ஸ்பாரோ இலக்கிய விருது 2022 கவிதை, தமிழ், போடோ, காஸி
ஸ்பாரோ இலக்கிய விருதுகள் தமிழில் எழுதும் ஆண், பெண் எழுத்தாளர்களில் தலா ஒருவர்க்கும் தமிழ் அல்லாத வேறொரு மொழியில் எழுதும் ஒரு பெண், ஓர் ஆண் எழுத்தாளருக்கும் தரப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்பாரோ-ஆர். தியாகராஜன் இலக்கிய விருது கவிதைக்கு வழங்கப்படுகிறது. தேர்வுக் குழுவில் அரவிந்தன், தி. பரமேசுவரி, அம்பை மூவரும் இருந்தனர். தமிழ் அல்லாத வகைப்பாட்டுக்கு போடோ, காஸி ஆகிய இரு மொழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதி முடிவுகளைத் தேர்வுக் குழு தீர்மானித்தது.
இந்த ஆண்டு தமிழ்க் கவிஞர்கள் பொன்முகலி, வே. நி. சூர்யா ஆகியோருடன் காஸி மொழிக் கவிஞர் கின்ஃபாம் ஸிங் நான்கின்ரீயும் போடோ மொழிக் கவிஞர் அஞ்சு பஸுமதாரியும் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
பொன்முகலியின் ‘தாழம்பூ’ (தமிழினி, 2019), ‘ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்பும்போது’ (காலச்சுவடு, 2022) என்ற இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. முதல் தொகுப்புக்குக் கவிஞர் தக்கை வே. பாபு நினைவு கவிதை விருது 2020இல் கிடைத்துள்ளது. பொன்முகலி என்ற புனைபெயரில் கவிதைகளும் கதைகளும் எழுதிவரும் தீபு ஹரி சென்னையில் வசிக்கிறார்.
நாகர்கோவில் அருகே பறக்கையைச் சேர்ந்த வே.நி. சூர்யா இயந்திரவியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் கவிதைகள், மொழியாக்கங்கள் எனத் தொடர்ந்து பங்களித்துவருகிறார். ‘கரப்பானியம்’ (சால்ட் பதிப்பகம், 2019), ‘அந்தியில் திகழ்வது’ (காலச்சுவடு, 2021) என இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. கவிஞர் தக்கை வே. பாபு நினைவு கவிதை விருதை 2021ஆம் ஆண்டு ‘கரப்பானியம்’ கவிதைத் தொகுப்புக்காகப் பெற்றவர்.
மேகாலயாவில் உள்ள ஸோராவில் (செரபுஞ்சி)பிறந்த கின்ஃபாம் ஸிங் நான்கின்ரீ கவிஞராகவும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்படுபவர். காஸி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் காஸி மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதுகிறார். காஸி மொழியில் பத்து நூல்களும் ஆங்கிலத்தில் பன்னிரண்டு நூல்களும் எழுதியிருக்கிறார். இவை தவிர காஸி, ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்ட கவிதை, சிறுகதைகளின் பல தொகுப்புகளுக்குப் பதிப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவருடைய சில கவிதைகள் வெல்ஷ், ஸ்வீடிஷ், ஐரிஷ், ஜெர்மன், கேலிக், ஸ்பானிஷ், இத்தாலிய, போர்த்துக்கீசிய மொழிகளிலும் இந்தி, குஜராத்தி, தமிழ், கன்னடம், மராட்டி, பாங்லா போன்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
போடோ தேசத்தின் பிராந்திய சபையின் தலைமையகமான அஸ்ஸாமின் கொக்ராஜாரில் பிறந்த அஞ்சலி பஸுமதாரியின் புனைபெயர் அஞ்சு. போடோ மொழியில் கவிதை எழுதுகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனம் போன்ற வகைமைகளிலும் எழுதுகிறார். இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகளும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.
மும்பையில் வழக்கமாக நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வை கோவிட் பேரிடருக்குப்பின் ஸ்பாரோ நடத்த ஆரம்பிக்கவில்லை. பாராட்டுரை, கேடயங்கள் விருதாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.