காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
கட்டுரை
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
ஜி. குப்புசாமி
டப்ளின் எழுத்தாளர் உறைவிடத்தில் கட்டுரையாசிரியர்
வெறும் வாசகனாகவே காலத்தைத் தள்ளிவிடலாம் என்றிருந்த என்னை மொழிபெயர்ப்பாளனாக்கியவர் அருந்ததி ராய். 2002ஆம் வருட குஜராத் மதக்கலவரத்தையொட்டி அவர் எழுதிய நீண்ட கட்டுரையை மொழிபெயர்த்தேன். திருவண்ணாமலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அதை வெளியிட்டபோது முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டு என் மொழிபெயர்ப்பைப் பாராட்டி உரையாற்றினார் ஆ.இரா. வேங்கடாசலபதி. அதன் பிறகு அதிகமும் சிற்றிதழ்களிலேயே எனது மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. சே குவேரா பயணக்குறிப்புகள், ஹாருகி முரகாமி - பேர் லாகர்க்விஸ்ட் சிறுகதைத் தொகுப்புகள், சமகால நவீனச் சிறுகதைகள் தொகுப்பு என நான்கு நூல்கள் வெளிவந்தபிறகு காலச்சுவடு பதிப்பகத்துடன் எனது பயணம் தொடங்கியது.
முதல் தொடர்பு க.நா.சு. நூற்றாண்டையொட்டிச் சேலம் தமிழ்ச் சங்கமும் காலச்சுவடும் இணைந்து நடத்திய கருத்தரங்கில். அடுத்து கோவையில் பாரதி 125 - பு.பி 100 - சு.ரா 75 கருத்தரங்கம். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் நான் வாசித்த கட்டுரைகள் காலச்சுவடு இதழ்களில் வெளிவந்தன. ஓரான் பாமுக்கையும் அருந்ததி ராயையும் என்னோடு காலச்சுவடு கண்ணன் இணைத்தது தொடர்ந்து நிகழ்ந்தது.
2003ஆம் வருடம் ‘My Name Is Red’ நாவலைப் படித்ததிலிருந்து என்னைப் பீடிக்கத்தொடங்கிய ‘பாமுக் பித்து’க்கு வடிகாலாக அமைந்தது 2008ஆம் வருடம் கண்ணன் பெற்றுத்தந்த மொழிபெயர்ப்பு உரிமை. ஆட்டமன் நுண்ணோவியங்களைப் போலவே மிக நுட்பமாக உருவாக்கப்பட்ட நாவலை வாசிப்பதும், அதன் சாரம் குறையாமல் மொழிபெயர்ப்பதும் வேறுவேறான செயற்பாடுகள் என நான் உணர்ந்தது அப்போதுதான். இந்நாவலுக்கு முன் நான் மொழிபெயர்த்து வெளிவராமல் தடைப்பட்டிருந்த அருந்ததி ராயின் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ மொழிபெயர்க்க எனக்கு இலகுவாகவே இருந்தது. இத்தனைக்கும் அருந்ததி ராயின் மொழிநடை மிகவும் சிக்கலானது; நிறைய வார்த்தை விளையாட்டுகள் கொண்டதென்றாலும் அந்நாவல் பல வருடங்களாக, திரும்பத்திரும்ப மிகவும் ரசித்து வாசித்து எனக்குள் அதன் ஆன்மா ஊறிப்போயிருந்ததால் சொந்தப் படைப்பை எழுதுவதைப்போலவே மிக வேகமாக மொழிபெயர்த்து முடித்திருந்தேன். ஆனால் ‘என் பெயர் சிவப்பு’ க்காக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது. வாசிப்பின்போது உணரமுடியாத பல கூறுகள் மொழிபெயர்ப்பின்போது தலைதூக்கத்தொடங்கின. பலமான முன்தயாரிப்பு தேவைப்படும் என்று அவை உணர்த்தின.
16ஆம் நூற்றாண்டு துருக்கியின் சரித்திரத்தையும், ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் எழுச்சியையும் அறிந்துகொள்வதற்காகச் சில நூல்களை கண்ணன் வாங்கி அனுப்பினார். நாவலில் இடம்பெறும் குர்-ஆன் வாசகங்களைத் தமிழில் சரியாக எழுதுவதற்காக குர்-ஆனின் பல்வேறு தமிழ்ப்பதிப்புகளைத் தந்து அவ்வப்போது எழுந்த ஐயங்களையும் காலச்சுவடு இணையாசிரியர் களந்தை பீர்முகம்மது தீர்த்துவைத்தார்.
இம் மாபெரும் நாவலை மொழிபெயர்த்து முடிக்கப் பதினான்கு மாதங்கள் பிடித்தன. அலுவலக நேரத்தைத் தவிர இந்நாவலின் வாசகங்கள் என்னை முற்றிலுமாகப் பீடித்து நானும் ஒரு மறைமுகக் கதாபாத்திரமாகியிருந்தேன். மொழிபெயர்த்து முடித்தபிறகு உணர்ந்த களைப்பும் ஆசுவாசமும் வெறுமையும் கலந்த உணர்வை இன்றுவரை என்னால் மறக்கமுடியாது. என் மொழிபெயர்ப்புகளிலேயே அதிக கவனம் பெற்றதும், விருதுகளைப் பெற்றுத் தந்ததும் ‘என் பெயர் சிவப்பு’தான்.
இம்மொழிபெயர்ப்பை முடிக்கும் தறுவாயில், பிராங்க்பர்ட் சர்வதேசப் புத்தகச் சந்தைக்குச் சென்றிருந்த கண்ணனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சமகால அயர்லாந்து நாவல்களில் மொழிபெயர்க்க உகந்த நாவல்களாக எவற்றைக் கருதுகிறேன் என்று கேட்டார். உடனே நினைவுக்கு வந்த 2005ஆம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றிருந்த ஜான் பான்வில்லின் ‘The Sea’ நாவலைச் சொன்னேன். இந்தியா திரும்பும்போது அதன் மொழிபெயர்ப்பு உரிமையோடு வந்தார். அடுத்த சில வாரங்களில் நடந்தவை நம்பமுடியாதவையாக இருந்தன. அலுவலகப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த ஒரு மதியநேரத்தில் கண்ணனிடமிருந்து அழைப்பு. “உங்களிடம் பாஸ்போர்ட் இருக்கிறதா?” என்று கேட்டார். இல்லையென்றதும் உடனே எடுத்துவிடச் சொன்னார். “அயர்லாந்துக்கு நீங்கள் போகவேண்டியிருக்கும்” என்றார். அயர்லாந்து நாட்டு எழுத்தாளரின் படைப்பை முதல்முறையாகத் தமிழில் மொழிபெயர்க்க உரிமை பெற்றிருப்பதால் அதைக் கௌரவிக்கும்விதமாக மொழிபெயர்ப்பாளரை அயர்லாந்து அரசின் கலை இலக்கியத் துறையின் செலவில் டப்ளினில் ஒரு மாதம் தங்கியிருக்க அழைப்புவிடுத்திருப்பதாகச் சொன்னார். அவர் விளையாட்டுக்குச் சொல்லவில்லை என்பதைச் சான்றாக அனுப்பிய மின்னஞ்சல் ஐந்து மணிநேரம் கழித்து உறுதி செய்தது.
தமது நாட்டின் இலக்கியங்களைப் பிறநாடுகள் நாடிவருவதை அயர்லாந்து அரசு ஊக்குவிக்கும் விதத்தை அறிந்தபோது திகைப்பாக இருந்தது. ஆனால் பல நாடுகள் இதைப்போல எழுத்தாளர்களுக்கு நல்கை அளித்துத் தமது நாடுகளுக்கு அழைத்துக் கௌரவிப்பது வழக்கமான நடைமுறை என்று பின்பு அறிந்துகொண்டேன்.
2009 ஏப்ரல் 28 - மே 28வரை டப்ளினிலும், கடல் நாவலின் களமான வெக்ஸ்ஃபோர்ட், ரோஷ்லேர் கடற்கரைப் பகுதிகளிலும், அனமாகரீக் என்ற சிற்றூரில் அமைந்த சர்வதேச எழுத்தாளர் உறைவிடத்திலும் கழித்தேன். டப்ளின் நகர நூலகத்திலும், பல்கலைக்கழக நூலகத்திலும் கடல் நாவல் உள்ளிட்டு பான்வில்லின் பிற நாவல்கள் பற்றிய ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளையும் தரவிறக்கம் செய்தேன்.
காலச்சுவடு பதிப்பகம் பிறநாட்டு முன்னணிப் பதிப்பகங்களோடும் இலக்கிய நிறுவனங்களோடும் இணைந்து செயல்படத் தொடங்கியதுதான், இத்தகைய அரிய வாய்ப்புகள் என்னைப்போலவே இன்னும் பல எழுத்தாளர்களுக்குக் கிடைத்துவருவதற்கான காரணம்.
‘கடல்’ மொழிபெயர்ப்புக்குப் பிறகு பாமுக் மீதான எனது அடங்காப் பசிக்குத் தீனி போடுவதைப்போல அவரது நான்கு நூல்களுக்கு (‘பனி’, ‘இஸ்தான்புல்’, ‘வெண்ணிறக்கோட்டை’, ‘கருப்புப் புத்தகம்’) ஒரே சமயத்தில் உரிமை பெற்றுத் தந்தார் கண்ணன். ஒவ்வொரு நூலையும் மொழிபெயர்க்கப் பதினெட்டு மாதங்கள் வீதம் ஆறு வருடங்கள் என்ற காலக்கெடுவில் மூன்று நூல்களை மட்டுமே மொழிபெயர்க்க முடிந்தது.
ஒவ்வொரு புத்தகத்தின் மொழிபெயர்ப்புக்கும் கண்ணன் அளிக்கும் ஒத்துழைப்பு அலாதியானது. ‘பனி’ நாவலை மொழிபெயர்க்கும்போது எழுந்த ஐயங்களைத் தெளிவாக்கிக்கொள்வதற்கு Arzu Eker என்ற துருக்கிய ஆய்வாளரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். நாவலினைத் துருக்கிய மூலத்தோடு ஒப்பிட உதவி தேவை என நான் கோரியதை அடுத்து கண்ணன் இஸ்தான்புல் சென்றிருந்தபோது விசாரித்தும் பின்னர் சந்தித்தும் எனக்கு அறிமுகப்படுத்தியவர் Arzu Eker. இவர் இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக ஓரான் பாமுக் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ஒப்பாய்வு மேற்கொண்டிருந்தவர். நாவலில் வரும் பெயர்ச்சொற்கள் உச்சரிப்பிலிருந்து ஒவ்வோர் அத்தியாயத்திலும் பாமுக் உட்கிடையாகப் பொதித்துவைத்திருக்கும் நுட்பங்கள் குறித்துப் பக்கம்பக்கமாக விளக்கமளித்து உதவினார்.
தான் வாழும் நகரத்தின் சரித்திரத்தோடு தனது சுயசரிதையையும் கலந்து பாமுக் எழுதிய அற்புதமான நூல் ‘இஸ்தான்புல்.’ இந்நூலை மொழிபெயர்க்கும்போது அலுவலகப்பணிகள் தாங்கமுடியாத அளவுக்கு அதிகரித்திருந்தன. பதவி உயர்வு காரணமாக நிர்வாகப் பொறுப்பும் கூடியிருந்தது. மொழிபெயர்ப்புப் பணி சுணக்கம் கண்டு ஒரு கட்டத்தில் தேங்கிநின்றது. உடலும் மனமும் களைத்துச் சோர்ந்திருந்த நேரத்தில் பெங்களூருவை அடுத்த ஹெசரகட்டா சங்கம் ஹவுஸ் எனும் சர்வதேச எழுத்தாளர் உறைவிடத்தில் இரண்டு வாரங்களும், பிறகு கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திராவில் இரண்டு வாரங்களும் தங்கி மொழிபெயர்ப்பை முடிப்பதற்கு கண்ணன் ஏற்பாடு செய்தார். இதுமட்டுமன்றி இஸ்தான்புல் நகரைப் பற்றியும், இந்நூலில் குறிப்பிடும் துருக்கிச் செவ்விலக்கிய ஆளுமைகள் குறித்தும் நூல்களை வாங்கி அனுப்பினார். இஸ்தான்புல் நூலில் கிட்டத்தட்ட எல்லா பக்கங்களிலும் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். மொழிபெயர்ப்புக்கான உரிமையில் இவை அடங்காது. மலையாளம் உட்பட பலமொழிகளில் புகைப்படங்கள் இல்லாமல்தான் மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. படங்கள் நூலில் இடம்பெறவேண்டிய அவசியத்தை விளக்கிச்சொன்னதும், அத்தனை புகைப்படங்களுக்கும் தனித்தனியாக உரிமை பெற்றுத் தமிழ் மொழிபெயர்ப்பில் இடம்பெறச்செய்தார் கண்ணன்.
ஆண்டுதோறும் பிராங்க்பர்ட் சர்வதேசப் புத்தகச் சந்தைக்குச் சென்று திரும்பும்போது பல புதிய புத்தகங்களை கண்ணன் வாங்கிவருவார். அவற்றில் நான் கண்டெடுத்த நார்வே நாட்டு நல்முத்து தாக் ஸூல்ஸ்தாதின் ‘உடைந்த குடை.’ என் மொழிபெயர்ப்பை நார்வேஜிய மூலத்தோடு ஒப்பிட்டுச் சரிபார்ப்பதற்கு அங்கு வசிக்கும் ஆஸ்லோ பல்கலைப் பேராசிரியர் சர்வேந்திரா தர்மலிங்கம் அவர்களோடு தொடர்பும் ஏற்படுத்திக்கொடுத்தார்.
இவையெல்லாவற்றையும்விட எனக்குள் ஒடிந்து சரிந்திருந்த ஒரு கிளையை நிமிர்த்திவைத்து, உயிர்கொடுத்துப் பூக்கவைத்திருப்பதுதான் கண்ணன் எனக்காற்றிய மகத்தான உதவி. மிகவும் ஆத்மார்த்தமாக ரசித்து மொழிபெயர்த்திருந்த அருந்ததி ராயின் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ சில சிக்கல்களால் வெளிவராமல் முடங்கிக்கிடந்தபோது, நாவலின் பதிப்புரிமையை அரிதினும் முயன்று பெற்று வெளியிட்டார். எனது ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பு என நான் கருதும் அந்நூல் ஏழு வருட முடக்கத்துக்குப்பின் 2012ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வெளியானது. என் வாழ்வின் ஆசீர்வதிக்கப்பட்ட தினம் அது.
எழுத்தாளர் ஜோசப் ஓ கானருடன் கட்டுரை ஆசிரியர்.
மொழிபெயர்ப்புப் பணியை ஓர் இயந்திரத்தனமான செயற்பாடாகக் கருதாமல் இலக்குமொழியைச் சாத்தியப்படுமளவுக்கு மூலப்படைப்புக்கு அருகில் கொண்டுசெல்வதற்கும், படைப்பாளியின் குரலையும் படைப்பின் தொனியையும் சிதைக்காமல் மறுவுருவாக்கம் செய்வதற்கும் பேருழைப்புத் தேவைப்படுகிறது. வாசகருக்கு மொழிபெயர்ப்பாளரின் சிரமங்கள் தெரியப்போவதில்லை; அவருக்குத் தெரியவேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் பதிப்பாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் காலச்சுவடு ஓர் உதாரணப் பதிப்பகம்.
நான் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு புத்தகமும் அதீதமான உழைப்பைக் கோருவதாக இருந்தன. ஒரு நூலை மொழிபெயர்த்து முடித்த பிறகு பலமுறை திருத்தி மறுவரைவு செய்தபிறகு நான் பெரிதும் மதிக்கும் முன் ஏர்களான கவிஞர் சுகுமாரன், ஆர்.சிவகுமார் ஆகியோரை மிகவும் நச்சரித்து மொழிபெயர்ப்பை வரிவரியாக மேலாய்வு செய்துதருவதற்கு வேண்டிக்கொள்வேன். என்மீதுகொண்ட அன்பின்பால் அவர்கள் சிரமம் பாராது என் பிரதியைச் செம்மையாக்கித் தந்திருக்கிறார்கள். இவ்விருவரையும் ஆசான்களாகக் கொண்டிருப்பது நான் பெற்ற பேறு.
எழுத்தாளர்களுக்கு இணையாக நூல் உருவாக்கத்தில் முழு அர்ப்பணிப்போடு செயல்படுபவர்கள் காலச்சுவடு அலுவலக ஊழியர்கள். நான் கணினியில் தட்டச்சு செய்வதில்லை. என் கையெழுத்துப்பிரதியைக் காலச்சுவடு அலுவலகத்தில் தட்டச்சு செய்து அனுப்புவார்கள். எனது முதல் திருத்த வரைவு அப்போது தொடங்கும். திருத்தி அனுப்பிய பிரதியை அவர்கள் மீண்டும் தட்டச்சு செய்து அனுப்ப, இரண்டாம்கட்டத் திருத்தம் நடக்கும். இப்படியே ஒவ்வொரு நூலுக்கும் குறைந்தது ஐந்து முறை திருத்தங்கள் செய்து அனுப்ப, அவர்களும் பொறுமையாகத் திருத்தி அனுப்பிக்கொண்டிருப்பார்கள். பல நேரங்களில் நானே கவனிக்காத வாக்கியப்பிழைகளைச் சுட்டிக்காட்டுவதும் உண்டு. 2009ஆம் ஆண்டு முதற்கொண்டு ஷாலினி, கலா முருகன், மஞ்சு, ரெத்தின குமாரி, இராஜரத்தினம், அகிலா, ஜெபா, ஹெமீலா, மணிகண்டன் ஆகியோரின் உழைப்பு மொழிபெயர்ப்பாளருடைய உழைப்புக்குச் சற்றும் குறைந்ததல்ல. படைப்பாளிக்கு மட்டுமே தனது நூல்களைப் பிறருக்கு அர்ப்பணம் செய்வதற்கு உரிமை உண்டு. மொழிபெயர்ப்பாளருக்கு அந்தச் சலுகை அளிக்கப்படுமென்றால், எனது பிரதிகள் அனைத்தையும் மேற்கண்ட காலச்சுவடு அலுவலகச் சகோதர சகோதரிகளுக்கே அர்ப்பணிப்பேன்.
தமிழில் இலக்கிய நூல்களைப் பதிப்பிப்பது கிட்டத்தட்ட விஷப்பரீட்சைதான். அதுவும் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு கட்டத்துக்குமேல் பதிப்பாளர்கள் செலவிடுவதும் வழக்கம் இல்லை. உரிமை பெறாமலும், எழுத்தாளர்களுக்குச் சன்மானம் தராமலும் நூல்களை வெளியிட்டுவருவதுதான் இங்கு பொது மரபு. இந்தச் சூழலில் முறையாக உரிமை பெற்று, எழுத்தாளர்களுக்கு உரிய ராயல்டி தொகையையும் தவறாமல் அளித்து வெளிப்படைத்தன்மையோடு இயங்கிவரும் காலச்சுவடு பதிப்பகத்துடன் இணைந்து பயணிப்பது எந்த மொழிபெயர்ப்பாளருக்கும் ஊக்கம் அளிக்கும் செயல் ஆகும்; மொழியை வலுவாக்கும் பெரும்பணி.
மின்னஞ்சல்: gkuppuswamy62@yahoo.com