முஸ்லிம்களும் ‘மதச்சார்பற்ற’ கட்சிகளும்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2018இல் ஊடகச் சந்திப்பொன்றில் பேசுகையில் தன் கட்சி 2014 தேர்தலில் தோற்றதற்கான காரணங்களைக் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட காரணங்களில் ஒன்று, “காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் கட்சியாக மக்களை நம்பவைப்பதில்” பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கும் திறன். சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் போக்கைப் பின்பற்றுவதாகக் கருதப்படுவது காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என்று கட்சியின் தோல்வி குறித்து ஏ.கே. அந்தோணி சமர்ப்பித்த ஆய்வறிக்கையைக் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டதையே சோனியா காந்தியின் இந்தப் பேச்சு பிரதிபலித்தது.
முஸ்லிம் சார்பு நிலையைத் திருத்திக்கொள்ள வேண்டிய ‘தேவை’ காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் இல்லை. பல மதச்சார்பற்ற கட்சிகள், குறிப்பாக வட இந்தியாவில் உள்ள கட்சிகள், தங்களுடைய அரசியல் மேடைகளில் முஸ்லிம்கள் அல்லதுமுஸ்லிம் தன்மை வெளிப்படையாக இருந்தால் அது இன்றைய அரசியல் கலாச்சாரத்தில் ஆபத்தான அம்சம் என்ற கருத்தைக் கொண்டுள்ளன.
தெளிவான அரசியல் நலன்களைக் கொண்ட ஒரே மாதிரியான சமூகமாகவே முஸ்லிம்களை மதச்சார்பற்ற கட்சிகள் இன்னமும் கற்பனைசெய்துகொள்கின்றன. முஸ்லிம் ‘வாக்கு வங்கி’ மீதான தம்முடைய உரிமையை அவை துறக்கவில்லை. ஆயினும் பாஜக ஆதிக்கம் செலுத்தும் இன்றைய அரசியல் அமைப்பு இந்தக் கட்சிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவுகளின் தன்மையைச் சீர்குலைத்துள்ளது.
சொல்லாடலில் மாற்றம்: முஸ்லிம் பிரச்சினைகளின் அரசியல்
முஸ்லிம் பிரச்சினைகளின் அடிப்படையில் முஸ்லிம்களை அணிதிரட்டும் வழக்கத்திலிருந்து மதச்சார்பற்ற கட்சிகள் விலகிவிட்டன. ஹிலால் அஹமத் தனது ‘சியாசி முஸ்லிம்கள் (Siyasi Muslims)’ என்ற நூலில் வாதிட்டதுபோல், முஸ்லிம் வாக்கு வங்கி என்னும் கற்பனை பாரம்பரியமாக முஸ்லிம் பிரச்சினைகளின் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைச் சார்ந்துள்ளது. பாபர் மசூதி, தனிநபர் சட்டங்கள், உருது - ஜாமியா - அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் சிறுபான்மைத் தன்மைகள் இந்தப் பிரச்சினைகளில் சில. இவற்றை முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைச் சேகரிப்பதற்கான முதன்மையான கருவியாக முஸ்லிம்களில் உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களும் மதச்சார்பற்ற கட்சிகளும் கட்டமைத்திருந்தார்கள்.
இந்தப் பிரச்சினைகள் அனைத்திலும் பொதுவான அம்சம் உள்ளது. இவை அடிப்படையில் ‘எதிர்மறையான பிரச்சினைகள்.’ முஸ்லிம்களுக்கு நடப்பில் இருக்கும் சில ‘சலுகை’களைப் பாதுகாப்பதைக் குறிப்பவை. இந்தச் சிக்கல்கள் அனைத்தும் (தனிச்சட்டங்கள், பாபர் மசூதி, ஜாமியா பல்கலைக்கழகம் முதலியன) இன்னும் இந்துப் பெரும்பான்மைவாதச் சொல்லாடலின் முக்கிய அங்கமாக இருந்தாலும் மதச்சார்பற்ற கட்சிகள் இந்தப் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தாமல் விலகியிருக்கின்றன. ‘இந்து ஒருங்கிணைப்பு’ குறித்த அச்சமே மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம் பிரச்சினைகளிலிருந்து இப்படி விலகியிருக்கக் காரணம். முத்தலாக் சட்டமும் ராமர் கோவில் தீர்ப்பும் செயலற்ற விதத்திலோ அல்லது மௌனமான ஏற்பாகவோ எதிர்கொள்ளப்பட்டன. எனவே முஸ்லிம்களின் கொள்கைசார் விருப்பங்களில் சிலவற்றை (தனிச்சட்டங்கள், உருது போன்றவை) பாதுகாப்பதாகக் கூறுவதற்குப் பதிலாக, மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம்களைப் பாதுகாப்பதைப் பற்றிப் பேசுகின்றன.
பாஜகவின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றிணைந்து வாக்களிக்குமாறு முஸ்லிம் சமூகம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. முஸ்லிம்களுக்கு பாஜக அல்லாத பல தேர்வுகள் உள்ள மாநிலங்களில், பாஜகவின் முதன்மை எதிரி தாமே என்று காட்டிக்கொள்ளக் கட்சிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றன. பாஜகவின் இரண்டாம் அணியாகச் சில கட்சிகளை முத்திரை குத்தும் போக்கு அதிகரித்துவருவதில் இந்தப் போட்டியுணர்வு பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் காவிக் கட்சியின் முதன்மை எதிரியாக இருக்கும் கட்சியின் முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதாகப் பிற கட்சிகளைக் குற்றம்சாட்ட பாஜகவின் இரண்டாம் அணி என்னும் முத்திரை பயன்படுகிறது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM), பகுஜன் சமாஜ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் சமீபத்தில் பாஜகவின் இரண்டாம் அணி என்னும் பெயரைச் சுமக்க வேண்டியிருந்தது. எனவே, ‘முஸ்லிம் வாக்கு வங்கி’யின் முக்கியமான நோக்கம் பாஜகவைத் தோற்கடிப்பதுதான் என்றே முன்வைக்கப்படுகிறது.
இரண்டாவதாக, முஸ்லிம்களுக்கு அதிகாரமளித்தல் என்ற சொல்லாடலின் இடத்தை மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம் அடையாளத்தை மையமாகக் கொண்ட கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்துள்ளன. சச்சார் கமிட்டிக்குப் பின்பு சிறுபான்மையினருக்கு அதிகாரமளிப்பதில், குறிப்பாக சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் மதச்சார்பற்ற கட்சிகளுக்குப் புதிய ஆர்வம் தோன்றியது. எடுத்துக்காட்டாக, 2012 உ.பி. தேர்தலில் காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. முஸ்லிம்களின் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலை என்னும் உருவகமானது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கங்கள் நடத்திய ஆய்வுகளால் பிரபலப்படுத்தப்பட்டு அங்கீகாரம் பெற்றது. இதை இடதுசாரிகளுக்கு எதிரான தாக்குதல்களில் திரிணமூல் காங்கிரஸ் வங்காளத்தில் பயன்படுத்தியது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத் தேர்தலில் முஸ்லிம்களின் ‘பின்தங்கிய நிலை’ என்னும் கதையாடலை முன்வைத்த ஒரே கட்சி ஏஐஎம்ஐஎம் மட்டுமே.
வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியும் பாதுகாப்பு அரசியலையே (முஸ்லிம்களைப் பாதுகாத்தல்) வலியுறுத்திக்கொண்டிருந்தார். இந்திய மதச்சார்பற்ற முன்னணியை (ISF) சேர்ந்த அப்பாஸ் சித்திகி, “முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்காக பாஜகவிடம் பணம்” வாங்கியிருப்பதாகக் குற்றம்சாட்டிய மமதா, “பாஜக ஆட்சிக்கு வந்தால் நீங்கள் மாபெரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று முஸ்லிம்களை எச்சரித்தார். இந்திய மதச்சார்பற்ற முன்னணிதான் (தன் மதம் சார்ந்த முழக்கங்களைத் தவிர) முஸ்லிம்களின் பொருளாதாரப் பின்தங்கிய நிலை என்னும் சொல்லைப் பயன்படுத்தி முஸ்லிம்களுடனான திருணமூல் காங்கிரஸின் உறவைத் துரோகம் என்று குறிப்பிட்டது.
வாக்காளர்களிடையே இந்துப் பெரும்பான்மைவாதம் பரவும் சூழலில், முஸ்லிம் அடையாளம் குறித்த வழக்கமான பிரச்சினைகளையும், ஒப்பீட்டளவில் அண்மையில் உருவான முஸ்லிம்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த பிரச்சினைகளையும் பற்றிப் பேச மதச்சார்பற்றக் கட்சிகளுக்கு அதிக இடமில்லை. முஸ்லிம்களின் பாதுகாப்பை அரசியலாக்கும் போக்கு உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, வங்காளத்தில் திருணமூல், பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆகியவை அந்தந்த மாநிலங்களில் முஸ்லிம் வாக்குகளில் முக்கால்வாசிப் பங்குக்கும் மேல் பெற உதவியது. ஆனால் அத்தகைய உத்தியின் நீண்டகால நம்பகத்தன்மை தெளிவாக இல்லை. பிகாரின் சீமாஞ்சல் பகுதியில் ஏஐஎம்ஐஎம் முன்னேற்றம் கண்டுள்ளது. அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அசாமிலும் பராக் பள்ளத்தாக்கிலும் முஸ்லிம் வாக்காளர்கள்மீது உறுதியான பிடியைக் கொண்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தும் அரசியலைக் காட்டிலும் அவர்களின் முன்னேற்றத்திற்கான விழைவை முன்வைக்கும் அரசியல் முக்கியத்துவம் பெறுவதையும், இப்பகுதிகளில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற மதச்சார்பற்ற கட்சிகள் திணறுவதையும் இவை சுட்டிக்காட்டுகின்றன என்று சொல்லலாம்.
செயல்பாடுகள் சார்ந்த மாற்றம்: பிரதிநிதித்துவ அரசியல்
முஸ்லிம் பிரச்சினைகள் குறித்த சொல்லாடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன், மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பற்றிய தமது கருத்தையும் மறுவடிவமைத்துக்கொண்டன. முஸ்லிம் பிரச்சினைகள் தேர்தல் களத்தில் முஸ்லிம்களை அணிதிரட்டுவதன் முதன்மை அச்சாக இப்போது இல்லை. எனவே முஸ்லிம்களில் மத, அரசியல் தளங்களில் உயரடுக்குகளில் உள்ளவர்கள் செயல்முறைப் பயன்பாட்டில் முஸ்லிம் பிரச்சினைகளைக் கட்டியெழுப்புவதும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதும் அதற்கேற்பச் சரிந்துள்ளது. மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற இடைத்தரகர்களைச் சார்ந்திருப்பது இப்போது குறைந்துள்ளது. தங்களுடைய முஸ்லிம் ஆதரவாளர்களுடன் நேரடி உறவை உருவாக்க அவை முற்படுகின்றன.
தேர்தல் களத்தில் இஸ்லாமிய உயரடுக்கினரின் பொருத்தம் நீண்ட காலமாகவே சுருங்கிவருவதைப் பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தை நடுத்தர வர்க்க மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் ஆகியோர் மதச்சார்பற்ற வழிமுறையில் நடத்தினார்கள். முஸ்லிம் மதத்தலைமை முஸ்லிம்கள் மத்தியில் தக்கவைத்திருக்கக்கூடிய அரசியல் செல்வாக்கின் மிச்ச சொச்சங்களை அகற்ற இந்தப் போராட்டம் வழிவகுத்தது. அரசியல்வாதிகள் மதத் தலைவர்களை நாடிச்செல்லும் பழக்கம் கடந்த உத்தரப் பிரதேசத் தேர்தலில் காணாமல்போயிருந்தது. சொல்லப்போனால் இத்தகைய முயற்சியை அழுத்தமான முறையில் மேற்கொண்ட ஒரே கட்சி உத்தரப் பிரதேச காங்கிரஸ் மட்டுமே. இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சிலின் மதகுரு தௌக்கீர் ராசாவை அக்கட்சி ஆதரித்து வளர்த்திருத்தது. இதர வாக்காளர்களைப் போலவே முஸ்லிம் வாக்காளர்களும் காங்கிரஸை முழுமையாக நிராகரித்தார்கள். இதுபோலவே மேற்கு வங்கத்தில் அதிரடிப் போக்கு கொண்ட மதத்தலைவரான அப்பாஸ் சித்திக்குடன் கூட்டணிவைத்துக்கொண்ட காங்கிரஸ்-இடது கூட்டணியால் முஸ்லிம் வாக்குகளைப் பெற முடியவில்லை.
தேர்தல் களத்தில் மூன்றாவது அல்லது நான்காவது இடங்களில் தள்ளாடிக்கொண்டிருக்கும் கட்சிகள்தான் முஸ்லிம்கள்மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான கடைசி முயற்சியாக மதத் தலைவர்களின் ஆதரவைக் கோரும் வியூகத்தைப் பயன்படுத்திவருகின்றன. முன்பெல்லாம் முஸ்லிம்களைக் கவர்வதற்கான இயல்பான வழிமுறையாக இருந்த வியூகம் இது.
மதச்சார்பற்ற கட்சிகளில் முஸ்லிம்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்திலும் இதேபோன்ற சரிவு ஏற்பட்டுள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளில் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் எப்போதும் கட்சி நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். அவர்களுடைய தனித்துவமான குரலை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இந்தக் கட்சிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் அறியப்படக்கூடிய முஸ்லிம் தலைவர்களை உருவாக்க முனைந்தன. முஸ்லிம் பிரச்சினைகளில் கட்சியின் நிலைப்பாட்டை ஆவேசமாக முன்வைக்கக்கூடியவர்களாக இவர்கள் இருப்பதே இதன் நோக்கம் (சமாஜ்வாதி கட்சியின் அசம் கான், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முகமது அஷ்ரப் ஃபாத்மி, காங்கிரஸின் சல்மான் குர்ஷித்). அத்தகைய அடையாள அரசியலின் தேவை தற்போது குறைந்துவிட்டது. சமாஜ்வாதி கட்சியும் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தத்தமது கட்சியின் சார்பில் முஸ்லிம் தலைவர் யாரையும் முன்னிறுத்தாமல் பிரச்சாரம் செய்தும் முஸ்லிம் வாக்குகளில் பெரும்பகுதியை இக்கட்சிகளால் பெற முடிந்தது. சமாஜ்வாதி கட்சி சட்டப் போரில் சிக்கிக்கொண்ட ஆசம் கானிடமிருந்து தேர்தலுக்கு முந்திய இரண்டு வருடங்களில் நாசூக்காக ஒதுங்கிக்கொண்டது.
மதச்சார்பற்ற கட்சிகளின் முஸ்லிம் அரசியல் பிரதி நிதிகள் மக்களைப் பிளவுபடுத்தக் கூடியவை எனத் தங்கள் கட்சிகள் கருதும் பிரச்சினைகளில் கட்சியின் நிலைப் பாட்டைக் கடமையுணர்ச்சியுடன் பின்பற்றி மவுனம் சாதிக்கிறார்கள். இத்தகைய அடையாளப்பூர்வமான பிரதிநிதித்துவத்தின் மூலம் முஸ்லிம்களுக்கும் பெரிதாகப் பலன் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் வேட்பாளர்களை (அதன் 403 வேட்பாளர்களில் 91 பேர்) நிறுத்தியது. ஆனால் அவர்களில் யாருமே வெற்றிபெற முடியவில்லை. மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம் தலைவர்களை முன்னிறுத்தாமல் முஸ்லிம் வாக்காளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றன. முஸ்லிம் அடையாளத்தை முன்னிறுத்துவது, முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் அணுகுமுறை என்று பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டின் மையப் புள்ளியாக அது ஆகிவிடுகிறது.
முஸ்லிம்களை அரசியல் ரீதியாக மறுவரையறை செய்தல்
மாநிலவாரியாக அலசினால் நிலவரம் மிகவும் சிக்கலானதாய் இருப்பது தெரியவரும். மாநில அளவில் முஸ்லிம்கள்மீதான மதச்சார்பற்றக் கட்சிகளின் நிலைப்பாடு அந்தந்த மாநிலங்களில் அரசியல் போட்டியின் கட்டமைப்பைப் பொறுத்தது. பாஜகவுடன் இருமுனைப் போட்டியாக இருந்தாலும் சரி அல்லது மும்முனைப் போட்டியாக இருந்தாலும் சரி. உதாரணமாக, தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, தலித்துகளைவிடவும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்று கூறி, முஸ்லிம்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பன்னிரண்டு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தத் தவறியதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தியிருக்கிறார். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, பள்ளியில் ஹிஜாப் மீதான தடைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.
முஸ்லிம் அதிகாரம், முஸ்லிம் அடையாளம் பற்றிய இந்தச் சொல்லாடல் ராஜஸ்தான் அல்லது மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் காங்கிரஸ் கிளைகளிலிருந்து வருவதைக் கற்பனை செய்ய முடியாது. காரணம் அங்கு பாஜகவுடன் காங்கிரஸ் நேரடியாகப் போட்டியிடுகிறது. அதேபோல் சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா, திருணமூல் ஆகியவற்றின் நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றம் அந்தந்த மாநிலங்களில் அதிகரித்துவரும் இருமுனைப் போட்டியால் தீர்மானிக்கப்படுகிறது. இதுவே பாஜகவின் எழுச்சிக்குக் காரணமாக அமைகிறது.
கட்சியின் மேடைகளில் ஆக்கப்பூர்வமான முரண்பாடுகளுக்கும் இடம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் பிரச்சினைகளிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் அதே நேரத்தில் வங்காளத்தில் ஐஎஸ்எஃப், அசாமில் ஏஐயுடிஎஃப் போன்ற முஸ்லிம் அடையாளத்தை மையமாகக் கொண்ட கட்சிகளுடன் கூட்டு சேர விரும்புகிறது. இந்தக் குழப்பங்கள் கட்சிக்குள் விவாதத்தையும் கிளப்பியுள்ளன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் இந்தக் கூட்டணிகளை விமர்சித்தார். “சிறுபான்மை வகுப்புவாதம், பெரும்பான்மை வகுப்புவாதம் இரண்டுமே ஒரே அளவில் நாட்டுக்கு ஆபத்தானது” என்று அழுத்தமாகக் கூறினார். சல்மான் குர்ஷித் இதற்கு எதிர்வினையாக, “சிறுபான்மையினரின் வகுப்புவாதத்தைவிடப் பெரும்பான்மையினரின் வகுப்புவாதம் மிகவும் ஆபத்தானது” என்ற நேருவின் எச்சரிக்கையை மேற்கோள் காட்டிக் கட்சியின் நடவடிக்கைகளை ஆதரித்தார்.
பாஜக ஆதிக்கம் செலுத்தும் அரசியல் அமைப்பின் எழுச்சி, முஸ்லிம்கள்மீதான மதச்சார்பற்ற கட்சிகளின் அணுகுமுறையில் உள்ள அப்பட்டமான பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் அடையாளம், முஸ்லிம் வாக்கு வங்கியைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கம் போன்ற காலத்துக்கு ஒவ்வாத பார்வையில் இக்கட்சிகளின் அணுகுமுறை உறைந்துள்ளது. முஸ்லிம் அடையாளம் அல்லது தங்களுடைய அரசியல் மேடைகளில் முஸ்லிம் தன்மையைக் குறைப்பதைக் காட்டி மதச்சார்பற்ற கட்சிகள் பாஜகவின் வளர்ச்சிக்கு எதிர்வினையாற்றுகின்றன. எனினும் அக்கட்சிகள் முஸ்லிம்களைத் தேர்தல் களத்தில் அணிதிரட்டுவதற்காக ‘பாதுகாப்பு அரசிய’லையே - பாதுகாப்பின் விதிமுறைகள் பெருமளவில் மாறிவிட்ட நிலையிலும் - அதிகம் சார்ந்திருக்கின்றன. மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம்கள் குறித்த தங்கள் கற்பனையைக் கூடுதலான படைப்பூக்கத்துடன் மறுவரையறை செய்யும் என்றும் தற்போதைய கட்டம் அத்தகைய மாற்றத்திற்கு முந்திய காலகட்டமாக இருக்கும் என்றும் நம்பலாம்.
அசீம் அலி சுயேச்சையான அரசியல் ஆய்வாளர்.
https://casi.sas.upenn.edu/sites/default/files/uploads/%28Tamil%29%20Muslims%20and%20the%20%E2%80%9CSecular%E2%80%9D%20Parties%20-%20Asim%20Ali.pdf
தமிழில்: அரவிந்தன்