கதாநாயக அரசியல் ‘தர்பார்’, ‘பட்டாஸ்’ படங்களை முன்வைத்து
திரை
கதாநாயக அரசியல்
‘தர்பார்’, ‘பட்டாஸ்’ படங்களை முன்வைத்து
சிவராஜ் பாரதி
அண்மையில் வெளியான ‘தர்பார்’ திரைப்படமும் ‘பட்டாஸ்’ திரைப்படமும் தமிழ் சினிமா குறித்து மற்றொரு பார்வையை என்னுள் உருவாக்கின. இவ்விரண்டு திரைப்படங்களையும் முன்வைத்து இதுவரையிலான தமிழ் சினிமா பற்றிய ‘பொது’ பார்வையை விவரிப்பதற்கு ஒரு காலப்பயணம் மேற் கொண்டேன்.
முன்கதை
ஒவ்வொரு நாட்டின் உணவு முறைக்கும் அந்நாட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும் தொடர்பிருப்பதற்கு வாய்ப்புள்ளது. நம் நாட்டில் ஒரு வேளை உணவிலேயே அறுசுவைகளும் பரிமாறப்படுகின்றன. அதைப்போலவே நம் திரைப்படங்களிலும் நவரசங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. விகிதாச் சாரம் வேறுபடலாம், ஆனால் கலவை மாறாது. இதன் காரணமாகக்கூட ‘மசாலா திரைப்படங்கள்’ என்ற பெயர் வந்திருக்கலாம்.
2020
ஆதித்யா அருணாச்சலம் என்ற அவதாரத்தில் ரஜினி நிகழ்த்தியிருக்கும் சாகசங்கள்தான் ‘தர்பார்’. ரஜினி கடவுளாகவே மாறியிருக்கிறார். அவர் என்ன நினைத்தாலும் நடக்கிறது. ஐம்பது துப்பாக்கிகளையும் மீறி ஒற்றை வாளால் எதிரிகளை வதம் செய்கிறார். அவர் யாருக்கும் பணிந்து போவதில்லை, மனித உரிமை அதிகாரியை மிரட்டுகிறார்; உயர் அதிகாரியை மிரட்டுகிறார்; அமைச்சரை மிரட்டுகிறார். அவருக்கு ஏதேனும் சோதனை நிகழ்ந்தால், அது அவரது கவனக்குறைவால் நிகழ்கிறதேயன்றி வில்லனின் தீரத்தால் அல்ல. கதையின் ஆரம்பத்தில் தேடத் தொடங்கிய வில்லனைக் கதையின் இறுதியில்தான் கண்டுபிடிக்கிறார்; பார்த்ததும் கொன்றுவிடுகிறார். இதற்கிடையில் காதல், பாசம் போன்ற அத்தியாயங்களையும் கடந்துசெல்கிறார். இதில் நல்ல செய்தி என்னவென்றால் ரஜினியை வயதானவராகக் காட்டுவதற்கு நம் இயக்குநர்கள் முன்வந்திருப்பதுதான். பா. ரஞ்சித்துக்கு நன்றி.
இதைப் போலவே தனுஷ் இரட்டை அவதாரம் எடுத்திருக்கும் களம்தான் ‘பட்டாஸ்’. திருட்டைப் பாரம்பரியமான முறையில் செய்யும் மகன்; பாரம்பரியக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கற்றுத்தரும் அப்பா என்று இரு அவதாரங்கள். காவல்துறையிடம் சிக்காமல் திருடும் மகன், ஆசானையே மிஞ்சும் ஆசானாக அப்பா என இருவரும் நினைத்ததையெல்லாம் செய்கிறார்கள். காதல், பாசம், துரோகம் போன்றவைதாம் இவர்களைத் தடுமாறச் செய்யுமேயொழிய எதிரியின் வீரம் அல்ல. “உங்களை வீரத்தால் வீழ்த்த முடியாது, விஷத்தால்தான் வீழ்த்த முடியு”மென்று வில்லனே வாக்குமூலம் அளிக்கிறார். பிறர் பன்னிரண்டு ஆண்டுகள் கற்கும் கலையை நாயகன் மூன்றே மாதங்களில் கற்றுக்கொண்டு பன்னாட்டுப் போட்டியிலும் வெல்கிறார்.
சங்ககாலம்
நாயக வழிபாடு நமது பண்பாட்டில் ஊறிப்போன ஒன்று. புறத்திணையில் அரசர்களின் வீரங்களைப் புல்லரிக்க விவரித்த புலவர்கள், அகத்திணையில் தலைவனின் காதல் உணர்வுகளைக் கசக்கிப் பிழிந்திருப்பார்கள். சமகாலத் திரைப்படங்களில் நாயகர்களுக்காக உருவாக்கப்படும் கிராஃபிக்ஸ் காட்சிகளின் ஆதி உருவம் சங்கப் பாடல்களே. பக்தி இயக்கப் பாடல்களும் இதிகாசங்களும் சற்றும் குறைவில்லாமல் நாயக வழிபாட்டை வளர்த்தெடுத்தன.
1990
இணைய யுகத்தின் வளர்ச்சியும் தலித் எழுச்சியும் நிகழ்ந்த மிக முக்கியமான காலகட்டம் இது. தமிழ்த் திரைத்துறையில் மற்றொன்றும் நிகழ்ந்தது; இஸ்லாமிய வெறுப்பு. ‘ரோஜா’வில் மணிரத்னம் பற்றவைத்த நெருப்பை விஜயகாந்தும் அர்ஜூனும் உதிரமூற்றி வளர்த்தனர். நண்பர் இப்ராகிம் ராவுத்தரின் தயாரிப்பில் லியாகத் அலிகான் வசனத்தில் பல திரைப்படங்களில் இஸ்லாமிய ஆதரவை வெளிப்படுத்திய விஜயகாந்த், பின்னாட்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக மட்டுமே இஸ்லாமியர்களைக் காட்சிப்படுத்தியது காலத்தின் தேவையா அல்லது பிழையா என்று தெரியவில்லை.
தலித் வெறுப்பும் தமிழ்த் திரைப்படங்களில் வெளிப்பட்டன. படிப்பறிவில்லாதவர்களாக, குற்றச்செயல்கள் புரிபவர்களாக, அதற்குத் துணை போகிறவர்களாக, நாகரிகம் அற்றவர்களாகத் தலித்துகள் வந்துபோனார்கள்.
முன்கதைத் தொடர்ச்சி
மசாலா திரைப்படங்கள் எனப் பொதுவாக வணிக வெற்றியை மனத்தில்கொண்டு எடுக்கப்படும் படங்களைத்தான் குறிப்பார்கள். உண்மையில் எல்லாப் படங்களும் வணிக வெற்றிக்காகத்தான் எடுக்கப்படுகின்றன. அவ்வெற்றி நாயகனுக்காகவா கதைக்காகவா என்ற அடிப்படையிலேயே திரைப்படங்கள் பகுக்கப்படுகின்றன. கலைப்படங்கள் என்று சொல்லிக்கொள்ளும் திரைப்படங்களில்கூட நவரசங்களும் இருக்கும், அதன் விகிதாச்சாரம் மட்டுமே வேறுபடும்.
மசாலாத் திரைப்படங்கள் சமூகத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது, பொழுதுபோக்காகக் கடந்துவிடும் என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையல்ல.
2020
ரஜினியும் தனுஷும் தங்களைத் தமிழர்கள் என்று வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையைச் சமகால அரசியல் சூழல் உருவாக்கிவிட்டது. ‘தர்பா’ ரில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்று சொல்கிறார் ரஜினி. ‘பட்டா’ ஸில் தமிழர்களின் கலையை மீட்டெடுக்கிறார் தனுஷ். வேட்டியின் பெருமையை மேடைகளில் மட்டும் பேசிய தனுஷ், இம்முறை படத்திலும் பேசுகிறார். இந்த லுங்கியும் கோவணமும் என்ன பாவம் செய்தனவென்று தெரியவில்லை. அவையும் தமிழர் உடைகள்தாமே. இன்னொன்றும் எனக்குப் புரியவில்லை, திருநீறு பூசியவர்களை மட்டும் தமிழர்களாகக் காட்டுகின்றார்கள், நாமம் தரித்தவர்களெல்லாம் தமிழர்களில்லையா?
1990களில் இந்தியன் என்று மார்தட்டிக்கொண்ட நம் நாயகர்கள் தற்போது தமிழன் என்று கதறுகின்றனர். ‘வனமகன்’ படவிழாவில் நடிகர் ஜெயம் ரவி, “தமிழனா இருந்தா இந்தப் படத்தை தியேட்டர்ல பாரு” என்று சொன்னது ஞாபகம் வருகிறது.
1950 - 1970
எம். ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் காலகட்டம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்கது. கதாநாயகப் பிம்பத்திற்கு மிகத் தெளிவான கட்டமைப்பை உருவாக்கிய காலகட்டம் அது; நாயக வழிபாட்டை உச்சநிலைக்குக் கொண்டுசென்ற காலகட்டமென்றாலும் அக்காலத்தில் சில ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளும் நடந்தன.
உழைக்கும் வர்க்கத்தினர், பகுத்தறிவாளர்கள், மதச் சிறுபான்மையினர் எனப் பலரும் கதாநாயகர்களாக மாறின காலகட்டம். பல்வேறு கலாச்சாரப் பரிமாற்றங்கள் திரைக்குள் நிகழ்ந்தன. இச்சூழலுக்குத் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி முக்கிய காரணமென்று தோன்றுகிறது. பின்னாட்களில் தமிழ்த் திரைத்துறையில் வளர்ந்த திராவிட எதிர்ப்பு மேற்குறிப்பிட்ட கலாச்சாரப் பரிமாற்றங்களைச் சாதிப் பெருமை என்ற அளவில் சுருக்கிவிட்டது.
“மேரா நாம் அப்துல் ரஹ்மான்...” என்று தற்போதைய முன்னணி நாயகர்கள் பாடுவார்களா என்பது சந்தேகமே.
முன்கதைத் தொடர்ச்சி
மசாலாத் திரைப்படங்கள் என்றில்லை, பொதுவாகவே திரைப்படங்கள் நம் நாட்டின் ‘பொது’ புத்தியைக் குலைப்பதில்லை. தனக்கு எவ்வளவு வேண்டுமோ அந்த அளவு மட்டுமே ‘பொது’ புத்தியை அது அசைக்க முயல்கிறது. மக்கள் அறிவார்ந்த நிலையில் இருப்பதைவிட உணர்ச்சிநிலையில் இருப்பதைத்தான் ஓர் அமைப்பு விரும்பும். நம் சமூக அமைப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.
அமைப்பைச் சிதைக்காமல், அதிகாரத்தின்மீது கோபத்தையும் ஒடுக்கப்படுபவர்கள்மீது இரக்கத்தையும் உண்டாக்கும் முயற்சியைத்தான் நம் சினிமாக்கள் காலந்தோறும் செய்து வருகின்றன. தனிமனித சாகசங்கள் மூலம் மக்களின் கோபத்தையும் போராட்ட குணத்தையும் மட்டுப்படுத்தி ‘நல்ல தலைவன்’ வந்துவிட்டால் நம் பிரச்சனைகள் யாவும் தீர்ந்துவிடுமென்று மேய்ப்பருக்காகக் காத்திருக்கும் ஆடுகளாக்கி அழகு பார்க்கின்றது சினிமா. கலைப்படங்கள் இரக்கத்தையும் கோபத்தையும் உருவாக்குகின்றன; மசாலாப் படங்கள் நாயக வழிபாட்டை அதற்கான வடிகாலாக்குகின்றன.
2020
கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்த என்கவுண்டர் பலரது பாராட்டைப் பெற்றது. குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்த பலரும் பாராட்டினர். அதன் எதிரொலி ‘தர்பா’ரிலும் இருந்தது. நாயகர் காவல்துறையைச் சேர்ந்தவராக இருப்பதால் அவர் செய்வதெல்லாமே ‘நியாயமான’ என்கவுண்டர்தான். இன்னும் எத்தனை திரைப்படங்களில்தான் மனித உரிமை ஆணையத்தைக் கேலிக்குரியதாகக் காட்சிப்படுத்தப்போகின்றார்களோ தெரியவில்லை.
அதுபோலவே கீழடி ஆய்வுகள் தமிழ் - தமிழர் பற்றிய மேன்மை உணர்வுகளைத் தூண்டிவிட்டிருக்கிறது. சற்றுப் பின்னோக்கிப் போனால் 2010க்குப் பிறகான காலம்தொட்டே தமிழர் பற்றிய மேன்மை உணர்வுகள் திரைப்படங்களில் அதிகமாக வெளிப்படுகின்றன. ஆனால் கீழடி போன்ற ஆய்வுகளைத் தொடங்கிவைத்த ஆங்கிலேயர்களையும் ஈழத்தமிழர் உணர்வுகளை நம் பொதுப்புத்தியில் விதைத்த திராவிட இயக்கத்தினரையும் எதிரிகளாகச் சித்தரிப்பது முரண்.
தமிழ்க் கதாநாயகப் பிம்பம் : ஓர் ஒப்பீடு
எம்.ஜி.ஆர் முதல் தனுஷ்வரை நம் தமிழ் நாயகர்கள் ஒரே மாதிரியான பிம்பத்தைத்தான் திரையில் சுமக்கின்றனர்.
கதாநாயகன் குடும்ப அமைப்பைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும், (சமகால சினிமாக்களில்) அவனுக்கு என்னதான் குடும்ப உறுப்பினர்களோடு முரண்பாடு இருந்தாலும் குடும்ப அமைப்பைச் சிதைய விடக்கூடாது.
முன்னணி நாயகர்கள் தாம் விரும்பும் நாயகிகளோடு தைரியமாகப் பேசிவிடக்கூடாது, வெட்கப்பட வேண்டும்; கண் பார்த்துப் பேசத் தடுமாற வேண்டும்; அதேநேரம் பெண்களின் நடத்தை விதிகளையும் சொல்ல வேண்டும்.
ஒடுக்கப்பட்டப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும் கர்ணன்போல பிறந்த குலமும் வளர்ந்த குலமும் வேறுவேறாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பெற்றோர் யாரென்றே தெரியாதவராக இருக்க வேண்டும்.
இருக்கிற சமூக அமைப்புக்குள் மாற்றத்தை உண்டாக்கு கிறவராக இருக்க வேண்டுமேயல்லாது, அமைப்பையே மாற்றியமைக்கக் கூடாது.
நம் நாட்டின் முக்கியப் பிரச்சனையாக ஊழலையும் அரசியல்வாதிகளையும் பாகிஸ்தானையும் சொல்ல வேண்டுமேயொழிய சமூக அமைப்புதான் பிரச்சனை யென்று ஒருபோதும் சொல்லிவிடக்கூடாது.
பின்கதை
தனிமனிதனால் சிந்தனை மாற்றத்தை மட்டுமே உண்டாக்க முடியும்; மக்கள் ஒன்றிணைவதால் தான் சமூக மாற்றம் ஏற்படும். ஆனால் நம் சமூக அமைப்பு மக்கள் அறிவுத் தளத்தில் இணைவதை விரும்புவதில்லை. அதையே திரைப்படங்களும் வெளிப்படுத்துகின்றன. குடும்பம், சமூகம், அரசு போன்ற அமைப்புகளைக் கேள்விக்குட்படுத்தாமல், பண்படுத்தாமல், மீளுருவாக்கம் செய்யாமல் இங்கு எந்த மாற்றமும் நிகழாது.
திரைப்படங்கள் பற்றிய இக்கூற்றுகள் யாவும் நீண்ட ஆய்வுக்கான கனத்தைக் கொண்டவை. இதில் விடுபட்ட பார்வைகள் பல. பின்னாட்களில் இதுகுறித்து விரிவாக எழுத இது தூண்டினால் மகிழ்ச்சி.
2021
பா. ரஞ்சித், வெற்றி மாறன் போன்றோர் மசாலா சினிமாக்களின் வடிவத்துக்குள்ளேயே மாற்றுக் கதையாடல்களை முன்வைக்கின்றனர். கலாச்சாரப் பரிமாற்றங்களை விரிவுபடுத்த முயல்கின்றனர். அதை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்திச் செல்ல வில்லையென்றாலும் பின்னுக்கு இழுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மின்னஞ்சல்: rpk.vishnu@gmail.com