பரிசில்
ஓவியம். மு.நடேஷ்
பரிசில்
மழைக்கு லேசாக இருட்டிக் கொண்டிருக்கிறது...
வழக்கமான கோயில் வளாகத்தில் புதிதாய் இணைந்திருந்த
வயோதிக யாசகனிடம் கேட்கிறேன்.
‘ஒரு பீடி குடேன்’
‘ஒரு பாட்டு பாடேன்’ என்கிறான் அதே தொனியில் அவன்
எல்லாப் பிச்சைக்காரர்களும் பாடும் “தரைமேல் பிறக்க வைத்தானே” விட்டுவிட்டு..
‘நாளை நமதே’வைப் பாடி முடித்தேன்
பீடிக்கட்டிலிருந்து நழுவி விழுந்த பீடியொன்று சற்று உருண்டு வலம் இடம் புரண்டு
ஆசுவாசப்பட்டு நிற்கிறது.
சற்றுத்தள்ளி நான் துப்பி மண்ணிட்டு மூடியிருந்த சளியில் ஈ மொய்த்துக்கொண்டிருந்தது.
ஓர் எறும்பு பீடியை முகர்ந்து பார்த்து நகர்கிறது..
பின்னணியில் வயலின் இசையோடு கண்களால் எதையோ ஓர்மிக்கிறான் கிழவன்
சட்டென ரெண்டு மழைத்துளி தரை இறங்குகிறது
மழைக்குத் திருவோட்டைத் தலையில் கவிழ்த்துக்கொண்டே தரையில் விழுந்த பீடியை
அவனுக்கு வைத்துவிட்டு எனக்குப் புதிய பீடியைத் தருகிறான்.
காட்சி மயங்குகிறது
கிழவன் அரசனாய் மாறிச் சிரித்துக்கொண்டே தருகிறான்
நான் புலவனாய் மாறிப் பவ்யமாய்ப் பெறுகிறேன்
அந்தக் குளிர்ந்த மழையில்
கிழவனின் திருவோடு கிரீடம் போலிருக்கிறது
ஊன்றுகோல் செங்கோல் போலிருக்கிறது
இந்த ...பீடியோ...
தந்தத்தைப் போல் ஜொலிக்கிறது.
மின்னஞ்சல்: prismshiva@gmail.com