்கள் உணர்வதில்லை. தொடர்ந்து வாசிக்கிறவர்களிடம் நமது எழுத்தாளர்களின் எந்த பாச்சாவும் பலிக்காது. இப்படிப்பட்ட வாசகன் முன் இன்னமும் கவனக் குவிப்போ அக்கறையோ செலுத்தாத இவர்களால் எழுதப்படுவது யாருக்கானது? புற்றீசல்களாக வலம் வருகிற ஒவ்வொரு நல்ல வாசகனும் வெகுவிரைவில் எழுத்து சிம்மாசனத்தில் அமரப் போகிற எழுத்தாளர்களே!
பா. செல்வவிநாயகம், சென்னை - 82
‘மீ டூ’ இயக்கம் அமெரிக்காவில் 2017இல் ஒரு நடிகையால் தொடங்கப்பட்டது. முதலில் உலகிலேயே மிகவும் கடினமான தொழில் நடிப்பதுதான். அங்கே அவர்கள் சமரசம் செய்கிறார்கள். பேருந்தில் ‘பிரேக்‘ பிடிக்கும்போது, தெரியாமல் இடித்துவிட்டதாலே பெண்ணின் வசை தாங்க முடியாமல் ஓர் இளைஞன் பேருந்தை விட்டு இறங்கிச் சென்றதைப் பார்த்திருக்கிறேன். சமுதாயத்தில் அடித்தட்டுப் பெண்கள் மிகவும் ஒழுக்கமாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அங்கேதான் பாலியல் தொந்தரவு வன்புணர்வு அதிகம். ஒரு பெண்ணைத் தாயின் முன்னே பலாத்காரம் செய்து, வெட்டிக் கொன்றவனுக்கு வெறும் ‘குண்டாஸ்’ தண்டனைச் சட்டத்தில் கைதா? பெண்களுக்குப் பணியிடங்களிலும் தொந்தரவு, பாலியல் சில்மிஷங்கள் உண்டுதான். இதைப் பெரும்பாலான, படித்த பெண்கள் எதிர்த்துக் கேட்கத்தான் செய்கிறார்கள். கோப்புகளை அதிகாரிகளிடம் தரும்போது கோப்பிற்குப் பின்னாலுள்ள கையை லேசாகத் தடவிய அதிகாரிகள் உண்டு. உடனே கோப்பை வெடுக்கெனப் பிடுங்கி, தைரியமாக மேசையின் மீது வைத்து, “நேர்முகக் கடிதத்தில் கையெழுத்துப் போடவே இந்தக் கோப்பு, கையைத் தொட அல்ல,” எனறு உறுமிய பெண்கள் உண்டுங்க.
ஆனால் பணபலம், புகழ் பெற்றபின் தன்னைப் பாலியல் தொந்தரவு செய்த ஆணுக்கு எப்படி திருமண அழைப்பைக் கொடுக்க முடியும்? அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முடியும்? என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதுதான் compromise. எனவே எழுத்தாளர் அம்பையின் கருத்தில் எனக்கு மொத்தமாக உடன்பாடில்லை.
ஞா. சிவகாமி,போரூர்
பாலியல் தொந்தரவுகள் கொடிய வக்கிரமான ஆண்களின் மனநலச் சீர்கேடு என்பதே உளவியல் உண்மையாகும். இது மிகப்பெரும் அவமானகரமான குற்றம். தண்டிக்கப்பட வேண்டிய அபாயகரமான அத்துமீறல் என்று ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ள ‘நானும் கூட’ குரல்கள் இனிமேலும் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாக இருந்துவிடக்கூடாது. இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.
எழுத்தாளர் அம்பையின் கருத்துப்படி ‘கூர்மையான கண்களும் துல்லியமான நோக்குமுடைய’ சமூகத்தில் அறிமுகமான பாதிக்கப்பட்ட இவர்களது கோப ஆவேசம் தூண்டிய உடனடி அறச்சீற்ற எதிர்வினை என்ன என்பதே கேள்வி.
மிகச் சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கும், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு அருகிலுள்ள நடுநிலைப்பள்ளியில் பயிலும் சிறுமிக்கும் ஆசிரியர்களால் பாலியல் தொல்லை தரப்பட்டதாக அந்தப் பிஞ்சு உள்ளங்கள் அச்சிறுமைகளைத் தமது பெற்றோர் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் செல்ல, பின் அது சமூக வெளியில் மிகப்பெரும் எதிர்ப்புக் கண்டனமாகி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது ஊடகங்களில் வெளியான தகவல்கள்.
2014 நவம்பரில் மூன்று சண்டிகர் மாநில இளைஞர்கள் ஓடும் பேருந்தில் தங்களைப் பாலியல் தொந்தரவிற்குள் ளாக்கினர் என்று கூறி, இரு சகோதரிகள் இளைஞர்களை அடித்துத் துவைத்தெடுத்த காட்சிகளைச் சமூக வலை தளங்களில் பரவவிட்டுள்ளனர். அந்த இளைஞர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது. சகோதரி களை ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டி முடித்தன. ஆனால் அந்தப் பேருந்தில் ஒரு மூதாட்டியின் இருக்கையை ஆக்கிரமித்த சகோதரிகளைத் தட்டிக்கேட்ட அந்த இளைஞர்களுக்குத் தான் இந்த அவப்பழி என விசாரணையில் தெரியவந்து, 2017இல் நீதிமன்றம் இளைஞர்களை விடுதலை செய்துள்ளது. இதுபற்றி நாம் என்ன கூறுவது?
சி. பாலையா,புதுக்கோட்டை