கடிதங்கள்
காலச்சுவடின் பாதையில் சிறிது மாற்றம் உருவாகி யுள்ளது. வரவேற்கத்தக்கதே. ஜூலை மாத தலையங்கங்கள் சிறப்பாக உள்ளன. சு. இராசாராமின் ‘தமிழிலிருந்து பிறந்ததா கன்னடம்’ கட்டுரை மிகவும் சிறப்பு. மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
ந. மனோகரன்
சிங்கை கோவை
•••
சாரா அருளரசியின் அரசுப் பள்ளிகளில் நடக்கும் எதார்த்தமான செயல்பாடுகளைக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிராமப்புறங்களிலிருக்கும் பெரும்பாலான மக்கள் கழிப்பறைப் பயன்பாடு பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படியே வீடுகளில் கழிப்பறை இருந்தாலும் அதைப் பூட்டி வைத்துவிட்டுத் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் கிராமத்தில் அதிகமாகவே இருக்கிறது. குழந்தைகளுக்குக் கழிப்பறைப் பயன்பாடுபற்றிய நடைமுறைகளைப் பெற்றோர்கள் கற்றுக்கொடுப்பதில்லை.
பள்ளிக்கு வந்துசேர்ந்த உடனே அங்கிருக்கும் கழிப்பறையைக் குழந்தைகள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அறியாதவர்களாகக் கழிப்பறை முழுவதையும் அசுத்தம் செய்துவிடுகிறார்கள். இதனைச் சுத்தம் செய்வதற்குத் தூய்மைப் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
கழிப்பறைப் பயன்பாடுபற்றிய அறிமுகத்தைப் பெற்றோர்கள் தங்கள் வீடுகளிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். கழிப்பறையைப் பயன்படுத்தும்போதும் பயன் படுத்துவதற்கு முன்பாக எப்படி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற செயல்பாட்டையும் சொல்லிக் குழந்தைகளைப் பெற்றோர்கள் வளர்க்க வேண்டியது அவசியம்.
அரசுப் பள்ளிகளில் இருக்கும் கழிப்பறைகள் அவ்வப்போது பழுதடைந்து விடுகின்றன. இதனைச் சரி செய்வதற்குத் தேவையான ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. மாணவர்கள் பயன்படுத்திய கழிப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு நன்றாகத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதைக்கூடச் சொல்ல இயலாதவர்களாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பள்ளிகளில் வாழ்க்கைக் கல்வியை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பது அவசியம்.
ஆனால் இவற்றையெல்லாம் செய்யும் ஆசிரியர்கள் சமூக ஊடகங்களின் மூலம் செய்தியாக்கப்பட்டுத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவது வேதனை. வகுப்பறைச் சுத்தம், வெளிப்புறச் சுத்தம், தன் சுத்தம் என மாணவர்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வது எந்த விதத்தில் தவறாக இருக்கும் என்பது தெரியவில்லை. குறைந்த ஊதியத்தில் துப்புரவுப் பணியாளர்களை அரசுப் பள்ளிகளில் நியமித்திருந்தாலும் அவர்களைக் கொண்டு பள்ளி வளாகம், வகுப்பறை, கழிப்பறை போன்றவற்றை முழுவதும் தூய்மையாக வைத்துக்கொள்ள இயலாத நிலை உள்ளது.
கழிப்பறை தூய்மையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு மாணவர்களுக்குப் பெற்றோர்கள் பழக்கியிருக்க வேண்டும்.
கூத்தப்பாடி மா. பழனி
தர்மபுரி
•••
கல்வி தூய்மையைக் கற்றுத் தருமென்பது தான் அனைவரின் எண்ணம். அதற்கு முதல்படியாக அமைவது தன் உறுப்புகளைப் பற்றியும் அதன் செயல்களைப் பற்றியும் எடுத்துரைத்துச் சுய தூய்மையைக் கற்றுத்தருவதே என்ற எழுதப்படாத விதியை எடுத்துரைத்த சாராவிற்கு வாழ்த்துகள். கட்டுரையை வாசித்த பின்பு எங்களின் தூய்மைமீது அக்கறை செலுத்தாதிருந்த ஆசிரியர்கள் மீதிருந்த மதிப்பை மறு மதிப்பீடு செய்யத் தூண்டுகிறது. ஒருவேளை தன் கழிவுகளைக் கையாள்வதற்குச் சிறுவயது முதலே சரியாகக் கற்றுக் கொடுத்திருந்தால் இன்று மலமள்ளும் ஒரு மக்கள் கூட்டம் இந்தியா முழுமைக்கும் இருந்திருக்காது.
தத்துவமோ தனிமனிதனோ மற்றது எதுவாக இருந்தாலும் தொடர்ந்து வளர்ச்சியடையச் சுயவிமர்சனம் எவ்வளவு முக்கியம் என்பதை ‘கவிதைக்குக் கவிதையாலேயே பதிலளியுங்கள்’ கட்டுரை நடைமுறை உதாரணத்தோடு நெஞ்சில் பதியச் செய்தது. தியங்கோபற்றிய கட்டுரைகள் மேலதிகத் தகவல்களை வழங்கின. வாசித்து முடித்த பின்பு ஏமாற்றமும் எஞ்சியது. ஏனென்றால் கனகராஜா தியங்கோவோடு கலந்துரையாடியதன் முழுமையை வழங்காததால். இனிவரும் இதழ்களில் காலச்சுவடு அவற்றைப் பிரசுரம் செய்யுமென்று ஆவலோடு காத்திருக்கிறேன்.
பிரிட்டிஷ்காரர்களால் மட்டும் எப்படிச் சற்றேறக்குறைய அனைத்து நாடுகளையும் காலனித்துவப்படுத்த முடிந்ததென்று யோசித்ததுண்டு; சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் கட்டுரை அதற்குப் பதிலளித்தது. மதம் தந்த கொள்கையே காரணமென்பதையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. மதம் என்றாலே மக்களை நல்வழிப்படுத்துமென்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொய்த்துப் போய்க்கொண்டேயுள்ளது. ஒரு வேளை அது அதை உருவாக்கியவர்களுக்கு மட்டுமே நன்மை பயக்குமோ! விளக்கு விருது பெறும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவிற்குக் காலச்சுவடின் வழி என் வாழ்த்துகளையும் மகிழ்வோடு பகிர்ந்துகொள்கிறேன். ‘புத்தம் வீடு’: சமகாலச் செவ்வியல் பிரதி- கட்டுரையின் முதல் வரி - ஹெப்ஸிபாவின் நூற்றாண்டை நினைவு கூரும் வகையில் தமிழ் இலக்கியத்திற்கு அவர் சில பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். அவரே தன் நூற்றாண்டை நினைவுகூர்வதற்காகப் பங்களிப்புச் செய்ததாகப் பொருள் தருகிறது. தன் நூற்றாண்டைக் கொண்டாட வேண்டு மென்பதற்காக யாரும் படைப்புகளை உருவாக்கு வதில்லை. ‘ஹெப்ஸிபாவின் நூற்றாண்டை நினைவுகூரும் வேளையில் தமிழ் இலக்கியத்திற்கு அவர் செய்த சில பங்களிப்புகளை மதிப்பீடு செய்யலாம்.’ இப்படி பொருள் கொள்ளும்படி இருந்திருக்க வேண்டும்.
சி.சு. ஜெகன்நாதன்
பெங்களூரு
•••
‘மொழி மேட்டிமைவாதம்’ தலையங்கம் ‘சின்மயி ஏன் பாடக் கூடாது?’ மொழி ஆதிக்கவாதம், மொழிசார் பெருமிதத்தை எடுத்துரைத்துள்ளது. “கலை எங்கும் பரவி, நியாயத்தையும் மரியாதையும் இடத்தையும் மீட்டுக்கொடுக்கட்டும்” ஆம், நிச்சயம் மீட்டுக் கொடுக்கும். தமிழ் மொழி குறித்தான சு. இராசாராம். இ. அண்ணாமலை ஆகியோரின் கட்டுரைகள் பல்வேறு புரிதல்களை வாசர்களுக்கு ஏற்படுத்தின. ‘தனிமனிதத் தன்மதிப்பு’ பள்ளிகளில் கழிப்பறை முன்னேறியதாகக் கூறிக்கொள்ளும் தமிழகக் கல்வித்துறை செல்ல வேண்டிய தூரத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. ‘ஆப்பிரிக்க அத்தியாயம்’ நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றால் மட்டும் போதாது. “மனமும் விடுதலை பெற வேண்டும்” வைர வரிகள். ‘அவர்களுக்கு என்னைப் பிடிக்காது. “அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பிடித்த மாதிரி என்னால் எழுத முடியாது...” இன்றும் நிலை மாறவில்லை! கோகே வா தியங்கோவின் சிறுகதைமூலம் அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது.‘வாழ்க்கையை மேம்படுத்தும் கலை’ சஞ்சய் சுப்ரமணியனுடனான நேர்காணல்; 2006 நேர்காணலை நான் வாசிக்கவில்லை. 2025 நேர்காணல் ‘ஒரு கலைஞனின் மனம் திறந்த’ பதிவாக அமைந்துள்ளது. 11 பக்கங்களும் பதிவுகள் அருமை. ‘கு. அழகிரிசாமி கட்டுரைகள் அறிமுகம்’, ‘புத்தம் வீடு’ புத்தக விமர்சனம் ஆகியவை மனம் நிறைந்த வாசிப்பை ஏற்படுத்தின. ‘பாப்பாண்டவர்கள்’ திருச்சபையின் நிகழ்வுகளைத் தெரிந்துகொண்டேன்.
சீனி. மணி
திருவாரூர்
•••
‘திராவிடர் நல்லுறவைக் குலைக்கும் மேட்டிமை வாதம்’ என்ற தலையங்கமும், மொழியறிஞர்கள் சு.இராசாராம், இ.அண்ணாமலை இருவரின் கட்டுரைகளும் மொழி வரலாறு குறித்தும், தமிழ் திராவிட மொழிகளின் தாய்மொழியா என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கின்றன. விவாதத்தின் முடிவில் தமிழ் எம்மொழிக்கும் தாய்மொழி என்பது பிழைவாதம் என்பதை நிறுவ முயற்சிக்கின்றன.
தமிழ் தொல்மொழி என்பது பிழைவாதம் என நிறுவக் கையாளப்படும் மொழிக்குடும்பத்திற்கான சொல்லே பிழையாக இருக்கிறது.
திராவிட மொழிக்குடும்பம் என்ற சொல்லாடல் தற்போது திராவிடம்குறித்துப் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வெளிப்படுத்தப்படும் தரவுகளைப் பற்றிய எந்தக் கவனமுமின்றி கையாளப்பட்டிருக்கிறது.
அறிஞர்களின் கட்டுரைகளே அவர்கள் சொல்லும் ‘திராவிட’ மொழிக்குடும்பத்தில் மூத்த மொழி தமிழ்தானென்று சொல்லாமல் சொல்கிறது.
கன்னட எழுத்து மொழி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு (இராசாராம்), தமிழ் எழுத்து மொழி கி.மு ஆறாம் நூற்றாண்டு (இ. அண்ணாமலை) என்று சொல்கிறார்கள்.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சமஸ்கிருதச் செல்வாக்குடன் கூடிய கன்னட மொழி இருந்தது என்கிறார்கள்.
மேற்கண்ட கூற்றின்படியே கி.மு.விற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே சங்கப் பாடல்களும் திருக்குறளும் தொல்காப்பியமும் படைக்கப்பட்டு விட்டன.
கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் கன்னடத்தில் எழுத்து அறிமுகமாகிய காலகட்டத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்டி ருக்கின்றன என்ற உண்மை மேட்டிமைவாதமாகாது என்றே நம்புகிறேன்.
இவ்வாறாக ‘திராவிட’ மொழிக்குடும்பத்தில் முந்தைய மொழியாக இருக்கும் தமிழில் படைக்கப்பட்ட படைப்புகளில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் ‘திராவிட’ என்ற சொல் எங்காவது இடம்பெற்றுள்ளதா?
திராவிட என்ற சொல் எப்போது தமிழுக்குள் நுழைகிறது? கால்டுவெல்லால் நுழைகிறது.
கால்டுவெல் சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்ட பின்பே தமிழைக் கற்றுக்கொண்டவர். எனவே வடமொழியின் செல்வாக்கு அவருக்குள் இயல்பாக இருக்கிறது.
வடமொழி தமிழை ‘த்ராவிட’ என உச்சரிக்கிறது. எனவே தமிழ் உள்ளிட்ட தமிழிய மொழிகளை கால்டுவெல் திராவிட மொழிகள் என அழைக்கிறார்.
கால்டுவெல்லிற்கும் திராவிடம் குறித்த குறுகுறுப்பு இருந்திருக்கிறது. எனவேதான் தான் எழுதிய நூலுக்குத் ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்று தலைப்பிடுகிறார்.
தமிழல்லாத வேறு ஒரு மொழியினர், தமிழைத் ‘திராவிட’ என அழைப்பது அவருகளுக்குள்ள முடிதல் அல்லது புரிதல் அல்லது தெரிதல் அடிப்படையில் இருக்கலாம். ஆனால் அவர்கள் நம்மை அழைத்த பெயரால் நாமும் நம்மை அழைத்துக்கொள்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?
ஆங்கிலேயேர் தஞ்சாவூரை ‘டஞ்சூர்’ என்றார்கள்.
வத்தலக்குண்டுவை ‘பட்டலக்குண்டு’ என்றார்கள்.
மதுரையை ‘மெஜிரா’ என்றார்கள்.
இதில் எது உண்மைப் பெயர்? அன்னியர் நம்மை அழைத்தப் பெயரா? நாம் நம் ஊர்களுக்குச சூட்டியப் பெயரா?
திராவிட என்று அழைக்கப்படும் மொழிக் குடும்பத்தின் பெயரே பிழையாக இருக்கும்போது அந்த ஆய்வுகள் எப்படிப் பிழையற இருக்கும்?
தமிழுக்கும் கன்னடத்திற்கும் மூல திராவிட தொல் மொழி ஒன்று இருந்ததென்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதற்கான எழுத்துச் சான்றெதுவும் அவர்கள் காட்டவில்லை. அதுவுமில்லாமல் அத்தகைய தொல் திராவிட மொழி பேசப்பட்ட மொழியுமல்ல என்கிறார்கள். பேசப்படாத, எழுதப்படாத ஒரு திராவிட தொல்மொழிதான் தமிழுக்கும் கன்னடத்திற்கும் தாய்மொழி எனும் அவர்கள் ஆய்வு முடிவு விசித்திரமாக இருக்கிறது.
எந்த மொழியும் வேறு மொழியிலிருந்து பிறந்த மொழியல்ல. பிரிந்த மொழிதான் என்பவர்கள் அந்த மூல மொழியும் கன்னடத்திற்குக் காலத்தால் மிகமுந்திய இலக்கிய-இலக்கணச் செழுமையுடைய தமிழ்மொழி அல்ல என்றும், இதுவரை எந்த சான்றும் இல்லாத, நிருபிக்க முடியாத கற்பனையான “தொல் திராவிட மொழி”தான் என்ற முடிவுக்கு எப்படி வந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
“தமிழ் அணங்கு யார் கையும் படாத புனிதவல்லி என்ற கற்பனை” எனும் காலச்சுவடின் எள்ளல் ஓர் ஆய்வு, இலக்கிய இதழ் என்ற அதன் அடையாளத்திற்கு அழகல்ல.
தமிழ் பிறமொழிக் கலப்பின்றி இயங்கும் இயல்புள்ளது. ஆற்றலுள்ளது. அதை அடுத்த பத்தியிலேயே தலையங்கமும் ஒத்துக்கொள்கிறது.
ஆனால் அதனால் உனக்கொன்றும் பெருமை யில்லையென்கிறது. அவ்வாறு பெருமை கொள்வதே வடமொழிக்கலப்போடு இருக்கும் பிற திராவிட மொழிகளின் மீதான ஆதிக்கவுணர்வு என்கிறது. இப்படியான உணர்வுடனா வரலாற்றை அணுகுவது? உண்மையின் அடிப்படையில் ஆய்வு இருக்க வேண்டுமா? பிறரின் மீதான கரிசனத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமா?
திராவிட மொழிகள் என்று அறிஞர்களால் சொல்லப்படும் மொழிகளில் மூத்ததாக, செழுமை மிக்கதாகத் தமிழ் இருக்கிறது என்பதை அவர்களும் மறுக்கவில்லை. ஆனால் அப்படி இருக்கிறது என்று சொல்வதே, அப்படி இல்லாத மொழிகளின் மீதான ஆதிக்கம் எனும் வாதம் விசித்திரமானது.
கன்னடத்தின் மூலமொழியாக, தமிழியக் குடும்பத்தின் மூத்த மொழியான தமிழாக இருக்கலாம். அல்லது கன்னடம், தமிழ் இரண்டிற்கும் மூலமொழியாக வேறொரு மொழிகூட இருந்து அதன் சான்றுகள் கிடைக்காமல் போயிருக்கலாம் என்று அறிஞர்களின் ஆய்வு முடிவு வெளிப்பட்டிருந்தால் அது குறைந்தபட்ச நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கும்.
ஆனால் முடிவை முன்கூட்டியே எழுதிவிட்டு அதற்கேற்ப ஆய்வை விவரித்திருப்பது நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. தமிழ் மேட்டிமையர்களை சாடும் நோக்கில் எழுதப்பட்ட தலையங்கமும் கட்டுரைகளும் தமிழ் தாழ்மைவாத மனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது.
ப. செம்பரிதி
தமிழ்மைந்தர் மன்றம்
(ஒருங்கிணைப்பாளர், ஓசூர்)
•••