நியாய உணர்வு கொண்டோர் அனைவருக்கும்...
அறிக்கை
நியாய உணர்வு கொண்டோர் அனைவருக்கும்...
“புதைக்கப்பட்டவை, இறந்தவர்களின் சடலங்கள் அல்ல
வாழ்பவர்களின் மனித உரிமைகள்
இது இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் மதம்சார்ந்த நல்லடக்கத்துக்கான போராட்டம் மட்டுமல்ல...
இது இலங்கையில் ஜனநாயகத்துக்கான போராட்டம்”
கோவிட் - 19 நம் சமூகங்களுக்கான சோதனையாக உள்ளது, கொரோனா வைரஸுக்கு எதிர்வினையாற்றுகையில் நாம் கற்றுக்கொள்கிறோம்; மாற்றிக் கொள்கிறோம். கோவிட் -19ஐ எதிர்கொள்ளப் பலவகையான நடவடிக்கைகள் தேவை என்று நாம் உணர்ந்திருக்கிறோம். இதுபோன்ற நேரத்தில் நாட்டு மக்கள் அனுசரிக்கும் மதம்சார்ந்த சில நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுகிறது. ஆனால் இத்தகு உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தேவை எழும்போது அந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு நம்பகமான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
இடர்மிகு காலங்களில் அரசு அதிகாரிகள் சமூகங்களை ஒன்றுபடுத்த வேண்டுமே அன்றி அவர்களுக்கிடையிலான பிளவுகளை ஆழப்படுத்தக் கூடாது. கோவிட்-19ஆல் தம் உறவுகளைப் பறிகொடுத்துத் துக்கத்தில் இருக்கும் உறவினர்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்குத் தாங்கள் விரும்பும் வகையில் பிரியாவிடை அளிக்க அனுமதிக்கப்பட வேண்டும்; சர்வதேச வழிகாட்டு நெறிகள் இதை அனுமதிக்கின்றன.
ஆனால் கோவிட் நோயாளிகளின் சடலங்களை அடக்கம் செய்வது சர்ச்சைக்குரிய விவகாரமாகிவிட்டது; சமூகங்களைப் பிளவுபடுத்து வதாகவும் ஆகிவிட்டது. மார்ச் 2020இல் இலங்கை சுகாதார அமைச்சகம் இறந்தவர்களுக்கு எரியூட்டுதல், புதைத்தல் ஆகிய இரண்டையும் அனுமதிக்கும் வழிகாட்டுதல்களை முதலில் வெளியிட்டது. ஆனால் ஏப்ரல் 2020 தொடக்கத்தில் நீர்கொழும்பில் கோவிட்-19ஆல் முதல்முறையாக ஒரு முஸ்லிம் மரணமடைந்தபோது ‘எரியூட்டுதல் மட்டுமே சடலங்களை அடக்கம் செய்வதற்கான நிலையான வழிமுறை’ என்று கூறியது; இறந்தவர்களைப் புதைக்க முடியாத வகையில் கோவிட்-19 வழிகாட்டுதல்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விதியானது இஸ்லாமிய, கிறிஸ்தவச் சமூகங்களின் மத, பண்பாட்டு உரிமைகளையும் மரபு சார்ந்த வழக்கங்களையும் மறுப்பதாக அமைந்தது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் அனைத்து மக்களுக்குமான மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. வழிபாடு, கடைப்பிடித்தல், பழக்கத்தில் மதத்தையோ நம்பிக்கையையோ வெளிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும் மதச் சுதந்திரம். குறிப்பாக, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ள குடிமை, சிவில் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்தின்படி (ஐ.சி.சி.பி.ஆர்) பொது சுகாதாரம் அல்லது பொது நெருக்கடியின் பெயரில் மனித உரிமைகள் மீது விதிக்கப்படும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் உரிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கானதாக மட்டும் இருக்க வேண்டும்; அறிவியல் ஆதார அடிப்படையிலானவையாகவும் செயல்படுத்தலில் தன்னிச்சையானதாகவோ பாகுபாடுகொண்டதாகவோ இல்லாமலும் குறைந்த காலத்துக்குரியதாகவும் மனித கண்ணியத்தை மதிப்பதாகவும் மதிப்பீட்டுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்கிறது.
மேலோட்டமான பார்வையில் கோவிட்-19ஆல் இறந்த அனைவரின் சடலங்களுக்கும் அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும் எரியூட்ட வேண்டும் என்னும் இலங்கை அரசின் நிர்ப்பந்தம் நியாயமானதாகத் தோன்றலாம். ஆனால் சற்று நெருங்கிக் கவனித்தால் இந்த ‘வலுக்கட்டாயமாக எரியூட்டும் கொள்கை’ உலகச் சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிகளுக்கு மாறாக, எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்பதும், எனவே அதைக் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்கும். கொரோனா வைரஸ் பரவலை மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளைவிட ஒப்பீட்டளவில் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்காக இலங்கைக்குச் சர்வதேச அளவில் கிடைத்த நற்பெயரை இந்த மறைநோக்கம் கொண்ட கொள்கை கெடுத்துவிட்டது. எனவே இலங்கை அரசானது பெருந்தொற்றுக்கு எதிராகப் போர்புரியும்போது ‘அரசு அனுமதிபெற்ற’ இனவாதம் என்ற கொரோனாவுக்கு இணையான ஆபத்து விளைவிக்கக்கூடிய வைரஸுக்குப் புத்துயிரூட்டிவிட்டதாகத்தான் கருத வேண்டியுள்ளது.
‘வலுக்கட்டாய எரியூட்டல்’களை ஏன் எதிர்க்க வேண்டும்?
இலங்கை அரசானது கோவிட்-19இல் இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்வது என்று ஆராய ஒரு தொழில்நுட்பக் குழுவை நியமித்தது. ஆனால் இன்றுவரை அந்தக் குழுவின் நிலைப்பாடு, சடலங்களில் உள்ள வைரஸ் மிகத் தாழ்வான நிலத்தடி அமைப்பையும் அதிக ஈரப்பதத்தையும் கொண்ட இலங்கையின் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும்; ஆதலால் கோவிட்-19ஆல் இறந்தவர்களைப் புதைப்பது வைரஸ் பரவலுக்குப் பங்களித்துச் சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என்று கூறுவதாகவே இருக்கிறது. ஆனால் இந்தக் கூற்றுக்கு நம்பத்தகுந்த, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரம் எதையும் அதிகாரிகள் இதுவரை அளிக்கவில்லை. புகழ்பெற்ற வைராலஜிஸ்ட்டும் அத்துறை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டெய்லி மிரர் இதழுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் அந்தக் குழுவில் வைராலஜிஸ்ட் ஒருவர்கூட இல்லை என்று கூறியிருப்பது இந்தத் தொழில்நுட்பக் குழுவின் தகுதிமீது சந்தேகம் எழுப்புகிறது. முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள் அனைத்து உண்மைகளையும் கணக்கில்கொண்டு அறிவியல், மருத்துவ, தர்க்கப்பூர்வக் காரணங்களின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் எந்தச் சமூகத்துக்கும் பிரச்சினைகள் இருக்க வாய்ப்பில்லை; அனைவரும் அம்முடிவை உளமாறப் பின்பற்றுவார்கள். ஆனால் உண்மை நிலை அதுவன்று.
உண்மை என்னவென்றால் உலகச் சுகாதார மையம் கோவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கான தெளிவான வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது. புதைத்தல், எரியூட்டுதல் இரண்டும் பாதுகாப்பானவையே என்று அதில் மிகத் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. ‘தொற்று நோயால் இறந்தவர்களை எரிக்கத்தான் வேண்டும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. எரியூட்டுதல் என்பது அதற்குத் தேவையான சௌகரியங்களையும் பண்பாட்டுத் தெரிவையும் சார்ந்த விவகாரம்’ என்று 10 ஏப்ரல் 2020 அன்று உலகச் சுகாதார மையம் ட்வீட் செய்திருந்தது. நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையமும் ‘கோவிட்-19’ மரணம் நிகழ்ந்ததாக உறுதிசெய்யப்பட்டாலும் சந்தேகம் இருந்தாலும் இறந்தவர்களை வழக்கம்போல் எரியூட்டலாம் அல்லது புதைக்கலாம்’ என்று கூறுகிறது.
இலங்கைக்கு உள்ளும் வெளியேயும் உள்ள அறிவியல் நிபுணர்கள் பலர் கோவிட் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது என்னும் போர்வையில் நிகழும் இந்த மோசமான மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குரலெழுப்பியுள்ளனர். சர்வதேசக் கவனம் பெற்ற நிபுணரும் உலகின் தலைசிறந்த வைராலஜி பேராசிரியருமான பிரிட்டனைச் சேர்ந்த ஹக் பென்னிங்டன் (சி.பி.இ, எஃப்.ஆர்.எஸ்.இ., எஃப்.ஆர்.சி.பி. பி.ஹெச்.டி, எம்.பி, பிஎஸ்,) “இறந்தவர்களின் சடலத்தில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் மிக விரைவில் தோராயமாக ஒரு வார காலத்துக்குள் அழிந்துவிடும். பிணத்தில் அது வளரவே வளராது. கொரோனா வைரஸ் சுவாசப் பாதை வழியாகப் பரவுகிறதே அன்றி நீரில் அல்ல. புதைப்பது பாதுகாப்பானதே”1 என்று கூறியிருக்கிறார்.
இலங்கையிலும் புகழ்பெற்ற பல பொது சுகாதார வைராலஜிஸ்ட்கள், தொற்றுநோயியல் நிபுணர்களும் இதே போன்ற கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை சுகாதார அமைச்சகத்தின் மத்திய தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் தலைமைத் தொற்றுநோயியல் நிபுணரும் இயக்குநருமான பாபா பாளிஹாவதன, முன்னாள் அரசு தலைமை வைராலஜிஸ்ட்டும் தொற்று நோயியல் நிபுணருமான மருத்துவர் நிஹால் அபேசிங்கே ஆகியோர் தனித்தனியாக அளித்துள்ள பேட்டிகளில் கோவிட் சடலங்களைப் புதைப்பது நீராதாரத்துக்கோ பொது சுகாதாரத்துக்கோ தீங்கு விளைவிக்கும் என்னும் கற்பிதத்தை இப்போதிருக்கும் அறிவியல் ஆதாரங்களின் துணையோடு உடைத்திருக்கிறார்கள்.
இந்தியா, கொலம்பியா, நியூசிலாந்து, காமரூன், ஹவாய், சீனா ஆகிய நாடுகளிலுள்ள மிக ஈரமான பகுதிகளில் இந்தப் பிரச்சினை எழவே இல்லை. கலிஃபோர்னியாவில் மட்டும் கிட்டத்தட்ட இதுபோன்ற மிக ஈரமான 18 இடங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் கோவிட்-19ஆல் இறந்தவர்களைப் புதைப்பது ஒரு பிரச்சினையாகவே இல்லை.
மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு கடல் மட்டத்துக்குக் கீழே அமைந்திருக்கும் நெதர்லாந்து நாட்டில் புதைப்பது ஒரு பிரச்சினையாகவில்லை. ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன், போலந்து, அஸர்பெய்ஜான், கஸகஸ்தான், டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் கடல் மட்டத்துக்குக் கீழே அமைந்த நிலப் பகுதிகள் உள்ளன. ஆனாலும் இந்த நாடுகளில் கோவிட்-19 சடலங்களைப் புதைக்க அனுமதி மறுக்கப்படவில்லை.
இது தவிர உலகின் 182க்கு மேற்பட்ட நாடுகள் உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிகளின் அடிப்படையில் புதைப்பதை அனுமதிக்கின்றன. இந்த ஆண்டு பெருந்தொற்று நோய் தொடங்கியவுடன் கோவிட்-19ஆல் இறந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் சடலங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன. அப்படிப் புதைத்ததால் தீய விளைவுகள் நிகழ்ந்திருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. கோவிட்-19ஆல் இறந்தவர்களைப் புதைப்பதற்கான விதிமுறைகளையும் பல்வேறு நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன. அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, இந்தியா போன்ற அதிக மரணங்களை எதிர்கொண்ட நாடுகளிலும் மாலத்தீவுகள் போன்ற குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிலும் எரிப்பதா, புதைப்பதா என்கிற கேள்வி எழக்கூட இல்லை.
எனவே ஐநா உள்நாட்டு ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், “கொள்ளைநோய்க் காலங்களில் பொது சுகாதாரக் காரணங்களுக்காக அரசுகள் சில கடினமான வெகுஜன விரோத நடவடிக்கைகளைச் சில நேரம் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த முறை, புதைப்பதை அனுமதிக்காமல் இருப்பதன் எதிர்மறை விளைவுகள், அதனால் கிடைக்கக்கூடிய தொற்றுநோயியல் சார்ந்த பலன்களைவிட அதிகமாக இருக்கின்றன. தொற்றுநோயினால் இறந்தவர்கள் கட்டாயமாக எரிக்கப்பட்டால்தான் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும் என்னும் பொதுவான நம்பிக்கைக்கு ஆதாரம் எதுவும் இல்லை” என்றார்.
இரக்கமற்ற ஜனநாயக அவமதிப்பும் மோசமான மனித உரிமை மீறலும் அனைவரையும் பாதிக்கின்றன!
இன, அரசியல், மத அடிப்படைகளில் கோவிட்-19 பாகுபாடு காண்பிப்பதில்லை; இலங்கை அரசும் அதைச் செய்யக் கூடாது. சகோதரத்துவத்தின் முக்கியத்துவம் மிகப் பெரிய அளவில் உணரப்பட்டிருக்கும், பெருந்தொற்றைக் கடப்பதற்காக சமூகங்கள் ஒன்றுதிரண்டிருக்கும் இந்த ஆண்டில் இலங்கை அரசானது வன்முறை, வெறுப்பைத் தூண்டுதல், பாகுபாடு ஆகியவற்றை எதிர்கொண்டிருக்கும் சமூகங்களை மேலும் அந்நியப்படுத்த முனைந்துள்ளது. தெளிவாக, இது அரசு அனுமதிபெற்ற இனவாதம்.
உயிர் வாழ்பவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பது தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் இறந்தவர்களை எரிப்பதைத் தடை செய்யும் மத நம்பிக்கையைப் பின்பற்றும் இஸ்லாமியச் சமூகத்துக்கு இந்த வலுக்கட்டாய எரியூட்டல் கொள்கையானது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் சடலங்களைப் புதைக்கக் கூடாது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாத சூழலில், மதச் சடங்குகள் மீதான அரசின் இரக்கமற்ற அலட்சியம், இஸ்லாமியச் சமூகத்தை மிகக் கடுமையான துயரத்தில் ஆழ்த்தியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், “கோவிட்-19ஆல் இறந்தவர்களை நினைத்துத் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தாங்கள் விரும்பும் வகையில் வழியனுப்பி வைக்க அனுமதிக்கப்பட வேண்டும். குறிப்பாக சர்வதேச வழிகாட்டு நெறிகளும் அதை அனுமதிக்கும் சூழலில்” எனக் கூறியது. தம் அன்புக்குரியவரின் சடலம் அவமதிக்கப்படுவதை அமைதியாக வேடிக்கை பார்ப்பதோடு அதற்கான செலவையும் ஏற்க நிர்ப்பந்திக்கப்படும் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட இஸ்லாமியக் குடும்பங்களில் சிலர் சடலங்களின் அஸ்தியையும் எரியூட்டலுக்கான செலவையும் ஏற்க மறுத்துள்ளனர்.
நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் சுகாதார அதிகாரிகள் ‘எரியூட்டல் மட்டும்’ கொள்கையை நியாயப்படுத்துவதற்கான சதிக் கோட்பாடுகளைப் பின்னத் தொடங்கிவிட்டனர். இலங்கை சுகாதார அமைச்சகத்துக்குட்பட்ட தடயவியல் ஆலோசகர் மருத்துவர் சன்னா பெரேரா, பிபிசி க்கு அளித்த பேட்டியில்2 “முஸ்லிம்ளுக்கு எதிராக அரசிடம் எதுவும் இல்லை. ஆனால் வைரஸானது அனுமதி அளிக்கப்படாத செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்னும் சிறிய அச்சம் இருக்கிறது. தேவையில்லாத நபர் யாரிடமேனும் சடலம் கிடைத்தால் அவர் அதை உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும்” என்றார். இது சமுதாயத்தில் தேவையில்லாத பிளவை விதைக்கும் முஸ்லிம்களுக்கெதிரான கூற்றாகும். அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்ட தம்முடைய மதச் சுதந்திரமும் அடிப்படை உரிமைகளும் மோசமாக மீறப்படுவதற்கு எதிராகச் சட்டப் போராட்டத்தைத் தொடங்கிய இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றும் பதினோரு குடும்பங்களின் மனுக்களை விசாரிக்க மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உண்மையிலேயே இது துரதிருஷ்டவசமானது. இலங்கையில் ஜனநாயகச் செயல்முறை மீதான இன்னொரு தாக்குதலாகவே இதைப் பார்க்க வேண்டும். ஏப்ரல் 8 அன்று ஐநா சிறப்பு விசாரணைக் குழுவினரின் “இறந்தவர்களைப் புதைப்பதற்கு அனுமதி மறுப்பது சிந்தனை மற்றும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஐசிசிபிஆர் ஒப்பந்தத்துக்கு எதிரானது” என்னும் செய்தியைத் தாங்கிய கடிதத்தை இலங்கை அரசு உதாசீனப்படுத்தியது.
இலங்கையின் மனித உரிமை ஆணையமும் சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பிய “11 ஏப்ரல் 2020 தேதியிட்ட அசாதாரண அரசாணை எண் 2170/8இன் மீதான இலங்கை மனித உரிமை ஆணையத்தின் அவதானிப்புகளும் பரிந்துரைகளும்’ என்னும் தலைப்பிலான தன்னுடைய கடிதத்தில் “கொரோனா வைரஸால் இறந்தவர்களை எரியூட்டத்தான் வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது ஏற்றுக்கொள்ள முடியாததும் மோசமான மனித உரிமை மீறலும் ஆகும்” என்று கூறியுள்ளது. “கோவிட்-19ஆல் இறந்தவர்களின் சடலங்களை உரிய சுகாதார வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றிப் புதைக்க அனுமதிக்கவும்”3 என்று துணிச்சலுடன் அந்தக்கடிதம் அரசுக்குப் பரிந்துரைக்கிறது.
“ஒரு இடத்தில் நிகழும் அநீதி எல்லா இடங்களிலும் நீதிக்கான அச்சுறுத்தலாகும்” – மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர்
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மேலும் தொடர்கிறார்: “நாம் அனைவரும் விதி என்னும் ஒற்றை அங்கியால் பிணைக்கப்பட்ட, தப்பிக்கவே முடியாத ஒரு பரஸ்பரத்தன்மையின் வலைப்பின்னலில் சிக்கியுள்ளோம். ஒருவரை நேரடியாகப் பாதிக்கும் எதுவும் அனைவரையும் மறைமுகமாகப் பாதிக்கிறது.” ஒவ்வொரு சமூகமும் அது இறந்தவர்களை எப்படி நடத்துகிறது என்பதை வைத்துப் பெருமைப்பட்டுக்கொள்கிறது. வலுக்கட்டாய எரியூட்டல் என்னும் முடிவு எந்த நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டதோ அதைத் தாண்டிய எதிர்விளைவுகளில் மரணம் குறித்த பேச்சுகள் தணிந்துவிடுவதில்லை. ‘எரியூட்டல் மட்டும்’ கொள்கையைக் கைவிடவேண்டும் என்னும் கோரிக்கை ஏற்கெனவே பெரும்பான்மைச் சமூகத்தில் இஸ்லாமிய வெறுப்பின் புதிய அலையைத் தொடங்கிவைத்துவிட்டது. ஏனென்றால் அவர்களுக்கு உண்மையான நிலைமை தெரியப்படுத்தப்படவில்லை. உண்மையான நிலைமை என்னவென்றால் அரசின் இந்த முடிவுக்கு எந்தவித அறிவியல் அல்லது மருத்துவ ஆதாரமும் இல்லை. 182க்கும் மேற்பட்ட நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்ற, கோவிட்-19ஆல் இறந்தவர்களை எரிப்பது, புதைப்பது ஆகிய இரண்டு வழிமுறைகளையும் அனுமதிக்கும் உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிகள் இலங்கை அரசால் பிடிவாதமாக மீறப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படாத எதிரிக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரத்தில் கோவிட்-19ஆல் இறந்தவர்களுக்கான இந்தக் கட்டாய எரியூட்டல் கொள்கைக் கவலைக்குரிய வகையில் நாட்டைப் பிளவுபடுத்திக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இனங்களுக்கிடையிலான, மதங்களுக்கிடையிலான உறவுகள் சீர்குலைவது நிச்சயம் தீவிரமான கவலைக்குரிய பிரச்சினைதான். இந்தச் சீர்கேடு சமூகங்களுக்கிடையில் அடிமட்டத்தில் ஏற்படவில்லை. ஆனால் இனரீதியாகவும் மதரீதியாகவும் தங்களைப் பிளவுபடுத்த முனையும் சுயநலச் சக்திகளின் திட்டங்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றால் அவர்களும் இந்தப் பிளவுபடுத்தலுக்குள் இழுக்கப்படுவார்கள்.
உச்ச நிலையில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் பரவலான சமூக விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இலங்கை மக்களை வருத்தமடைய வைக்கக்கூடிய தவறுகளாகக்கூட இவை இருக்கலாம். அரசாங்கத்தைப் பொருத்தவரை நிலைமையைச் சீராக்க இன்னும் காலம் கடந்துவிடவில்லை. மக்களில் சில பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வளிக்க அரசைப் பொறுப்பேற்க வைப்பது மக்களின் கடமை. ஏனென்றால் மார்ட்டின் லூதர் கிங் முழங்கியதுபோல் “ஒரு இடத்தில் நிகழும் அநீதி எல்லா இடங்களிலும் நீதிக்கான அச்சுறுத்தலாகும்.”
இது ஜெர்மானிய இறையியலாளரும் லூதரன் போதகருமான மார்ட்டின் நியமொல்லரின் (Martin Niemller) பின்வரும் கவிதையை நமக்கு நினைவுபடுத்துகிறது:
முதலில் அவர்கள் சோஷலிஸ்ட்களைத் தேடி வந்தார்கள், நான் குரலெழுப்பவில்லை-
ஏனென்றால் நான் சோஷலிஸ்ட் இல்லை
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள், நான் குரலெழுப்பவில்லை —
ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதியில்லை
பின்னர் அவர்கள் யூதர்களைத் தேடிவந்தார்கள், நான் குரலெழுப்பவில்லை —
ஏனென்றால் நான் யூதனில்லை
பின்னர் அவர்கள் என்னைத் தேடிவந்தார்கள்—
எனக்காகக் குரலெழுப்ப யாருமே இல்லை.
அனைத்து மக்கள் மீதான ஒடுக்குமுறையையும் எதிர்ப்போம்!
ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்போம்!!
கையொப்பம்:
1. திரு. ரெட்லி சில்வா - பிரிட்டன்
2. ரெவ. பிரின்ஸ்லி க்ரூஸ், இங்கிலாந்து திருச்சபை, பிரிட்டன்
3. பி. என். சண்முகரத்னம் - நார்வே
4. திரு. பி.ஏ.காதர் - பிரிட்டன்
5. திரு. லுக்மான் ஹரீஸ் - பிரிட்டன்
6. திரு. மஹ்ரூஃப் ஃபெளசர்- பிரிட்டன்
7. திரு. சுரேஷ் சிவகுரு - பிரான்ஸ்.
அடிக்குறிப்புகள்:
1. இனவாதத்துக்கு எதிரான ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்கள் இயக்கத்தின் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு 09.12.2020 அன்று அறிவியலாளர் அனுப்பிய குறுந்தகவல்.
2. 33.30 மற்றும் 38.26 நிமிடங்களுக்கு இடையில் பிபிசி செய்தி நேரத்தில் (News Hour) விவாதிக்கப்பட்டது. https://www.bbc.co.uk/sounds/play/w172x2ymkzt6gd8
3. https://www.hrcsl.lk/wp-content/uploads/2020/02/Observations-Recommendations-Disposal-Dead-Bodies-Covid19_compressed.pdf
தமிழில்: அரவிந்தன்