“ஆண்மை“ச் சொல்லாடல்களும் ஆதிக்கச் சாதியுடனான உரையாடலும்
பரியேறும் பெருமாள் திரைப்படக் கதையாடலில் முன்வைக்கப்பட்டிருக்கிற அழுத்தமான வாதம் இதுதான்: “பொதுச் சமூகம் என்கிற பேரில் வலம் வரும் ஆதிக்கச் சாதிக் குழுக்களின் ‘ஆண்மை’ பற்றிய சொல்லாடலில் பங்கேற்க நாங்கள் மறுக்கிறோம்.” இந்த வாதத்தைக் கருத்துத் தெளிவோடு மட்டுமல்லாமல் திரைஅழகியல் கூறுகளோடு கதையாடல் தருவதாலேயே, இத்திரைப்படம் எந்த கிளாசிக் திரைப்படத்துக்கும் சமானமாகத் தன்னை நிறுத்திக்கொள்கிறது. தமிழ் சினிமாவின் தேய்வழக்கத்தின்படிச் சொற்கள்வழி கதை தொடர்புறுத்தப்படாமல், காட்சிகளைத் தொடுத்துத் தொடர்புறுத்துகிற அபூர்வமான திரைப்படம் இது. பூச்சரத்தையொத்த காட்சித் தொடுப்புகள், இசையின் பொருத்தம், உலுக்கும் பாடல்வரிகள், வசனம் ஆகியவை தனிக் கட்டுரைக்கு உரித்தானது. இந்தக் கட்டுரையில் நான் எழுதப்போவது இவை குறித்து அல்ல.
ஒரு மையப் படிமக் காட்சியிலிருந்து தொடங்குகிறே