திருப்புதல்கள் - திருத்தங்கள்
திருப்புதல்கள் - திருத்தங்கள்
விவாதம்
தி.ம. தனராஜ்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதிய ‘கிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்’ கட்டுரையை முன்வைத்து:
இது கட்டுரைக்கான எதிர்வினையல்ல. அக்கட்டுரை தெரிந்துகொண்ட கருத்துக்கேற்ப பல கருத்துகளையும் தகவல்களையும் உள்ளடக்கியிருந்தது. கூடுதலாக மேலும் சில கருத்துகளும் தகவல்களும் கட்டுரையில் விடுபட்டுப்போன மற்றொரு கோணத்தை நமக்குத் தரலாமென்பதால் அவற்றை முன்வைக்கிறேன்.
கிறிஸ்தவத் திருமுறையில் வடமொழிக் கலப்புக்கான காரணங்களாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.
1. கிரேக்கம், எபிரேயம், இலத்தீன் போன்ற உயர்ந்த மொழிகளிலே திருமறை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சாதாரண மொழிகளில் அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இயலாது. இதனடிப்படையில் சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழியாகவும் தமிதைச் சாதாரண மொழியாகவும் அப்போதைய மொழிபெயர்ப்பாளர்கள் கண்டனர்.
2. தமிழைக் காட்டிலும் சமஸ்கிருதம் செம்மையான மொழியாகத் தென்பட்டது.
3. இந்தியச் சமய நூல்கள் சமஸ்கிருதத்திலேயே இருந்தன.
4. உயர்வகுப்பினரின் மணிப்பிரவாள நடையில் வடசொற்களே மிகுந்திருந்தன.
5. சமூகத்தில் உயர்வகுப்பினராகக் கருதப்பட்ட பிராமணர்களைக் கவரும் பொருட்டு சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் கையாளப்பட்டன.
இவையே சமஸ்கிருதக் கலப்புக்கு ஆசிரியர் கூறும் காரணங்கள். இக்காரணங்கள் சரியானவையாக இருக்கலாம்தான்! ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும்போது முதல் மொழிபெயர்ப்புகளிலும் திருப்புதல்களிலும் ஈடுபட்டவர்கள் மக்கள்மொழியான தமிழ்மீதும் பேச்சுமொழி மீதும் ஈர்ப்பில்லாதவர்களாக இருந்தனரென்ற பிம்பமே தெரிகிறது. உயர்சாதியினரை மட்டுமே கருத்தில் கொண்டு இவ்வகையான செயல்களில் ஈடுபட்டனரெனத் தவறாக விளங்கிக்கொள்ள அதுவழிவகுக்கும்.
ஆனால், உண்மையில் கிறித்தவத் திருமறையை முதலில் மொழிபெயர்த்தவர்களான சீகன்பால்கு, பப்ரீஷியஸ், ரேனியஸ் ஆகியோர் அன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருந்தவர்களும் தாம் அன்றாடம் சந்திக்கும் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தாய் இருந்தார்கள். உயர்தர மக்களன்றி எளியோரும் புரிந்துகொள்ள வேண்டுமென்று உறுதியாய் இருந்தனர். ஆகவேதான் எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்திய சொற்களைத் தங்களுடைய மொழிபெயர்ப்புகளில் / திருப்புதல்களில் பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, மொழிபெயர்ப்பில் முதலில் ஈடுபட்ட சீகன்பால்கு, திசைகளைக் குறிக்க ‘எழுவான் திசை’ (கிழக்கு) என்றும் ‘படுவான் திசை’ (மேற்கு) என்றும் எளியோர் பயன்படுத்திய சொற்களையே பயன்படுத்தினார்.
மக்கள்மொழியை உபயோகப்படுத்தியதாலும் உரைநடை வடிவில் இருந்ததாலும் சீகன்பால்குவின் மொழிபெயர்ப்பை (முதல் மொழிபெயர்ப்பு) அன்றைய உயர்வகுப்பினர் ‘பறையர்களின் வேதம்’ என்று சொல்லி நிராகரித்தனர். மக்கள் மொழியையே விரும்பிய சீகன்பால்கு கிறிஸ்தவ இறையியல் தொடர்பான பதங்கள் மிகச்சரியானதாக இருக்கவேண்டுவதில் கவனமாய் இருந்தார். இவருக்குமுன் இந்தியா வந்திருந்த கத்தோலிக்க மறைபரப்பாளர்கள் பயன்படுத்திய, குறிப்பாக தத்துவப் போதகர் என்றழைக்கப்பட்ட இராபர்ட் டி நொபிலி பயன்படுத்திய இறையியல் பதங்கள் சரியானவையாகப் பட்டமையால் அவற்றைப் பயன்படுத்தினார். அவ்வாறாக புகுந்தவைகள்தாம் சருவேசுவரன், இயேசுநாதர், மனுசாவதாரம், பராபரன் போன்ற சொற்கள். இராபர்ட் டி நொபிலி என்ற சேசுசபைத் துறவி தன்னை பிராமணன் எனவும் ரோமாபுரியிலிருந்து வந்த சந்நியாசி எனவும் அடையாளப்படுத்திக்கொண்டு தமிழகத்திலுள்ள பிராமணர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும் என விரும்பினார்; அதன் பொருட்டுச் செயல்பட்டதையும் இங்கே தெரிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும். கத்தோலிக்கர்கள் பயன்படுத்திய இச்சமஸ்கிருத சொற்கள் இல்லாதிருந்தால் சீகன்பால்கு எம்மாதிரியான சொற்களைப் பயன்படுத்தியிருப்பார் என எண்ணுவது வியப்புக்குரியதாக இருக்கிறது.
சீகன்பால்குவுக்கு அடுத்தபடியாக விவிலிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டவர்களான பப்ரீஷியஸ், ரேனியஸ் ஆகியோரும் எல்லா தரப்பு மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியிலேயே மொழிபெயர்ப்பு / திருப்புதல் இருக்க வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தனர். பப்ரீஷியஸ் தான் செய்த மொழிபெயர்ப்பை முதலில் எல்லா தரப்பு மக்களுக்கும் வாசித்துக்காட்டி அதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்கிறார்களா, அதுவும் சரியாகப் புரிந்துகொள்கிறார்களா, என்று உறுதிசெய்துகொண்ட பிறகே அச்சுக்கு அனுப்பியிருக்கிறார். ஒருவேளை தனது மொழிபெயர்ப்பு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குப் புரியாமல் போனதென்றால் அதைத் திருத்தி அவர்களுக்கும் புரிந்தது எனத் தெரிந்துகொண்ட பிறகே அச்சுக்கு அனுப்பியிருக்கிறார். இவரைப் போலவே இவருக்குப்பின் வந்த ரேனியஸ் என்பவரும் அதிமேதாவித்தனமான மொழியும் வேண்டாம், மிகவும் கொச்சையான பேச்சுத்தமிழும் வேண்டாம், இரண்டுக்கும் இடைப்பட்ட மொழியே அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியையே மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்த வேண்டுவதில் உறுதியாய் இருந்தார்.
சச்சிதானந்தன் சுகிர்தராஜா தனது கட்டுரையின் இறுதிப் பகுதியில் பின்வருமாறு சொல்லிச் செல்கிறார். அவர் கூறுவது: “ஒவ்வொரு புதுத் திருப்புதலுமே தமிழ்த்திருமறையில் உட்பொதிந்திருக்கும் சமஸ்கிருதத்தன்மையைச் சுத்தி செய்வதுதான்.” ஒருசில திருப்புதலுக்கு இது சரியானதாக இருக்கலாம். ஒவ்வொரு புதுத்திருப்புதலும் உள்ளிருக்கும் சமஸ்கிருதத்தைச் சுத்தி செய்வதென்று சொல்வது தவறானதாக இருக்கலாம்.
உதாரணமாக ரேனியஸ் செய்த திருப்புதலை எடுத்துக்கொண்டால், அது அவருக்குமுன் செய்யப்பட்ட பப்ரீஷியஸ் திருப்புதலில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு முறைக்கு மாறான ஒன்றாகும். பப்ரீஷியஸ் ‘சொல்லுக்குச் சொல்’ என்ற மொழிபெயர்ப்புக் கொள்கையின் அடிப்படையில் தனது மொழிபெயர்ப்பை / திருப்புதலைச் செய்திருந்தார். மூல நூலில் இருந்த வாக்கிய அமைப்பையொற்றியே தனது தமிழ் மொழிபெயர்ப்பையும் வடிவமைத்திருந்தார். எபிரேய, கிரேக்க மொழி வாக்கிய அமைப்பையொற்றித் தமிழ் திருமறை வாக்கிய அமைப்பும் இருக்க வேண்டும் என எண்ணினார்.
தமிழ் இலக்கணம் அதற்கு அனுமதிக்காது என்றாலும் அதையே கடைப்பிடித்தார். மூல நூலிற்கு (இறைவார்த்தை) மிக உண்மையாக இருக்க வேண்டுமென்பதே அவரை உந்தித்தள்ளிய கருத்தாக இருந்தது. ஆனால் அவருக்குப்பின் அவருடைய திருப்புதலில் திருத்தங்கள் செய்த ரேனியஸ் ‘கருத்தை மொழிபெயர்த்தல்’ எனும் கொள்கை அடிப்படையில் தனது திருப்புதலை அமைத்தார். அதன்படி, மூல நூலிலுள்ளதை வாசித்து அறிந்துகொண்டு அதை / அதன் அர்த்தத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தாரோ (தமிழ்) அந்த மொழியின் தனித்தன்மைக்கேற்ப அதைத் தெரிவித்தார். பப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பு தமிழுக்கு அந்நியமாகப்பட்டது. அதை மாற்ற, ரேனியஸ் தனது திருப்புதலைக் கொண்டுவந்தார். சமஸ்கிருதத் தன்மையைச் சுத்தி செய்வதற்கான ஒன்றாக இத்திருப்புதல் அமையவில்லை.
இறுதியாக, மொழி காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சொற்கள் சில காலப்போக்கில் புதிய பொருள்களைப் பெறுகின்றன. சிலசொற்கள் சிலகாலங்களுக்குப் பின்னர் வழக்கொழிந்து போய்விடுகின்றன. புதிய சொற்கள் தங்களுக்கான இடத்தை ஏற்படுத்திக்கொள்கின்றன. ஆகவேதான், விவிலிய மொழிபெயர்ப்பாளர்கள் காலத்திற்கேற்றாற்போல் புதிய புதிய மொழிபெயர்ப்புகளை அல்லது திருப்புதல்களைக் கொண்டுவர வேண்டும் என கருத்து தெரிவிக்கிறார்கள். கிறித்தவ நம்பிக்கையின்படி இறைவனே இறைவார்த்தை (திருமறை) வழியாக உறவாடுகிறார். தான் புரிந்துகொள்ளப்பட வேண்டுமென்பதே அவரின் ஆசை. மொழிபெயர்ப்புகளும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் செவிக்கு இனிதாக இருக்கும் மொழிபெயர்ப்பு புரிந்துகொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம்.
இவையனைத்தையும் கருத்தில் கொண்டு கட்டுரையை வாசித்தால் அது இன்னும் பெரிதாக விரிந்துகொள்ளும்.
இதில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கருத்துகள் சரோஜினி பாக்கியமுத்து எழுதிய ‘விவிலியமும் தமிழும்’ நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.