கடிதங்கள்
கடிதங்கள்
‘ஆலயம் பதினாயிரம் நாட்டல்’ எனும் தலையங்கம் என் நீண்ட வாழ்வோட்டத்தில் கோயில்களின் பங்குபற்றுகைக் குறித்து மேலும் சற்றுச் செறிவாகச் சிந்திக்க வைத்தது. முன்னும் பின்னும் வீசுகிற கட்சிகளின் சந்தர்ப்பவாதக் காற்றை இதன்மூலம் கொஞ்சம் சுவாசிக்கவும் முடிகிறது. “பிராமணர்களைவிட மூர்க்கமாக மரபைத் தூக்கிச் சுமப்பவர்கள் ஆதிக்கச் சாதியினர்தாம்” என்கிற மெய்ம்மை வரப்போகும் அரசியல் கூட்டணி மாற்றங்களிலும் தெரியத்தான் போகிறது பாருங்கள்.
தலையங்கம் சொல்லுகிற மாதிரி இயல்பாகவே எழுகிற கேள்விகளுக்கு மறுமொழிகளைக் கண்டறிந்தால்தான் ஒரு மேம்பட்ட சமூகமாக நாம் ஆக முடியும். அதற்கு முதலீட்டு அரசியலும் தாராளமயமும் கிஞ்சிற்றும் உதவ மாட்டா. ‘பரோஸ்மியா’ என்ற கதை என்னை மிகவும் ஈர்த்தது. மாஜிக் ரியலிசம் போலுமொரு காப்பிய பௌதிகக் கலப்புச் சிந்தனை ஓட்டத்திற்குக் கொண்டு சென்றது. மனோஜ் வெள்ளநாடு ஒரு சர்ஜனாக இருப்பதனாலோ என்னவோ வாசனைக்கு அதிக அழுத்தம் கதைக்குள்ளிருக்கிறது. மனித முகர்தலுக்கும் விலங்கு முகர்தலுக்குமுள்ள மோப்ப சக்தி வித்தியாசமும் கதைசொல்லலில் கரைந்துபோகிறது. ஆஞ்சனேயர் இதில் மிகுவிசேடமாக மார்க்சிய எதார்த்தவாதத்தைக் கரைத்துக் குடித்தவராக அவதரித்திருக்கிறார். திரு சுஜித் அருமனைக்குப் பாராட்டுகள். பொறுப்பாசிரியர் மொழியாக்கக் கடலில் ஒரு நாவாயாக எஞ்ஞான்றும் நகர்வதால் இத்தகைய மொழியாக்கங்கள் எமக்குக் கிடைக்கின்றன.
தேவமைந்தன்
புதுச்சேரி
புதுமைப்பித்தன் என்ற தீட்சண்யத்தை முற்றும் முதலுமாக ‘புதுமைப்பித்தன் கதைகள்’, ‘அன்னை இட்ட தீ’ நூல்களில் அறியலாம். காலச்சுவடு பதிப்பகம், சலபதி குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி என்றென்றும் உரித்தாகுக!
தி.ஜா, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி என்று நான் பிரமிக்கும் எழுத்தாளுமைகளுக்கு முன்னோடி புதுமைப்பித்தன். நவீன இலக்கியத்தின், இன்றுவரை உள்ள இலக்கியப் படைப்பாளிகளின் பிதாமகன், பீஷ்மாச்சாரியர் புதுமைப்பித்தன்.
மகாகவி பாரதியைப் போலவே ஞானச்செருக்கும் உள்ளொளியும் நிரம்பியவர் புதுமைப்பித்தன். அறச்சீற்றம், அறச்சீற்றம் என்று இப்போது பிதற்றுகிறோமே, அதன் முழு உருவம் ‘ரசமட்டம்’ என்கிற புதுமைப்பித்தன்!
புதுமைப்பித்தன் எழுத்துகளில் ஓர் எழுத்தைக்கூட கூட்டவோ குறைக்கவோ யாராலும் முடியாது. அவர் மறைவுக்குப் பிறகு, மாறுகால்-மாறுகை வாங்கப்பட்டு, ஒழுங்கற்ற, பிழை மலிந்து வெளிவந்த புத்தகங்களால் புதுமைப்பித்தன் பெயர் இருட்டடிக்கப்பட்டது. 1934 முதல் 1948 வரை புதுமைப்பித்தன் எழுதிய அனைத்தும் அட்சர லட்சம் பெறும்!
கேசவ ரவி
சென்னை-600 094
திட்டமிடப்படாமல் வெளிவரும் கல்வித்துறையின் அறிவிப்புகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி வருகின்றன. அதுவும் இந்த கரோனா நோய்தொற்றுக் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி வீணாகிக் கொண்டிருக்கிறது.
கரும்பலகையில் இருந்து விசைப்பலகைக்கு மாறிவிட்டோம். இந்தக் காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்காதபோது அவசர அவசரமாக ஆன்லைன் வகுப்பு என்று தனியார் பள்ளி, கல்லூரிகள் தங்களின் வியாபார யுக்தியை மிகத் தந்திரமாகக் கையாண்டு வருகின்றன.
நீண்ட நேரம் கைபேசியில் விளையாடினால் பாதிப்பு ஏற்படும் என்று உரக்கச் சொல்லிய பெற்றோர் முதல் ஆசிரியர்கள்வரை இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறார்கள். நாள்கணக்கில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு என்று இருப்பதால், கைப்பேசியினால் ஏற்படும் பின்விளைவுகளை யாரும் யோசிப்பதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை.
கல்லூரி மாணவர்களைப் பொருத்தவரை ஆல்பாஸ் என்று அறிவித்தது அவர்கள் மத்தியில் வரவேற்பையும் கல்வியாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் உண்டாக்கியிருக்கிறது. தேறாத பாடங்களின் பரீட்சைக்குப் பணம் கட்டியிருந்தால் தேர்வு என்ற நடைமுறையால் ஏராளமாகப் பாக்கி வைத்திருந்த மாணவர்கள் உச்சி குளிர்ந்துபோனார்கள்.
மாணவர்கள் உயர் சிந்தனை உடையவர்களாக மாற வேண்டும், சமூகச் சிந்தனையை முன்னெடுக்க
வேண்டும், படைப்பாற்றலில் ஊக்கம் பெற வேண்டும் என்பதாகத்தான் படிப்பு இருக்க வேண்டும். ஆனால் பட்டங்கள் பெற்றால் போதும் என்று நினைக்கத் தொடங்கி விட்ட காரணத்தால் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.
தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் கல்லூரிகளை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை இருப்பதால் கல்வி வியாபாரப் பொருளாக மாறிவிட்டது. லாபம் எதிர்பார்க்கும் வியாபார நிறுவனங்களைப் போல கல்லூரிகளின் போக்கு மாறிவிட்டதற்கு யாரைக் குறை சொல்வது?
தனியார் கல்லூரிகள், ஆசிரியர்கள் சிலரைக் குறைந்த ஊதியத்தில் பல வருடங்களாகக் கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு போதிய ஊதியம் வழங்காமல் இருப்பதால் மாணவர்களுக்கு உரிய தரமான கல்வி சென்று சேரவில்லை. வெறும் பட்டங்களைப் பெற்றுத் தரும் தொழிற்கூடங்களாகக் கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன லாபம்?
பொறியியல் பட்டதாரிகளின் நிலை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. அவர்களின் பட்டம் வாழ்க்கையில் ஒளி வீசுவதாக இல்லை. உயர்ந்த மதிப்பெண் பெற்ற பொறியியல் பட்டதாரிகள் தங்களின் திறமையை நிரூபிக்க முடியாதவர்களாக வேலைவாய்ப்பற்று இருப்பது மன வருத்தத்தை அளிக்கிறது.
‘புதியன புகுமா?’ தலையங்கம் மூலம் உயர்கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றம், அது படிக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் தருவதாக இருக்க வேண்டும்.
கூத்தப்பாடி பழனி
தருமபுரி
மிகப்பெரிய இரண்டு கலைஞர்களைப் பற்றிய விரிவான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கலையின் உன்னதங்களைப் பெருமைப்படுத்திடும் தலையாய இதழியல் பணியைக் ‘காலச்சுவடு’ செவ்வனே செய்து வருவது மிகவும் குறிப்பிடத்தகுந்தது.
பரத நாட்டியக் கலையில் தனக்கு நிகராக வேறொருவர் உண்டோ என்ற வகையில் தமது ஒப்பற்ற சாதனையை நிலை நாட்டிச் சென்றுள்ள பால சரஸ்வதி பற்றி ‘காலச்சுவடு’ முன்பே ஒருமுறை விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவரது நீண்ட கலைப்பயணத்தை உன்னிப்பாக உற்று நோக்கும் அரிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருந்த டக்ளஸ் எம்.நைட் படைத்துள்ள மதிப்புமிகு நூலின் வழிநின்று கட்டுரை ஆசிரியர் நுட்பமான ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
இத்தகைய நாட்டிய மாமணியை உள்ளுந்தோறும் உவகையூட்டக் கூடிய பல்வேறு அரிய தகவல்களைக் கட்டுரை ஆசிரியர் தக்க சான்றுகளுடனும், பிற கலை விமர்சகர்களது பொருத்தமான மேற்கோள்களுடனும் விவரித்துள்ளார்.
சுயச்சூழலுக்குத் தக்கவாறு தமது பாதுகாப்பு அரண்களை வெவ்வேறு வகையில் கட்டமைத்துக் கொள்ளாது, கொந்தளிப்புமிகுந்த தருணத்தில்கூட ‘தேவதாசி’ என்பது ஜாதி அல்ல, அது ஒரு வாழ்க்கைமுறை என்று தெளிந்த மனத்துடன் துணிந்து விளக்கமளித்தார். ஒரு கலையின் பாண்டித்தியம் மரபுவழிச் சாத்தியமே என்பதில் ஊறிப்போயிருந்த தனது அம்மாவை ஒரு நிகரற்ற கலைஞர் என்று போற்றித்துதித்தாலும் அனைத்து மரபு வழிகளையும் அப்படியே நகலெடுத்துச் செல்ல வேண்டிய அவசிய மில்லை என்று விவேகமாகச் சிந்தித்திருக்கிறார்.
இதே போன்று, தனது இங்கிதமான குரல் வளத்தால் லட்சக்கணக்கான இசை ரசிகர்களது உள்ளங்களை ஊடுருவி, மறைந்துபோன எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றிய கட்டுரைகள் அவரது இசை உலகிற்கு வாசகர்களை மீண்டும் அழைத்துச்செல்கின்றன. எஸ்.பி.பியின் கானக் குரலோசை உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தது. இந்த இனிய குரலோசை சொற்களால் ஆன மொழிவழி வெளிப்பாடாய் ஓசையாய்ப்பேசி மனித மனங்களை ஆட்கொண்டது.
சிறந்த பரத நாட்டியத்திற்கான தர - அளவு கோலான பாலசரஸ்வதியின் நாட்டிய மேதைமையை வெளிப்பார்வைக்கு விரிவுபடுத்தியுள்ள ‘காலச்சுவடு’ மேற்கொண்ட கலைப்பணி மிகவும் போற்றுதலுக்குரியது.
சி. பாலையா
புதுக்கோட்டை
காலச்சுவடு நவம்பர் இதழின் ‘புதியன புகுமா?’ அகவுரை ஆழமானது. கொரோனா தொற்றால் எல்லாவகையிலும் நெருக்கடியைச் சந்தித்துவருகின்றோம். இன்றுவரை நோய்தீர்க்கும் மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘இதோ, அதோ’ வென்று அறிவித்து மக்களை மேலும் அச்சுறுத்தும் நிலைதான் தொடர்கிறது. இளைய தலைமுறை அடுத்து என்ன செய்வது? வேலை வாய்ப்பு அடைபட்டுப் போய்விடுமோ என்று அஞ்சும் நிலை மேலோங்கி வருகிறது. இன்னொரு பக்கம் சிறு, குறு தொழில்கள் முடங்கிப் போய், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களும் வேலையிழந்து தெருவில் நிற்கின்றனர். மக்களின் வாழ்வாதாரத்தை ஆளும் அரசுகள் யோசித்ததாகத் தெரியவில்லை. இலட்சக்கணக்கான மாணவர்கள், அல்லாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும், எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போய்விடுமோ என்றெல்லாம் தவித்து வருவதும் பெருத்த அவலம். கல்வி நிலையங்களைத் திறப்பது சார்ந்து முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது அரசு! சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்கள் நாளொரு அறிக்கை வெளியிட்டுக் குழப்புகிறார்கள்.
இந்நிலையில் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட மூன்று நாட்களில் இருநூறு ஆசிரியர்களுக்கும் பதினைந்து மாணவர்களுக்கும் கொரோனா பாதித்த தகவலும் கிடைத்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கூடாது என்று உரத்துக் குரல்கொடுத்துவருகின்றன. அகவுரையில் கல்வியையும் அரசியலுக்குப் பயன்படுத்தும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் உள்ளனவென்றும் கல்வியாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று உயர்கல்வியில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தெளிந்த முடிவுகளை மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்றும் கூறுவது ஏற்கக்கூடியதாகவே இருக்கின்றது.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
காலச்சுவடு நவம்பர் இதழில் 13 பக்கங்கள் சினிமா பின்னணிப் பாடகருக்கென ஒதுக்கப்பட்டிருந்தன. உலகத் தமிழ் இதழ் என்றும் அரசியல் பண்பாட்டு இதழ் என்றும் பவனிவரும் காலச்சுவடுக்கு இச்செயல் புகழ் சேர்க்குமா?
க.த.அ. கலைவாணன்
வேலூர்