உற்ற நண்பர் கே.எஸ்.
உற்ற நண்பர் கே.எஸ்.
அஞ்சலி: கே.எஸ். (1937 -2020)
நண்பர்களாலும் இலக்கியவாதிகளாலும் கே.எஸ். என்று அழைக்கப்பட்ட கே. சுப்ரமணியன் கடந்த அக்டோபர் மாதம் மறைந்தார்.
ஜெயகாந்தனின் உற்ற நண்பராகவே பரவலாக அறியப்பட்டிருந்த கே.எஸ். அவரளவில் தேர்ந்த படைப்பாளியாகவுமிருந்தார். அவரது தன் வரலாற்றுக் கட்டுரைகளும் இலக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்புகளும் அதற்குச் சான்றாக அமைபவை.
அயராத மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டவர் கே.எஸ். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குமாக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிமாற்றம் செய்திருக்கிறார். ஜெயகாந்தன் படைப்புகள் உட்பட நவீன எழுத்தாளர்கள் பலரது ஆக்கங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். சங்கக் கவிதைகளையும் நவீன கவிதைகளையும் பெருமளவுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். சாகித்திய அக்காதெமி வெளியிட்ட பாரதி கவிதைகள் ஆங்கில மொழியாக்கத்தில் அவரது பங்களிப்புக் கணிசமானது.
இந்திய அரசின் நிதித்துறையில் உயர் அதிகாரி யாகப் பணி தொடங்கிய கே.எஸ். பின்னர் இயக்குநராகப் பணி ஓய்வு பெறும்வரையான நீண்ட காலம் ஆசிய வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்தார். இலக்கியவாதியாகவும் கலை இலக்கியப் புரவலராகவும் இருந்த கே.எஸ். தமது கொடைக் குணத்தை வெளிக்காட்டாத பெரும்போக்கைக் கொண்டிருந்தார்.
நண்பர் கிருஷ்ணன் நெய்தல் இலக்கிய அமைப்பின் சார்பில் இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருதை வழங்கி வருகிறார். அதன் நீட்சியாகக் கவிஞர்களுக்கு ராஜமார்த்தாண்டன் விருதையும் ஏற்படுத்தினார். அதற்கான ரொக்கத் தொகையையும் நிர்ணயித்தார். தொகை மிகக் குறைவானது என்று தெரிய வந்ததும் கே.சுப்ரமணியன் தொகையை இரட்டிப்பாக்கித் தாமே வழங்க முன்வந்தார். அதற்கு அவர் விதித்த நிபந்தனை ‘இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. என் பெயரை வெளிப்படுத்தக் கூடாது’ என்பதுதான். இலக்கியம் சாதனைகளால் மட்டுமல்ல, பரந்த மனத்தாலும் பேணப்படுவது என்பதற்குக் கே.எஸ்.சின் செயல் எடுத்துக்காட்டு.
- சுகுமாரன்