சுரா பக்கங்கள் சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் – 4
சுந்தர ராமசாமியின் இலக்கியச் செயல்பாடுகளில் அவருடைய கடிதங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் நூல்கள், எழுத்தாளர்கள், இலக்கியச் சூழல் ஆகியவை குறித்து விரிவாக எழுதுவது சுந்தர ராமசாமியின் வழக்கம். வாசிப்பு அனுபவப் பகிர்வு, விமர்சனம், விவாதம் ஆகியவை கொண்டதாக அவர் கடிதங்கள் அமைந்துள்ளன.
பல்வேறு பொருள்கள் குறித்த தன் கருத்துக்களை சு.ரா. வெளிப்படையாகவும் விரிவாகவும் பகிர்ந்துகொண்ட ஒரு சில முக்கியமான நண்பர்களில் ஒருவர் மதுரை சிவராமன். சுந்தர ராமசாமியின் நீண்டகால நண்பர்களில் ஒருவர். ‘க்ரியா’ பதிப்பகச் செயல்பாடுகளில் தொடக்கம்முதல் ஈடுபட்டுவந்தவர்.
1979ஆம் ஆண்டுமுதல் கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டுவரை சு.ரா.வுக்கும் இவருக்கும் இடையே தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. ஜே.ஜே.: சில குறிப்புகள், க்ரியா பதிப்பகம், காலச்சுவடு உருவாக்கம் முதலானவை குறித்த பல முக்கியமான செய்திகள் இந்தக் கடிதங்களில் பதிவாகியிருக்கின்றன. அந்தக் காலகட்டத்தின் இலக்கியச் சலனங்களின் முக்கியமானதொரு பகுதியைப் பிரதிபலிக்கும் இந்தக் கடிதங்களில் நுட்பமான பல கூறுகள் பொதிந்துள்ளதை உணரலாம். சு.ரா.வின் பார்வைகள், அக்கறைகள், ஆதங்கங்கள், கனவுகள், முயற்சிகள் ஆகியவற்றையும் இந்தக் கடிதங்களின் வழி அறியலாம்.
சு.ரா. சிவராமனுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பின் மூன்றாவது பகுதி இது. சென்ற இதழில் (2022, அக்டோபர், இதழ் 274) வெளியான கடிதங்களில் (04.06.82 தேதியிட்ட) கடைசிக் கடிதம் சு.ரா. க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதியது. சிவராமனுக்கான கடிதமாக அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவறுக்கு வருந்துகிறோம். சிவராமனுக்கு எழுதிய கடிதங்களில் பேசிய சில விஷயங்களை இந்தக் கடிதத்திலும் சு.ரா. விவாதிப்பதால் அக்கடிதத்தைப் பிரசுரித்திருக்கிறோம்..
-ஆசிரியர்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
30.7.83
அன்புள்ள சிவராமன்,
26ஆம் தேதி நானும் தைலாவும் நாகர்கோவில் வந்து சேர்ந்தோம். தைலா பாஸ் செய்துவிட்டதாகத் தெரிகிறது. இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. ‘நாளை மற்றுமொரு நாளே’ முடிவுறும் தருணத்தில் இருக்கிறது. ஜி.என். வாழ்க்கைக் குறிப்பை நான் இம்மாத இறுதியில் அனுப்ப வேண்டும். மோஹன் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகிறார். வேலையில் அவர் கொள்ளும் பங்கு ராமகிருஷ்ணனுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஒரு புதிய பத்திரிகை கொண்டுவருவது பற்றியும் மிக விரிவாகப் பேசினோம். வசந்தகுமார், பஷீர், ரவி (வசந்தகுமாரின் நண்பர்) வண்ணநிலவன் எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எதுவும் எதிர்பார்க்காமல் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள்.
சச்சியின் வீட்டு மாடியில் மோஹன் குடியிருக்கப் போகிறார். இதில் ஒரு பகுதி க்ரியாவின் புத்தகக் கிடங்காக இருக்கும். இந்தக் கதவிலக்கம் பத்திரிகையின் விலாசமாக இருக்கும்.
நானும் கமலாவும் காந்தி கிராமத்திற்கு வருகிறோம். வெள்ளிக்கிழமை (5.8.83) பிற்பகல் இங்கிருந்து கிளம்பி மதுரையில் இரவு தங்கிவிட்டுச் சனி அதிகாலை காந்தி கிராமத்திற்குப் போய்த் திண்டுக்கல்லிலும் ஒரு நண்பரைச் சந்தித்துவிட்டு அன்றிரவு மதுரை திரும்பி ஞாயிற்றுக்கிழமையை மதுரையில் கழித்து அன்றிரவு ஊர் திரும்ப உத்தேசம். மதுரையில் நண்பர்களையும் ஜி. என். மனைவியையும் சந்திக்க வேண்டும். மதுரை பஸ் ஸ்டாண்டு அருகில் இருக்கும் ஆர்த்தி லாட்ஜில் டபிள் ரூமுக்குச் சொல்லி வைக்க வேண்டும். திரும்பி வருவதற்கான டிக்கட்டையும் புக் செய்ய வேண்டும். டாக்டர் சீனிவாசனுக்கு எங்கள் வருகையைத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறேன் புதன்கிழமை (3.8.83) உங்களுக்கு உறுதிசெய்து மீண்டும் கடிதம் எழுதுகிறேன். என் கடிதம் பார்த்து அறைக்குச் சொல்லி வைத்து டிக்கட்டையும் நீங்கள் பதிவு செய்து உதவ வேண்டும்.
இங்கு எல்லோரும் சுகம்.
அன்புடன்
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
19.8.83
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 17.8.83 கடிதம். ஸ்ரீவாசனிடமிருந்து உடனடியாக எங்களை காந்தி கிராமத்துக்கு வரச்சொல்லி, பின்னால் தான் வெளியூர் செல்ல அவசியம் இருப்பதைத் தெரிவித்து எழுதியிருந்தார். அதன்பேரில் நாங்கள் 13ஆம் தேதி சனி மதியம் இங்கிருந்து கிளம்பி இரவு மதுரையில் தங்கி ஞாயிறு காலை காந்தி கிராமம் போய் அன்று மாலை மதுரை வந்து இரவு நாகர்கோவில் திரும்பிவிட்டோம். மதரையில் நிற்க வசதி இருக்கவில்லை. இங்கு வேலை யாட்கள் வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள். தைலாவின் சிநேகிதி ஒருத்தியும் என் தங்கைப் பெண்ணும் இங்கு வந்திருக்கிறார்கள். அதனால் கமலாவுக்குச் சற்றும் சாவகாசமில்லை.
ராமகிருஷ்ணனிடமிருந்து கடிதம் வந்தது. மிஷினின் சாமர்த்தியங்களைப் பார்க்க என்னை அழைத்திருக்கிறார். மணி பார்க்க வருகிறாராம். எனக்கு வசதிப்படும் என்று தோன்றவில்லை. ‘
ஜி.என். பற்றிய என் குறிப்பில் ராமகிருஷ்ணனும் மோஹனும் படித்தபோதே தவற்றைத் திருத்தியிருக்கிறார்கள்.
எதிர்பார்த்ததற்கு மாறாக ‘காகங்கள்’ என்ற பெயர் *வசந்தகுமாருக்குப் பிடிக்கவில்லை. அவர் முதல் பட்சமாகக் கருதுவது ‘சிறகுகள்’. இரண்டாவது ‘கதவைத் திற’. ‘புதிய அத்தியாயம்’ என்ற பெயர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? ராமகிருஷ்ணனுக்கு எழுதியிருக்கிறேன், வசந்தகுமாரிடம் கேட்டு எழுத. பத்திரிகை ஆரம்பிக்க ஒரு ஏழெட்டு ரூபாய் துண்டு விழுகிறது. ரூபாய் ஐநூற்றை ஒட்டிய ஒரு தொகையைப் பத்துப் பதினைந்து நண்பர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற வேண்டும் என்று நான் ராமகிருஷ்ணனுக்கு எழுதியிருக்கிறேன். இதுதவிர எனக்கு வேறு யோசனை தோன்றவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வருகிற ஞாயிற்றுக்கிழமை இலங்கைப் பிரச்சினை பற்றி யோசிக்க ‘காகங்கள்’ கூட்டம் கூடுகிறது. ராஜதுரையை இங்கு அழைப்பது பற்றியும், நான் மதுரை கூட்டத்தில் வாக்களித்த தொகையை வசூலிப்பது பற்றியும் பேச, உங்கள் பார்வைக்கு ஒரு கார்டு அனுப்பியிருக்கிறேன்.
சச்சி குறுநாவல் கணையாழியில் பரிசு பெற்று இவ்விதழில் வெளிவந்திருக்கிறது. மிகுந்த யதார்த்தத்துடன் கலைப்பூர்வமாக மனவிடுதலையோடு எழுதியிருக்கிறார். சச்சியின் எழுத்து என்பதில் மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.
வீட்டில் எல்லோரும் சுகம் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
சுரா
* தமிழினி வசந்தகுமார்
Bramarajan,
Burn View,
Coonoor Road,
Ooty 643 001.
3.3.84.
அன்புள்ள சுந்தர ராமசாமி அவர்களுக்கு,
வணக்கம்,
உங்கள் மகளின் திருமணமும் அது தொடர்பான வேலைகளும் முடிந்து இப்போது ஓரளவுக்கு ஓய்வில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அதற்காகத்தான் இந்தக் கடிதம் எழுத இரண்டு மாதங்கள் காத்திருந்தேன்.
என் Ph.D. ஆராய்ச்சி தொடர்பாக என்னுடைய Guide ஆன டாக்டர் ரெஜினா சுந்தரைப் பார்க்கப் போனேன். டாக்டர் ரெஜினா வேளாளர் பெண்கள் கல்லூரியில் P.G. Centreஇன் பேராசிரியை.
ரெஜினாவிடம் யாரோ ஒரு (மல்டர் என்று நினைக்கிறேன்) வெளிநாட்டுப் பேராசிரியர் ஒருவர் நம் நாட்டு ஆராய்ச்சி மாணவர்களின் Servile Research பற்றிக் குறிப்பிட்டு ஏன் Creative Research நம் மாணவர்கள் செய்யக் கூடாது என்று கேட்டாராம். Prof. ரெஜினா என்னிடம் கேட்டார்கள், ஜே.ஜே. சில குறிப்புகள் படித்திருக்கிறேனா என்று. பதில் சொன்னேன். எனவே என் Ph.D. ஆராய்ச்சி என்பது உங்கள் ஜே.ஜே. நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முடித்தால் முடியும். மேலும் சில அத்தியாயங்களில் (ஆங்கிலத்தில்) தமிழ் இலக்கியத்தில் உங்கள் பங்களிப்பு, உங்களின் மற்ற எழுத்துக்கள் பற்றிய விமர்சனம் எல்லாம் எழுத வேண்டும். டாக்டர் சச்சிதாநந்தன் (மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர்) அவர்களும் ஜே.ஜே.வைப் படித்த பின் ஜே.ஜே.பற்றி ஆராய்ச்சி செய்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றும் என் Guideக்கு எழுதியிருக்கிறார்.
நான் ஒப்புக்கொண்டுவிட்டேன். கொஞ்சம் பயமாகவும் தயக்கமாகவும் ஆரம்பத்தில் உணர்ந்தேன். எனினும் இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். இதுவரை தமிழ் நாட்டில் ஆங்கில இலக்கியம் தொடர்பானவர்கள் இது மாதிரி ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில்லை. Tennessee State Universityயில் ஒரு மாணவன் ஒரு அராபிய நாவலாசிரியரின் நாவலை மொழிபெயர்த்து மேற்கூறியவாறு ஆய்வு செய்திருக்கிறான்.
என்னுடைய திட்டத்துக்கு அனுமதியும் வாழ்த்துக்களும் அளிக்க வேண்டுகிறேன்.
இனி உங்களை அடிக்கடிச் சந்திக்க வர வேண்டி இருக்கும்.
மிக்க அன்புடன்
பிரம்மராஜன்.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
22.3.84
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 10.3.84 கடிதம். பிரம்மராஜன் எந்த அடிப்படையில் தனது ஆராய்ச்சியை வகுத்துக்கொண்டிருக்கிறார் என்பது பற்றி நான் யோசிக்கவில்லை. ஆராய்ச்சியை முன்னிட்டு அவருக்கு மொழிபெயர்க்க உரிமை தந்து அதை நூல் வடிவமாகக் கொண்டுவரும் உரிமையை அவருக்குத் தரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி எழுதியிருக்கிறேன்.
நீங்களும் ராமகிருஷ்ணனும் சென்ற பின்பு நான் சீராக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறேன். பழைய நாவலை வைத்துக்கொண்டு புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறேன். மிகுந்த வித்தியாசத்துடன் அது புதிய உருவம் எடுத்துக்கொண்டுவருகிறது. அன்றாடம் நாலைந்து பக்கங்கள் எழுதிவருகிறேன்.
வெகுநாட்களுக்குப் பின் மோஹனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சென்னையில் எழுத்து பத்திரிகைக்கு ஒரு வெள்ளி விழாக் கருத்தரங்கு நடத்தவிருக்கிறார்கள். சச்சி இதை ஆரம்பித்திருக்கிறார். குழுவில் முத்துசாமி, சச்சிதானந்தம், மோஹன் ஆகியோர் இருக்கிறார்கள். இந்தக் கருத்தரங்குக் கட்டுரைகளை க்ரியா புத்தக உருவில் கொண்டுவருவதாக இருக்கிறது. என்னிடம் கட்டுரை கேட்டிருக்கிறார். இதைத் தவிர சாமிநாதன், முத்துசாமி, ரவீந்திரன், மோஹன், ராஜ் கௌதமன், சச்சி, பிரபஞ்சன், செல்லப்பா, எஸ். ராமகிருஷ்ணன், ஐ.சி. பாலசுந்தரம் (இவரிடம் எப்படித்தான் கட்டுரை வாங்குவார்களோ மதுரை மீனாட்சி துணை புரிந்தால்தான் உண்டு!). சச்சி மிகுந்த ஆர்வம் கொண்டு இதையெல்லாம் செய்துவருகிறார். இது தவிர சச்சிக்கு ‘விழுது’ என்ற தலைப்பில் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறதாம். சச்சி யாருக்கும் தெரியாமல் ஒளித்துவைத்துக்கொண்டிருக்கும் கையெழுத்துப் பிரதிகளும் இருக்கிறதாம். இதையெல்லாம் வெளியே கொண்டுவர வேண்டும் என்று மோஹன் எழுதியிருக்கிறார்.
எனது கட்டுரைகளை காந்தி கிராமத்திற்கு* அனுப்பிவிட்டதாகவும் மோஹன் எழுதியிருக்கிறார்.
குழந்தைகள் எப்படி இருக்கின்றன?
அன்புடன்,
சுரா.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
27.9.85
அன்புள்ள சிவராமன்,
நான் இம்மாதம் 11ஆம் தேதி இரவு 3 மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தேன். ராமகிருஷ்ணனும் மோஹனும் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். சில சந்தோஷச் செய்திகளும், வருத்தம் தரும் செய்தி ஒன்றும் எனக்காகக் காத்திருந்தன. என் மூத்த சகோதரியின் கணவர் இம்மாதம் 4ஆம் தேதி காலமாகிவிட்டார். எனது ஒன்பதாவது வயதில் என் மூத்த சகோதரிக்குத் திருமணம் ஆயிற்று. அன்றிலிருந்து மிக நெருக்கமாக வளர்ந்து வந்த உறவு. 1982க்குப் பின் சில குடும்பப் பிரச்சினைகளால் எங்கள் உறவு சிறிது நாசமாயிற்று என்றாலும் இவருடைய மரணம் என்னை வெகுவாகப் பாதித்தது. அவர் இறந்த நேரத்தில் நான் இங்கு இல்லையே என்ற வருத்தம் எனக்கு இல்லை. தப்பித்தேன் என்றுதான் நினைத்தேன். இல்லாத வரையிலும் ஆபாசமான, குரூரமான சடங்குகளை நான் செய்ய வேண்டியிருந்திருக்கும். இவ்வாறு நிகழ்ந்தால் அந்தச் சடங்குகளில் பங்குபெறக் கூடாது என்று முன் தீர்மானம் எடுத்திருந்தேன் என்றாலும், நான் இங்கு இருந்திருந்தேன் என்றால் ரசாபாசமான காட்சிகளேனும் உருவாகியிருக்கும்.
சி. மணிக்குச் சென்னை ஆசான் மெமோரியல் பள்ளியில் இருபதாவது நூற்றாண்டு விழாவை ஒட்டிய பரிசு முதன் முதலாக அளிக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மணி பரிசு பெற்றது எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. இந்தத் தூண்டுதலிலிருந்து வேகம் பெற்று மீண்டும் அவர் செயல்படலாம் என்று நினைக்கிறேன். மணியைப் பாராட்டும் பொருட்டுத் தமிழ்-மலையாள எழுத்தாளர்கள் நடத்தவிருந்த கூட்டத்தில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று ராமகிருஷ்ணனும் மணியும் விரும்பினார்கள். உடனடியாக ஊருக்கு வர வேண்டும் என்ற ஆத்திரம் எனக்கு இருந்தது என்றாலும் – இங்கு குழந்தைகள் என்னை வெகுவாக எதிர்பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் – நான் ஒரு வாரம் சென்னையில் தங்கினேன். கூட்டத்தில் சிறிது பேசினேன். இன்னும் நன்றாக விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்க முடியும். கூட்டம் நடப்பதற்கு இரண்டொரு மணிநேரங்களுக்கு முன்னர் மலையாள எழுத்தாளர் எம். கோவிந்தனின் தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றி சச்சி வந்து சொன்ன சில செய்திகள் என்னை ஆட்டிக் குலைத்துவிட்டன.
கோலாலம்பூரிலும் சிங்கப்பூரிலும் வசதியாக இருந்தேன். போலீஸ் கெடுபிடி சிறிது இருந்தது. ஆனாலும் எனக்கு எவ்விதத் தொல்லையும் இல்லை. என்னை அழைத்தவர்கள் மிக நல்ல நண்பர்கள். நான் தங்கியிருந்த வீடும் ஒரு உத்தமமான குடும்பம். என்னைக் கவனித்துக்கொள்வதில் அவர்கள் காட்டிய அக்கறைகள் எனக்கே கூச்சத்தை ஏற்படுத்தின. பல இடங்களும் சுற்றிப் பார்த்தேன். இந்திய வாழ்க்கைக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத அமைப்பு. சுத்தம், ஒழுக்கம், மனித உறவுகளில் இனிமை, சுறுசுறுப்பு, எல்லோருக்கும் அவசியமான வசதிகள், சீராக நடக்கும் கல்வி நிலையங்கள் இதைத் தவிர ஒன்றையும் பார்க்க முடியவில்லை. பல நல்ல பழக்கங்கள் அங்கு இயற்கையாகிவிட்டன. இரண்டு சாதகமான அம்சங்களைச் சார்ந்துதான் இவை அமலாகியிருக்கின்றன. 1. செல்வம். 2. மிதமான ஜனத் தொகை.
சிங்கப்பூரில் ஒருசில நாட்கள் இருந்தால் பின் மேற்கத்தியக் கலாச்சாரத்தில் விஞ்ஞான வளர்ச்சியோ நவீன உத்திகளோ நமக்கு எந்த அதிர்ச்சியையும் தராது என்று நினைக்கிறேன். இன்றுவரையிலும் விஞ்ஞானம் அளித்துள்ள சகல வசதிகளையும் தங்களுக்குச் சொந்தமாக்கியிருக்கிறார்கள். பல விஷயங்கள் நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
பாரிஸ் இந்திய விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்து அதற்கான முஸ்தீபுகளில் இருந்துகொண்டிருக்கிறேன். பாரீஸ் கவிதை விழா 22இலிருந்து 27 வரையிலும். இரண்டு கோட்டுக்கள் தைக்க வேண்டும். ஒரு ஜதை பூட்ஸ் வாங்கி நடந்து பழக வேண்டும். மிக முக்கியமான விஷயம் இதுதான். பூட்ஸ் கடிக்கு ஆளாகிவிட்டால் தமிழ்க் கவிதைகளை பாரிஸ் தெருவில் வீசிவிட்டு மறு விமானத்தில் இந்தியா வருமபடி ஆகிவிடும்.
டாக்டர் க்ரோ இங்கு வந்து என்னுடன் தங்கியிருந்தார். நேற்று காலை கிளம்பிச் சென்றார். நடுவில் திருவனந்தபுரம் போனர். டாக்டர் ஐயப்பனா பணிக்கரும் பாரிஸுக்கு வர இருப்பதால் அவரையும் பார்க்க விரும்பினார். ஆனால் பார்க்க முடியவில்லை. அவர் கல்கத்தா போய்விட்டார். நானும் க்ரோவும் சேர்ந்து பாரிஸில் படிக்க ஒரு சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
ந. பிச்சமூர்த்தி, க.நா.சு, தரூமூ சீவராம், நகுலன், பசுவய்யா, சி. மணி, தி.சோ. வேணுகோபாலன், எஸ். வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், நாரணோ ஜெயராமன், கலாப்ரியா, ஆத்மாநாம், ஆனந்த், நா. சுகுமாரன் ஆகியோரின் கவிதைகள் ஒவ்வொன்று. இவற்றைப் படிக்கப் பத்து நிமிஷங்கள் ஆகின்றன. பின்னணி பற்றியும் ஒவ்வொரு கவிஞனைப் பற்றியும் கவிதை பற்றியும் விளக்கங்களை அளிக்கப்போகிறவர் ஸ்ரீராம். அதற்கு இருபது நிமிஷங்கள் மொத்தத்தில் ஆகும் என்பது கணக்கு.
நேற்றுக் காலை நான்கு மணிநேரம் ஜே.ஜே.யைப் பற்றிக் கேட்டு என்னைத் துளைத்துவிட்டார் க்ரோ. அவர் நாவலை மிக நுட்பமாகப் படித்திருக்கிறார். அவர் சந்தேகங்கள் இதைத்தான் நிரூபித்தன. முக்காலே அரைக்கால் பங்கு மொழிபெயர்த்தாயிற்று. மொழிபெயர்ப்பு சம்பந்தமாக அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் உண்மையில் ஒரு கட்டுரை வடிவம் பெறத்தக்கவை. மிகுந்த ருசிகரமான பிரச்சினைகள் அவை.
இன்றிருக்கும் நிலையைப் பார்க்கும்போது நான் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் சென்னை போகலாம். பாரிஸ் போவதை ஒட்டி நான் அமெரிக்காவும் ஐரோப்பாவும் போய்வர வேண்டும் என்பதில் ராமகிருஷ்ணன் வெகுதுடிப்பாக இருக்கிறார். கமலாவும் தூண்டிக்கொண்டிருக்கிறாள். எனக்கு ஐரோப்பாவைச் சுற்றிப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் நடைமுறைப் பிரச்சினைகள் பல இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ராமகிருஷ்ணன் முழு மூச்சாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் விஷயங்கள் தெளிவுபடும்.
சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸில் என் பேட்டி வெளிவந்திருப்பதாக ராமகிருஷ்ணன் தெரிவித்தார். நான் இன்னும் பார்க்கவில்லை.
இங்கு நானும் கமலாவும் தங்குவும் சுகம்.
அங்கு நீங்களும் திருமதி சிவராமனும் குழந்தைகளும் சுகம் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
சுரா.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
8.10.85
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 7.10.85 கடிதம். கடை மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. பண நஷ்டம்கூடப் பெரிய விஷயம் இல்லை. அவமானம் தாங்க முடியவில்லை. ஆட்டோவில் ஏறக் கூச்சப்படுகிற முதலாளிகள் கடை விளம்பர போர்டுகளின்மீது உட்கார்ந்துகொண்டு அதை அடித்து நொறுக்கினார்கள். நான் அவமானத்தால் சாம்பிப்போய் விட்டேன். தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு தூங்க முடியவில்லை. கிட்டதட்ட 50,000 ரூபாய் நஷ்டத்துடன் பத்துநாள் வியாபாரமும் போய்விட்டது. இதைவிடவும் என்னை பாதித்தது ஒவ்வொரு வியாபாரியையும் அரசாங்கம் ஒரு நாய்போல் பாவித்து நடத்தியதுதான்.*
எனக்கு டிக்கெட் பதிவாகித் தந்தி வந்திருக்கிறது. 23ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு நான் புது டில்லியிருந்து பாரிஸ் போகிறேன். இங்கிருந்து டில்லி போகும் விமானச் செலவுக்கும் திரும்பி வரும் செலவுக்கும் பணம் தந்துவிடுவார்கள். என் உடலும் மனமும் இருக்கும் நிலையில் திருவனந்தபுரம் மார்க்கம் விமானத்தில் போவதுதான் எனக்கு வசதியானது. ஆனால் ராமகிருஷ்ணன், ஜெயாவைப் பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் இப்போதைக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறேன். சென்னையில் இரண்டு நாட்கள், புது டில்லியில் நான்கு நாட்கள். (முதன் முறையாகப் போவதால் சகோதரி வீட்டில் சில நாட்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.) டில்லியில் இரண்டு ஸ்வெட்டர்கள் வாங்க வேண்டும். பூட்ஸ் போட்டு வீட்டுக்குள் நடந்து பார்க்க வேண்டும் என்று டாக்டர் க்ரோ சொல்லியிருந்தார். கடை இடிபடும்போது பூட்ஸ் போட்டு நடப்பது எப்படி?
நீங்கள் உடனடியாக ராமகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். நான் பாரிஸ் போய்விட்டு வந்த பின் நான், ராமகிருஷ்ணன், நீங்கள் மூவரும் சேர்ந்திருந்து அவருடைய பிரச்சினைகளைப் பற்றி விரிவாகப் பேசி முடிந்த அளவு வழிவகை காணலாம். எனக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. நானும் அவரும் பேசுவதைவிட நாம் மூவரும் சேர்ந்து பேசினால் உபயோகமாக இருக்கும் என்று தோன்றுகிறது. என்ன பிரச்சினைகள் எனக்கு இருந்தாலும் மூன்று நான்கு நாட்கள் நான் தனியாக ஓரிடத்திற்கு வர வசதி செய்துகொள்கிறேன்.
அங்கு வீட்டில் எல்லோரும் சுகம் என்று நம்புகிறேன். தைலா அவள் எழுதிய முதல் பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டதாக போனில் சொன்னாள். நீங்கள் கொல்லிப்பாவைக்கோ யாத்ராவுக்கோ ஏதாவது எழுதலாமே. மேட்டரை அ.கா. பெருமாள் விலாசத்திற்கு அனுப்புங்கள். (அ.கா. பெருமாள், தமிழ் விரிவுரையாளர், ‘புஷ்பா’ ராமவர்மபுரம்.)
அன்புடன்,
சுரா.
* சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக மாநகராட்சி நிர்வாகம் வணிக வளாகங்களின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளியதை ஒட்டி நடந்த களேபரம்.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
21.8.86
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 20.8.86 கடிதம்.
ஜே.ஜே.யின் மலையாள மொழிபெயர்ப்பாளர் ரவிவர்மாவும் நானும், இங்கு நம் வீட்டில், அவர் அவசரமாக ஊர் திரும்ப வேண்டிய சூழ்நிலை காரணமாக, மூன்று நாட்கள், நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுப் பார்த்தோம். இதிலிருந்து எனக்குக் கடுமையான முதுகு வலி ஏற்பட்டு ஒவ்வொரு நாளும் சிறிது குணம் பெற்றுவருகிறேன். இந்தப் பின்னணியில் குற்றாலம் வரும் ராமகிருஷ்ணன் இங்கு வர, நீங்களும் இங்கு வந்து சேர்ந்துகொள்வது என்று திட்டம் போட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ராமகிருஷ்ணனிடமிருந்து எவ்விதத் தகவலும் இல்லை. அவருக்கு நான் பல முக்கியமான கடிதங்கள் எழுதியிருந்தும் - கடிதத்தின் மொத்த எண்ணிக்கை 15 வரையிலும்கூட இருக்கலாம் - அவரிடமிருந்து சென்ற ஆறு மாதங்களாக ஒரு கடிதத்துக்குக்கூட பதில் இல்லை. இது எனக்கு மிகுந்த மனச்சோர்வைத் தருகிறது. ஆனால் உங்களையும் அவரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்ற பெரும் ஆவலுடன் இருக்கிறேன். முக்கியமாக ராமகிருஷ்ணன் வெளியூர் போவதற்கு முன்னர் ஒரு முறை அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம். இப்போது திட்டத்தை மாற்ற வேண்டாம் என்ற அடிப்படையில் நான் 30ஆம் தேதி இரவோ அல்லது 31ஆம் தேதி காலையோ அங்கு வருகிறேன். இதனை உறுதிப்படுத்தி மீண்டும் 25ஆம் தேதி ரயில் டிக்கெட் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டு எழுதுகிறேன்
மோகன் க்ரியாவில் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. வெகு சமீபத்தில்கட எனக்கு அவரிடமிருந்து கடிதம் வந்தது. அதில்கூட இது பற்றி எவ்வித சூசகமும் இல்லை.
டாக்டர் குரோ அவர்களுடைய கட்டுரை மிக நன்றாக வந்திருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல விஷயம்.
உங்கள் மனைவியும் குழந்தைகளும் நன்றாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
சோட்டா அண்ணாவின் வயதான தாயார் காலமாகிவிட்டார். அவரும் அவருடைய மனைவியும் அமெரிக்காவில் ஆறு மாதங்கள்வரை இருந்துவிட்டு இப்போது ஊர் திரும்பியிருக்கிறார்கள். அங்கு வரும்போது முடிந்தால் காந்தி கிராமம் போக வேண்டும்.
கமலாவுக்குக் கிட்டதட்ட ஒரு மாதமாக ஜலதோஷக் காய்ச்சல், நடுவில் டைபாயிடாக இருக்குமோ என்று டாக்டர் சந்தேகப்பட்டு, சோதனைகள் செய்து, இப்போது இல்லை என்றாகிவிட்டது. சோர்வினால் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியாமல் இருக்கிறாள். மற்றபடி இப்போது ஒன்றுமில்லை.
உங்களுடைய மனைவியும் குழந்தைகளும் எப்படி இருக்கிறார்கள்? நாம் சந்தித்துக்கொண்டு வெகுநாட்களாகவிட்டது.
எனது மதுரை வருகையை வெளியே தெரிவிக்க வேண்டாம். யாருக்கும் ஈடு கொடுக்கும் உடல்நிலை இப்போது எனக்கு இல்லை.
அன்புடன்,
சுரா
பி.கு: ராமகிருஷ்ணன் 31ஆம் தேதி எத்தனை மணிக்கு மதுரை வருகிறார். விபரம் தெரிந்தால் எழுதுங்கள்.
காலச்சுவடு
30-10-87
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
அன்புள்ள சிவராமன்
வணக்கம்.
நீங்களும் குடும்பத்தினரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஒரு காலாண்டு இதழ் ஆரம்பிக்க இருக்கிறேன். நம் சிந்தனையை மேலெடுத்துச் செல்லும் விதமாகவும் சீரழிந்த நம் கலாசாரத்தை விமர்சிக்கும் விதமாகவும் இது அமையும். எளிய வகையில் ஆரம்பித்துச் சிறிது சிறிதாக மேலெடுத்துச் செல்ல ஆசை. அளவு: டபிள் டெம்மி, நாற்பது பக்கங்களை ஒட்டி வரும். முதல் இதழ் 88 ஜனவரியில் கொண்டுவர விருப்பம்.
எனக்கு நீங்கள் ஒரு கட்டுரை தந்து உதவ வேண்டும். சுதந்திரமாகவும் ஆழமாகவும் இக்கட்டுரையை நீங்கள் அமைக்கலாம். ஆறு பக்கங்களுக்குள் கட்டுரை இருந்தால் நல்லது. கட்டாயம் தேவை என்றால், கூட இரண்டு பக்கங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு இதழில் ஐந்தாறு விஷயங்களேனும் தர வேண்டும் என்பதற்காகவே இந்த வரையறை.
கட்டுரையை நவம்பர் 25ஆம் தேதிக்கு முன்னர் எனக்குக் கிடைக்கும்படி அனுப்பி வைத்து உதவ வேண்டும். இப்போது விரிந்த அளவில் கடிதப் போக்குவரத்தில் இறங்க நேரமில்லாததால் விரல் விட்டு எண்ணத்தக்க நண்பர்களுக்கு மட்டுமே எழுதுகிறேன். அவசியம் எழுதி அனுப்புங்கள்.
இக்கடிதம் கிடைத்ததும் உங்கள் சம்மதத்தைத் தெரிவித்து எழுதுங்கள்.
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
23.12.87
அன்புள்ள சிவராமன்,
உங்கள் கடிதம் இப்போது கிடைத்தது. காலச்சுவடு ஒரு நாள் எட்டு பக்கம் அச்சாகிறது. இப்போது 32 பக்கங்கள் முடிந்திருக்கின்றன. 56 பக்கங்களோடு நிறுத்திக்கொள்வது என்று இருக்கிறேன். புக் ஃபேருக்கு இதழை அனுப்ப முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஒன்றிரண்டு நாட்கள் வித்தியாசத்தில் அந்த வாய்ப்பை இழக்க வேண்டியிருக்கும்.
அட்டை நன்றாக வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
சுரேஷ் குமார் இந்திரஜித்துக்கு நான் மதுரைக் கூட்டம் பற்றிக் கடிதம் எழுதுகிறேன். இரண்டு வார இடைவெளி விட்டு எழுதுவேன்.
கமலாவுக்கு உடல் நிலை சரியில்லை. நான் மதுரை வரும்போதே ஜலதோஷம் இருந்தது. அதனால் காய்ச்சல். ஒரு வாரத்திற்கு முன் ரத்தம் பார்த்ததில் டைபாய்டு என்று தெரியவந்தது. ஊசி வைத்தியத்திற்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது. இப்போது ஆஸ்பத்திரி, அச்சகம், கடை என்று சுற்றிக்கொண்டிருக்கிறேன்.
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
20.2.88
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 12.2.88 கடிதம். உங்கள் கடிதம் எனக்கு மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தது.
மதுரையில் முடிந்த மட்டும் சந்தாக்களைச் சேர்க்க நாம் முயல வேண்டும். காலச்சுவடுக்கு இன்றைய நிலையில் ஆதரவாக இருக்கும் சக்திகளைத் திரட்டினால்கூட அது நிலைபெற்றுவிடக்கடிய சாத்தியக்கூறுகள் உண்டு; புதிய சக்திகளை உருவாக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும்.
எம். என். ராய் கட்டுரையை நீங்கள் சற்று நிதானமாகவே மொழிபெயர்க்கலாம். நீங்கள் உறுதி தந்துவிட்டதே எனக்குப் பெரிய ஆறுதலைத் தருகிறது. (இதைத்தான் பலரும் செய்ய மாட்டேன் என்கிறார்கள். திலீப்புக்குப் பல கடிதங்கள் எழுதியாயிற்று. இன்றுவரை கதை தருகிறேன் என்றோ தரமாட்டேன் என்றோ தகவல் இல்லை.) ராய் கட்டுரையை நீங்கள் முழுமையாக மொழிபெயர்த்த பின்கூடத் தரலாம். மேலும் ஒரு வாரம் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். மிகவும் நெருடலான இடங்களில் மூலத்துக்கு அதிக விசுவாசம் அளித்து மொழிபெயர்ப்பையும் நெருடலாக்குவதை விட மூலக் கருத்துக்களுக்கு இழப்பின்றித் தமிழில் நயம்படச் செய்யும் சுதந்திரத்தை நீங்கள் சிறிது பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டாவது இதழ் ஆயிரம் பிரதிகள் போடுவது என்று தீர்மானித்துவிட்டேன். அதில் முதலீடு அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ராமகிருஷ்ணனுக்கு உடனடியாக எழுத வேண்டும்.
நீங்கள் சேர்த்துள்ள சந்தா முகவரிகளைத் தெரிவியுங்கள்.
கமலாவுக்குக் காய்ச்சல் பார்ப்பதை விட்டாயிற்று. அலுத்துப்போய்விட்டது. இந்த வாரம்கூட அவளைத் திருவனந்தபுரம் அழைத்துப் போனேன். ஒரு பிரபல லேடி டாக்டரின் கண்காணிப்பில் இரண்டு நாள் இருந்தாள். இப்படிச் செய்வதற்கான சூழ்நிலை ஒன்றும் கிடையவே கிடையாதுதான். ஆனால் அங்கிருந்த நேரங்களில் விசித்திரமாகக் காய்ச்சலே இல்லை. ‘ஒன்றும் இல்லை’ என்று அவர் அனுப்பி வைத்துவிட்டார். இங்கு வந்ததிலிருந்து மீண்டும் 99, 100 என்று ஒவ்வொரு தர்மாமீட்டர் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறது.ஆனால் இதுவரை செய்த ஆராய்ச்சியின் விளைவாக அவளுக்கு மாலையில் ஒரு டிகிரி காய்ச்சல் வருகிறது என்றே நினைக்கிறேன்.
நாம் மதுரையில் வாங்கிய இளம் பச்சைக் காகிதத்தை லெட்டர் பேடுக்கு எடுக்கவில்லை. ஆயிரம் பிரதிகள் போடுவது என்றால் மேலும் அந்தக் காகிதம் வாங்க வேண்டியிருக்கும். இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் கும்பகோணம் போக வேண்டியிருக்கும். பிப்ரவரி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உங்களுடன் இருந்துவிட்டு அன்றிரவு கும்பகோணம் போகலாம் என்று யோசனை. அன்று உங்களை மட்டுமே சந்திக்க சாவகாசம் இருக்கும். உறுதிப்படுத்தி மீண்டும் உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்; அல்லது தந்தி கொடுக்கிறேன்.
மதுரையைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் ஒரு பக்க விளம்பரம் வாங்கித் தந்திருக்கிறார். டி.டி. அனுப்பிவைத்திருக்கிறார். சற்றும் எதிர்பார்த்திராத உதவி.
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
8.4.88
அன்புள்ள சிவராமன்,
வணக்கம். உங்கள் மொழிபெயர்ப்புக் கட்டுரை, கேள்வித்தாள் இரண்டும் இப்போது கிடைத்தன. காலச்சுவட்டை இன்று அச்சுக்குத் தருகிறேன். முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து சற்றும் எதிர்பாராமல் இரண்டு பக்கங்களுக்கு விளம்பரம் வந்து சேர்ந்திருக்கிறது. சந்தாக்கள் சீராக வந்து கொண்டிருக்கின்றன. நம்பிக்கை கூடிக் கொண்டேபோகிறது.
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
3.5.88
அன்புள்ள சிவராமன்,
நான் வெள்ளி காலை இங்கிருந்து புறப்பட்டு மதியம் மதுரை வந்து சேருவேன். தங்கு* சொக்கிகுளத்தில் அவள் சித்தி வீட்டில் இருக்கிறாள். அங்கு போய்விட்டு மாலை கோ. புதூர் நொபிலி, மறைப்பணி நிலையத்தில் நடைபெறும் தமிழ்க் கத்தோலிக்க எழுத்தாளர் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறேன். கூட்டம் மாலை 6 மணிக்கு. இரவு மறைப்பணி நிலையத்திலோ அல்லது சொக்கிகுளத்திலோ தங்கிவிட்டு, சனிக்கிழமை எனக்கு இருக்கும் கடை வேலைகளை அங்கு முடித்துக்கொண்டு மாலை 4 மணி வாக்கில் உங்கள் வீட்டுக்கு வரலாம் என்றிருக்கிறேன். அது உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். இல்லாதவரையும் நீங்கள் சொக்கிகுளத்திற்கு போன் செய்து விவரம் தரலாம். போன் நம்பர்: 42875 (பக்கத்து வீட்டு போன். விஜயா நாகராஜன் அல்லது குமாரி என்று அழைத்துத் தகவல் சொல்ல வேண்டும்.) நான் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்வரையிலும் மதுரையில் இருக்க முடியும். அதன்பின் கும்பகோணம் போகிறேன்.
காலச்சுவடு முக்காலே மூணு வீசம் வினியோகம் ஆகிவிட்டது. இதழ் 105 கிராம் என்பதால் ரூ.1.50 தபால் கூலி ஆகிவிட்டது. இருந்தும் சில்லறைக் காசுகளை மிச்சப்படுத்தலாம் என்று உள்ளூர்ப் பிரதிகளை நேரில் வினியோகிக்க முற்பட ஏகப்பட்ட தலைவலி. அடுத்த இதழிலிருந்து இவற்றைத் தபாலில் சேர்த்துவிட வேண்டும். இதழ் பற்றிய முதல் எதிர்வினை நன்றாக இருக்கிறது. நகுலன் வெகுவாகப் பாராட்டி எழுதியிருக்கிறார். ஜெயமோகனும் போனில் பாராட்டிச் சொன்னார்.
பிற விஷயங்கள் நேரில் பேசிக்கொள்ளலாமே.
அன்புடன்,
சுரா
* சுராவின் கடைசிப் பெண்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில
11.2.89
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 8.2.89 கடிதம். நாளை, ஞாயிற்றுக்கிழமைதான் பச்சைத்தாள் என் கைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். திரு. கபீர் இன்று இரவுதான் இங்கு வருவார்.
காகிதத்தின் விலையைத் தெரிவியுங்கள். உங்கள் பெயருக்கு டி.டி. எடுத்து திருமதி பவானியின் விலாசத்திற்குப் பதிவுத் தபாலில் அனுப்பினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்,
காலச்சுவடு பாதிக்கு மேல் அச்சாகிவிட்டது. எம்.எஸ்ஸும்*, ஸ்ரீனிவாசனும்** ரொம்பவும் கவனமாக ஃப்ரூப் பார்க்கிறார்கள், ஒரு தவறும் வரக் கூடாது என்ற வைராக்கியத்துடன்.
மேலட்டை இன்னும் வந்து சேரவில்லை .
திரு. சுப்பாராவின் கட்டுரை - கவிதை பற்றி - விழிப்பையும், சிந்தனைப் பரபரப்பையும், உண்மையின் பொறிகள் ஏற்படுத்தும் ஆனந்தத்தையும் தந்த அற்புதமான கட்டுரை. கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானேன். ஒரு பகுதி அவருடைய சிந்தனை, மற்றொரு பகுதி மொழியோ, உருவமோ கூடாமல் மனத்தளவில் எனக்கிருந்த மொட்டை உணர்வுகள் பாஷை பெற்றதிலுள்ள சந்தோஷம். பென்குவின் போன்ற புத்தக நிலையம் அதைப் புத்தகமாகக் கொண்டுவந்து பலரையும் எட்டச் செய்ய வேண்டும். அந்த அளவுக்குத் தரமும் அவசியமும் கொண்டது. தமிழில் அதை முழுமையாகக் கொண்டுவரலாம். வலது கால் முட்டில் ஒரு வலி ஏற்பட்டுப் போன வாரம் மூன்று நாட்கள் படுத்த படுக்கையாக இருந்தேன். உடல் கஷ்டத்தையும் தாண்டி மனத்திற்கு ஒரு நிறைவைத் தந்தது திரு. சுப்பாராவின் சிந்தனைகள்.
வீட்டில் எல்லோருக்கும் எங்கள் அன்பு.
அன்புடன்,
சுரா
* எம்.எஸ். சுப்பிரமணியன், சு.ரா.வின் நீண்டகால நண்பர். * * தி.அ. ஸ்ரீனிவாசன், மொழிபெயர்ப்பாளர்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
25.8.89
அன்புள்ள சிவராமன்,
கும்பகோணம் போயிருந்தேன். காரில் போகும் போது பகல் - நீங்கள் கல்லூரியில் இருக்கும் நேரம். வரும்போது பின்னிரவு பார்க்க முடியாமல் போய்விட்டது. மீண்டும் இரண்டு நாள் இடைவெளியில் அவசரமாக பெங்களூர் போனேன். நேற்று முன்தினம்தான் வந்தேன். இதனால் க்ரியா பேங்க் பேப்பர்களில் கையெழுத்திட்டு அனுப்பச் சற்றுப் பிந்தி விட்டது. நேற்று அனுப்பிவைத்திருக்கிறேன்.
எலியட் பற்றிய கட்டுரை செப்டம்பர் முதல் வாரத்தில் எனக்குக் கிடைத்தால் நல்லது. திரு. *வீமனுடன் கலந்துகொண்டு முடிந்த அளவு நிறைவுசெய்து அனுப்புங்கள். தரம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம். முடிந்தவரையிலும் செய்கிறோம். அவ்வளவுதான்.
ராமகிருஷ்ணனிடம் கவரை அச்சேற்றி வாங்குவது மிகச் சிரமமாக இருக்கிறது. இரு கவர்களைச் சேர்த்து அடிப்பதால் வருடத்தில் இரண்டு முறை தான் அச்சேற்ற வேண்டும். ஒரு முறை அச்சேற்ற ஆறு மாத அவகாசம். இதைச் செய்து தர அவர் மிகச் சிரமப்படுகிறார். கடிதங்களுக்கு பதில் என்பதே கிடையாது. எழுதிஎழுதி எனக்கு அலுத்துப்போகிறது. நாளை அவருக்குத் தந்தி கொடுக்க இருக்கிறேன்.
கமலா சென்னை போயிருக்கிறாள். அவள் தங்கை மகனுக்கு இன்று கல்யாணம். நாளை வருவாள்.
வீட்டில் நான் மட்டுமே இருக்கிறேன்.
அங்கு நீங்களும் திருமதி பவானியும் குழந்தைகளும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் பதில்.
அன்புடன்,
சுரா
* வீமன் ஆங்கிலப் பேராசிரியர், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்.
பி.கு: மேற்படி கடிதம் எழுதி முடித்த நிலையில் இப்போது தங்கள் 23.8.89 கடிதமும், படிவங்களும், பில்களும் கிடைத்தன. புதிய பாரங்களில் கையெழுத்திட்டு இன்றே அனுப்பி வைக்கிறேன். (பின் பக்கம் பார்க்க)
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
17.2.89
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 14. 2. 89 கடிதம். காகிதத்தின் விலையை நேரில் தருகிறேன். கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். எனக்கு மறந்துபோய்விடும். உடனுக்குடன் நான் கணக்கை முடிக்க நினைப்பதற்கு இது ஒரு காரணம்.
ராமகிருஷ்ணன் தனக்கு உடல் நிலை மோசமாக இருப்பதால் அட்டை அச்சேற்றத்தைக் கவனிக்க முடியாமல் இருக்கிறது என்று எழுதி இருக்கிறார். இன்னும் வேலையை ஆரம்பிக்கவே இல்லை, நான்கு மாதங்களுக்கு முன் நான் அவரிடம் சொல்லிவிட்ட பணி. கடைசி நிமிஷத்தில் இப்படி எழுதியிருப்பது என்னை நிலைகுலைய வைத்து விட்டது. மனோவுக்கு எழுதி ராமகிருஷ்ணனுக்கு உதவக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்று இரவு ராமகிருஷ்ணனுடன் தொலைபேசியில் பேச வேண்டும்.
ராமகிருஷ்ணனுக்கு மோசமான அலர்ஜி. திருச்சூரில் ஒரு பிரபல இயற்கை வைத்தியர் இருக்கிறார். அவருடன் தொடர்புகொள்ளும்படி ராமகிருஷ்ணனுக்கு எழுதியிருக்கிறேன்.
பச்சைக் காகிதம் கிடைத்தது. மதுரையில் கிடைக்காதபோது சென்னைக்கு எழுதியிருந்தேன். அங்கிருந்தும் வந்திருக்கிறது. வரும் இதழ்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
காகித விலை பயங்கரமாக ஏறிக்கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் வெஸ்ட் கோஸ்ட் ஒரு ரீமுக்கு ரூ.190 (காலச்சுவடு முதல் இதழுக்கு வாங்கும்போது ரூ. 140). இன்றைய விலை ரூ. 205.
திரு. சுப்பாராவ் அவர்களின் கவிதை பற்றிய கட்டுரையை நாம் தமிழில் கொண்டுவர வேண்டும். இன்றைய தமிழுக்கே உரித்தான, மேலோட்டமான, கொச்சையான சிந்தனைகளுக்கு முற்றிலும் தகுதியான ஒரு எதிர்நிலையாக அது நிற்கும். உண்மையான அக்கறைகொண்டவர்களை ஆழமாகப் பாதிக்கும்.
உடல் நிலை மோசம்தான். முக்கியமாக பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை. மார்ச் மாதத்தில் கண்டிப்பாகப் பயணங்களை மேற்கொண்டும் ஆக வேண்டிய கட்டாயம். எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.
அன்புடன்,
சுரா