இனவாதக் கொரோனா
தலையங்கம்
இனவாதக் கொரோனா
உலகளவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள உயிரிழப்புகளுடனும் நோய்த் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையுடனும் ஒப்பிடும்போது இலங்கை குறைந்த அளவு தாக்கத்தினையே இதுவரை கண்டுள்ளது. ஆனாலும் இன்னமும் இந்தத் தொற்றின் தாக்கம் முற்றுமுழுதாகக் கட்டுக்குள் வந்துவிடவில்லை. நோய்த் தொற்றுக்குள்ளாகுபவர்களும் மரணங்களும் பொதுமுடக்கமும் அங்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்றைய நிலையில் கொரோனாவுடன் சேர்ந்த, மற்றுமொரு புதிய வைரஸ் ‘இனவாத வைரஸ்’ பரவிவருகிறது. இலங்கையின் அரசியல் சமூகச் சூழலில் இது ஆழமாகப் பரவி, சடலங்களைக் கட்டாயப்படுத்தி எரிக்கும் இனவாத நோக்கிலான அரசியலாக மாறி எரிந்துவருவதைக் காண்கிறோம்.
இந்த நிலைமையானது பன்முகத் தன்மையான இன, மத, பண்பாட்டு அடையாளங்களின் நாடாக இலங்கை முன்னோக்கிச் செல்வதில் உள்ள கேள்விகளை மீண்டுமொரு முறை தொடங்கிவைத்துள்ளது. இலங்கையின் அரசியல் சமூக வரலாற்றில் இக்கேள்வி எழுவது இப்போதுதான் முதல்முறையல்ல; இப்போது மீண்டும் ஒருமுறை எழுகிறது என்பதே உண்மை. இலங்கையின் அரசியல் தன்மை, ஒற்றைப்படையான பெருந்தேசியவாத, சிங்கள இனவாத அடையாளமாகவே தொடர்கிறது; இதன் சமகாலச் சாட்சியமே கொரோனாவால் உயிரிழந்த அல்லது கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்ததாகச் சொல்லப்பட்டு வலுக்கட்டாயமாக எரிக்கப்படும் மனித உடல்களின் அரசியலாகும்.
காலனியத்துவத்திற்குப் பின், இலங்கையின் அரசியல் அதிகாரம் சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்களிடமே இருந்திருக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் எவருமே, தமிழ் -முஸ்லிம் - மலையக மக்களின் நலனுக்காகச் சிங்களப் பெருந்தேசியவாதத்தின் அதிகாரத்தையும் அதனது அபிலாசைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.
இந்தப் பெருந்தேசிய அரசியல் நலனுக்காகவே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள், இலங்கையில் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டும் அடக்கப்பட்டும் வந்திருப்பது இலங்கையின் அரசியல், இனத்துவ வரலாறாகும். சிங்கள மக்களின் நலனுக்கு எதிரானவர்களாகவும் , இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானவர்களாவும், தமிழ், முஸ்லிம், மலையக மக்களை எதிர்நிலையில் நிறுத்தும் சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் எந்த மாற்றமும் இன்றித் தொடர்கிறது.
விடுதலைப் புலிகளை இராணுவரீதியாகத் தோற்கடித்தவர் என்பதும், ஐம்பது வருடத்திற்கும் மேலான தமிழ் மக்களின் தேசிய இனச் சமத்துவத்திற்கான அரசியலைப் பெருந்தேசியவாத சிங்கள ஆளும் அதிகாரத்திற்குள் கொண்டுவந்தவர் என்பதுமே இன்றைய இலங்கை அரசின் தலைவரான கோதபாயாவினதும் அவருக்குப் பக்கபலமாக இருப்பவர்களினதும் அரசியல் முதலீடாகும். கோதபாயாவின் இருப்பினைத் தக்கவைக்கும் அடித்தளம், சிங்கள மேலாதிக்கவாதமும் அதன் இனவாதமும்தான்.
இந்த அரசியல் உண்மையை எந்த ஒளிவுமறைவுமின்றி மிக வெளிப்படையாகவே கோதபாய ராஜபக்ச வெளிப்படுத்தி நிற்கிறார். இலங்கை நாட்டில் ஏனைய இனங்களுக்கான, சமூகங்களுக்கான இடம் என்னவென்று அவரது அரசின் ஒவ்வொரு செயலும் மெய்ப்படுத்தி வருகின்றது.
கொரோனா தாக்கம் உலகைப் பீடிக்கும் முன்பே, இலங்கை அரசும் பொருளாதார ரீதியாகப் பலத்த நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது. நாட்டின் நிர்வாகத்தினைக் கொண்டுநடத்துவதற்கு, வெளிநாட்டுக் கடன்களையும் பொருளாதார உதவிகளையும் நம்பி இருக்கிறது. இலங்கையின் வளங்கள் வெளிநாடுகளுக்கும் பல்தேசிய முதலீட்டு நிறுவனங்களுக்கும் விற்கப்பட்டு வருகின்றன. கொரோனாவின் பின், முன்பைவிட மிக மோசமாக இலங்கையை ஆளும் குழுமம் பலத்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திசை திருப்பவே இனவாத நோக்கில், கொரோனாவைக் காரணம் காட்டி முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் சடலங்களை எரிக்கும் அரசியலை இலங்கை அரசாங்கம் கையிலெடுத்தது. இந்த முடிவு உண்மையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மட்டும் பாதிக்கவில்லை; இந்துக்களையும் பாதித்தே இருக்கிறது. இந்துக்களில் ஒரு பகுதி மக்களும் மலையகத் தமிழ் மக்களின் ஒரு பகுதியினரும் சடலங்களைப் புதைப்பதையே தம் வழக்கமாக இன்றும் இலங்கையில் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாண்டு ஏப்ரல் 4ஆம் திகதியிடப்பட்ட, இலங்கையின் சுகாதார அமைச்சரும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் தங்கையுமாகிய பவித்திரா வன்னியாரய்ச்சியின் உத்தரவுப்படியேதான் உடல்களை எரிக்கும் அறிவித்தல் வெளிவந்தது. இந்த அரசாணை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல. உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள், இத்துறைசார் நிபுணர்கள், கொரோனா தொற்றுச் சடலங்களைப் புதைப்பதால், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் எந்தப் பின் தாக்கமும் நிகழாது என்று உறுதிப்படுத்தியுள்ளன. உலகில் எந்த நாட்டிலும், இலங்கையைத் தவிர கொரோனாவால் இறப்பவர்களைக் கட்டாயமாக எரித்துவிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இதுவரை இல்லை. ஆகவே இலங்கை அரசு இந்த விடயத்தில் கொண்டிருக்கும் அணுமுறையானது அறிவியல், விஞ்ஞான அடிப்படைகளினாலானது அல்ல, அரசியல் ரீதியானது. இந்த அரசியல் முடிவானது, இலங்கையின் வெளிப்படையான ஏனைய இன, மதச் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது.
இந்த விடயத்தில் இலங்கை அரசு மட்டுமல்ல, இலங்கையின் நீதித்துறையும்கூட இனவாத அரசியல்மயப்பட்டு நிற்கிறது. கொரோனாவில் இறந்த முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் உடல்களைக் கட்டாயப்படுத்தி எரிக்கும் முடிவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட, பதினொரு மனித உரிமை மீறல் மனுக்களைப் பரிசீலனைக்குக்கூட எடுக்க முடியாது என இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தமை இதற்குச் சான்றாகும். இலங்கையில் ஒரு பகுதியினர் தமது பண்பாட்டு, அடிப்படை உரிமைகள் மீறப்படுவது குறித்துத் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு எடுப்பதற்கே ஆறு மாதங்களுக்கு மேல் காலம் கடத்தி, இறுதியில் நிராகரித்தமையானது வெட்கக்கேடுதான்.
இதனை இலங்கை அரசாங்கத்தினதும், இலங்கை நீதித்துறையினதும் ‘இனவாதத்தின் கொரோனா’ என தெளிவாகச் சொல்ல முடியும். ஆளும் அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்காத நிலையில்தான், பாதிக்கப்படும் மக்கள் தரப்பு நீதித்துறையை நாடியது.
உண்மையில் இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படும் தன்மையுடன் இருந்திருந்தால், கொரோனாவைக் காட்டியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுப்பதை ஆறு மாதங்களுக்கு மேல் தள்ளிப்போட்டு வந்திருக்காது. பாதிக்கப்படுவதற்கான காரணியே (கொரோனா), நீதி மறுக்கப்படுவதற்கும் நீதி தாமதிக்கப்படுவதற்குமான காரணியாகக் காட்டப்பட்டது. இலங்கை நீதித்துறையின் முகத்தை அப்பட்டமாகவே அழுக்காக்கியதன் மூலம் தன் இனவாத அரசியலை மீண்டும் அம்பலத்திற்கு கொண்டுவந்தது சிங்கள மேலாதிக்க அரசு. அடிப்படை உரிமைகளை மதிக்காத, மனித உரிமைகளை அரசியல் நோக்கில் தொடர்ந்து மீறி, அராஜகத்தையும் நோக்கிச் செல்லும் ஓர் அரசாகவே இன்றைய இலங்கை அரசு தன்னை வெளிப்படுத்துகிறது.
இந்த விடயம், மத நோக்கில் பார்த்தால் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது. அடிப்படை உரிமை மீறல், மனித உரிமை மீறல் நோக்கில் அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் எதிரானது. ஜனநாயகத்தினையும் சமூக நல்லிணக்கத்தினையும், அடிப்படை உரிமைகளையும் மதிப்பவர்கள், இவை அனைவருக்குமானது எனக் கருதுபவர்கள், இலங்கை எதேச்சாதிகார அரசின் கொடுங்கோன்மையை ஒருபோதுமே ஏற்கமாட்டார்கள். உலக சுகாதார நிறுவனம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடக்கம் மருத்துவத்துறை வல்லுநர்கள், மண்ணியல்- நீரியல் விஞ்ஞானிகள், சர்வதேச நாடுகள், அமைப்புகள் என அனைவரும் கேட்டும் இலங்கை தனது இனவாதக் கிடுங்குப் பிடியிலிருந்து இறங்கிவருவதாக இல்லை. இலங்கை முஸ்லிம், தமிழ், மலையக, சிங்கள அரசியல்வாதிகள் பலரும் கேட்டும் ‘செவிடன் காதில் ஊதிய சங்கின் கதையாகவே’ இந்த விடயம் உள்ளது. 20 நாள், 46 நாள் ஆயுளைக் கொண்ட இரண்டு பச்சிளம் பாலகர்களினது உடலங்களும் பெற்றோரின் பார்வைக்குக்கூடக் காட்டப்படாமல் எரிக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசை வழிப்படுத்தும் கடும்போக்கு இனவாதிகள் உள்ளூர், சர்வதேசக் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கத் தயாராக இல்லாததையே இதுவரை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.
ஒடுக்கும் அதிகாரம், காலத்திற்குக் காலம் ஒன்றைத் தொடங்கும்; பின்னர் வேறு ஒன்றைக் கையிலெடுக்கும். இந்த ஒடுக்குதலுக்கான கருத்தியலையும் அதன் தன்மையையும் தெளிவாகப் புரிந்துகொள்வதே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.