கடிதங்கள்
கடிதங்கள்
எம். கோபாலகிருஷ்ணனின் ‘சிவகாமி’ கதை மனத்தைக் கனக்கச் செய்துவிட்டது.
சித்துராஜின் ‘பெருச்சாளிகள்’ புதிய வாசிப்பனுபவத்தை வழங்கிய கதை. சுகுமாரனின் கட்டுரையும் ஆற்றாமையும் ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலினை நினைவுபடுத்தியதுடன், தமிழ்ச் சூழலையும் எண்ணச் செய்தது. எழுத்தாளர்களைக் கொண்டாடும் கேரளம் கடவுளின் தேசமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
சரவணன்
மதுராந்தகம்
நெறி பிறழா நேர்மையின் அடையாளம், ‘நீதி எனும் பாவனை’ தலையங்கமாகும். தலைமை நீதிபதி தம் பணி நிறைவாகி வீட்டுக்குச் சென்றுவிட்டால் உரிய நீதி வழங்க ஏற்ற ஒருவர் இருக்கமாட்டார் என்ற மாயையைத் தோற்றுவித்தது கேலிக்கூத்தே.
விசாரணை நடைபெற்ற நாற்பது நாட்களிலும் காலணி அணியாமல், விரதமிருந்து குழந்தை நாயகனுக்காக பராசரன் வாதிட்டாரென்பது வழக்குக்கு எவ்வகையில் தொடர்புடையதெனப் புரியவில்லை. நம்பிக்கையை அழுத்தமாகப் பதிவு செய்யவே வரலாற்றுச் சின்னமாக விளங்கிய பாபர் மசூதியை இடித்தது தவறெனக் கூறிவிட்டு, இடித்தவர்களுக்கே இடம் சொந்தமெனத் தீர்ப்பு வழங்கினால் இடித்த வழக்கு தவிடுபொடியாகிவிடுமெனத் தெரியாதா?
ஹிட்லரும் கோயபல்சும் அதிகாரத்தில் அமர்ந்து மதவெறியை விசிறிவிடும் சூழல், சட்ட ஒழுங்கைக் காக்கும் பொறுப்பு நீதிபதிகளுக்கானது என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கிவிட்டது. தனிநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தங்கள்மீது பாய்ந்துவிடுமோவென நீதிபதிகளே அஞ்சும் நிலை தீர்ப்பை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளது.
இஸ்லாமியர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளும் தீர்ப்பை வழங்கியிருந்தால் நாடு கலவர பூமியாக மாறிவிடும் என்ற சாமானியர்களின் அச்சத்தை நீதிபதிகளின் நெஞ்சில் குடியேற வைத்ததுதான் மோடி அரசின் சாதனை. ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கூட வெளிப்படையாகத் தங்கள் கண்டனங்களை மிக அழுத்தமாகப் பதிவு செய்யத் தவறிக் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருந்த நிலையில் காலச்சுவடு வெளிப்படையாகக் கூறியுள்ளது போற்றுதற்குரியது.
ஜெயகாந்தன் ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது: “ இது Court Of Law மட்டுமே. Coure Of Justice அல்ல.” இப்பொழுது வந்துள்ள தீர்ப்பையொட்டிப் பார்ப்போமாயின் இது Court Of Belief. அவ்வளவே! ஆழ்ந்த நம்பிக்கையுள்ளோராகக் காட்டிக்கொண்டால் எதை வேண்டுமானாலும் இடிக்கலாம்! இடிக்கப்பட்ட இடத்துக்குப் பட்டா வாங்கிக்கொள்ளலாம்!
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு
‘பேய் அரசாண்டால்...’ கட்டுரை இன்னொரு சுதந்திரப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. பாரதியின் ‘திமிழ்’ கட்டுரை அக்காலத்துத் தமிழ்ப் பண்டிதர்களிடையே காணப்பட்ட சில மேட்டிமைவாதிகளை எள்ளுவது போல் உள்ளது. இந்த வெளிக்கொணர்தலுக்கு ய. மணிகண்டன் பாராட்டுக்குரியவர்.
‘பாட்டுப் பிரசங்க பாரதியும் பட்டணத்து பட்லரும்’ தலைப்பே கட்டுரையின் சாரத்தை உணர்த்தும் பொருத்தப் பாட்டை வியக்க முடிகிறது. பாரதியும் அயோத்திதாசப் பண்டிதரும் ஒருத்தரையொருத்தர் பார்க்காமலே எதிரெதிர் கருத்து நிலையில் அவரவர் நிலைப்பாட்டில் இச்சமூகத்தை உயர்த்த முயன்றதை ஸ்டாலின் ராஜாங்கம் எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டத்தக்கது. இதை எவரையும் உயர்த்தி, தாழ்த்தாமல் நேர்த்தியாயாக சொன்னவிதம் மெச்சத்தக்கது. இருவருமே அக்காலத்தை விஞ்சிச் சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள். நல்ல கட்டுரை.
சமூக அக்கறையாளரும், பத்திரிகையாளருமான திரு எஸ். விஸ்வநாதனுக்கு நல்லதொரு நினைவஞ்சலி. இன்றைய அரசியல் சூழலில் அவர் இருக்கும்பட்சத்தில் காத்திரமான ஒரு கட்டுரையைக் கொடுத்து இந்திய ஒருமைப்பாட்டை விரும்பும் வாசகர் எண்ணிக்கையை உயர்த்தியிருப்பார், அடிப்படைவாதிகளின் முகத்திரையைக் கிழித்திருப்பார்.
ஜனநேசன்
மின்னஞ்சல் வழி
‘நீதி எனும் பாவனை தலையங்கம் ஆழம். ஐந்து நீதியரசர்களும் ஒன்றுகூடிச் சிந்தித்திருக்கிறார்கள். ஆனால் தீர்ப்பை மாயக் கரங்கள் எழுதிவிட்டன. சாதாரண பாமரர்களின் மனக்கணத்தில் அது கோவிலுக்கும் இல்லாமல் பொதுபயன்பாட்டுக்குரிய மையமாக அமைந்திருக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. நீதிமன்றம் ஒரு கனி மரத்தை அபகரிக்க நினைத்தவனுக்கு அதனை வழங்கிவிட்டு, அதிலுள்ள ஒரேயொரு கனியை மாத்திரம் அதன் உடைமையாளனுக்கு வழங்க சிபாரிசு செய்ததைப் போல வேடிக்கை செய்திருக்கிறது’ போன்ற ஆசிரியரின் கருத்துகள் பரிசீலனைக்கு உட்படுத்தக் கூடிய காரணிகளாகவே இருக்கின்றன.
இச்சூழலில் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று 99 சதவீத முஸ்லிம்கள் விருப்பம் தெரிவிப்பதாகவும் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மௌலானா ரஹ்மானி அயோத்தி தீர்ப்புக்குப் பிறகு நீதித்துறை மீதான தங்களது நம்பிக்கை வலுவிழந்திருப்பதாகவும் கூறிவருகிறார். மறுபக்கம் மேல் முறையீடு சமூகத்தில் பிரிவினையையும் மோதலையும் உருவாக்கும் இப்போது முஸ்லிம்களுக்கு முக்கியமானது பாபர் மசூதி அல்ல; கல்வி, பொருளாதாரம் போன்றவை தாம் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அறிவித்திருப்பதை முஸ்லிம் சமுதாயத்தினர் ஏற்கவில்லை.
மொத்தத்தில் இதை ஊதிப் பெருக்காமல் இத்துடன் முடித்துக் கொள்வதே நல்லது. பிளவு, மோதலின்றி இப்பிரச்னை சுமுகமான முடிவை எட்டவேண்டும் என்றே அனைத்துத் தரப்பினரும் விரும்புகின்றனர். நல்லது நடக்கக் காத்திருப்போம்!
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
காலச்சுவடு தனது நினைவு கூரத்தக்க இருபத்தைந்து ஆண்டு வெற்றிப்பயணத்தை எவ்விதச் சிறுஆரவாரமும் இல்லாமல் புத்தாண்டின் அடர்த்தியான மலராக வெளியிட்டுள்ளது. வாசகர்களின் வாசிப்பு மாட்சியின் வீச்சு மேலும் வீரியப்பட இந்த இதழ் சாட்சியமாய்த் திகழும். சமகால இதழியல் சவால்களைச் சந்தித்து, பல சாத்தியங்களை உள்ளடக்கி வலுவாகத் தனது தேர்ந்த வாசகர்கள் மத்தியில் நிலை நிறுத்திக்கொண்டதைப் பதிப்பாளர் தமது இயல்பான தன்னடக்கத்துடன் பதிவிட்டுள்ளது மன நெகிழ்வைத் தருகிறது.
‘யார்தான் இந்தியக் குடிமக்கள்,’ தலையங்கம் ஆளும் பா.ஜ.க.வின் அரசியல் ஆட்டங்களை ‘அந்நியன் திரைப்படத்தின் மையக் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு, தமது பிறழ்வையே தேசத்தின் இயல்பாக மாற்ற முயலும் மத்திய அரசின் உள்மன ஓட்டத்தைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது. இதுவே இன்றைய அரசியல் விமர்சகர்களின் எண்ணப் பிரதிபலிப்பாக உள்ளது.
இந்தச் சிறப்பிதழ் நான்கு சிறப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, வாசகர்களின் பன்முகப்பார்வை வெளிச்சத்திற்கு வழித்தடம் அமைத்துள்ளது. சுனில் கிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் வெளிவந்துள்ள காந்தி 150 கட்டுரைகள் காந்தியத் தாக்கத்தின் மகத்துவத்தைச் சிறப்பாக மீள்பார்வை செய்துள்ளது. காலச்சுவடு இத்தகையை காந்தியத்தைத் தக்க தருணத்தில் வாசகர்கள் மத்தியில் தூக்கி நிறுத்தியிருப்பது பெருமைக்குரிய முயற்சியாகும். குறிப்பாக ‘எதிரியை ஒத்துணர்தல்’ ‘காந்தியின் தேசியம்’ ஆகிய இரு கட்டுரைகளும் காந்தி என்ற பேராளுமையிடம் அந்த நெருக்கடியான காலக்கட்டத்திலேயே உதித்தெழுந்த உயர்ந்த தலைமைப் பக்குவத்தின் விரிந்த பார்வை உணர்வை இக்காலத்தின் பார்வைக்கு அப்படியே கொண்டு வந்துள்ளன. ‘காந்தி - வைதிகர்’ உரையாடலில் ‘முற்பிறப்பின் மோசமான கர்மாவின்படி அணுகமுடியாத சாதியில் பிறந்திருக்கிறார்கள்’ என்ற கேரள ஈழவ மக்களைக் குறிப்பிடும்பொழுது தார்மிக ரீதியிலான சிறு கோபக்குறி கூட காந்தியடிகளிடம் வெளிப்படவில்லையே! அது எப்படி சாத்தியமாயிற்று?
‘கதைத்தடம்’ சிறப்புப் பகுதியில், புகழ்பெற்ற ஆறு சிறுகதை எழுத்து முன்னோடிகளும் அன்றாட மனித வாழ்வின் உள்ளுணர்வு வெளிப்பாடுகளைத் தத்ரூபமான எளிய நடையில் வெளிக்கொணர்ந்துள்ள விதம் இன்றைய வளரும் இளம் எழுத்தாளர்கள் கவனத்தை ஈர்த்திட வேண்டும். வாழ்வின் எதார்த்தங்களை வைத்து இலக்கியத்தரத்தில் எப்படிக் கதை பின்னுவது என்பதை அறுவரும் நிரூபித்துள்ளனர்.
மொழி, மதம் ஆகிய இரண்டையும் வைத்து அரசியல் சித்து விளையாடல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கும் அசாதாரணச் சூழல் நிலவும் காலக்கட்டம் இது. பன்னெடுங்காலமாகவே மொழிஇயல் வல்லுநர்கள் மட்டுமல்லாது அரசியல் களத்திலும் சர்ச்சைகள் மிகுந்த பேசுபொருளாக ‘தமிழ் சமஸ்கிருத உறவு’ தலைப்பு இருந்துவருகிறது. சமீபத்திய கீழடி ஆய்வுகளும் பல அகலாய்வு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. அனைத்து ஆய்வுக்கட்டுரைகளும் தமக்குக் கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையில் வரலாற்றுச் சான்றுகளைப் பொதுப் பார்வைக்கு எடுத்துவைத்துள்ளன. கட்டுரைகளின் ஒட்டுமொத்தக் கருத்தாக்கங்கள் யாவை? ஒன்று: வேத, வைதிக, சாஸ்திரிய பாண்டித்தியங்கள் நிறைந்த மொழி சமஸ்கிருதம். இதிலிருந்து நிறையவே தமிழுக்கு வந்திருக்கின்றன. இரண்டு: இவ்வாறு எடுத்தாண்டவை முடிந்தவரை நன்கு தமிழ் வயப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணியை தொல்காப்பியர் முதல் வள்ளுவர், கம்பர்வரை ஆழ்வார்கள், நாயன்மார்கள் உட்பட்ட தமிழ் நிலப்புலவர்கள் மிகச்செம்மையாகச் செய்துள்ளனர். மூன்று: தமிழ், சமஸ்கிருதத்தை உள்வாங்கியதுபோல் சமஸ்கிருதம் தமிழை உள்வாங்கியதாக வரலாறு இல்லை. இறுதியாக, இந்தோ-ஐரோப்பிய அயல்மொழிக்குடும்பம் சார்ந்த சம்ஸ்கிருதம், ஆரியரது வருகைக்கு முன்பே, இந்தியத் தென்பகுதிகளிலும் இந்தியாவின் வேறு சிலபகுதிகளிலும் வியாபித்திருந்த திராவிட மொழிக் குடும்பம் சார்ந்த இயல்மொழி தமிழ்மீது தனது ஆதிக்கத்தைப் பரப்பி யுள்ளது. இவற்றை வாசகர்களும் உய்த்துணர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிறப்புப் பகுதிகளிலேயே, மிகவும் சுவாரஸ்யமானது மாயூரம் வேத நாயகரைப்பற்றிய ‘பொருநை பக்கங்கள்’. ஆன்றவிந்த சான்றோர்களான வேதநாயகருக்கும் ஆதீனத்தம்பிரான் சுப்பிரமணிய தேசிகருக்குமிடையே நடைபெற்ற கவிதைக் கடித சல்லாபங்கள் படிப்போர்க்கு மிகவும் உவகையூட்டுகின்றன. வேதநாயகரின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்,’ ‘சுகுணசுந்தரி’யுடன் அன்னாரது சந்தங்கள் நிறைந்த கவிதைப் படைப்புகள் பற்றிய கட்டுரைகளையும், மகாவித்வான் உள்ளிட்ட மூன்று பேராளுமைகளின் உள்ளார்ந்த நட்புப் பற்றியும் வாசித்து மகிழ்ந்த வாசகர்களின் உள்ளங்கள், அங்கேயே உலாவுகின்றனவேயன்றி எங்களுடன் இன்னும் வந்து சேரவில்லை.
சி. பாலையா
புதுக்கோட்டை
காலச்சுவடு இதழுக்கு இருபத்தைந்தாம் ஆண்டு-இனிய நல்வாழ்த்துகள். தமிழில் ஓர் இலக்கிய, சமூக, அரசியல் இதழ் கால்நூற்றாண்டை வெற்றிகரமாகக் கடந்து பீடுநடை போடுவது தமிழர்கள் பெருமைப்படும் செய்தி. காலச்சுவடு, என்றும் காலத்தின் சுவடுகளை நல்ல தமிழில் பதித்து வெற்றிவாகை சூட வாழ்த்துகிறேன்.
தலையங்கத்தின் ஒவ்வொரு பத்தியும் நகல் எடுக்க வேண்டிய குறிப்பாக அமைந்திருப்பது கண்டு சிலிர்த்துப்போனேன். இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை மதரீதியிலானதாக மாற்ற முனைந்துவிட்ட மத்திய பாஜக அரசு, அதை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கும் வாதங்கள் ஒவ்வொன்றும் பலவீனமாகவும், தர்க்கரீதியாகத் தோற்றுப்போனதாகவும் இருப்பதை நடுநிலைநின்று தீர்மானிப்போர் புரிந்துகொள்வர்.
இச்சட்டம், இந்திய முஸ்லிம்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாதெனப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் திரும்பத்திரும்பச் சொன்னாலும், முஸ்லிம்கள் கொண்டுள்ள அச்சத்திற்குப் பற்றுக்கோடாக இத்தலையங்கம் இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
அஸ்ஸாமில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபோது, உரிய சான்றிதழ்களைக் காட்ட முடியாமல் அவதியுற்றோரில் முஸ்லிம்கள் மட்டுமன்றி இந்துக்களும் இருந்தனர். இதனால் கால நிர்ணய அளவை 2014 என்று மாற்றியுள்ளனர். இதையடுத்து இந்துக்கள் எந்த ஆவணமும் காட்டவேண்டிய கட்டாயமில்லை என்று ஆக்கிவிட்டார்கள். அப்படியானால், இதே அளவுகோல் முஸ்லிம்களுக்குப் பொருந்தாதென்று வரையறுத்திருப்பது மதரீதியான பாகுபாடின்றி வேறென்ன?
சரியாகக் காட்டினாலும்கூட, எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டி ஆவணம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஒரு முஸ்லிம், தான் பயங்கரவாதி இல்லை என்று நிரூபித்தாக வேண்டும். ஆனால், ஒருவர் இந்துவாக இருந்தாலே அவர் காந்தியவாதி ஆகிவிடுவார். இந்த அரசின் பார்வையில். ‘உண்டு’ என்பதற்குச் சான்று காட்டலாமே தவிர, ‘இல்லை’ என்பதற்கு எவ்வாறு சான்று காட்ட முடியும்?
குடியுரிமைச் சட்டத்தை மதரீதியாக மட்டும் பாஜக மாற்றவில்லை. மொழிரீதியாகவும் மாற்றியிருப்பது, அதன் தாய்ச் சபையின் நூறாண்டுகாலத் திட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. அப்படி யில்லையென்றால், இந்துக்களையும் சீக்கியர்களையும் கணக்கில் சேர்த்துக்கொண்ட இச்சட்டம், தமிழ் இந்துக்களுக்கு அந்த உரிமையை ஏன் வழங்கவில்லை. இலங்கைத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் செய்த குற்றமென்ன? இந்துக்களாக இருந்தும் தமிழர்களாகப் பிறந்ததுதானே!
ஆக, யார் இந்தியக் குடிமக்கள் என்று சங் பரிவாரும் வர்ணாசிரமும்தான் நிர்ணயிக்கிறதென்றால், நாமெல்லாம் எந்த உலகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வி பிறப்பதைத் தவிர்க்க முடியவில்லை. பெரிய மக்கள் புரட்சிக்கு வித்திடுவதைக் கைவிட்டுப் பொருளாதாரம், சுகாதாரம், விஞ்ஞானம் முதலான துறைகளில் நாடு முன்னேற்றம் காண்பதற்குரிய உருப்படியான நடவடிக்கைகளில் அரசு தன் கவனத்தைத் திருப்ப வேண்டும்.
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை
‘தமிழ் சமஸ்கிருத உறவு’ கட்டுரைகளை வாசித்தேன். அது குறித்துச் சில பதிவுகள்.
சமஸ்கிருதம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காகச் சமஸ்கிருதம் கற்கப்பட வேண்டுமென்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.
பிராமண வெறுப்பு வளர்க்கப்படாத இலங்கையில் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை மிக்கவர்கள் உள்ளனர் என்ற தகவல் உள்ளது. அதே வேளையில் தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் கற்றவர் அருகிவிட்டனர். தொ.ப.மீ., பண்டிதமணி, வையாபுரிப்பிள்ளை, பன்மொழிப்புலவர் ஜகந்நாதராஜா ஆகியவர்களைப்போல அடுத்த தலைமுறை சமஸ்கிருத அறிஞர்கள் இல்லாமல் ஆகிவிட்டனர்.
‘கிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்’ என்ற கட்டுரை ஒரு தகவல் களஞ்சியம். இன்னும் கிறிஸ்தவச் சீர்திருத்தச் சபைகள் புது மொழிபெயர்ப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனது பிராமண நண்பரின் தந்தை காளிதாசரின் சில கவிதைகளைச் சொல்லித் தமிழில் பொருளும் சொன்னார். மேலும் கம்பரைவிட காளிதாசரை வாசிப்பது எளிது என்றார். இதைப்பற்றி அவரிடம் விரிவாகக்கேட்டறியும் முன்னர் அவர் மறைந்துவிட்டார். ஆனால் அவர் சமஸ்கிருத பண்டிதர் அல்ல. இதை நான் ஏன் சொல்லுகிறேனென்றால், இந்தப் பதினான்கு கட்டுரைகளிலும் ஒன்றில்கூட சமஸ்கிருத மொழியின் இலக்கிய இன்பம் குறிப்பிடப்படவில்லை.
இரா நாகசாமி எழுதிய ‘Tamilnadu The Land of Vedas, Thirukural, The Abridgement of Sasthras’ என்ற இரண்டு நூல்களையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவை இரண்டும் Tamil Arts Academy வெளியீடு.
மேலும் முனைவர் உண்ணிக்கிடாவு எழுதிய சங்ககாலக் கிருதிகளிலே தமிழ் ஸம்ஸ்காரம் சங்கப்பாடல்களில் சமஸ்கிருதத் தாக்கத்தை ஆராய்கிறது. இது கேரள சாகித்ய அகாதமி வெளியீடு.
கிழக்காசிய நாடுகளில் இந்து மதம், இந்திய நாகரிகம் பர்மா முதல் லாவோஸ்வரை பரவிக்கிடந்திருக்கிறது. சமஸ்கிருதமும் தமிழும் சென்றிருக்கிறது. இதைப்பற்றி Coedes, Vickery, RC Mazumdar, David Chandler போன்றோர் எழுதியுள்ளார்கள். தமிழும் சமஸ்கிருதமும் அறிந்த தமிழறிஞர்கள் (நீலகண்ட சாஸ்திரியைத் தவிர) அங்கு சென்று கல்வெட்டு ஆவணங்களை ஆய்ந்தார்களாவென்று தெரியவில்லை.
ஜே.பி. நோபிள் செல்லத்துரை
போடிநாயக்கனூர்
‘யார்தான் இந்தியக் குடிமக்கள்?’ தலையங்கம் ‘அந்நியன் திரைப்படக் கதாபாத்திரங்கள் மூலம் நிகழ்வனவற்றைத் தெளிவாகக் காட்டியுள்ளது. வழக்கு நீதிமன்ற நிலுவையில் இருக்கும் வேளையிலேயே பட்டப் பகலில் கும்பலாகச் சென்று பாபர் மசூதியை இடித்த வன்முறையாளர்களிடம் நீதிமன்றம் மண்டியிட நேர்ந்ததற்கு அடிப்படைக் காரணம் நாடாளுமன்றப் பெரும்பான்மையும் ராணுவமும் என்று எளிதில் புரிகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வேலைத் திட்டங்களை வரிசையாக நிறைவேற்றுவதற்கு மோடி - அமித்ஷா கூட்டணி நீதி, நியாயம், ஒழுக்கம் அனைத்தையும் காலில் போட்டு மிதிக்கத் தயாராக இருப்பதன் தொடக்கமே காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கம்.
பிரக்யா சிங் தாக்குர் கோட்சேவைப் பிரமாதமாகப் புகழ்ந்து பேசியது தற்செயல் நிகழ்வல்ல. அதன் தொடர் நிகழ்வு குஜராத்தில் மகாத்மா காந்தி சிலை உடைத்து நொறுக்கப்பட்டதாகும். “குட்டி நாயைவிட்டு வேட்டையாடுவது” என்பது இதுதான். அறிவிக்கப்படாத அவசர நிலையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறது பாஜக அரசு.
முப்படைகளுக்கும் ஒரு தலைமைத் தளபதியாக விபின் ராவத்தை மோடி நியமித்துள்ளார். பரபரப்பளவில் மிகப்பெரிய நாட்டில் ராணுவப் புரட்சி சாத்தியமற்றது என்பது நாளடைவில் பொய்த்துப் போகும் வாய்ப்பு உருவாகும். ராவத், அரசியல் பேசியதால்தான் இப்பதவி கிடைத்ததாக எண்ணும்போது பாஜகவுக்கு எதிரான, மதச்சார்பற்ற அரசியல் எதிர்வரும் ராணுவத் தலைவர் களின் மனத்தை அசைக்காதென்பதற்கு என்ன உறுதி?
பொருளாதாரச் சீரழிவைப்பற்றி மோடிக்கு எள்ளளவும் கவலையில்லை. ஹிட்லருக்கு இருந்த யூத வெறுப்பைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான இஸ்லாமிய வெறுப்பு மோடி - அமித் ஷாவை ஆட்டி வருகிறது. ‘வரலாறு திரும்புகிறது’ என்ற வாசகம் இந்த நூற்றாண்டின் இரண்டாம் கால்பாதிக்குள் நிரூபணமாகும். நாடாளுமன்றப் பெரும்பான்மை என்ற ஒன்றைக் கொண்டு ஆட்டம் போடும் மோடி - அமித் ஷாவைப் பார்க்கும்போது காண்டேகரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. அது யாதெனில் “மெஜாரிட்டி என்பது நிறைய கைகளே தவிர, நிறையத் தலைகள் அல்ல!”
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு - 626 132
காலச்சுவடு இருபத்தைந்தாமாண்டுச் சிறப்பிதழ், அதிகப் பக்கங்களில் கனமான கருத்தாழமிக்க படைப்புகளோடு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வணிக இதழ்களிலிருந்து மாறுபட்டுக் கருத்துரிமைக்கும் படைப்புரிமைக்கும் முக்கியத்துவம் தந்து, முழு மனப்பான்மையை விலக்கி, வாசகர்களின் அறிவை மேம்படுத்தும் வண்ணம், உலகத் தமிழிதழாகப் பயணித்து வருவது போற்றுவதற்குரியது.
நிற்க, யார்தான் இந்தியக் குடிமக்கள்? கட்டுரை ஆழமாகவும் நடுநிலையோடும் எழுதப்பெற்றிருப்பது சிந்திக்கத்தக்கது. சிறுபான்மையினருக்கு அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளிலேயே கைவைத்து, இரண்டாந்தரக் குடிகளாக நடத்திவந்த ஆட்சியாளர்கள், தற்போது சட்டத்தையே மாற்றி இசுலாமியர்கள், சிறுபான்மையினர்களின் குடியுரிமையைப் பறிக்கின்ற ஆபத்தான வேலைகளில் இறங்கியுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து ஆவணங்களின்றி அகதிகளாக வரும் இசுலாமியர் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். அதாவது அகதிகளாக வரும் இசுலாமியர்கள் திருப்பி அனுப்பப்பெறுவார்கள். நீங்கள் இந்தியர் என்பதை நீங்களே நிரூபித்தாக வேண்டும். இதற்காக எம்.ஆர்.சி. சிஷ்டம் நடைமுறைப்படுத்தப்பெறவுள்ளது. பதினான்கு அடையாள ஆவணங்களில் ஏதேனும் மூன்று அடையாள சான்றாவணங்களைத் தவறின்றி வைத்திருக்க வேண்டும். சிறிய தவறிருப்பின் ‘அகதி’ அல்லது ‘இந்தியர் அல்லர்’ எனக் கொள்ளப்பெற்று நாடு கடத்தப்படலாம், உங்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்றெல்லாம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் உள்ளது. இது சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் அறிவியலாளர்கள், கல்லியாளர்கள், அறிவு ஜீவிகளால் அலசப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேசச் சட்டங்களை மீறும் வகையில் மத்திய அரசு நடந்துகொள்வது சரியல்ல என்று முன்னாள் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் கருத்து தெரிவித்திருப்பதையும் அரசியல்ரீதியாக ஏற்படும் பின்விளைவுகளையும் எண்ணிப் பார்த்தும், நடுவணரசு செயல்படும் என்று நம்புவோமாக!
நவீன்குமார்
நடுவிக்கோட்டை