சபரிமலை தீர்ப்பும் அதன் எதிர்ப்பாளர்களும்
எந்தச் சமூகம் பாலின நீதி விழுமியத்தை உள்வாங்குவதில் தோல்வியடைகிறதோ அது சுயமரியாதையற்ற சமூகம்.
சபரிமலைக் கோயிலுக்குள் பெண்கள் செல்வது குறித்துச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். ஒருபுறம் காங்கிரஸ் கட்சியின் முரண்பாடான நிலை. காங்கிரசின் தேசிய தலைமை எடுத்த நிலைபாட்டை கேரள மாநிலப் பிரிவு ஏற்கவில்லை. மறுபுறம், பாரதீய ஜனதா கட்சி போன்ற இந்துத்துவா கட்சிகள் மதக் கட்டமைப்பில் ஆழமாக வேர்கொண்டுள்ள அதிகாரத்திற்கு ஆதரவளிக்கும் தங்களது நிலைபாட்டிற்கு இணக்கமான நிலைபாட்டை எடுத்துள்ளன.
ஆனால் பாலின நீதிக்கு எதிரானவர்கள் எந்த அடிப்படையில் தீர்ப்பை எதிர்க்கிறார்களோ அது அறரீதியாக தவறானது மட்டுமல்ல அரசமைப்புச் சட்டரீதியாக ஆபத்தானதும்கூட. பாஜக தலைவரின் சமீபத்திய கூற்று இதை நிரூபிக்கிறது. அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கக்கூடாது என்று பாஜக தலைவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மூன்று கேள்விகளை எழுப்புகிறது. ஒன்று, பாஜக தலைவர் ஏன் இந்தச் சந்தேகத்தை எழுப்புகிறார்? இரண்டு, பாலின நீதியைத் சாத்தியமாக்குவதில் கேரளாவிலுள்ள காங்கிரஸ் கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் அர்ப்பணிப்புதான் என்ன? மூன்று, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஆதரவாக நின்று மக்களாட்சியை மேம்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ள சமூக, அரசியல் சக்திகள் எவை?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கான பாஜக தலைவரின் எதிர்வினையில் கள்ளத்தனமான சந்தேகம் இருக்கிறது. தீர்ப்பு வெளியானதையடுத்து, இரண்டு வேறுபட்ட காரணங்களுக்காக ‘பொதுமக்களின் கோபம்’ பற்றிய அச்சத்தை பாஜக தலைவர் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. ஒன்று, தீர்ப்பை எதிர்க்கும் கேரள மக்களை அணிதிரட்ட முயற்சிசெய்கிறார். எப்படியாவது கேரளத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற தவிப்பில் இத்தகைய அணிதிரட்டலைச் செய்கிறார். அத்துடன் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய அணிதிரட்டல் செயற்பாட்டின் ஆற்றலையும் அதன் நெறிசார்ந்த முக்கியத்துவத்தையும் அவர் பலவீனப்படுத்துகிறார். இரண்டு, பொதுமக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வியை தவிர்ப்பதற்காக, குறிப்பாக சமத்துவத்தை வலியுறுத்துவதில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வியைத் தவிர்ப்பதற்காக பாஜக தலைவர் இவ்வாறு பேசியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சொல்லப்போனால், பாஜகவும் சங் பரிவாரத்தைச் சேர்ந்த பிற அமைப்புகளும் இத்தகைய ஆழமான பிரச்சனைகளில் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. பாஜகவின் தலைவரும் அவரது தாய் அமைப்பும் எதிர்காலத்தை விட கடந்த காலத்தில்தான் அதிக அக்கறை கொண்டவர்கள் என்பதே இந்தத் திட்டமிடப்பட்ட அக்கறையின்மைக்கான காரணமாக இருக்கலாம். ‘எப்படி இருக்கவேண்டும்’ என்பது பற்றிய கேள்வியில் பொதிந்திருக்கும் அறமானது, பாஜக எல்லா மனிதர்களையும் சமமாக நடத்துவது மட்டுமல்ல சமத்துவத்தைப் பேசுவதற்கான களங்களையும் அமைத்துத்தர வேண்டும் என்று கோருகிறது. பிற மதங்களின் புனிதத்தலங்களைப் போலவே சபரிமலைக் கோயிலும் சமத்துவத்தைப் பேசுவதற்கான களமே. ‘நிர்மிக்’ (இது கடவுள் என்ற கருத்திலிருந்து வேறுபட்டது) என்பது மிக அவசியமாகத் தேவைப்படும் உயர்ந்த விழுமியமான சமத்துவத்திற்கு ஆதரவானது என்றார் நவீன இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளரான ஜோதிராவ் பூலே. பூலேயைப் பொறுத்தவரை இந்த நிர்மிக்கின் சமத்துவப் பார்வையை நிறைவேற்றும் சமூக, அறப் பொறுப்புகொண்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமத்துவம் என்பது மிக அடிப்படையான முக்கியத்துவம் கொண்டது.
பொதுவாகக் கூறுகையில் சமத்துவமும் நீதியும் சட்டத்தைச் சார்ந்து இருக்காதவை; இவை சட்டம் என்ற ஒன்று உருவாகும் முன்னரே இருப்பவை என்பதாகப் பார்க்கப்பட வேண்டும். வேறு மாதிரியாகச் சொன்னால் குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், மிக முக்கியமான, முறையான அரசியல் களத்தில் இயங்கும் அரசியல் கட்சிகள்தான் பாலின சமத்துவத்தை ஏற்க மறுக்கும் மக்களை அதை நோக்கிச் செலுத்த வேண்டும். பாலினம், இனம், சாதி என வேறுபாடின்றி எல்லாரும் பெற்றிருக்க வேண்டிய பொதுநலம்தான் பாலின சமத்துவமும் பாலின நீதியும் என்பதாக அரசியல் கட்சிகள் நடந்துகொள்ள வேண்டும். வெகு நீண்டகாலமாக ஆண்கள் பெற்றிருக்கும் கோயில் நுழைவு உரிமையைப் பெண்களுக்கு மறுக்கும் ஆணாதிக்கச் சமூகத்திற்கெதிரான பொதுக்கருத்தை உருவாக்க வேண்டிய தேவையை அரசியல் கட்சிகள் அறிவுபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். ஆகவே பெண்களின் கோயில் நுழைவு, சட்ட அமைப்பால் விவாதிக்கப்படும் முன்னர் அற அடிப்படையில் அதைச் சமூகத்தின் முதன்மையான அக்கறையாகக் கருத வேண்டும்.
பாலின நீதியை எதிர்க்கும் மக்களை உருவாக்க பாஜக தலைவர் செய்யும் முயற்சிகள் கோயில் பிரச்சனையில் வேரோடியுள்ள ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கிறது. மக்களைப் பிற்போக்கானவர்களாக உருவாக்கும் திட்டமானது கோயில் நிர்வாகத்தின் மீதான தனது பிடியை வலுப்படுத்திக்கொள்ள ஆழமாக வேரோடியுள்ள ஆணாதிக்கத்திற்கு உதவி செய்யும். இது பாலின நீதிக்கு நல்லதல்ல. இது பெண்களின், கீழ்நிலையிலுள்ள சாதிகளின் சமத்துவத்திற்கான விழைவின் மீது கட்டுப்பாடுகளைத் திணிக்கும் தனது அதிகாரத்தைக் காட்டுகிறது. அரசியல் கட்சிகளும் மக்களும் என இரு தரப்புமே அரசமைப்புச் சட்டத்தை மதிக்கத் தவறுகிறபோது பாலின நீதி போன்ற உலகளாவிய விழுமியங்களைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியுள்ளது. அரசியல் கட்சிகளின் தோல்விதான் பெண்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை உச்ச நீதிமன்றத்தின் மீது சுமத்துகிறது. ஆக, பாலின நீதி விஷயத்தில் சமூகக் கருத்தொற்றுமையை உருவாக்குவதில் அரசியல் கட்சிகள் அடைந்த தோல்வியைத்தான் சபரிமலை தீர்ப்பு பிரதிபலிக்கிறது. தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம் காட்டிவரும் உறுதியை அங்கீகரித்தாக வேண்டும். அதைப்போலவே இடதுசாரி ஜனநாயக முன்னணியும் பிற பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்புகளும் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்களை அணிதிரட்டிவருவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படை அம்சமாகும். நீதித்துறையின் முனைப்பான செயல்பாடு என்கிற முக்கியமான கோணத்திலும் இந்தத் தீர்ப்பை நாம் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பை அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளையும் பொருத்தமான விதிகளையும் ஒட்டியே அளித்துள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் அறம், மக்களாட்சியின் இலட்சியங்கள் ஆகியவற்றிற்குக் காங்கிரஸ் கட்சியின் கேரளப் பிரிவு கொண்டுள்ள அர்ப்பணிப்பை மதிப்பிடுவதற்கான நெறிசார்ந்த அளவுகோல்களைத் தீர்ப்பு வழங்குகிறது. கேரள மாநிலத்திலுள்ள காங்கிரஸ் கட்சியானது உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிமனித உரிமைகளை மதிப்பது மட்டுமல்ல, சமத்துவத்திற்கான உரிமையை விளக்கம் ஏதும் தேவைப்படாத வெளிப்படையான விழுமியமாகவும் ஏற்க வேண்டும்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, நவம்பர் 3, 2018
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com