கற்றனைத்து ஊறும் அறிவு
தலையங்கம்
கற்றனைத்து ஊறும் அறிவு
அருந்ததிராய் எழுதிய ‘தோழர்களுடன் ஒரு பயணம்’ (Walking with the comrades) என்னும் நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை ஆங்கில இலக்கியப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் 2017ஆம் ஆண்டு முதல் வைக்கப்பட்டிருந்தது. அந்நூல் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறது என்று சொல்லி அதைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என ‘அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்’ என்னும் மாணவர் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. அதனால் உடனடியாக அந்நூல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தில் இருந்து ஒரு நூலையோ குறிப்பிட்ட பகுதியையோ நீக்கச் சொல்லி ஏதேனும் அமைப்பு எதிர்ப்பதும் அதன் தொடர்ச்சியாக நீக்கப்படுவதும் புதிதல்ல. இன்குலாப்பின் ‘கண்மணி ராஜம்’ என்ற கவிதை ராஜராஜசோழனை இழிவுபடுத்துகிறது எனக் கூறித் தமிழ்த் தேசிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் சென்னை பல்கலைக்கழகத்தால் அக்கவிதை நீக்கப்பட்டது. 1990களில் நடந்த சம்பவம். அவரது ‘ஔவை’ நாடகத்தில் இளம்பெண்ணான ஔவை கள் குடிக்கும் காட்சி இடம்பெற்றமைக்காக அந்நாடகத்தை நீக்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் போராடியதால் அந்நாடகம் நீக்கப்பட்டதும் உண்டு. புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி, ‘பொன்னகரம்’ ஆகிய இரண்டு கதைகளும் தலித்துகளுக்கு எதிரான பார்வை கொண்டிருக்கிறது எனத் தலித் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவற்றைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது சென்னைப் பல்கலைக்கழகம். மனோன்மணியம் பல்கலைக்கழகத்திலேயே இப்படி பல நீக்கங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன. இத்தகைய பல நிகழ்வுகளை வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்ட முடியும்.
பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட இவற்றில் எவையும் அரசால் தடை செய்யப்பட்டவை அல்ல; ரகசியச் சுற்றுநூல்களும் அல்ல. அனைவரும் அறிந்த மிக முக்கியமான பதிப்பகங்கள் வழியாக வெளியாகிப் பரவலாகப் பலராலும் படிக்கப்பட்டவைதாம். அருந்ததிராயின் நூலைத் ‘தேச விரோத மாவோயிஸ்டுகளின் ஆயுதப் புரட்சிகளை வெளிப்படையாக ஆதரிக்கக் கூடிய புத்தகம்’ என அம்மாணவர் அமைப்பு கூறுகிறது. அப்படியானால் அந்நூலை வெளியிடவும் விற்பனை செய்யவும் அரசு அனுமதித்தது எப்படி? தேசவிரோதம் என்பதற்கான அளவுகோல்கள் எவை? மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உடனடியாக நூலை நீக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பு மிரட்டுகிறது. ஆம், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி சார்ந்த மாணவர் அமைப்பு இது என்பதால் ‘இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்று… போராடுவோம்’ எனச் சொல்லி மிரட்டுகிறது.
தடை செய்யப்படாத எந்த நூலையும் பாடத்தில் வைக்க எல்லா உரிமையும் பாடத்திட்டக் குழுவுக்கு இருக்கிறது. உயர்கல்வியில் குறிப்பாக முதுநிலைப் படிப்புகளில் பல்வேறு பார்வைகளை முன்வைத்து உரையாடத் தகும் வகையிலான படைப்புகள் இடம்பெற வேண்டியது கட்டாயம். கல்வி, கடிவாளப் பார்வையை உருவாக்குவது அல்ல. விவாதத்தைக் கிளப்பிச் சுயசிந்தனைக்குத் தூண்டுவதே கல்வி. அதற்கேற்ற வகையில் பாட நூல்கள் அமைய வேண்டும். ஆகவே பாட நூல்களைத் தீர்மானிப்பது அத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்ட குழுதான். படிப்பு நிலை, பாடப்பிரிவுகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு நவீன உணர்வுடன் பாடநூலைத் தேர்வு செய்வது அக்குழுவின் பணி. அருந்ததிராயின் இந்நூல் வெளியானபோது மிகுந்த கவனத்தையும் பெரும்விவாதத்தையும் பெற்றது. இதைப் பாடநூலாகத் தேர்ந்தெடுத்த பாடத்திட்டக் குழு பாராட்டப்பட வேண்டியதாகும்.
இதைப் பாடமாக நடத்தும் ஆசிரியர், இதன் கருத்துகள் அனைத்தையும் அப்படியே அங்கீகரித்து ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டியதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. பாடம் நடத்தும் ஆசிரியர் தம் நோக்கையும் இணைத்தே கூறுவார். அத்துடன் மாணவர்களின் பார்வையும் இணையும். பாடநூலை முன்வைத்து வெவ்வேறு பார்வைகளைப் பரிசீலிப்பதாகவே வகுப்பு அமையும். எத்தகைய பாடத்திற்கும் இதுதான் நிலை. தமிழ்ப் பக்தி இலக்கியங்களைப் பாடத்தில் வைக்கும்போது அவற்றில் பெண் வெறுப்புக் கருத்துகள் பலவிதமாக இடம்பெறுகின்றன. ஆனால் அதற்காக அவற்றை யாரும் எதிர்ப்பதில்லை. இக்காலத்திற்குப் பொருத்தமில்லாத அக்கருத்துக்களின்மீது வரலாற்றுரீதியான விமர்சனப் பார்வையை முன்வைப்பதாகவே வகுப்பறை அமையும். கற்பித்தல் முறைகளைப் பற்றிய அடிப்படை அறிவற்ற பார்வையே இத்தகைய எதிர்ப்புகளுக்குக் காரணம்.
ஏதாவது அரசியல் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததும் நீக்குவது என்பது பாடத்திட்ட வல்லுநர் குழுவை அவமதிக்கும் செயல். கல்வித்துறையின் சுதந்திரமான செயல்பாடுகளுக்குள் வெளி அமைப்புகள் தலையிடுவது ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வோர் அமைப்புக்கும் தமக்கான அரசியல் நிலைப்பாடுகள் இருக்கும். அந்நிலைப்பாடுகளுக்கு ஏற்றவைதாம் பாடத்தில் இடம்பெற வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சரியல்ல. பல பார்வைகளுக்கு இடம் கொடுத்து இயங்குவதே சமூகத்தின் இயல்பு. மனிதச் சிந்தனையை மேலெடுத்துச் செல்லும் திறந்த அமைப்பாக இருக்க வேண்டிய கல்விக்குள் தம் ஒற்றை நோக்கைத் திணிக்க முயலும் எந்த அமைப்பானாலும் அது கல்விக்கு எதிரியே. பாட நூல்களை விமர்சிப்பதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு; எதிர்ப்புத் தெரிவிக்கலாம். கோரிக்கையும் வைக்கலாம். ஆனால் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் நீக்க வேண்டும் எனவும் மிரட்டல் விடுப்பது கல்வியாளர்களை மதிக்காத போக்கு, கல்வியாளர்களை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடையாளம்.
இவ்வாறு வெளி அமைப்புகளின் தலையீடு நேர்ந்தால் அதற்கு உடனே அடிபணிவது கல்வியாளர்களுக்கு அழகல்ல. அருந்ததிராய் நூல் நீக்கப்பட்ட விஷயத்தில் குறிப்பிட்ட பாடத்திட்டக் குழு தம் நோக்கைப் பொதுவெளியில் வைப்பதற்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கல்வியாளர் தரப்பின் நியாயத்தைத் துணைவேந்தரும் வெளிப்படுத்தவில்லை. நூலை நீக்குவதில்தான் துரிதம் காட்டினார் துணைவேந்தர். கல்வியாளர்கள் பக்கம் நின்று தம் தரப்பை முன்வைத்திருக்க வேண்டிய துணைவேந்தர் தமக்குச் சாதகமான, விதிக்கு முரணான ஒரு குழுவைப் பெயரளவுக்கு அமைத்து நூலை உடனே நீக்கியிருக்கிறார்.
பாட நூல்களைப் பற்றிய ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பதன் வழியாகக் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கம் வெளியமைப்புகளுக்கு இருக்க வேண்டும். தம் சுய மரியாதை, மதிப்பு ஆகியவற்றின் மீது பிடிமானம்கொண்ட ஆளுமைகள் கல்வித்துறை நிர்வாகத்தில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் சுதந்திரக் கல்வி வாய்ப்புகள் அமையும். நம் பல்கலைக்கழகச் செயல்பாடுகளைக் காணும்போது இப்போதைக்கு நம்பிக்கைக் கீற்றுகூடத் தென்படவில்லை.
என்னுடைய ‘Walking With the Comrades’ புத்தகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் தனது பாடத்திட்டத்திலிருந்து ABVP யின் அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாக நீக்கிவிட்டதை அறிந்தபோது எனக்கு வருத்தத்தைவிட, வினோதமான வகையில் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஏனென்றால் என் புத்தகம் அங்கு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்ததே முதலில் எனக்குத் தெரியாது. அது பல வருடங்களாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இப்போது அது பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதில் எனக்கு சற்றும் அதிர்ச்சியோ, வியப்போ ஏற்படவில்லை. ஒரு எழுத்தாளராக எனது கடமை எழுதுவது மட்டும்தான். ஒரு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இடம்பிடிப்பதற்காகப் போராடுவது என் வேலையல்ல. போராடுவதும் போராடாததும் மற்றவர்களைப் பொறுத்தது. எப்படியிருந்தாலும் இப்புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டுவிட்டது. மேலும் தடைகளும் நீக்கங்களும் எழுத்தாளர்களை வாசிப்பதிலிருந்து வாசகர்களைத் தடுப்பதில்லை. இலக்கியம் மீதான நமது தற்போதைய அரசாங்கத்தின் குறுகலான, மேம்போக்கான, தன்னம்பிக்கையற்ற மனப்பான்மை அதன் மாற்றுக்கருத்தாளர்களுக்கு மட்டும் தீங்கிழைப்பதில்லை. அதன் இலட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் தீங்கிழைக்கக்கூடியதே. இது நமது சமுதாயத்துக்கும், உலக அரங்கில் மதிப்பையும் கௌரவத்தையும் அடைவதற்குப் போராடிக்கொண்டிருக்கும் நமது நாட்டுக்குமான அறிவுத்தகுதியைக் கீழிறக்கி முடக்கிவிடுவதாக அமைந்துவிடும்.
- அருந்ததி ராய்
இதழ் அச்சுக்கு அனுப்பப்படும் தருணத்தில் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட ‘Walking With the Comrades’ நூல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்திருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்குப் பாராட்டுக்கள்.