கவிதைகள்
கவிதைகள்
பெரு. விஷ்ணுகுமார்
1. பம்பரம்
கொல்லனின் கட்டைவிரலில் சுழலும்
தச்சனின் உடல்தான்
எவ்வளவு சீக்கிரம் வயதாகி விழுகிறது
மனைவியின் சடைநீளத்தை
உடலெங்கும் சுற்றியபடிச்
சேலையை லாவகமாய்ப் பின்னிழுக்க
ஒன்றிலிருந்து வெளியேறுகிறது மற்றொன்று
ஈயநிறச்சாயமிட்ட நாணத்தின் கட்டைவிரலால்
பூமியைக் குடைந்துகொண்டிருந்தவள்
தினவு தீர்ந்தும் இளைத்தபாடில்லை.
எல்லா பம்பரமும் ஒரே வகைதான்
சுழன்று முடிந்து கீழே விழுகையிலும்
இன்னும் கொஞ்சம்
இயங்கலாமென்று முயற்சிக்கும்,
அவள் மோகத்தில் விக்கியபடி
அவனைத் தரையிலெறிய,
எத்தகு வேகத்தில்
யார் சுழற்றியெறிந்த பம்பரமோ
இப்பூமி...
2. மரம் -மாறி அமர்ந்தவன்
தானும் பறவையென்று பறந்துகொண்டிருந்த பட்டமொன்று
வாலறுந்து நிலைதவறி
ஒரு பூங்காவில் ஆப்பிளை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும்
என் முன்னே விழுந்தது
என்ன இது
ஒருவேளை மரம் மாறி அமர்ந்திருக்கிறேனா?
இருக்கும் குழப்பத்தில் இதுவேறு
கருங்கும்மென மோடமிட்டு
பெய்யக் காத்திருக்கும் மழையில்
சிந்தவிருக்கும் அத்தனை கயிறுகளில்
ஒன்றைக்கூடப் பிடித்து இயக்க
ஆளின்றி அலையப்போகும் பட்டங்களே,
மேகங்களே
தயைகூர்ந்து கொஞ்சம் கண்ணில் படாதபடி
மறைவாக நில்லுங்கள்
சற்றுநேரத்தில்
பூமிக்கு ஈர்ப்புவிசை வந்ததும் நானே அழைக்கிறேன்
விடிய விடியப் பெய்வீர்களாம்
3. இரை
அன்றாடம் வெற்றுவலையோடு வீடு திரும்புபவன்
வேறு வழியின்றி
ஒவ்வொரு நாளாகத்தான் வளர்த்த பிராணிகளை
வலைக்குள் பொருத்திப் பார்க்கின்றான்
கடலையே பார்த்திராத அவற்றிற்கோ ஒரே குழப்பம்
தாம் எந்தவகை இனமென்று
மனைவியோ,
இன்னும் சற்று ஆழம் சென்று தேடலாமல்லவா என்கிறாள்
அச்சமயம் அனிச்சையாக அவன் குழந்தைகள்
வலையை அணிந்து விளையாடிக்கொண்டிருக்க,
இவனுக்கும் இன்று
இவ்வளவு பெரிய மீன்களைப் பிடித்திருக்கிறோமேயென்று
உள்ளூரப் பெருமையாகத் தானிருந்தது
இதற்குத்தான் கூறியது
இன்னும் சற்று ஆழம் சென்று தேடலாமல்லவா...
மறுநாள் மனைவியும் அடுத்தநாள் அவனும்
தாமாகவே முன்வந்து வலையை அணிந்துகொள்ள
அவ்வளவுதான்
கடலில் இனிபிடிப்பதற்குக்
கடைசி மீனும் இல்லை
4. வேடிக்கை பார்ப்பவள்
கண்ணாடிக் கதவில் பிரதிபலித்த உருவம்
வெளியே நின்று
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அவளை
அக்கடையினுள்ளே இருப்பதாகக் காட்டியது.
கண்காணிப்புக் கருவியும் அறியாதபடி
தன் பிம்பம் மட்டும்
அங்காடியினுள் நுழைந்திருப்பதை உணர்ந்தவள்
ஆசையாய் அங்கிருக்கும் நகையொன்றை
அணிந்துகொள்ள முற்படுகிறாள்
மேலும் அதை
அருகிலிருந்த கணவனையே மாட்டிவிடச் சொல்கிறாள்
நிலைமையைப் புரிந்துகொண்ட அவனோ
அவளின் தோளை உலுக்கி
‘போதும் வெளியே வா
யாரும் பார்ப்பதற்குள் கிளம்பிவிடுவோம்’ என்க,
வெகுநேரமாய்
குளிரூட்டப்பட்ட அறையிலேயே இருந்துவிட்டு
திடீரென வெளியே வந்ததும்
மொத்த வாழ்வையும்
ஒரு மாதிரி வெக்கையாக உணர்ந்தாள்.
மின்னஞ்சல் : rpk.vishnu@gmail.com