கண்ணகி
சொற்களின் முரண் தொனி
மலையாளக் கவிதையில் டி.பி. ராஜீவன் (1959 - 2022) திருப்புமுனைக் காலத்தை அடையாளப்படுத்தியவர். நவீனத்துவக் காலத்தில் எழுதத் தொடங்கியவர். எனினும் பின்நவீனத்துவப் போக்கின் முதன்மையாளர்களில் ஒருவர். ஒத்திசைவான சொற்களில் நவீனத்துவக் கவிதைகள் எழுதப்பட்டன. மாறாக
டி.பி. ராஜீவனின் கவிதைகள் முரண்தொனியில் அமைந்த சொற்களால் ஆனவை. மரபான கவிதை வடிவம் ஒரு சமூகக் கட்டமைப்பு உருவாக்கிய வெளிப்பாட்டு முறை என்று கருதிய ராஜீவன் முற்றிலும் உரைநடை சார்ந்தே கவிதைகளை உருவாக்கினார். அந்தக் கவிதைகள் மலையாள மொழிக்குப் புதுப்பொலிவை அளித்தன.
கவிஞராக மட்டுமின்றிப் பத்தியெழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் இயங்கியவர் ராஜீவன். உரைநடை அளித்த சுதந்திரத்தை இந்த வடிவங்களில் திறம்படக் கொண்டுவந்தார். ‘புறப்பட்டுப் போகும் சொல்’ என்ற கட்டுரை நூலும் ‘பாலேரி மாணிக்கம் -ஒரு நள்ளிரவுப் படுகொலையின் கதை’, ‘கே.டி.என். கோட்டூர்: வாழ்வும் எழுத்தும்’ஆகிய நாவல்கள் அதற்குச் சான்று. இரு நாவல்களும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன.
மலையாளம், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதியவர் ராஜீவன். அவரது முதல் நாவல் ‘பாலேரி மாணிக்கம்’ முதலில் ஆங்கிலத்திலும் பின்னரே மலையாளத்திலும் எழுதப்பட்டது. சில கவிதைகளும் அவ்வாறே ஒரு மொழியிலிருந்து கூடுபாய்ந்து இன்னொரு மொழியை அடைந்தவை. இந்த இரு மொழிச் செயல்பாடு அவருக்கு விரிவான களத்தையும் பரவலான அறிமுகத்தையும் அளித்தது. மலையாளக் கவிஞர்களில் தமிழ் நவீன கவிதையுடன் பரிச்சயமும் நவீனத் தமிழ்க் கவிஞர்களுடன் நட்பும் கொண்டிருந்தவர்களில் டி.பி. ராஜீவனும் ஒருவர். கடந்த நவம்பர் 2ஆம் தேதி ராஜீவன் மறைந்தார். சமூக ஊடகங்களில் மலையாள இலக்கியக்காரர்களுக்குக் குறையாத விதம் தமிழ் இலக்கியவாதிகளும் இரங்கலைப் பகிர்ந்துகொண்டது அந்த நட்பின் காரணமாகவே.
-குறிப்பும் கவிதை மொழிபெயர்ப்பும்:
சுகுமாரன்
கண்ணகி
என் முலைகள் எங்கே?
வஞ்சினத்தீயில் நகரங்களைச் சாம்பலாக்கப்
பறித்தெறிந்ததல்ல
புற்றுநோய் வந்து அறுத்து நீக்கியதல்ல
அடுத்த வீட்டுக் கல்யாணிக்கு
கல்யாணத்துக்குப் போகக் கடன்கொடுத்ததுமல்ல.
என் முலைகள் எங்கே?
நேற்றிரவு உறங்கப் போகும் முன்பு
வழக்கம்போல ப்ராவை அவிழ்த்துத்
தடவிப் பார்த்து உறுதிப்படுத்தினேன்
கதவைத் தாழிட்டிருந்தேன்
ஜன்னல் அடைப்புகள் திறந்திருக்கவுமில்லை
அரவமோ அசைவோ கேட்கவுமில்லை.
கூடப்படித்த அனிருத்தன்,
கீழ்வீட்டுச் சேச்சியின் வளைகுடாக் கணவன்,
அவ்வப்போது அப்பாவைப் பார்க்க வரும்
அம்மாவின் ஒன்றுவிட்ட மாமன்,
பிரமிடுகளின் சுற்றளவைக் கண்டுபிடிக்கக்
கற்றுக் கொடுத்த சுகுமாரன் சார்,
எவ்வளவு வேகமாகப் போனாலும்
என்னைக் கண்டதும் நிறுத்தும் சூப்பர் ஃபாஸ்ட் டிரைவர்
எவ்வளவு தாமதமாகச் சென்றாலும்
கையொப்பமிடச் சம்மதிக்கும் சூப்பிரண்ட்,
மாறுகண் குறுப்புசார்,
பலரும் கண்வைத்த
என் முலைகள் எங்கே?
சில நாட்களாக ஒரு கறுப்புக் கண்ணாடி பின் தொடர்கிறது
மயிரடர்ந்த ஒரு கை எப்போதும் நீண்டு வருகிறது
அளவெடுக்கும் நாடா மீண்டும் மீண்டும் மார்பில் இறுகுகிறது
ஒரு காமிரா ஒளிந்து பார்க்கிறது
பிளவுசுக்குள் அடிக்கடி ஒரு பூரான் நுழைகிறது
உடைமாற்றும்போது பார்த்து ஒரு புள்ளிப் பூனை நொட்டை விடுகிறத
கோவில் குளத்து நீர் வெறுமனே ஆட்டம் காட்டுகிறது
தெற்கு அறையில் இருட்டுக்கு அடர்த்தி கூடுகிறது
குன்றுகளைச் சுரண்டித் தின்னும் ஒரு எந்திரம்
காலையும் மாலையும் இந்த வழியே கடந்து போகிறது
இன்று ஒரு துளி ரத்தமும் கசியாமல்
எத்தனை ராத்தல் சதையையும் அறுத்தெடுக்கும்
கத்திகள் உண்டு; எனக்குத் தெரியும்.
என் முலைகள் எங்கே?
ஒரு முத்தம்,
மிஞ்சினால் பல்லாலோ நகத்தாலோ ஒரு சிறு கீறல்.
சிதிலமான புடைத்த கோபுரங்களைப் பற்றியல்ல,
அம்மாவின் இழந்த முலைகளைப் பற்றித்தான்
இப்போது கவிஞர்கள் பாடுகிறார்கள்.
என் முலைகள் எங்கே?
பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கலாம்
ஆனால்
கண்ணையும் மூக்கையும் உதட்டையும்போல
முலைகளை அடையாளம் காண்பது எப்படி?
எல்லா முலைகளிலும் தெரியுமே ஒரு கருப்பு வட்டம்.
என் முலைகள் என் பாட்டிகள
மறைக்குடைக்குள்ளிருந்து ஒருபோதும் வெளியே வராதவர்கள்
என் குப்பாயத்துக்குள் நுழைந்து
காசிக்குப் போகும் அப்பிராணிக் கரப்பான்கள்.
என் முலைகள் என் பேரக் குழந்தைகள்
இரண்டு விளையாட்டுச் செப்புகள், காய்கனிகள்.
என் முலைகள் எங்கே?
காலையில்
தொலைக்காட்சிச் செய்தியில் நான் என் முலைகளைப் பார்த்தேன்
அவற்றுக்கிடையில் விரல் நுழைக்கும் ஒரு கூட்டத்தையும்
ஆனால்
இரண்டு குன்றுகளுக்கு இடையிலான
அகதிப் பெருக்கின் தூரக் காட்சியாக இருந்தது அது.
என் முலைகள் எங்கே?
கண்டுபிடிப்பவர்கள், அவற்றில் ஒன்றை
அம்மாவுடையதானாலும் காதலியுடையதானாலும
கம்பார்ட்மெண்டின் எதிர் இருக்கையில்
குழந்தைக்குப் பாலூட்டும் பெண்ணுடையதானாலும்,
வாழ்க்கையில் முலையே அருந்தாதவர்களுக்குக் கொடுங்கள்.
இன்னொன்றை
முலைமுகிழாக் காலத்தில்
என்னைப் பயமுறுத்திய ஒற்றை முலையாளுக்கும்.
வேஷம் கட்ட எனக்குத் தேவை
கண்ணுள்ள இரண்டு சிரட்டைகள்.
வலிகள்
1
என்னைப் போலத்தான்
எனது வலிகளும்.
காலையில் எழுந்து
குளித்து உடைமாற்றி
சுகந்த தைலங்கள் பூசி
வெளியே இறங்குகின்றன.
காதுவலி பாட்டுக் கேட்கப் போகிறது
கண்வலி ஓவியம் பார்க்க.
பல்வலிக்கோ
வாசற்படியில் சிரிப்போடு நிற்க வேண்டும்
கால்வலிக்கு நடனம்
கைவலிக்குத் தாளம்.
அமைதியாக யோசனையில் மூழ்க வேண்டும்
தலைவலிக்கு.
மனவலிக்கு மட்டும்
எங்கும் போவதற்கில்லை
உதிர்ந்த இலைகளையும்
காலி ப்ளாஸ்டிக் கூடுகளையும் பொறுக்கி
தலையில் சூடிக்கொண்டு
வழியோரத்தில் நின்று கூத்தாடும்.
2
இரவு உணவு முடிந்து
சும்மா இருக்கும்போது
பல்வலி சொல்லும்
‘காதுவலி பரவாயில்லை’
‘கண்வலிதான் வலி’ கண்கள் குறுக்கிடும்
‘வாயை காதை கண்ணை மூக்கை
வேண்டுமானால் மூடலாம்.
பூட்டிவைக்க முடியுமா எங்களை?’
கைகால்கள் கேட்கும்.
‘துளி மருந்தை நுகர்ந்தாலே சாகிறவற்றை
வலிகள் என்று சொல்லலாமா?’
இதயம் கேலி பேசும்.
மனசு ஒன்றும் பேசுவதில்லை
அது
மொழி இழந்த ஆதிவாசி
விவாதித்து
கோபித்து
முற்றிய வலிகள்
அவற்றின்
விரித்துவைத்த படுக்கைக்குப் போகும்
என்னைப் போலத்தான்; ஆனால்
அவற்றுக்கும் உறக்கமில்லை.
3
குழந்தைப் பருவத்தில்
வேலி முள்ளில் சிக்கி
நெளிவதைப் பார்த்து
நான்
எடுத்துப்போட்ட பாம்பு
மாணிக்கத்துடன் திரும்பி வந்து
இப்போது என்னிடம் சொல்கிறது
‘மனித குமாரா
முட்களில்லாத வலிகளிலிருந்து
அவிழ்த்தெடுத்து
என்னைப் பழைய வேலியிலேய
தொங்கவைத்து விடு’.