புதிதினும் புதிது காண்பார்
புதிதினும் புதிது காண்பார்
அஞ்சலி:
க்ரியா ராமகிருஷ்ணன்
(1944 - 2020)
சுகுமாரன்
க்ரியா பதிப்பகத்தின் நிறுவனரும் நவீனத் தமிழ் நூல்களின் செம்மையாக்குநருமாக அறிந்துகொண்ட அதே கால அளவில் எஸ். ராமகிருஷ்ணனை வேறு கோணத்தில் மதிப்பிட்டு வைத்திருந்தேன். குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியராகவும் கசடதபற சிற்றிதழின் முக்கிய விசையாளராகவும் கவனத்தில் இடம் பெற்றிருந்தார். அந்த மதிப்பீட்டை ஒட்டியே தொடர்ந்து அவரைக் கண்டு வந்திருக்கிறேன்.
பள்ளி இறுதிப் பருவத்திலும் கல்லூரி நாட்களின் தொடக்கத்திலுமாக நல்லாசிரியர் சிலரின் சங்காத்தத்தால் தீவிர இலக்கியம் அறிமுகமாகி இருந்தது. சிற்றிதழ்களும் வாசிக்கக் கிடைத்தன. எங்கள் கோவை ஐந்து முக்கு சாலையில் எல்லாவிதமான பத்திரிகைகளும் விற்பனையாகும் மோகன் புக் ஏஜென்சியில் தீபம், கணையாழி, சதங்கை, தாமரை போன்ற இதழ்கள் வாங்கக் கிடைத்தன. அவற்றுக்கிடையில் டெம்மி அளவில் பழுப்புநிற அட்டையுடன் இருந்த இதழ் கண்ணில் பட்டது. கசடதபற இதழ் 33 பிப்ரவரி 1975. அது பத்திரிகையின் இரண்டாம் ஜென்மத்தின் முதல் இதழ். 1973இல் நின்றுவிட்ட பத்திரிகை ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் உயிரூட்டப்பட்டிருந்தது. மீண்டும் வெளியான முதல் இதழில் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலுக்கு ஞானக்கூத்தன் எழுதிய மதிப்புரை இடம் பெற்றிருந்தது நினைவிருக்கிறது. அந்தக் கால அளவில்தான் ஞானியுடனான அறிமுகமும் ஏற்பட்டது. அதுவரை வாசிக்கக் கிடைத்த சிற்றிதழ்களிலிருந்து மாறுபட்டதாகத் தோன்றிய கசடதபற குறித்துப் பேசியபோது அதன் பின்னிதழ்களைப் பெருந்தன்மையுடன் வாசிக்கக் கொடுத்தார். அந்த வாசிப்பு ரசனையிலும் சிந்தனையிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அன்று தமிழில் கொண்டிருந்ததற்கு இணையான வேட்கையுடன் நவீன மலையாளப் படைப்புகளையும் அவை தொடர்பான விவாதங்களையும் அக்கறையுடன் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த விவாதங்களில் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டது ‘அவாந்த் கார்ட்’ என்ற பிரெஞ்சுக் கலைச்சொல். உலகம் முழுவதும் கலை, இலக்கிய விவாதங்களில் பயன்பட்ட இந்தச் சொல்லை மலையாளச் சூழலுக்குப் பொருத்தி எழுத்தாளர் எம். முகுந்தன் ‘நவீனத்துவம் என்றால் என்ன?’ என்ற நூலை எழுதியிருந்தார். கலை இலக்கியங்களில் நடைமுறையிலிருக்கும் படைப்புகளுக்கு முற்றிலும் மாறான வகையில் புதியதாகவும் மாற்றாகவும் பரிசோதனையாகவும் உருவாக்கப்பட்டவை அவாந்த் கார்ட் ஆக்கங்கள். நான் வாசித்த கசடபதற இதழ்கள், அவற்றின் முன்னோடியாக வெளியிடப்பட்ட ‘கோணல்கள்’ சிறுகதைத் தொகுப்பு, ஞானக்கூத்தனின் ‘அன்று வேறுகிழமை’ கவிதைத் தொகுப்பு ஆகியவை இவைதாம் தமிழின் அவாந்த்கார்ட் என்று தன்வயமாக வகைப்படுத்திக்கொள்ள உதவின.
நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் முற்றிலும் பரீட்சார்த்தமாகச் செயல்பட்டவர்களாகக் கசடதபற குழுவை முன்னிருத்துவது பொருந்தும் என்றே கருதுகிறேன். இந்த நடவடிக்கை ஒருவகையில் புதுமையானதாகவும் சற்றே அந்நியமானதாகவும் இனங்காணப்பட்டது என்றும் சொல்லலாம். குழுவின் முன்னெடுப்பாளர்களாகக் கூறப்படும் நா.கிருஷ்ணமூர்த்தி, ம.ராஜாராம், சா.கந்தசாமி, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியவர்களில் தீவிர பரிசோதனை விரும்பியாக இருந்தவர் ராமகிருஷ்ணன் என்பது என் எண்ணம். அவரது அந்த நாளைய படைப்பு, மொழியாக்க முயற்சிகள், பிந்தைய பதிப்புச் செயல்பாடுகள், செம்மையாக்க நடவடிக்கை, அகராதித் தொகுப்பு அனைத்தும் அவரது அயர்ச்சியற்ற பரிசோதனை விருப்பத்தின் விளைவுகள். தனது செயல்பாடுகளின் மீது அவருக்கு இருந்த இறுக்கமான பிடிப்புதான் ஏற்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாயின. இதுவும் ஒருவகையில் ஓர் அவாந்த்கார்ட் குணம் எனலாம். புழக்கத்திலிருக்கும் இலக்கிய - கலை வடிவங்கள், சிந்தனைமுறை ஆகியவற்றுக்குப் புது வடிவங்கள் காணப்படுகின்றன; சமயங்களில் பதிலிகள் உருவாக்கப்படுகின்றன; மாற்று மதிப்பீடுகள் முன்வைக்கப்படுகின்றன. பரிசோதனையாளர்கள் திட்பமானது என்று வரையறுக்கும் தரநிலை நிர்ணயிக்கப்படுகிறது. ‘புதிதான ஒன்றை முன்வைத்திருக்கிறோம், அதை ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம் சார்ந்தது. நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை’ என்ற விலகல் மனப்பான்மையுடனேயே பரிசோதனை விரும்பிகளின் செயல்பாடுகள் முன் நகர்கின்றன. இந்த விலகிய மனப்பாங்கின் பின்புலத்தில் இந்த நடவடிக்கைகள் தனித்துவமானவை என்று புரிந்துகொள்ளும் நிலையும் பலரும் பின்பற்றும் முன்னுதாரணமாக அமையும் என்ற நன்னம்பிக்கையான எதிர்பார்ப்பும் இருந்திருக்கின்றன. க்ரியாவினூடாக ராமகிருஷ்ணன் மேற்கொண்ட ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலச் செயல்பாடுகள் இதை நிறுவுகின்றன.
முன்னோடிப் பதிப்பாளராகவும் எடிட்டராகவும் அகராதித் தொகுப்பில் ஈடுபட்டவராகவும் ராமகிருஷ்ணனின் பங்களிப்பை அனைவரும் எடுத்துக் காட்டுகிறார்கள். படைப்பாளராக அவர் தொடராமல் கைவிட்ட சிறுகதை முயற்சிகள் வாசகனாக என் நினைவில் மங்காமல் இருக்கின்றன. இலக்கியச் சங்க வெளியீடாக வந்த ‘கோணல்கள்’ தொகுப்பிலுள்ள அதே தலைப்பிலான கதையும் ‘அவளிடம் சொல்லப் போகிறான்’, கசடதபற இரண்டாவது இதழில் வெளிவந்த ‘மழைக்காகக் காத்திருந்தவன்’ ஆகிய கதைகளும் அன்று தென்பட்ட புதுமை காரணமாக ஞாபகத்தில் நிலைத்திருக்கின்றன. அந்தக் கதைகளில் வழக்கமான கதை என்று ஒன்று இல்லை. கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லை. அவன் இவன், அவள் இவள் என்ற அனாமதேயச் சுட்டுதல்களே இருந்தன. தன்மைக் கூற்றாக எழுதப்பட்ட கதையில் ‘நான்’ மட்டுமே இருந்தது. அந்தப் புதுமை அப்போது கவர்ச்சிகரமானதாகத் தோன்றியது. பிற்காலத்தில் வாசித்த சிலரது கதைகளில் அந்த அனாமதேயச் சுட்டலின் தொடர்ச்சியைக் காணவும் முடிந்தது. அது ஓர் இலக்கியக் கண்டுபிடிப்பின் சுகத்தை அன்று அளித்தது. அந்தப் பாதிப்பில் நான் எழுதிய கதையை ‘கதையில்லாத கதையிலும் ஒரு கதை இருக்கும். உங்கள் கதையில் அது காணோம்’ என்று கணையாழியின் பொறுப்பாசிரியர் அசோகமித்திரன் திருப்பி அனுப்பினார்.
நவீனத் தமிழ் நூல் வெளியீட்டில் ராமகிருஷ்ணனின் பங்கு குறிப்பிடத் தகுந்தது. அச்சடித்த காகிதக் கற்றைகளின் கட்டுமானம் புத்தகம் என்பதை மாற்றினார். அதை, புத்தகத்தை ஒரு கலைப்படைப்பின் தரத்திலும் அழகிலும் பதிப்பித்தார். அதுபோன்ற முயற்சிகள் முன்னரும் தமிழில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒரு புத்தகம் அதன் மையப்பொருளைத் துலங்கச் செய்யும் வகையில் எடிட் செய்யப்பட வேண்டும் என்று சிரத்தை கொண்டிருந்தார். அத்தகைய பணிகள் முன்னரே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றிருந்தன. சக்தி பதிப்பகம், வாசகர் வட்டம் ஆகியவை வெளியிட்ட நூல்களில் அதைக் காணலாம். அந்தப் பணிகள் அனைத்தும் ஒரு நூலைப் பதிப்பிப்பதில் கட்டாயமானவை என்ற கருத்தை ராமகிருஷ்ணன் உருவாக்கினார். விளம்பரத்துறையில் பணியாற்றியவர். எனவே அந்த அனுபவப் பின்னணியில் புத்தகப் பதிப்பை மிகுந்த செய்ந்நேர்த்தியுடன் கொண்டு வருவதில் விழிப்பாக இருந்தார். அந்த விழிப்புணர்வு அவரது சமகாலப் பதிப்பாளர்களுக்கு - அன்னம் போன்ற மாற்று வெளியீட்டகங்களுக்கும் கலைஞன் பதிப்பகம், நர்மதா பதிப்பகம் போன்ற பெரும் வெளியீட்டகங்களுக்கும் - உந்துதலாக இருந்தன. இந்த விசை முடுக்கத்தை அவரது பெரும் பங்களிப்பாகக் கருதுகிறேன்.
ஒரு புத்தகம் நல்ல தாளில் தரமாக அச்சிடப்பட்டு ஈர்க்கத்தக்க முகப்புடன் வெளிவருவது வாசகனுக்கு உவப்பானதுதான். அது செம்மையாக எடிட் செய்யப்பட்டு வாசிப்புக்கு இணக்கமான பிரதியாக அமைவதும் நல்லதுதான். ஆனால் எல்லா நூல்களும் அப்படி வெளியிடப்பட வேண்டுமா என்ற கேள்வியை ராமகிருஷ்ணனிடம் ஒருமுறை கேட்டிருக்கிறேன். க்ரியாவின் ஆரம்ப கால வெளியீடுகளுக்குப் பின்னர் பதிப்பிக்கப்பட்ட நூல் எஸ்.எஸ்.நாகராஜன் எழுதிய ‘நெல் சாகுபடி’. பச்சைப் பசுமையான முகப்புடன் மிக நேர்த்தியான வடிவமைப்புடன் கண்ணை உறுத்தாத அச்சாக்கத்தில் வெளியான நூல். ‘இந்த நூலின் பயனாளிகள் அனேகமாக வேளாண்மைத் துறையினராக இருப்பார்கள். அவர்களுக்கு இந்த நேர்த்தி ஆடம்பரமானதாகத் தெரியாதா?’ என்று கேட்டேன். ‘விவசாயம் பத்தின புத்தகம் ஒன்று அப்படியும் இருக்கட்டுமே, நல்லதுதானே’ என்பது அவர் பதில். அதைப் பரிசோதனை விரும்பியின் பிடிப்பு என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபது, எண்பதுகளில் தீவிர இலக்கியத்துக்குள் புகுந்த வாசகர்களுக்கு அவர்களது வாசிப்புத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கவில்லை. இவ்வளவுக்கும் அது சீரிய இலக்கியத்தில் வலுவான மாற்றங்களும் பாதிப்புகளும் நிகழ்ந்த காலம். சிறு பத்திரிகைகள் அதுவரை இருந்ததைவிட அதிகக் கவனத்துக்கு உள்ளான காலமும் அதுதான். எனினும் சிறு பத்திரிகை மூலம் அறிந்துகொண்ட ஓர் எழுத்தாளரின் நூலைப் பெறுவது வாசகருக்குச் சிரமமாகவே இருந்தது. வாசிப்புப் பழக்கம் பரவலாக உள்ள ஊர் என்று புகழ் பெற்றிருந்த என் ஊரான கோவையிலும் தீவிர இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பது அன்று அரிதாகவே இருந்தது. ‘கணையாழி’ இதழில் தொடராக வெளிவந்த அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ நாவல், நூல் வடிவில் வெளியானது. வெளியிட்டவர்கள் சி.எல்.எஸ் நிறுவனம். எங்களூரில் இருக்கும் சி.எல்.எஸ் புத்தக நிலையத்தில் சென்று கேட்டபோது விற்பனையாளர், இடுப்பளவு உயரமுள்ள கல் ஜாடிகளுக்குப் பின்னால் கைகளை விரித்தபடி இயேசுநாதர் நின்றிருக்கும் முகப்போவியம் கொண்ட ‘ஜீவனின் தண்ணீர்’ புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். நானாகத் தேடிப் பிரிக்கப்படாத கட்டின் கிழிந்த ஓரத்தில் தலைகாட்டிய அசோகமித்திரன் நாவலைக் கண்டுபிடித்தது இன்றும் மங்காத சாகச ஞாபகம்.
இந்த வாசிப்பு வேட்கையுடன் திரிந்த அந்த நாட்களில் ஊர் ஊராகச் செல்லும் விற்பனைப் பிரதிநிதியாக வேலை அமைந்தது உற்சாகமளித்தது. அதிலும் பணிநிமித்தம் சென்னைக்கு அடிக்கடி செல்லக் கிடைத்த வாய்ப்பு வேலை மீதான ஈர்ப்பைக் கூட்டியது. அந்தப் பயணங்களில் தவறாமால் செல்லும் இடமாக க்ரியா 268 முதல் தளம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை ஆனது தற்செயல் அல்ல. ஆர்வத்துடன் தேடிக்கொண்டிருந்த புத்தகங்களும் சிற்றிதழ்களும் கைக்கெட்டும் அதிர்ஷ்டக் களஞ்சியமாக இருந்தது. தவிர அந்த இடம் புத்தக விற்பனைக் கடையின் தோற்றத்தில் இல்லாமல் சின்ன ஓவியக்கூடம் போல இருந்ததும் படைப்புகள் மூலமாகத் தெரிந்துவைத்திருந்த எழுத்தாளர்களையும் ஆளுமைகளையும் அறிமுகம் கொள்ளும் கூடுதுறையாக இருந்ததும் வியப்பை அளித்தது. அந்த வியப்பின் மையமாக எஸ். ராமகிருஷ்ணன் இருந்தார். எனினும் அவருடன் நெருக்கமாக உரையாடிய தருணங்கள் மிகவும் குறைவு. அந்தக் குறைவான சந்தர்ப்பங்களில் நிகழ்ந்த ஓரிரு உரையாடல்கள் இன்றும் மறதியின் இருளுக்குள் சரிந்துவிடாதவை.
எழுபதுகளின் இறுதியிலோ எண்பதுகளின் தொடக்கத்திலோ சேந்தமங்கலத்தையடுத்த காந்தி நகர் என்ற சிற்றூரில் ஒரு கூட்டம் கூடியது. மாற்று இலக்கியவாதிகளும் கலைஞர்களும் கலாச்சாரச் செயல்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து ‘இலக்கு’ என்ற பெயரில் பொதுஅமைப்பாகப் பணியாற்றுவது தொடர்பான பூர்வாங்கப் பேச்சுகள் நடைபெற்றன. கோவை ஞானி, பரீக்ஷா ஞாநி, தமிழவன், படிகள் சிவராமன், ப. சகதேவன், ஜி.கே. ராமசாமி, க்ரியா ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். ஓரிரு கவிதைகள் எழுதிப் புகழ்பெற்றிருந்த பொடியனான நானும் அவர்களுடன் இருந்தேன். இரண்டுநாள் கூட்டம். முதல்நாள் இரவு தனியாக அமர்ந்திருந்த என்னுடன் ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தார். க்ரியா வெளியீடான எஸ்.வி.ராஜதுரையின் எக்ஸிஸ்டென்ஷியலிசம் - ஓர் அறிமுகம் தொடர்பில் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அன்று அவர் அளித்த விளக்கங்கள் பெரிய திறப்பை எனக்குள் ஏற்படுத்தின. ஆல்பெர் காம்யு பற்றி அவர் அளித்த விவரங்களே என்னைக் காம்யுவின் வாசகனாக்கியது. இன்றும் என் மகத்தான எழுத்தாளர்களில் காம்யு நிலைத்து நிற்க அன்றைய உரையாடல் காரணமானது. க்ரியா வெளியிட்ட நூல்களில் கணிசமானவை என் சேகரிப்பிலிருக்கின்றன. ஆனால் அவற்றில் என்னைப் பாதித்த நூல்கள் எக்சிஸ்டென்ஷியலிசம், அந்நியன், குட்டி இளவரசன், சொற்கள் ஆகியவை.
முதல் இரண்டு நூல்களின் வாசிப்பால் தூண்டப்பட்டு வில்லியம் பாரட்டின் இர்ரேஷனல் மேன், டைம் ஆஃப் நீட் ( William Barrett – The Irrational Man, Time of Need ) ஆகிய தத்துவ நூல்களையும் காம்யுவின் படைப்புகளையும் அவரைப் பற்றிய நூல்களையும் திரட்டியதும் வாசித்ததும் தனி அனுபவம். திண்டுக்கல் சந்திப்புக்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதேபோன்ற இன்னொரு வாய்ப்பு பொள்ளாச்சியில் நடந்த ஓவியப் பயிற்சி முகாமில் கிடைத்தது. மாணவர்களுக்கு ஓவியக் கலையை அறிமுகம் செய்விப்பதற்காக என்.ஜி.எம்.கல்லூரி நடத்திய முகாம். ஓவியர் ஆர்.பி. பாஸ்கரன் நடத்தினார். ராமகிருஷ்ணனும் அதில் இருந்தார். சகல கலைகளிலும் விற்பன்னனாகி விடும் கனவில் மிதந்துகொண்டிருந்த நானும் ஒரு மாணவனாகக் கலந்து கொண்டேன். முன்போலவே இரவுணவுக்குப் பின்னர் ராமகிருஷ்ணனுடன் அமர்ந்திருந்தபோது மேற்கத்திய ஓவிய உலகம் பற்றி அவர் பேசியது புதிய பார்வையைக் கொடுத்தது; கூடவே நாம் ஓவியனாகப் பெயரெடுப்பது பகற் கனவு என்ற ஞானத்தையும் கொடுத்தது.
ராயப்பேட்டையில் இயங்கிவந்த க்ரியா அலுவலகம் இடம் மாறிய பின்னர் அதை நாடிச் செல்லவில்லை. அதற்கான வாசகத் தேவையும் எழவில்லை. பிந்தைய நாட்களில் புத்தகங்களும் இதழ்களும் கிடைப்பதற்கான வெவ்வேறு வழிகள் திறந்திருந்தன, க்ரியா ராமகிருஷ்ணனைச் சந்திப்பது சென்னைப் புத்தகக் காட்சிகளில் மட்டும் என்றானது. எனினும் இரு சம்பவங்கள் அவரை என்றென்றைக்கும் நினைவுகொள்ளச் செய்பவை.
ஒருமுறை க்ரியா அலுவலகத்தில் புத்தகங்களை அலசிக் கொண்டிருந்தேன். வாங்கி வாசிக்க விரும்பிய பல நூல்கள் அடுக்குகளில் இருந்தன. ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்ப்பதும் பார்த்ததை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைப்பதுமாக இருந்தேன். கடைசியில் கையிருப்புக்கு ஊறு விளைவிக்காத விலையில் இருந்த கவிதைத் தொகுப்பு ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு பில்போடத் தயாரானேன். தூரத்திலிருந்து இதைக் கவனித்துக்கொண்டிருந்த ராமகிருஷ்ணன் எழுந்து வந்தார். “நெறய புத்தகம் எடுக்கறதைப் பார்த்தேன். இப்ப ஒண்ணுக்குத்தான் பில் போடறீங்க?” என்றார். தயக்கத்துடன் மண்டையைச் சொறிந்து நின்றேன். பில் எழுதிக்கொண்டிருந்தவரிடம் ‘’ உஷா, அவர் இன்னும் புக்ஸ் எடுப்பாரு. எல்லாத்துக்கும் பில் போட்டுடுங்க. மேக் இட் எ க்ரெடிட் பில்’’ என்றார். என் பக்கம் திரும்பி மெதுவா அனுப்புங்க என்ன என்று விட்டு நகர்ந்தார். அது ஓர் இளம் வாசகனுக்கு அவர் காட்டிய அளப்பரிய சலுகை. பெரிய புத்தகக் கட்டுடன் அருகிலிருந்த பைலட் தியேட்டரைக் கடந்தபோது கட் அவுட்டில் கதாநாயகியைத் தூக்கிப் பிடித்திருந்த ரோஜர் மூரிடம் ‘ஃபார் மை ஐஸ் ஒன்லி’ என்று சொல்லி நடந்தேன்.
காப்ரியேல் கார்ஸியா மார்க்கேசுக்கு 1982ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதையொட்டி அவர் பெயர் தமிழ் இலக்கியப் பரப்பில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கு முன்னரே அந்தப் பெயர் அறிமுகமாகி இருந்தது. மலையாளத்தில் அவர் பெயர் பரவலாக அறியப்பட்டதுடன் அவரது கதைகள் சிலவும் மொழியாக்கம் பெற்றிருந்தன. ஓ.வி.விஜயனின் ‘கஸாக்கின் இதிகாசம்’ நாவல் மார்க்கேசின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலைப் பார்த்து நகலெடுக்கப்பட்டது என்ற விதண்டாவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வாசகனாக மார்க்கேஸ் மீதான மயக்கத்தை இவை அதிகமாக்கின. ஆனால் அந்த நாவல் அப்போது விற்பனைக்கு வந்திருக்கவில்லை; குறிப்பாக எங்கள் ஊரில். எனவே சென்னையில் உள்ள நண்பர்களிடமும் சென்னைக்குச் செல்லும் நண்பர்களிடமும் அதன் பிரதியை வாங்கி வருமாறு ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக க்ரியா ராமகிருஷ்ணனுக்கு ஒரு கடிதமும் எழுதினேன். எதிர்பார்த்தது போலவே பதில் வரவில்லை. ஆனால் சில நாட்களுக்குப் பின்னர் சென்னை சென்று திரும்பிய ஞானியைச் சந்திக்கப்போனபோது “க்ரியா ராமகிருஷ்ணன் கொடுக்கச் சொன்னார்” என்று ஒரு புத்தகத்தை என்னிடம் நீட்டினார். பென்குவின் (யுகே) பதிப்பான ‘ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்டியூட்’ (One Hundred Years Of Solitude ). அந்தக் கண மகிழ்ச்சிதான் இன்றும் மார்க்கேஸ்மீது கொண்டிருக்கும் மாறாக் காதலுக்கு அடிப்படையானது. இவை எளிய சம்பவங்கள்தாம். ஆனால் இலக்கியப் பித்துப் பிடித்த ஒருவனுக்கு அவனைப் புரட்டிப்போட்ட மகத்தான வரலாற்று நிகழ்வுகள்.
ஓர் இலக்கிய வாசகன் என்று என்னைச் சொல்லிக் கொள்ளும் காலம் முழுவதும் அப்படிச் சொல்வதற்குத் துணைபுரிந்த பலரை நினைத்துக்கொண்டும் இருப்பேன்; அவர்களில் க்ரியா ராமகிருஷ்ணனும் ஒருவர்.