அடர் நிறத்தில் இசைக்கும் மனம்

சென்னை கலை, இலக்கிய நிகழ்வுகளில் பல குழுக்களும் இயக்கங்களும் தோன்றி வளர்ந்துள்ளன. சிறுவயது முதலே அவற்றுடன் இணைவும் தொடர்பும் இருந்தாலும், சூழலின் காரணமாக விலகியோ, விலக்கப்பட்டோ உதிரியாகச் செயல்பட்டோரில் மு. நடேஷும் ஒருவர். இவருடைய கலைப் பயணம் ஓவியம், அரங்க நாடகம், சிறுபத்திரிகை எனத் தமிழ்ச் சூழலின் முக்கியப் புலங்களை நவீனப் போக்கில் இணைப்பவை. அதன்வழி தமிழ்க் கலாச்சாரத்தை ஊடுருவிக் கலை நகர்வை முன்னெடுப்பவை. நிர்மாணக் கலைப் படைப்புகளை உருவாக்கியதில் அவர் முன்னோடி.
எபனேசர் சிங்கின் (The Theatre of Painting: A Conversation Between Artists) ஆவணப்படம் அவருடைய கலை வாழ்வை உரையாடலின் வழி ஆவணப்படுத்தியிருக்கிறது. நடேஷின் ஓவியக் கல்லூரி நாட்கள் தொடங்கி இறுதி நாட்களில் அவர் செயல்பட்டது வரையிலான உரையாடல் சித்திரமாகத் திரண்டு வந்துள்ளது. ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு, சென்னை லலித் கலா அகாதெமியில் 2026 ஆகஸ்ட் 15இல் நடந்தது. நியூயார்க்கின் ரோஸ்பட் புரொடக் ஷன்ஸ், இதைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. கன்டெம்பரரி நவ் அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் திரையிடலில் எழுத்தாளர்கள், அரங்க நாடகக் கலைஞர்கள், திரைக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் பங்கேற்றார்கள்.
நடேஷின் கலைப் பயணம் மூன்று பகுதிகளில் அடங்கும். ஒன்று, கவின்கலைக் கல்லூரியில் படித்தது, அதன் தொடர்ச்சியாக ஓவியராகச் செயல்பட்டது. அடுத்தது, தந்தை ந. முத்துசாமியின் கூத்துப்பட்டறை நிறுவனத்தின் அரங்க நாடகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டது. இறுதியாக, ஓவியப் பரிசோதனை முயற்சிகளையும் கூத்துப்பட்டறை நிகழ்வுகளையும் இலக்கியத்தில் இணைத்தது.
நடேஷ் பள்ளி மாணவராக இருந்தபோதே, ஆர்வத்தால் கண்ணாடிகளை இழைத்துச் சுயமாக விண்வெளித் தொலைநோக்கியை வடிவமைத்தார். இதனை அவரே ஆவணப்படத்தில் சுட்டுகிறார். அதன் பின் லயோலா கல்லூரியில் இயற்பியல் துறை மாணவராகச் சேர்ந்து பட்டமும் பெற்றிருக்கிறார். இயல்பிலேயே அவருக்கு ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் உண்டு. ஆதிமூலம், ஆர்.பி. பாஸ்கரன் முதலான கலைஞர்களைச் சிறுவயது முதலே பார்த்து வளர்ந்ததின் தாக்கமாகவும் இருக்கலாம். இதனைக் கவனித்த ந. முத்துசாமி அவரை ஓவியக் கல்லூரியில் ஓவியர் ஆர்.பி. பாஸ்கரன் வழிகாட்டுதலில் சேர்ந்தார். கலை வாழ்வை மேற்கொள்ள இதுவே அவருக்கான திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.
காலையோ நண்பகலோ மாலையோ இரவோ அது எந்தப் பொழுதாக இருந்தாலும் சூரிய ஒளியின் வெளிச்சம், இயற்கையில் தெறிக்கும் நிறம், இவை படர்த்தும் நிழல்கள், கட்டுக்குள் அடங்காத வடிவங்களே தன்னை ஈர்க்கின்றன என்கிறார் நடேஷ். இவற்றின் தாக்கமே தன்னுடைய கலை சார்ந்த திறப்புகளுக்கு ஊற்று என்றும் கூறுகிறார். ஆகவேதான், இவருடைய படைப்புகள் அடர்நிறத்தில் மேலெழுகின்றன.
குறிப்பிட்ட வண்ணங்கள்மீது அதீத விருப்பங்கள் இருந்தாலும், எல்லா நிறங்களும் முக்கியம் என்கிற நிலைப்பாட்டில் நிற இலக்கணங்களை முற்றாக நிராகரிக்கிறார். வெளிர் ஊதாவும் (Lavender Pink), வெளிர் பச்சையும் (Mint Green) மிகப் பிடித்த நிறங்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்தத் தன்மையே ஊடகம் எதுவாக இருந்தாலும் அவருடைய அரூப ஓவியங்களின் உள்ளடக்கத்தையும் உருவத்தையும் தீர்மானிக்கின்றன. நிறங்கள் தன்னுள் செலுத்தும் தாக்கத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“கூத்துதான் என்னோட நிறங்களை அப்பட்டமாக வைத்திருக்கிறது. கூத்துக்கலைஞர்கள் போடும் உடைகளிலிருந்து என்னோட வண்ணங்களை எடுத்துக்கிட்டேன். சோழர்கால, பல்லவர் சிற்பங்களும் என்னுடைய உருவங்களின் மீது தாக்கம் செலுத்தியுள்ளது.”
‘வண்ணம்’ என்கிற சொல்லுக்குத் தமிழில் நிறம், அழகு, தன்மை என அர்த்தங்கள் உண்டு. இந்த மூவகை அர்த்தங்களின் குழைவைத்தான் இவருடைய படைப்புகளில் சாத்தியப்படுத்துகிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
நடேஷின் கோட்டோவியங்கள் வேறொரு வாழ்வைக் கிளர்த்துபவை. இவருடைய கோட்டோவியத்தில் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் முறையே உருவங்களாகவும் உருவகங்களாகவும் படிமங்களாகவும் அர்த்தம் பெறுகின்றன.
அரங்க மேடையில் பாத்திரம் ஏற்று நடிப்பதைத் தவிர்த்து, கூத்துப்பட்டறையின் இதர எல்லாப் பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார். “எந்த ஒரு வசனமும் என் நினைவில் இருப்பதில்லை, அதற்கேற்பவே, கூத்துப்பட்டறையின் பின்னரங்கப் பணிகளில் கவனம் செலுத்தினேன்” என்கிறார் நடேஷ். நிகழ்த்துக் கலையில் தன் புரிதல் இதுதான், என்றாலும் அந்தத் துறை சார்ந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்திருக்கிறார். கூத்து, நாடகம், இசை, இலக்கியம் எனத் தமிழ்க் கலாச்சார மரபுகளின் சாரத்தையும் நவீனப் போக்கின் சிந்தனைகளையும் ஒன்றிணைத்து ந. முத்துசாமி முன்னெடுத்ததை, அவருக்குப் பின் நடேஷ் தொடர்ந்தார்.
இனி சிற்றிதழை எஸ்.வி. ராஜதுரை தொடங்கிய போது, அதில் ஓவியம், வடிவமைப்பு என நடேஷும் எபனேசர் சிங்கும் பங்களித்திருக்கிறார்கள். அதுவே, இலக்கியவாதிகளுடனான உரையாடலுக்கும் விவாதங்களுக்கும் அவரைச் செலுத்தியிருக்கிறது. அந்தத் தொடர்புகளே எழுத்து சார்ந்து இயங்கவும் காரணம்.
நடேஷின் அனுபவத் தொடர்ச்சியில், கலை உணர்வின் போக்கில் ஓவியம், நவீன நாடகம், இலக்கியம், எழுத்து என்று தான் இயங்கிய புலங்களின் சிந்தனைகளை இந்த ஆவணப்படத்தின் வழி அவர் பதிவுசெய்திருக்கிறார். இது போன்ற முயற்சிகள் கலைச் சூழலை வளப்படுத்தும். ஆவணப்படக் குழுவினர் பாராட்டுக்கு உரியவர்கள்.
மின்னஞ்சல்: enathu.payanam@gmail.com
