கலையுரைத்த...
இந்திய விமானநிலைய ஆணையமும் ஸ்பிக் மக்கே அமைப்பும் இணைந்து கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தன. தில்லி நேரு பூங்காவில் நவம்பர் 17 அன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாக அமைப்பாளர்கள் திடீர் அறிவிப்பைச் செய்தனர். சில வெளி முகவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது. அதே தில்லியில் அதே நாளில் தாம் பாட விரும்புவதாகப் பாடகர் கிருஷ்ணா தெரிவித்தார். தில்லி மாநில அரசின் கலாச்சாரத் துறை அதை ஏற்று நிகழ்ச்சியை அதே நாளில் நடத்தியது. கிருஷ்ணாவின் அரங்கு கொள்ளாத ரசிகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியாகவும் அது அமைந்தது.
புறநிர்ப்பந்தங்களுக்குத் தனது கலையைப் பலியிட அனுமதிப்பதில்லை என்ற கிருஷ்ணாவின் துணிவும், கலைஞர்களை மதிக்கவும் பேணவும் ஒரு ஜனநாயக அரசு கடமைப்பட்டது என்ற எண்ணத்தில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட நடவடிக்கையும் போற்றுதலுக்குரியவை; முன் உதாரணமாக அமைபவை.
கச்சேரியை நடத்தவிடாத ‘ஏஜென்சிகள்’ எவை என்று அமைப்பாளர்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவை எவையென்பது ரகசியமல்ல. மதம், சாதி ஆகியவற்றின் பெயரால் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் அடிப்படைவாத சக்திகளின் கைங்கர்யம் இது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
கர்நாடக இசைமேடையில் இயேசுவைக் குறித்த பாடலைப் பாடினார், இசைப்பதிவில் இயேசுவின் புகழ் வாழும் பாடலைப் பாடினார் என்று கர்நாடக இசைக் கலைஞர்களான ஓ.எஸ். அருணுக்கும் நித்யஸ்ரீக்கும் அருணா சாய்ராமுக்கும் எதிராக எழுந்தவர்கள் எவரோ அவர்களே கிருஷ்ணாவுக்கும் எதிராக எழுந்திருக்கிறார்கள் என்பது விளங்காப் புதிர் அல்ல. வரலாறு நெடுகிலும் கலைஞர்கள் மீதான, அதன் வழியே கலைமீதான ஆக்கிரமிப்பு, தொடர்ந்து வந்திருக்கிறது. திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவில் எம்.எம். தண்டபாணி தேசிகர் பாடியதால் தீட்டுப்பட்ட மேடை சுத்தப்படுத்தப்பட்டது. அப்போது சொல்லப்பட்ட காரணம்: ஆசாரம். குருவாயூர் ஆலயத்தில் யேசுதாசை அனுமதிக்க மறுப்பதன் காரணம் மதம்.
உண்மையில் கலையின் மையம் இவற்றிற்கு அப்பாற்பட்டது. மதமும் சாதியும் கலையைப் புரப்பதன் நோக்கம் அவற்றை வளர்ப்பதல்ல. மாறாக, தம்மை நிலைநிறுத்திக்கொள்வதுதான். கலை, அதன் ஆழ்ந்த பொருளின் இம்மையியல் (ஷிமீநீuறீணீக்ஷீ) சார்ந்தது. நுகர்வோனிடம் அது ஏற்படுத்தும் நெகிழ்வுணர்வு ஆன்மீகம் என்று பாராட்டப்படுகிறது. மதம், இந்த உணர்வையே பக்தி என்று சுருக்குகிறது. ‘என்னைக் காப்பாற்ற நடந்துவந்தாயோ, ராமா’ என்று மோகனமான பக்தியில் உருகவேண்டிய டி.எம். கிருஷ்ணா ‘பொறம்போக்கு’ என்று பாடும்போது ஆசாரம் குலைந்துபோவதாக நினைப்பது இந்தக் குறுகல் மனப்பான்மையால்தான்.
ஆனால் இந்திய இசையும் பிற கலைகளும் குறுகிய மனப்பான்மைக்கு எதிராகச் செயல்பட்டே வளர்ந்து வந்திருக்கின்றன. ஆசாரங்களையும் சுயச்சார்புக் குறுக்கங்களையும் மீறியே செழுமைப் பெற்றிருக்கின்றன. இந்துஸ்தானி இசையின் ஒரு வடிவம் தும்ரி. அதன் மையப்பொருள் கிருஷ்ணபக்தி. ஆனால் தும்ரியைப் பேணிப் பிரபலப்படுத்தியவர்கள் பெரும்பான்மையினரும் முஸ்லீம்கள். கர்நாடக இசையின் இலக்கணங்களைக் கூறும் ‘கர்ணாமிருத சாகரம்’ நூல் ஆபிரகாம் பண்டிதர் என்ற கிறித்தவரின் கொடை. திருப்பதி தேவஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் நாதஸ்வர கலைஞர் ஷேக் சின்ன மௌலானா சாகிப். காசி விஸ்வநாதரை அன்றாடம் பள்ளியெழ இசைத்தவர் பிஸ்மில்லாகான். பாரம்பரியமாகவே இசைக் கலைஞர்கள் கையாளும் வாத்தியக் கருவிகள் பலவற்றையும் உருவாக்கித் தருபவர்கள் தலித் சமூகத்தினர்.
இந்த உதாரணங்கள் சுட்டிக்காட்டுவது கலையின் உலகில் சாதிக்கோ மதத்துக்கோ இடமில்லை என்பதையே. அரசியலில் தங்களது ஆதிக்கம் வலுவாக இருப்பதாக நம்பும் அடிப்படைவாத சக்திகள் கலை, கலாச்சாரத் துறைகளிலும் அந்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயல்கின்றன. அந்த வன்செயலின் நிகழ்கால உதாரணமே கிருஷ்ணா சம்பவம். அரசியல் ஆதிக்கம் அடுத்த தேர்தலில் தோல்வியடைவதோடு ஒரு வேளை வலுவிழக்கலாம். ஆனால் கலாச்சாரத்தின் மீதான முற்றுகை ஆழமாக வேரூன்றக்கூடியது. அது அபாயகரமானது.