கேள்விகளின் அறிமுகம்
நிழல்கள்
(சினிமா கட்டுரைகள்)
அ. யேசுராசா
வெளியீடு:
அலை
இலக்கம் 1
ஓடைகரை வீதி,
குறுநகர், யாழ்பாணம்
பக். 100
ரூ.300
“சினிமாவை விமர்சிக்கும் எவரும், அதில் சொல்லப்பட்டிருப்பதை காட்டிலும் அதிகப்படியாக எதையும் நமக்குத் தெரிவிக்க முடியாது. அதற்கு அவர்கள் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டாலும் பயனளிக்காது.” -& பெடரிக்கோ பெலினி, இத்தாலிய இயக்குநர்
இன்று உலக சினிமா குறித்த பார்வைகள் பல பரிமாணங்களில் நம்மை வந்தடைகின்றன. ஒரு திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்ட முறையையும் அதன் தனித்துவமான கதை சொல்லலையும் கதை நிகழும் பின்னணியையும் ஆழ்ந்து நோக்கும் விமர்சனங்கள் அவசியமாகின்றன. தீவிர சினிமாவின் இலக்கைப் பரந்துபட்ட மக்களிடம் கொண்டுசெல்லும் சீரிய பணி அத்தகைய விமர்சனங்களாலேயே சாத்தியப்பட்டு வருகிறது.
பிரச்சாரத்தை விலக்கிய திரைப்படங்கள் மக்களின் வாழ்வு நிலையை நேர்மையாக எடுத்துரைப்பவை. கலை, இலக்கியங்கள் பிரதிபலிக்கவேண்டியதும் அதைத்தான். அப்படியான திரைப்படங்கள் குறித்த தொகுப்பாக யேசுராசாவின் ‘நிழல்கள்’ உள்ளது. இந்த வாழ்வுதான் இந்த தேசத்தின் வாழ்வு என அறிவிக்கும் இப்படைப்புகள் விமர்சகர்களால் அதிகம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதவை. திரைப்படங்களை நெருக்கமாக அவதானித்து, அதன் நிறைகுறைகளை அலசும் விமர்சனங்கள் ஒரு புறமெனில், யேசுராசாவின் இக்கட்டுரைகள் திரைக்கதையின் சுருங்கிய வடிவத்தைச் சிற்சில விமர்சன பார்வையோடு பகிர்கின்றன. எழுத்தின் வழி காட்சி அனுபவத்தைச் சாத்தியமாக்கும் முயற்சியாக இதைப் பாவிக்க வேண்டியுள்ளது. தன்னுரையில்ஆசிரியர் குறிப்பிடுவதுபோல கதையின் நிகழ்வுப் போக்கும் முக்கிய உரையாடல்களுமே இதில் பிரதானமாக உள்ளன.
சினிமாவைத் தனித்த கலைவடிவமாக முன்னிறுத்திய வகையில் ருஷ்யாவிற்கு உலக சினிமா அரங்கில் முக்கிய இடமுண்டு. ஆந்த்ரே தார்கோவெஸ்கி, ஐசென்ஸ்டின், ஆந்த்ரே கான்சலோவெஸ்கி உள்ளிட்ட இயக்குநர்களின் திரைப்படங்கள் அதற்குச் சான்று. சோவியத் ரஷ்யாவின் பொக்கிஷம் எனக் கொண்டாடப்படும் இயக்குநர் எல்டர் ரியஸனோவின் ‘A Cruel Romance’ (1984) குறித்த கட்டுரை அத்திரைப்படத்தின் திரைக்கதையை விரிவாக முன்வைக்கிறது. காதலின் நிமித்தம் மூன்று ஆண்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் லரீஷா என்னும் பெண்ணின் கதை. 1878இல் வெளியான Dowryless என்னும் ரஷ்ய நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில், “அழகிய பெண்கள் ஏன் எப்போதும் ஏமாற்றுக்காரனையே விரும்புகின்றனர்?” என்னும் கேள்வி லரீஷாவிடம் கேட்கப்படுகிறது. அதுவே இக்கதையின் ஆதாரம். மனவலிமையற்ற லரீஷாவின் துயரங்கள் வழியே வாழ்வின் எதார்த்தங்களைப் பேசுகிற இப்படைப்பு ரஷ்ய காதல் காவியங்களில் ஒன்றாக விளங்குகிறது.
யுத்தத்தின் தீவிரத்தை இருவேறு பின்னணியில் பேசுகிற Romeo, Juliet and Darkness, The Bridge திரைப்படங்களின் விவரிப்பு, மனிதர்களுக்குள் யுத்தம் ஏற்படுத்தும் அறியப்படாத துக்கங்களை ஆராயத் தூண்டுகிறது. தேசங்களை நிர்மூலமாக்கி, சராசரி வாழ்க்கையை அடையாளமற்றுப் போகச் செய்த யுத்தங்களின் பாதிப்பை உளவியல் கண்ணோட்டத்தில் அணுகும் படைப்புகள் இவை. செக் குடியரசின் Romeo, Juliet and Darkness (1960), ஹிட்லரின் நாசிப் படையின் மானுட விரோதப் போக்கை, ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறது. தான் தஞ்சமளிக்கும் யூதப் பெண்ணான ஹன்காவுடன் நாயகன் பாவல் கொள்ளும் காதலின் மகத்துவத்தை, நெருக்கடி மிகுந்தச் சூழலைத் தயக்கமின்றி எதிர்கொள்ளும் அந்த இளைஞனின் போர்க்குணத்தை முழுதாகப் புரிந்துகொள்ள உரையாடல் வடிவிலான கட்டுரை உதவுகிறது. தங்களின் உடைமைகளைச் சுமந்துகொண்டு வெறுமை சூழ்ந்த வீதியில் நடந்துசெல்லும் ஒரு யூதக் குடும்பத்தினை பாவல் காணும் காட்சியின் விவரிப்பு அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக வாசகனை மாற்றிவிடுகிறது.
இயக்குநர் பேர்ன்ஹாட் விக்கியின் The Bridge (1959), இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியில் நிகழும் ஒரு தாக்குதலில் பலியாகும் பதினாறு வயதே நிரம்பிய இளைஞர் குழு ஒன்றின் கதை. அந்தத் தாக்குதலும் அவர்களின் மரணமும் தேவையற்ற ஒன்றாகிப்போவதும் பின்னாளில் அந்நிகழ்வு வரலாற்றில் இடம்பெறாததும் கவனிக்கப்பட வேண்டியவை. இக்கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கதைச் சுருக்கமும் உரையாடல்களுமாய் நீளும் இக்கட்டுரையில் சிறார்களைப் போதிய பயிற்சியின்றி போருக்குத் தயார் செய்த நாசிகள் குறித்த காட்சிகளின் விவரிப்பு அச்சமூட்டுபவை. ஜெர்மன் திரைவரலாற்றில் புதிய அலை உருவாக இப்படத்தின் தாக்கமும் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஒருவனின் லட்சியம் சரியான நோக்கம் கொண்டதாக இல்லாத பட்சத்தில் அதன் பொருட்டு அவன் மரணிப்பதிலோ கதாநாயகனாகக் கொண்டாடப்படுவதிலோ எந்த அர்த்தமும் இல்லை என நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கூறுகிறார். ஹிட்லரின் வதைமுகாமில் தனது இளம் பிராயத்தின் ஒரு பகுதியைக் கழித்துள்ள இயக்குநர் விக்கி, போருக்கெதிரான அழுத்தமிக்க படைப்பைத் தந்ததில் வியப்பில்லை.
உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான Stoning Of Soraya (2008), மத ஒடுக்குமுறைகளுக்குப் பலியாகும் பெண்ணின் கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இந்தப் படத்தின் இயக்குநர் சைரஸ் நொவ்ரஸ்தெஹ். மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்த அன்றாட வாழ்க்கையை நூறு சதவிகிதம் அதன் எதார்த்தத்தை விட்டு விலகாமல் காட்சிப்படுத்துதல் இரானிய சினிமாவில் சாத்தியமாகிறது. கேமராவை ஆயுதமாக ஏந்தி விளிம்புநிலை மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் மோசன் மெஹ்மல்பப்பும் கவிதை மொழியில் காட்சிகள் அமைத்து வாழ்வின் கதைகளைப் பேசிய அப்பாஸ் கியோரஸ்தமியும் அதன் இருவேறு முகங்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இரானிய சினிமா தனக்கான தனித்த கதை சொல்லலைக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது. சொராயாவின் துயரம் என்பது தினம் தினம் தீயில் உழன்று கொண்டிருக்கும் வாழ்வுக்குச் சமமானது. செய்யாத குற்றத்திற்காக ஆணாதிக்கச் சமூகத்தின் கொடிய பசிக்கு இரையாகிப் போகும் அப்பாவிப் பெண்ணவள். ஊரின் மத்தியில், பெற்ற பிள்ளைகளின் கண் எதிரே கல்லெறிந்து கொலை செய்யப்படும் சொராயாவின் மரணம் கடவுளின் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. மதத்தின் பெயரால் நிகழும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், இத்திரைப்படம் மேலும் தனித்துவம் பெறுகிறது.
இத்தாலிய இயக்குநர் லூஷினோ விஸ்கொன்ரியின் La Terra Trema (1948) திரைப்படத்தின் கதைச் சுருக்கம் ஓர் உணர்ச்சி மிகு நாவலை வாசித்து முடித்த அனுபவத்தைத் தருகிறது. “மனிதனை மனிதன் சுரண்டும் பழைய கதை..” என்னும் விவரணைக் குரலோடு தொடங்கும் கதை, ஒரு மீனவக் குடும்பத்தின் போராட்ட வாழ்க்கையை விவரிக்கிறது. The Leopard, Death In Venice உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய விஸ்கொன்ரி இத்தாலிய சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பவர். ஓயாத உழைப்புக்குப் பின்னும் பொருளாதார நிலையில் எவ்வித மாற்றமும் காணாது தலைமுறை தலைமுறையாய் ஏழ்மையில் உழலும் மீனவர்களின் இக்கதை இன்றைய சூழலுக்குப் பொருந்திப்போகும்படியாக இருப்பது அதிர்ச்சியளிக்கும் நிதர்சனம்.
இயக்குநர் கோவிந்த் நிஹலானி, மராத்தியில் நாடகமாக அரங்கேறிய கதைக்குத் திரைக்கதை அமைத்து இயக்கிய ஹிந்தி திரைப்படம் Party (1984).. மாறுபட்ட சமூக நோக்குகொண்ட மனிதர்களுக்கிடையே நிகழும் உரையாடல்களை மையப்படுத்திய இம்மாதிரியான முயற்சி இந்திய சினிமாவுக்கு முற்றிலும் புதிது.ஸ்பானிஷ் இயக்குநர் லூயி புனுவலின் புகழ் பெற்ற The Exterminating Angel இப்படியான கதை அமைப்பைக் கொண்டதே. ஓர் இரவு விருந்தில் கலந்துகொள்ளும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திலுள்ள நண்பர்கள் விருந்து நடைபெறும் அறையை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்ளும் மிகை எதார்த்த படைப்பு. பார்ட்டி திரைப்படம் நேரடியான கதை சொல்லல் உத்தி கொண்டு எதிர்மறைக் கருத்துடையவர்களுக்கிடையே நீளும் விவாதங்களின் வழி நில உரிமை/மக்கள் போராட்டம் என அரசியல் சார்ந்த தெளிவை முன்வைக்கிறது. ஓம் புரி,அம்ரிஷ் புரி,நஸ்ருதீன் ஷா, ரோகிணி ஹட்டன்காடி என இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களின் பங்களிப்பு இத்திரைப்படத்தைக் காணும் ஆவலை அதிகரிக்கச் செய்கிறது.
இவை தவிர்த்து Lemon Tree, அம்ஷன் குமாரின் ‘ஒருத்தி’ உள்ளிட்ட திரைப்படங்களின் கதை வடிவக் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாண திரைக்கூடல்களில் தமக்கு அறிமுகமான படங்களுள் குறிப்பிட்ட சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் திரைக்கதையை/உரையாடல்களைச் சுருக்கமாகத் தொகுத்துள்ளார் அ. யேசுராசா. உலக சினிமா குறித்தத் தேடல் உள்ளவர்களுக்கு இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள திரைப்படங்கள் நிச்சயம் பயனுள்ளனவாக இருக்கும். அதே வேளையில் தீவிர விமர்சனப் பார்வையை எதிர்நோக்கும் வாசகருக்குச் சிறிது ஏமாற்றம் உண்டாகலாம். ஏனெனில் ஆழமான விவாதங்களை முன்னெடுக்கத் தேவையான விவரணைகள் இக்கட்டுரைகளில் இல்லை. காட்சியமைப்புகளின் நேர்த்தி, ஒளிப்பதிவின் நுணுக்கங்கள், பின்னணி இசை பற்றிய குறிப்புகள் மேலோட்டமாக முன்வைக்கப்பட்டுள்ளன. அநேகக் கட்டுரைகளில் இவை குறிப்பிடப்படவும் இல்லை. கலாச்சார புரட்சியையும் அரசியல் மாற்றங்களையும் பேசுகிற திரைப்படங்களை அறிமுகம் செய்யும் ஆசிரியர் அதன் பேசுபொருள் குறித்த விளக்கத்தை வாசகனிடம் விட்டுவிடுகிறார்.
இருப்பினும் சம்பிரதாயமான கலைப் படைப்புகளிலிருந்து விலகி, மனித இருப்பை ஆராயத் தூண்டும் கேள்விகளை உள்ளடக்கிய திரைப்படங்களை அறிமுகம் செய்திருக்கும் வகையில் இத்தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மின்னஞ்சல்: yalisaisl@gmail.com