அதிகாரத்தின் பேராசை
இலங்கை நாடாளுமன்றத்தில் சென்ற சில வாரங்களாக இடம்பெற்றிருந்த வன்முறைகளுக்கு இலங்கையின் சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளும் அவற்றின் தலைமைத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மைத்திரிபால சிறிசேன (அதிபர்), மகிந்த ராஜபக்ச (எதிர்ப்புக் கூட்டணியின் தலைவர்) ஆகியோர் பொறுப்பு. (மிளகாய்த்தூள் இலங்கையின் ‘தேசிய’ ஆயுதமாக மாறியமைக்கு யார் பொறுப்பு என்பது இன்னும் முடிவாகவில்லை.) சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் மூர்க்கமான வெஞ்சினத் தாக்குதல்களைக் காணொளியில் பார்த்தபோது இவர்கள் வழிகாட்டுகிற இலங்கைப் படையினர் போர்க் காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்ற படமும் பாடமும் நமக்குக் கிடைக்கக் கூடும்.
அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக மறுப்பின் விளைவாக இன்றைய சூழலில் ரணில் விக்கிரம சிங்கவும் அவருடைய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (யு.என்.பி.), ஜனநாயக மீட்புப் போராளிகளாக மீள்பிறப்பு எடுத்துள்ளனர். (அவர்கள் ஜனநாயகத்தின் மீது தீராத காதல் கொண்டவர்கள் அல்லர்!)
இலங்கையின் ஆட்சி அமைப்பு சிக்கலானது. முன்பு, முற்றான அதிகாரம் வாய்க்கப்பெற்ற அதிபர் நாட்டின் தலைவராக இருக்கின்ற அரசியல் யாப்பு இருந்தது. 1978இல் இதனை நடைமுறைக்குக் கொண்டு வந்த அந்நாள் அதிபர் ஜே.ஆர். ஜயவர்த்தன; தன்னை, “அரசியல் யாப்பினூடாக உருவான சர்வாதிகாரி” எனப் பெருமையுடன் சொல்லிக்கொண்டார். இதே வழிமுறையை இன்னும் தீவிரமாகப் பயன்படுத்தியவர் மகிந்த ராஜபக்ச. இத்தகைய அதிகாரம்தான் 2009இல் தமிழ் இனப்படுகொலைக்கும் துணையாக இருந்தது. இலங்கையின் அரசியல் யாப்பு மாற்றங்களும் திருத்தங்களும் பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மறுப்பதற்காகவும் ஆட்சித் தலைவரிடம் அதிகாரக் குவிப்புக்காகவுமே நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.
மகிந்த ராஜபக்சவின் அநியாயங்களையும் ஊழலையும் எதிர்த்து 2015இல் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனாவை மக்கள் தெரிவு செய்தனர். சிங்கள மக்களின் வாக்குகள் பிளவுபட்டபோது, இலங்கையின் தமிழ், முஸ்லிம் மக்களே இந்த மாற்றத்துக்கான வாக்குகளின் பலத்தை வழங்கியவர்கள். ‘நல்லாட்சி’, நூறு நாட்களில் ‘ஜனநாயக மீட்பு’ எனும் உறுதிமொழியுடன் ஆட்சிக்கு வந்த ‘புதிய’ அரசால் எத்தகைய அடிப்படை மாற்றங்களையும் செய்ய முடியவில்லை.
ஓரளவுக்குக் கருத்துச் சுதந்திரம், எதிர்ப்புக் குரல்களை உயர்த்தும் உரிமை என்பனவற்றைப் புதிய அரசாங்கம் வழங்கினாலும் பழைய சர்வாதிகார அதிபர் மகிந்த ராஜபக்சவின் பொருளாதாரக் கொள்கைகளையோ தமிழ் மக்கள் இன அழிப்புத் தொடர்பான கொள்கைகளையோ மாற்றவில்லை. இனப்பிரச்சினை, பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுகளைத் தீர்மானிக்கிற அல்லது நிராகரிக்கிற ரகசியப் பலம் படையினருக்கு மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டு வழங்குகிற உத்தரவுகளைக் கூட வடக்கு, கிழக்குப் பகுதியிலுள்ள படைத் தளபதிகள் கிழித்துக் குப்பைக் கூடையுள் வீசுகிறார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அரச படையினர் ஆக்கிரமித்திருந்த பொதுமக்களின் நிலங்கள் ஆங்காங்கே விடுவிக்கப்பட்டாலும் படைமயமாக்கம், சிங்கள மயமாக்கம், பௌத்த மயமாக்கம் என்பன எவ்விதத் தடைகளுமற்றுப் புதிய வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டன. சிறையில் பல்லாண்டுகளாக வதைபடும் தமிழ் அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. ஐ.நா. அவைக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் எவையுமே முற்றாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொய்மையும் காலதாமதமும் இழுத்தடிப்பும் பாசாங்கும் மிக்க ‘போலி மீட்பர்’களாகவே அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் இணைந்து நடத்தியும் ‘நல்லாட்சி’ அரசு செயல்பட்டது. எனவே அத்தகைய அரசுக்கெதிராக இலங்கையின் எல்லா இனமக்களும் வெறுப்புற்றமை நியாயமானதே.
இந்த வெறுப்பையும் தன்னுடைய சிங்கள, பௌத்த இனவாதத்தையும் தமிழ் மக்களையும் புலிகளையும் போரில் வெற்றி கொண்ட இறுமாப்பையும் முன்வைத்து ராஜபக்ச இடையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். அந்த வெற்றி கொடுத்த கொடுந்துணிவில் அதிபர் சிறிசேனவுடன் அவர் சேர்ந்து செய்த ‘சதிப் புரட்சி’யே இன்றைய குழப்பநிலைக்குக் காரணம். அதிபருக்குரிய அதிகாரத்தைப் பிழையான முறையிலும் அரசியல் யாப்பை மீறியும் அதிபர் சிறிசேன பயன்படுத்தித் திடீரென மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் என அவர் அறிவித்துவிட்டார். நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே பெரும்பான்மைப் பலம் இருக்கிறது. எனவே அவர்தான் முறைப்படி பிரதமர் என உரிமை கோருகிறார். இந்தத் தலையங்கம் எழுதுகிற வரைக்கும் நிலைமை அந்தரத்தில்தான் உள்ளது.
ஜனநாயக மீட்பு, ஜனநாயகத்தைக் காப்போம் என்ற கோஷங்களுடன் தீவிரமாகச் செயல்படும் சிங்களக் கட்சிகளும் சிங்களத் தாராளவாத (லிபரல்) பொது அமைப்புகளும் சிவில் உரிமை அமைப்புகளும் நல்லதே விழைகின்றன; அவை வரவேற்கப்பட வேண்டும். தமிழ் , முஸ்லிம் மக்கள் அந்தப் போராட்டங்களுக்கு உணர்வுத் தோழமையுடன் ஆதரவு தர வேண்டும். என்றாலும் தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஜனநாயகம், சமத்துவம், உரிமை என்று வருகிறபோது சிங்களத் தாராளவாத அமைப்புகள் உரிய அக்கறையுடன் செயல்படுவதில்லை. இலங்கையின் அரசியல் சமூக யதார்த்தம் அது. “மற்றையவர்கள் ஒடுக்கப்படுவது, இனப்படுகொலை செய்யப்படுவது பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. எமக்கு ஜனநாயகமும் கட்டற்ற வணிகமும் கட்டற்ற சுதந்திரமும் இருந்தால் போதும். மற்றையவர்களின் இன அழிப்பிலும் அவர்களுடைய வளங்களைச் சுரண்டுவதிலும் அதன்மூலம் எங்களுக்குக் கட்டற்ற லாபமும் வளமும் களிப்பும் கிடைக்குமென்பது உறுதி எனில் அதுவே சரி,” என்கிற உலகமயமாக்கலும் ‘தேசியக்’ கோட்பாடும் இருக்கும்வரை ராஜபக்ச, ரணில், சிறிசேன எல்லோரும் ஒன்றுதான். இவர்களுடைய முதல் பலி தமிழர்களும் முஸ்லிம்களும்; பிறகு சிங்கள மக்கள்.
நாடாளுமன்ற மிளகாய்த்தூள் போராட்டம், நாடாளுமன்ற அவமதிப்பு, ஜனநாயக மீட்புக் கண்ணீர் உதிர்ப்பு எல்லாவற்றுக்கும் அப்பால் மேற்கூறிய அடிப்படைச் சிக்கலை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டும். தோற்றப்பாடு அல்ல, சாராம்சமே அடிப்படை.
- சேரன்