இன்று பெண்கள் நேற்று ஈழவர்கள்
காரணம் கேட்கும் கால வெற்றியின் அடையாளம் சபரிமலையில் பெண்கள் (10 - 50 வயது) வழிபடலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் 28 செப்டம்பர் 2018இன் தீர்ப்பு. காரணம் தேவையில்லை; நம்பிக்கை போதுமானது என்ற பழைய வழக்கத்தின் நீட்சி நான்கில் ஒருவரின் ஏற்றுக்கொள்ளா குறிப்பு. அவர் பெண் என்பதும் ஆச்சரியமில்லை. கேரளத்தின் கோயில் அருகாமை வீதியில் ஈழவர் சஞ்சார உரிமை கோரியபோது, அதை எதிர்த்துக் கேரளச் சட்டசபையில் வாக்களித்துத் தீர்மானத்தைத் தோற்கடித்தது, ஓர் ஈழவரே (02 பிப்ரவரி 1925).
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாததைப் போலவே, 1920களிலும் ஈழவர்கள் கோயில் அருகிலுள்ள வீதிகளிலும் நடக்க அனுமதிக்கப்படாத நிலை நிலவியது. தீண்டாமையோடு அணுகாமையும் இருந்ததைக் கண்டு விவேகானந்தரும் காந்தியும் கண்டித்த கடவுளின் தேசம் கேரளம். டி.கே. மாதவன் முதலானவர்கள் ஈழவர் தடையை நீக்க முன்முயற்சி எடுத்ததும் பெரியார் முதலானோர் தமிழ்நாட்டிலிருந்து சென்று போராடி வென்றதும் வைக்கம் போராட்டமாய் வரலாற்றில் விளங்குகிறது. வைக்கம் போராட்டத்தில் பெண்கள் முன்வந்து போராட வேண்டுமென பிரச்சாரம் செய்ததோடு மனைவி, உறவுப் பெண்களுடன் அங்குப் போராடியவர் பெரியார் என்று பெண் ஆய்வாளர் மீரா வேலாயுதன், பாலாம்பாள் போன்றோர் ஆதாரத்துடன் குறித்துள்ளனர். அச்சமயம் வைக்கம் வைதிகர்களிடம் ஈழவர் அனுமதி மறுப்புக்கான காரணத்தை காந்தி கேட்டபோது, வைதிகர்கள் ‘பழக்கம், வரலாற்றுக் காலம் தொட்டு நீடிக்கும் பழக்கம், முன்னோர் அறிவுரைத்து அனுசரித்த வழக்கம்’ என்று சாதித்தனர். திருப்பித்திருப்பிக் கேட்டபோது முன்வினைப் பயன் என்றனர். காந்தியின் தொடர்ச்சியான இரண்டு கேள்விகளுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத பலவீனமான பதிலையே தந்தனர். காரணத்தையே பற்றி நின்ற காந்தி, வைதிகர் தம் தரப்பை நிறுவ மூன்று வாய்ப்புகளை முன்னுரைத்தார். முதலாவது, ஈழவர்களை அனுமதிக்காததற்கான சாஸ்திர ஆதாரங்களைக் காட்டும்படிக் கேட்டார். சாஸ்திரத்தில் அப்படியிருக்க வாய்ப்பில்லை என்று, பாவம் காந்தி நம்பினார். சாஸ்திரங்களின் மேலாதிக்கத்தை மறுக்க வேண்டும் என்பது இதன் தொடர்பில் அம்பேத்கரின் உறுதி. இரண்டாவது, நாட்டின் தலைமை அமைச்சரை நடுவராகக் கொண்ட இருதரப்பு அறிவாளர்களைக் கொண்ட வாத விவாதம். மூன்றாவது தொடர்புடைய பொதுமக்களிடம் எடுக்கப்படும் பொதுவாக்கெடுப்பு. தம் பழக்கத்துக்கான காரணத்தைச் சொல்ல இயலாத நிலையில் மத ஆதாரம், விவாத முடிவு, பொதுமக்கள் கருத்து என்ற முறைகளைக் கொண்டு முடிவு எடுக்கலாம் என்று காந்தி கருதினார்.
சபரிமலையில் பெண்கள் அனுமதி மறுப்பிலும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடிய காரணத்தைச் சொல்ல இயலாத நிலையில் காந்தியின் கருத்துகளைப் பரிசீலிக்கலாம். ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்ற (சாகும்வரை மணமுடிக்கா நிலை) புராண அல்லது சாஸ்திர ஆதாரம் சிறப்பான வாதங்களால் ஒரு வழக்கறிஞரால் வைக்கப்பட்டது. நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. அறிவாளர் விவாதங்களில் மகளிர் அணியினர் வெற்றி பெறுவதையே தொலைக்காட்சியில் பெரும்பான்மையாகக் கண்ணுறுகிறோம். மகளிரை அனுமதிப்பதில் பொதுமக்கள் கருத்து பெரும்பான்மையாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யமுடியவில்லை. அதற்கு வாக்கெடுப்பு உதவலாம். ஆங்காங்கு நடைபெறும் பெண்களின் ஆர்ப்பாட்டங்கள் ஆண்களின் கருத்தியலுக்குள் சிக்கிக்கொண்டுள்ள பெண்களின் எதிரொலிகளாகவே பார்க்கப்படுகின்றன. ஸ்தல அரசாங்கம் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கேடயமாகக் கொண்டு முற்போக்கின் பக்கம் நிற்கிறது. தேவஸ்வம் அரசாங்கத்தை மீறி மறுபரிசீலனை மனு போடும் வல்லமையுடன் இப்போது இல்லை. ஸ்ரீ நாராயண குருவின் எஸ்.என்.டி.பி. யோகம் இப்போதும் முற்போக்கை ஆதரிக்கிறது. இது அதன் வளமைதான். ஆனால் நாயர் சேவா சங்கம், தமது வரலாற்றுக்கு முரணாகப் பழைய வழக்கத்துக்கு முட்டுக்கொடுக்க முயல்கிறது. 1925இல் சஞ்சார உரிமை தொடர்பான பிரச்சனையில் ஈழவர்களுக்கு ஆதரவாக நாயர் சேவா சங்கத்தின் தலைவரான மன்னத்து பத்மநாபன் வைக்கத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஒரு பேரணியையே நடத்தினார். அதை நன்றியுடன் கேரளம் நினைவுகூர்ந்தது. வைக்கத்தில் மூன்று சிலைகளில் ஒன்றாக நிற்கிறார் அவர்.
இப்போது அனுமதி மறுக்கப்பட்ட மகளிர் அமைப்பினர் நீதிமன்றத்தின் துணையையாவது நம்பிக்கையுடன் நாடினர். சஞ்சார உரிமை மறுக்கப்பட்ட ஈழவர் அப்போது நீதிமன்றத்தின் படியைக் கூட மிதிக்கவில்லை. 1900க்கு முன் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பின் வலிமையை உணர்ந்திருந்த டி.கே. மாதவன் நீதிமன்றம் பற்றி யோசிக்கவே இல்லை. வழக்கறிஞரான காந்தியும் நீதிமன்ற யோசனையைப் பரிந்துரைக்கவே இல்லை. இம்மாதிரியான வழக்கொன்றில் Defile என்ற வினைச்சொல்லுக்கு ஆங்கில அகராதி தரும் பொருளை ஏற்காமல் தாந்திரீகமான அசுத்தம் என்ற பொருளைத் தமிழ் நீதிபதி ஒருவர் எடுத்துச் சொல்லி அமர்வில் இருந்த பிரிட்டீஷ் நீதிபதியையும் ஒப்புக்கொள்ளவைத்துவிட்டார். தீட்டு என்பதன் வரையறையில் கோயில் காப்பாளர்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட தீர்ப்பு அது. எண்ணெய் எடுக்கச் செக்காட்டும் வேலையைச் செய்யும் ஒருவர் எண்ணெய் வித்துகளின் உயிரைக் கொன்று எண்ணெய் எடுப்பதால் உயிரைக் கொன்ற பாவம் அவரைச் சேர்கிறது. அதனால் அவரது சான்னித்தியத்தால் தெய்வ உரு தீட்டாகிறது என்பன போன்ற பழைமையின் களிம்பேறிய வாதங்களால் நிறைந்திருந்தது அந்தத் தீர்ப்பு. இதையெல்லாம் பார்த்த வரலாற்றுக்கு இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சியைத் தரலாம். கேரளத்தில் கடந்த மூன்று மாதங்களாக நடந்த முற்போக்குச் சக்திகளின் கட்டுக்கோப்பான போராட்டத்தின் விளைவால், சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நவம்பரில் ஏற்றுக்கொண்டுள்ளது. தீர்ப்பு என்னவாகவும் இருக்கலாம். ஆனால் நீதிமன்றம் அல்ல இத்தகைய வழக்குகளுக்கான தீர்வுக்களம். மக்கள்மன்றம்தான் சரியான இடம். மக்கள் மனமாற்றம்தான் முக்கியம். எந்தத் தீர்ப்பையும் நடைமுறைப்படுத்துவது நிறைவாக மக்கள்தானே. மக்கள் மனத்தைப் பிரசாரத்தால் பெரியாரைப் போலவும் காந்தியைப் போலவும் மாற்ற முற்போக்குச் சக்திகள் முயலவேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்பால் நாடெங்கும் வழக்குகள் பெருகும் என்ற அவதானிப்பை முக்கியமான ஒருவர் தெரிவித்திருக்கிறார். சதி ஒழிப்பின் போதும் இத்தகைய முறையிடல்கள் இல்லாமலா இருந்திருக்கும்?
தாழ்த்தப்பட்டவரையும் அர்ச்சகராக்கிச் சமத்துவத்தை நடைமுறைப்படுத்தியது கேரளச் சமூகம். காலமும் பழக்கமும் எல்லா முரண்களையும் செரித்து விழுங்கி விடும். இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னால் வரும் ஒரு தலைமுறை, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாமலா இருந்தார்கள் என்று ஆச்சரியமாகக் கேட்கும். குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே செல்ல முடிந்த உணவகங்கள் இருந்ததைச் சின்ன வயதில் என் மகள் நம்ப மறுத்ததைப் போல!
மின்னஞ்சல்: athiy61@yahoo.co.in