43ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
தலையங்கம்
43ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
தமிழ் மக்களிடையில் வாசிப்புப் பழக்கம் ஏற்படவும் நிலைபெறவும் தொடரவும் காரணமாக இருப்பவற்றுள் சென்னைப் புத்தகக் காட்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்குண்டு. அதைத் தொடர்ந்து நடத்தும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) பாராட்டுக்குரியது. இந்தப் பண்பாட்டு நிகழ்வை நீண்டகாலமாகத் தடையின்றி நடத்துவதன்மூலம் அது வரலாற்றுக் கடமை ஒன்றை நிறைவேற்றி வருகிறது.
1977இல் தொடங்கிய சென்னைப் புத்தகக் காட்சி 2020 ஜனவரியில் 43 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. ஒரு புத்தகக் காட்சி இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக நடத்தப்படுவதும் தென்னிந்தியாவிலேயே பெரிய புத்தகக் காட்சியாக மாறியிருப்பதுவும் பபாசியின் சாதனைகள். தொடக்க ஆண்டுகளில் வாசகர்கள் ஒரே கூரையின்கீழ் புத்தகங்கள் வாங்க உதவும் ஏற்பாடாகவும் எழுத்தாளர்கள் தமது வாசகர்களைக் காணத் துணைபுரியும் வாய்ப்பாகவும் மட்டுமே புத்தகக் காட்சி இருந்தது. பொது நூலகங்களைத் தவிர புதிய நூல்களை அறிவதற்கும் பெறுவதற்குமான வழிகள் அரிதாய் இருந்தன. விற்பனையாளர் கட்டமைப்புகள் பரவலாக இல்லாமல் இருந்தன. எனவே புதிய புத்தகங்களைப் பார்க்கவும் வாங்கவும் புத்தகக் காட்சியே பெரும் வாய்ப்பாகக் கருதப்பட்டது.
அன்று மொத்த மக்கள் திரளில் சிறுபகுதியின் வரவேற்புக்குரிய நிகழ்வாகவே புத்தகக்காட்சி இருந்தது. ‘ஜோல்னாப் பையர்’களான சிலருக்கும் முதன்மை நீரோட்டத்திலிருந்து விலகிய ‘அந்நியர்கள்’ சிலருக்கும் உரிய ஆண்டுச் சடங்காகவே பொதுச் சமூகம் புத்தகக் காட்சியைக் கருதியது. பொதுச் சமூகத்தின் கேளிக்கை மனப்பான்மையை ஒட்டி இயங்கிய ஊடகங்களும் -அந்த வேடிக்கைப் பார்வையையே ஊக்குவித்தன. இவற்றை மீறிப் புத்தகக் காட்சி ஒரு பண்பாட்டு நிகழ்வு, கருத்துப் பகிர்வுக்கான களம், மொழியின் நாடித்துடிப்பைத் தொட்டுணரும் ஆய்வுக்கூடம் என்ற நிலையை இன்று அடைந்திருக்கிறது.
புத்தகக் காட்சி ஒரு மொழியின் இலக்கியத்திலும் கல்வியிலும் அதுவரையான வரலாற்றிலும் என்ன நிகழ்ந்திருக்கிறதென்பதை அதன் பயனாளர்கள் நேரடியாகக் கண்டறியும் வழிமுறை. புத்தாயிரத்திற்கு முன்வரையிலும் புத்தகக் கண்காட்சியின் வெற்றி அதன் விற்பனையை முன்வைத்துப் பேசப்படவில்லை. புதிதாக என்ன இலக்கியப் போக்குகள் தலையெடுத்திருக்கின்றன, புதிய ஆசிரியர்கள் யார் வந்திருக்கிறார்கள், புதிய தொழில்நுட்பங்கள் எவை சாத்தியமாகியிருக்கின்றன என்பனவே பேசுபொருள்களாகியிருந்தன. இதன் பொருள் புத்தகம் ஒரு விற்பனைப் பண்டம் மட்டுமல்ல, பண்பாட்டுச் செயற்கருவியும் என்பதுதான்.
உற்பத்தி செய்யப்பட்ட பொருளாகப் புத்தகத்துக்கு வியாபார மதிப்பு உள்ளது; அதுவும் கருதப்பட வேண்டியது. அதைவிட முக்கியம் அந்த நூல் வெளிப்படுத்தும் மறைமுக மதிப்பு; கருத்து அடிப்படையிலான மதிப்பு. இந்த மதிப்பே நூலின் விற்பனை விலையைப் பொருட்படுத்தாது வாசகரை வாங்கத் தூண்டுகிறது. வாசிப்பின் வாயிலாக அதைப் பண்பாட்டுக் கருவியாக மாற்றுகிறது. இந்த மாற்றம் மிக முக்கியமானது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள கருத்தியல் மாற்றங்கள், உலகமயமாக்கப்பட்ட சந்தை, புத்தாயிரத்தில் அறிமுகமான புதிய தகவல் தொழில்நுட்பம் இவை அனைத்தும் புதிய புத்தக வாசிப்பு முறைகளையும், வாசக ஏற்புகளையும் முன்வைத்தன. தமிழகத்தில் கல்விக்கூடங்களிலிருந்து வெளிவந்த புதிய தலைமுறையினர், தகவல் தொழில்நுட்பப் புரட்சியினால் உருவான இளம் வாசகர் திரள், பல்துறை அறிவுசார் குழுக்கள், செயல்பாட்டாளர்கள் இந்த மாற்றத்தை முன்னெடுத்தனர்; தவிர்க்க இயலாததாக்கினர். இதன்விளைவாக பபாசியின் நடைமுறையிலும் மாற்றம் தென்பட்டது. கண்காட்சியின் நோக்கம் வெறும் புத்தக விற்பனையன்று என்று உணர்ந்தது. பெருகிவந்த வாசகர் கூட்டம் இடப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. வேறு இடங்களைத் தேடச்செய்தது. அரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது. கட்டமைப்பை விரிவுபடுத்த வற்புறுத்தியது. அன்று பொறுப்பிலிருந்த பபாசி நிர்வாகக் குழுவினர் மேற்கொண்ட சில மாற்றங்கள் புத்தகக் கண்காட்சியைப் பண்பாட்டு நிகழ்வாக ஆக்கின. அதன்பின்னர் அவ்வப்போது பொறுப்புக்கு வந்த குழுக்கள் இந்த மாதிரியையே பின்தொடர்ந்தன. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் பெருகிவரும் வாசகர் திரளைக் கணக்கில் கொள்ளவோ, புத்தகப் பதிப்பு விற்பனைமுறைகளில் தொடர்ந்து நிகழும் புதிய மாற்றங்களைக் கவனத்தில் ஏற்கவோ இக்குழுக்கள் தவறிவிட்டன. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொண்ட மாற்றங்களையே இன்றும் பின்தொடர்கின்றன. காலத்துக்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாத பபாசியின் போக்கே இன்று அதை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது.
43ஆவது புத்தகக் காட்சியில் பபாசிக்கு எதிராக வலுவான கண்டனக் குரல்கள் வேறு காரணங்களுக்காகவும் எழுந்தன. குறிப்பாக, கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள அமைந்த களமான புத்தகக் காட்சியின் கருத்துரிமைக்கு அனுமதி மறுத்த புதிய நிர்வாகக் குழுவின் செயல்கள் விமர்சனத்துக்குரியவை.
அரசுக்கு எதிரான கருத்துகள் கொண்ட நூல்களை வைத்திருந்ததாக ‘மக்கள் செய்தி மைய’த்தின் அரங்கை பபாசி காலிசெய்ய நிர்ப்பந்தித்தது. அதன் உரிமையாளர் அன்பழகனைக் கைது செய்யத் துணைபோனது. கருத்துரிமைக்கு ஆதரவு காட்ட வேண்டிய ஓர் அமைப்பு அதற்கெதிராகச் செயல்பட்டுத் தீராப் பழியைத் தேடிக்கொண்டது. பொதுவரங்கில் மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைப்பற்றிப் பேசியதற்காக எழுத்தாளர் கரு. ஆறுமுகத் தமிழனின் உரையைப் பாதியில் நிறுத்தியது. இதுவும் கண்டனத்துக்குள்ளானது. காட்சியரங்கில் அமைந்திருந்த ‘எழுத்தாளர் முற்ற’த்தில் பேச ஒப்புக்கொண்டிருந்த பலரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் தங்கள் பங்கேற்பை விலக்கிக்கொண்டனர். மக்களவை உறுப்பினரான சு. வெங்கடேசன் அரங்க மேடையிலேயே தனது கண்டனத்தை எடுத்துச்சொல்லி வெளிநடப்புச் செய்தார்.
பபாசி பதிப்பாளர், விற்பனையாளர்கள் ஒன்றிணைந்த லாப நோக்கமற்ற அமைப்பு. அது அரசின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியலாமே தவிர அதன் ஏவலாளராக மாறவேண்டியதில்லை. அரசுக்கு ஆதரவு திரட்டுவதோ காப்பாற்றுவதோ அதன் வேலையல்ல. ஆனால் தற்போதைய பபாசி நிர்வாகக் குழு கையது கொண்டு மெய்யது பொத்தி அரசின் முன் கும்பிட்டு நின்றது. புத்தகக் காட்சி வரலாற்றில் இந்தக் கறைபடிந்த சித்திரம் ஒருபோதும் நீங்காது.
வாசிப்புப் பண்பாட்டின் திருவிழாவாக அடையாளங் காட்டப்படும் புத்தகக் காட்சியில் யாரை முன்னிறுத்துவது என்பதில் கவனம் தேவை. பிற இடங்களில் புத்தகக் காட்சிகளை எழுத்தாளர்களோ சான்றோர்களோ தொடங்கிவைக்கிறார்கள். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அழைப்பாளர்களாக வரவேற்கப்படுகிறார்கள். பபாசியின் கண்காட்சியில் இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் விருந்தாளிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த ‘விருந்தோம்பல்’ நகைப்புக்குரியது; கண்டிக்கத்தக்கது.
எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் புத்தகக் கண்காட்சி ஒரு பண்பாட்டு நிகழ்வு என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அதை மேம்போக்காகக் கருதும் ஒரே அமைப்பு பபாசி மட்டும்தான். புத்தக அரங்குகளுக்கான இடங்களைச் சுருக்கி ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கும் பல சரக்கு வியாபாரங்களுக்கும் முன்னுரிமை அளிப்பதிலிருந்து அது தெளிவாகிறது. வாசகருடன் எழுத்தாளர் உரையாடும் வாய்ப்பை அளிக்கும் அரங்கை, ஈசான்ய மூலையில் - சரியாகக் கழிப்பிட நாற்றப் பின்னணியில் - அமைப்பது ஓர் அவமதிப்பு என்று பபாசி உணர்வதில்லை.
கடந்த இருபது ஆண்டுகளில் தமிழில் புத்தக வாசிப்பு வளர்ச்சிபெற்றிருக்கிறது. மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் வளர்ச்சி விகிதம் குறைவு. எனினும் சென்னைப் புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் வாசகர் எண்ணிக்கை பெருகிவருகிறது. புதிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது. அதேநேரம் முன்பைவிட எளிதாகப் புத்தகங்களை இன்று வாங்கிவிட முடிகிறது. அதற்கான வசதிகள் உள்ளன. புத்தகக் காட்சியில் அளிக்கப்படும் விலை குறைப்பைவிட அதிகமான சலுகைத் தொகையில் புத்தகங்களைப் பெற முடியும். இணைய விற்பனை அதை நடைமுறைப்படுத்தியுள்ளது. இருந்த இடத்திலிருந்தே விரும்பிய நூலைத் தருவிக்க முடியும். இத்தனை வசதிகளையும் மீறித்தான் புத்தகக் காட்சிக்கு வாசகர்கள் வருகின்றனர். உலகெங்கும் பரவலாகியுள்ள அறிவுத் தேட்டத்தின் பகுதி இது.
43ஆவது சென்னை புத்தகக் காட்சிக்கு வருகைதந்த வாசகர் எண்ணிக்கை சுமார் பதினான்கு லட்சம் என்று கூறப்படுகிறது. சென்னை தவிர வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் வாசகர்கள் வந்திருந்தனர். ஆனால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கையாளுவதற்கான கட்டமைப்பு வசதிகளை பபாசி ஏற்படுத்தவில்லையென்பதே பரவலான குற்றச்சாட்டு. மக்கள் நடமாடும் இடங்கள் குறுகலாக, மேடு பள்ளமாக இருந்தமை, பெருங்கூட்டத்திற்குப் போதுமான காற்றோட்ட வசதி இல்லாமை, பிரதான சாலையிலிருந்து அரங்கிற்குச் செல்லும் நீண்ட பாதையில் வாகன வசதியின்மை, இவை பெருங் குறைகள். பபாசி போன்ற அனுபவ முதிர்ச்சி கொண்ட ஓர் அமைப்பு இதை நொடிப் பொழுதில் தீர்க்க இயலும். தொடக்க விழாவில் அரசு அளிக்கவிருப்பதாகத் தமிழக முதல்வர் அறிவித்த எழுபத்தைந்து இலட்ச ரூபாயை இந்தக் கட்டமைப்பு மேம்பாட்டுக்குப் பயன்படுத்தினாலே போதும்.
சென்னைப் புத்தகக் காட்சி இன்று சர்வதேசக் கவனத்தை எட்டியுள்ளது. அது பதிப்புத் துறைக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் வலிமை சேர்ப்பது. ஊடகங்கள் புத்தகக் காட்சியைக் கண்டுகொள்ளாத காலமொன்று இருந்தது. புத்தகக் காட்சிக்குக் கிடைத்துவரும் வரவேற்பு அதை நேர்நின்று பார்க்கும் நிலையை ஊடகங்களிடம் ஏற்படுத்தியுள்ளது. சரியாகச் சொன்னால் ஆதரவாக உதவும் போக்கை உருவாக்கியுள்ளது. நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் புத்தகக் காட்சியை அன்றாட நிகழ்வாகக் கொண்டாடின. சினிமாவில் சேர்ப்பதற்கான காட்சித் துணுக்குகளை ‘அபகரிக்க மட்டுமே’ புத்தகக் காட்சிக்கு வந்த திரைத் துறையினர், இன்று அதைத் தனித்துவமான நிகழ்வாகக் காண்கிறார்கள். அதன்வாயிலாக இலக்கியத்தைப் பொருட்படுத்தும், மதிக்கும் செயலை மேற்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக இயக்குநர் வெற்றிமாறனின் கவனப்படுத்தல்கள் ‘வெக்கை’, ‘வாடிவாசல்’, ‘அஜ்னபி’ போன்ற படைப்புகளில் இலக்கியப் பெறுமதியைப் பெருவாரியான வாசகர்களிடையே கொண்டு சென்றுள்ளது.
சென்னைப் புத்தகக் காட்சி இன்று முற்றிலும் வாசகர் - எழுத்தாளர் கூடுதுறையாக உருவாகியுள்ளது. 43ஆவது கண்காட்சியின் வெற்றியும் விற்பனையும் அதை எடுத்துக்காட்டுகின்றன. இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு பபாசியுடையது. ஆனால் அதற்கு முதல் தடையாக இருப்பதும் அதே பபாசியின் வைதீக மனப்பான்மையே. இடதுசார்பாளர்களும் செயல்வீரர்களும் இடம்பெற்றிருந்தும் புதிய நிர்வாகக் குழு பழைய பாதையிலேயே நடைபோடுகிறது. தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவோ நவீனப்படுத்திக்கொள்ளவோ தயங்குகிறது. ஆகிவந்தது எதுவோ அதுவே; பலன் தருவதனால் பழைமையையே கட்டிக்கொண்டிருக்கிறது. புதிய கற்பனையும் புதிய செயலூக்கமுமே மாற்றத்தைக் கொண்டுவரும். நாடெங்கும் நடைபெற்றுவரும் பல்வேறு இலக்கிய விழாக்கள், பெருநகரங்களில் நடக்கும் புத்தகக் காட்சிகள் ஆகியவற்றை அக்கறையுடன் ஆய்ந்து நோக்கினால் பபாசிக்கும் புதிய பார்வை வாய்க்கும்; அப்படி வாய்ப்பது நமது மொழியையும் பண்பாட்டையும் மேம்படுத்தும்.