வாவிக்கரை வீட்டில் வாழ்ந்தவர்கள்
கதை
வாவிக்கரை வீட்டில் வாழ்ந்தவர்கள்
ஓவியங்கள்: றஷ்மி
‘பே’ வாவி என்றும் இல்லாதவாறு சுபாவத்திற்கு மாறாக அன்று இரவு முழுக்கச் சத்தமிட்டுக்கொண்டிருந்தது. புறாக்களும் தாராயினங்களும் வாவியின் மேற்பரப்பில் கலவரத்தை உண்டுபண்ணியவாறு ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. முன் பனிக்கால உதிர்ந்த இலைகளைக் காற்று வாவிக்குள் வாரியிறைக்க - வாவியின் முதுகு பல வர்ணங்களாகக் குழம்பிக் கொண்டிருந்தது. திடீரென நான்கு திக்கிலிருந்தும் முகில்களைக் கூட்டிப் பிழிந்து சோவென்று பெய்து ஓய்ந்தது மழை. பிறகு வான நிறத்திலிருந்த சிறிய பகுதியையும் காரிருள் படர்ந்து மூடிக்கொண்டது. மிகவும் இயல்பான சின்ன விடயம்கூட அச்சம்கொள்ளும்வகைக்கு உருமாறியிருந்த இந்த அசாதாரண நிலைமையை இன்னும் உறங்க முடியாதவராயிருந்த திருவாளர் ‘ட’, யன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாராயினும் அவரது அவதானம் வேறு எங்கோ குவிந்திருந்தது. ஆழ் மனத்திற்கு எல்லாம் தெரிந்திருந்ததுபோலவும் - அந்த முன் அறிதல்களின்மீது தெளிவற்றதாய் ஏதோ பனிப்புகார்போல ஒன்று மூடியிருப்பதுபோலவும் இருந்தது. நள்ளிரவுதாண்டி வீசிய குளிர்காற்றில் தும்ம நேர்ந்தபோதும் அவர் நீண்ட நேரம் அங்கு நின்றிருந்தார். பிறகு ஏதோ தோன்றியவர்போல யன்னலைச் சாத்திவிட்டுப் படுக்கையில் வந்து அமர்ந்துகொண்டார். இவையெல்லாம் கனவில் நிகழ்வதுபோல ஒருகணம் எண்ணிக் கொண்டார்.
இப்படி அவரைப் பனியில் விழுந்திருக்க ‘கி’ ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டாள்.
மருத்துவமனையிலிருந்து அழைத்த தாதிக்கு இரண்டாவது அழைப்பின் பின்னரே திருவாளர் ‘ட’வின் இணைப்புக் கிட்டியது. ‘கி’ காலமாகிய செய்தியை ஆரம்பித்து நிறுத்தி, பிறகு குரலைக் கனைத்தவாறு அவருக்குச் சொன்னாள். அப்போது அவளுக்கு இருந்த பதற்றத்தினதும் அவளின் தொண்டைக் குழியில் வார்த்தைகளை அடைத்துவைத்திருந்த சோகத்தினதும் அரைவாசியையேனும் மறுமுனையில் தகவலைக் கேட்ட கணத்தில் திருவாளர் ‘ட’ வெளிப்படுத்தாமல் மிகவும் நிதானமாக, மிகவும் பலகீனமாக எதையோ சொன்னது அவளுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவரின் வார்த்தைகளை ‘ஆறுதல்’ என்று அண்ணளவாக அவள் ஊகித்துக்கொண்டாள் - ‘எல்லாருக்கும் ஆறுதல்’ என்று அவள் சரியாக விளங்கிக்கொண்டிருந்தால் அண்ணளவு துல்லியமாக வந்திருக்கும். அதைத் தவிர அவர் எதையும் பேசவில்லை; அதற்குத் தேவையும் இருக்கவில்லை; அவர் அதிகம் பேசுபவருமல்லர்.
இரண்டுபேர் உறங்கக்கூடிய அளவுள்ள கட்டிலில் ஒற்றையாகத் திருவாளர் ‘ட’ புரண்டுகொண்டிருந்தார். ‘கி’ இரவுகளை அலங்கரிப்பது போலவே அவரும் அலங்கரித்திருந்தார். நீண்ட கழுத்துடைய கண்ணாடிக் குவளையுள் மென் நீலநிற மெழுகை எரியவிட்டிருந்தார். தலையணைகளுக்கு அலங்காரங்களற்ற தனி வர்ணத்தில் உறைகள் இட்டார். புடவை மணமூட்டியின் வாசனை கமழப் படுக்கையின் விரிப்பைப் புதிது மாற்றினார். வெதுமையான நீரில் மணம் இட்டு உடலைக் கழுவிக்கொண்டு படுக்கையில் வந்தமர்ந்தார். பிறகு, மூக்குக் கண்ணாடியைத் தேடிக் ‘கி’யை அழைப்பதற்கு வாயெடுத்தவராக இடையில் நிறுத்திக்கொண்டார். அதற்கு, இதற்கு என்று ‘கி’யை நாளைக்கு நூறு தடவைகள் கூப்பிட்டுக்கொண்டேயிருக்கும் வழக்கமுடையவராக அவர் இருந்தார். நான்கு இரவுகளுக்கு முன் ‘கி’யை மருத்துவமனையில் கொண்டு கிடத்திய பிறகு அவரால் உறங்க முடியவில்லை. நாற்பது வருடக் குடும்ப வாழ்க்கையில் அவர்கள் தனித்திருந்த நாட்களை அவர் திகதி குறித்து விரல் மடித்துச் சொல்லிவிடுவார் - அவளைப் பிரிந்திருக்க வேண்டுமென்பதற்காக மட்டும் தூர இடங்களில் வாய்த்த நல்ல வருமானமுள்ள தொழிலையும் வாய்ப்புகளையும் அவர் நிராகரித்தார். தலையணைகளும் விரிப்பும் குலையாத அவளுடைய பாதியைத் தடவிப் பார்த்துக்கொண்டு விம்மிக்கொண்டிருந்தார். அவர் கிடந்து புரண்டுகொண்டிருந்த பகுதியில் அழுகையின் ஈரம் பரவியிருந்தது. அவருடைய கண்கள் நிறைந்து பாரித்தன, விழிகளின் கீழே இரண்டு பொதிகளில் உறக்கம் நிரம்பியிருந்தது. போதை வயப்பட்டவர்போல அவர் முகம் இருந்தது; அது கனத்துக்கொண்டிருந்தது; நித்திரையின்மை அவரைத் தடுமாற்றிக்கொண்டிருந்தது. அவரால் உறங்க முடியவில்லை; மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்த உறக்க வில்லைகளை அவர் உட்கொள்வதை மறுத்தார். இனி எந்த நேரமும் ‘கி’யின் மரணச் சேதி வந்துசேரும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அந்த ஆறுதல் தரக்கூடிய செய்தியை அவர் காலம் தாழ்த்தி அறிந்துகொள்ள விரும்பவில்லை.
கடந்த நான்குவருடங்களாகத் திருவாளர் ‘ட’வுக்கு முறையான உறக்கமில்லை. ‘கி’ மெல்ல மெல்ல இந்தக் கொடிய நோயினால் பீடிக்கப்படத் தொடங்கிய பிறகு அவர் அவளைக் கவனித்துக்கொள்வதில் தனது காலம் முழுவதையும் கரைத்துக்கொண்டார். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் ஆபிரிக்க நாட்டினளான மிகவும் கருணையுள்ளம் கொண்ட ஒரு தாதியைச் சிலமணி நேரங்களுக்குப் பணிக்கு அமர்த்தியிருந்தார். உயரத்தில் குறைந்து எடையில் அதிகரித்தும் இருந்த அவள் ‘கி’ போன்ற பிணியுற்றவர்களைக் கவனிப்பதில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றவள்; மிகவும் பொறுமையானவள்; தேவையை விட அதிகமான மென்மையானவாள். மிகவும் மெதுவாகவே அசையக் கூடியவள்; அது அவளுக்கு ஒரு குறையல்ல. அவள் இளஞ் சூட்டு நீரில் முங்கிப் பிழியப்பட்டு நான்காக மடிக்கப்பட்ட மெல்லிய துவாயினால் ‘கி’யைத் துவட்டிவிடுவாள். பிறகு புத்தாடைகள் அணிவித்து நடப்பதற்காக அவர்களின் வீட்டை ஒட்டிய ‘பே’ வாவிக் கரைக்குக் கூட்டிச்செல்வாள். அந்த இடைவெளியில் தனது வெளிவேலைகளை முடித்துக்கொண்டு அவசரமாகத் திரும்பி அவர்களோடு வாவிக் கரையில் இணைந்துகொண்டதும் தாதியை ‘நீ செல்லாம்’ என்று சைகையில் விடுவிப்பார் திருவாளர் ‘ட’.
‘பே’ வாவி அவளது வீட்டின் இரண்டாவது தளத்திலுள்ள படுக்கையறை யன்னலினூடாக நின்று பார்க்க, வாவியின் மீதே அவர்களின் வீடு எழுப்பப்பட்டதுபோலத் தோற்றும்படி அவ்வளவு அணுக்கத்தில் இருந்தது. மழைக்காலத்தில் நீர் பொங்குவதையும் கோடையில் தேக்கம் தேய்ந்து செல்வதையும் அவள் பார்த்திருக்கிறாள். மெலிதாக நீண்ட புற்கள் வந்தமரும் வண்ணத்துப்பூச்சிகளின் பாரத்தில் சிரம்தாழ்த்தி வளைந்துகொடுப்பதை அவள் கண்டு நின்றிருக்கிறாள். வசந்த காலத்தில் காற்றில் இறையும் மகரந்தத் துகள்களும் பரவும் விதைகளும் ஒவ்வாமை ஏற்படுத்துவதில்லை. புறாக்களும் அன்னங்களும் அவர்களது வீட்டு மருங்கின் வளைவில் நீந்திக் கரையேறிக் காலாறும் - அவற்றில் உதிர்ந்த இறகுகள் காற்றில் அசையும், சிலநேரம் சுழன்று ஏறும் - கழிவுகள் நடைவழிகளில் வெள்ளையும் இளமஞ்சளும் கலந்து படிந்திருக்கும் - இங்கு யாரும் அவற்றைத் துன்புறுத்துவதில்லை. அவள் பறவைகளை நோக்கிக் காய்ந்த பாண் துண்டுகளைக் காற்றில் எறிவாள். அவை நீரின் மேற்பரப்பிலிருந்து வானில் எழும்பி அதைக் கௌவிக்கொள்ளும். அவை எங்கிருந்து புறப்பட்டு வருகின்றன, பின் பருவமாற்றங்களின்போது எங்கு சென்று ஒளிந்துகொள்கின்றன என்பதையெல்லாம் கடைசிவரை புதிராகவே வைத்திருக்க விரும்பினாள். யாரிடமும் வினவி அறிந்துகொள்ள முயலவுமில்லை. வாவிக் கரை முழுவதையும் அவள் சுகதேகியாக இருந்த காலங்களில் ஒன்றரை மணித்தியால நடையில் கடந்திருக்கிறாள். அப்போது மெதுவாக ஊர்ந்துசெல்லும் கர்ப்பிணிகளையும் முதியவர்களையும் நடை பரிந்துரைக்கப்பட்டவர்களையும் கடந்துபோயிருக்கிறாள். நோயுற்ற பிறகு அவள் வாவியின் அரைவாசியில், அது குறுகும் பகுதியில் இரு மருங்கையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தினூடு நடந்து வீட்டுக்குத் திரும்புவதற்கு இரு மணித்தியாலங்கள் தேவைப்பட்டன. இப்போது அவளுடன் நடந்து திரும்புவதற்கு அவளுடைய வளர்ப்பு நாய் மடிப்படுகிறது. திருவாளர் ‘ட’ மட்டும் ஒருபோதும் சலித்துக்கொள்வதேயில்லை. அவளோடு நடந்து அவளோடு தரித்து அவளோடு காலாறி அவளுக்காகக் காத்திருந்து என எல்லாவற்றையும் அவளுக்காக ஆக்கிக்கொண்டார். அவளைத் தாங்கிச் செல்வதையும், திரும்பவும் நடக்க அவள் துணிவுகொள்ளும்வரை இடைநடுவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கவும் அவர் முகச் சுழிப்புக் காட்டினாரில்லை - அவர்களிடையே பழக இன்றும் நிறைய மீதமிருந்தன - பகிர்ந்துகொள்ள விடயங்கள் அதிகமிருந்தன - வாழ்ந்து தீர்ப்பதற்குக் காலங்கள் இன்னும் தேவையிருந்தன. அவர் அவளைக் கேட்டுக்கொண்டிருப்பார் - அவள் என்ன பேசினாள் - என்ன பேசவேண்டும் எனவும் குழம்பியிருந்தாள் - அவளுடைய பதிவுகள் முன்னிருந்து பின்னா, அல்லது பின்னிருந்து முன்னோக்கியா எவ்வாறு அழிந்துகொண்டிருக்கின்றனவென்பதை அவரால் கண்டறிய இயலவில்லை - மிகவும் பழைய நாட்களின் ஏதோ ஒரு புள்ளியைப் பற்றிய பேச்சின் நடுவில் தொடர்பேயில்லாமல் அண்மிய நிகழ்வொன்றை அரற்றிக்கொண்டிருப்பாள் - அவளுக்குப் பிறரைக் கிரகித்துத் தொடர்வதை விட தன்னைச் செவிமடுப்பதே தேவையாயிருந்தது - திருவாளர் ‘ட’ அதுவாயிருந்தார்.
‘கி’யின் காதலர்களில் மூன்றாவது ஆள் திருவாளர் ‘ட’. முதல் இருவரில் ஒருத்தனைப் பள்ளிநாட்களில் தீவிரமாகக் காதலித்தாள் - அவளை விட வருடங்கள் மூத்தவன் - அவன் வாடலாக உயரமாக இருப்பான், அவனது தலைமுடி வெளிறல் நிறமுடையது - கூரிய அவனது நாடியில் அவன் உரோமங்களை வளரவிட்டிருந்தது கவர்ச்சி மிக்கதாயிருந்தது. காதலிலும் அதுசார்ந்த உறவுப் பழக்கங்களிலும் மிகுந்த கட்டுப்பாடுகள் உடைய காலம் அவளுடையது (இப்போது அந்தக் கட்டுக்களின் நெகிழ்வுகள் அவளுக்குத் தீராத அதிர்ச்சியாயிருந்தது). அந்தப் பையனுக்கு வேறு பள்ளித் தோழி ஒருத்தியுடன் தொடர்பிருப்பதாய் அறிந்து விலகிக்கொண்டாள். இரண்டாமவன் அவளது ஒன்றுவிட்ட சகோதரியின் திருமண நிகழ்வில் சந்தித்த பையன் - தூர உள்ள பாடசாலையில் அவளது சமாந்திர வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தான்- அவளின் உயரம் இருப்பான் - உடல்வாகு கூடியவன் - சிரிக்கும்போது உப்பும் கன்னங்களுக்குள் புதைந்துகொள்ளும் அவனுடைய கண்களை அவள் மிகவும் விரும்பினாள். காக்கைப்பொன் நிறத்தில் உரோமங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்ந்த முகம் அவனுடையது - பார்க்க காதல் தோன்றாத உருவம் அவனது - சுமார் ஆறுமாதங்கள் வரை நீடித்தது அந்த உறவு - அவனோடுதான் முதன்முதலாக அவள் சாரீர ரீதியாக உறவு பூண்டாள் - அவள்வரையில் அது தோல்வியில் போய் முடிவுற்றதொன்றாய் இருந்தது. அவன் அவளை இந்தப் ‘பே’ வாவியில் நீர் கரைபுரண்ட ஆண்டின் மாலை நேரமொன்றில், அவளது வீட்டில் தொடங்கி நான்காவதாய் வரும், நார்கள்போல மெலிய கீழ்நோக்கித் தொங்குகின்ற தண்டுகளில் சிறிய இலைகள் துளிர்க்கக் காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்ற மரமொன்றின் கீழ் அவளைச் சாய நிறுத்தி முத்தமிட்டான். அந்த முதன்முதலான முத்தத்தின் இடையில் அவள் பயங்கொண்டு அங்கிருந்து ஓடிவந்துவிட்டாள். பிறகு, மூன்றாவது ஆளாக நான்கு மாதங்கள் பழக்கத்தின் பின்னர் திருவாளர் ‘ட’வை மணந்துகொண்டாள். அந்த வருடத்தில்தான் ‘பே’ வாவியில் அதிக பருமனுள்ள மீன் பிடிக்கப்பட்டதாகப் பத்திரிகையில் படத்துடன் செய்தி வந்திருந்தது. அந்தச் செய்தியைக் குறிப்பிட்டு ‘இந்த வருடத்தில் இரண்டு அரிய உயிரிகள் தூண்டிலில் மாட்டிக்கொண்டன’ என்று திருவாளர் ‘ட’ நகைச்சுவை செய்தது அவர்களின் குடும்பம், நண்பர்கள் வட்டத்தில் மிகவும் பிரபலமான அங்கதமாக அந்த நாட்களில் சுற்றிவந்தது.
கம்பளியால் சடையச் செய்த பொம்மைபோல வெள்ளை நிறத்தில் இருந்தது ‘கி’யின் செல்ல நாய். நாய்களிலே புத்திசாலித்தனத்தில் இரண்டாமிடத்தில் உள்ள வகை ஒன்றுடன் கலப்புச் செய்யப்பட்ட அவுஸ்திரேலிய பாரம்பரியத்தைக் கொண்டது அது - உதறிவிடப்பட்டது போல இருந்த அதன் உரோமங்கள் அதன் முகத்தின் மேல் வழிந்து கண்களை மறைத்துக்கொண்டிருக்கும். மிகவும் இளம் வயதில் ‘கி’யிடம் மாமனின் பிறந்தநாள் பரிசாக அது சேர்ந்தது. அதை அவள் ‘குட்டிப் பேய்’ என்று செல்லமாகக் குறிப்பாள். அந்தக் காலத்தில் பாவனையிலிருந்த புகைப்படக் கருவியால் மெலிந்த உயரமான கால்களையுடைய ‘கி’யையும் அவளுடைய சின்னஞ் சிறிய பப்பியையும் தெளிவாக ஒருசேர புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியாதிருந்தது. அனேகமாக எல்லா சீதோஷ்ண நிலைகளிலும், எல்லா நாட்களும் அவள் அதை நடை கூட்டிச் செல்லவேண்டும் - செல்வாள்.
அவளுடைய வீட்டை அண்டி ‘பே’ வாவிக்குச் சொந்தமான சின்னஞ்சிறிய தீவு ஒன்றில் பொழுதுபோக்கவென மீன்பிடிக்கவென்று கூடாரம் அமைத்துக்கொண்டிருந்த திருவாளர் ‘ட’வோடு பப்பி குறுகிய காலத்தில் மிகவும் நெருங்கிக்கொண்டது. அவருடைய கால்களில் தாவி ஏறிவிடத் துடித்துக்கொண்டிருக்கும் அதை வாரித் தூக்கிக் கோதி முத்தமிடும் அளவு அதை அவரும் விரும்பினார். அந்தச் சிறுதீவு கரையிலிருந்து நீங்கி அகன்ற துள்ளல் ஒன்றில் எட்டும் தூரத்தில் இருந்தது - ஆனால் பப்பியோ பெரிய ஆற்றைக் கடக்கும் பாவனையோடு நீந்திச் சென்றே தீவைச் சேரும். அவர் நனைந்து உடலோடு படிந்துபோன அதன் உரோமங்களைத் தட்டிச் சிலிர்த்து விடுவார். பல தடவைகளில் அவரை வெறுமனே கடந்துபோனபிறகு, அவள் அவரைக் கவனிக்கத் தொடங்கினாள்; பிறகு பார்வைகளை, பிறகு புன்னகையை, பிறகு வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டார்கள். நள்ளிரவில் அவரது கூடாரத்தில் கசியும் ஒளியையும் அவரது நடமாட்டத்தையும் படுக்கையறையில் நின்றவாறு அவள் நீண்டநேரம் உற்று நிற்பாள். பிறகு ஒருநாள் இரவில் அவள் அவரைச் சந்தித்தாள். அப்போது மிக அருகாமையில் அவருடைய அசைவுகளையும், ஒளி கசியும் விளக்கினையும் கண்டாள். முத்தத்தின் இடைநடுவே ஓடிவிடத் தோன்றவில்லை - இன்னும் சொன்னால் அவளேதான் திருவாளர் ‘ட’வை விடுவிக்காது முத்தத்தை நீட்டித்துக்கொண்டிருந்தாள். இரண்டாவது தடவையாக அவள் அன்று முழுமையாக ஓர் ஆண்மகனுடன் உறவுகொண்டாள் - அவள் அன்று தன்னை முதிர்ந்தவளாக உணர்ந்துகொண்டாள். அவருடைய அக்குள் பகுதியிலும் கன்னங்களிலும் தூக்கலான Old spice after shave வாசம் வீசிக்கொண்டிருந்தது. அது அவளின் தந்தையை நினைவூட்டுவதாயிருந்தது. அந்த நாட்களில் திருவாளர் ‘ட’ மிகுந்த இளமையாகவும் வனப்புடனும் இருந்தார். அந்த ஆண்டைப்போல எல்லா அம்சங்களும் கச்சிதமாக அமைந்த ஆண்டு அதற்கு முன்பும் அதற்குப் பிறகும் இல்லையென்று அவள் நாட்குறிப்பில் எழுதியிருந்தாள். திருவாளர் ‘ட’வும் இதையே வேறுவிதமாக ‘‘இந்த வருடம் மழைபெய்ய வேண்டிய நாளில் மழையும், வெய்யில் தேவையிருந்த நாளில் வெய்யிலும். ‘பே’ வாவியின் கரையெங்கும் வெள்ளைக் காட்டுப் பூக்கள் பூத்துச் சொரிந்தன. சாம்பல், வெள்ளை ஊத்தை நிறங்களில் காட்டு முயல்கள் வெளிக்குக் குடிவந்தன. முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு நத்தார் தின இரவில் வெண்பனி கொட்டியது - அதை எங்களுக்கான ஆசீர்வாதமாக ஏற்றுக்கொண்டோம்’’ என்று குறிப்பிட்டார்.
எப்போது அவர்கள் அந்தத் தீவைக் கடந்துபோக நேர்ந்தாலும் அவள் அல்லது அவர் அந்த முதல் சந்திப்பை ஞாகப்படுத்திக் கொள்வர். அப்போது, இவ்வளவு நாட்கள் கடந்தபின்னும் அவள் முதல்நாளது போலவே நாணம்கொள்வதை அவர் அவதானித்து அவளுக்குக் கூறியிருக்கிறார் - முதல் சந்திப்பு தந்த கிளர்வை விடவும் அவர் அவளைக் கவனித்துச் சொல்லும்போது அதிக கிளர்வு கொள்வாள் - ஆனால், அதை அவள் சொல்லிக்கொள்ளவில்லை.
அவளுடைய இளம் கபில நிறமான திருமணப் புகைப்படத்தில் ‘பே’ வாவியின் மறுகரையில் ‘வாவிக்கரை தங்கு விடுதி’யின் பழைய தோற்றம் தெரிகின்றது. ‘கி’யின் தோள்வரை வளரவிட்டு வெட்டப்பட்டிருந்த சிகை இடது புறமாய் வகிடெடுத்து வாரிவிடப்பட்டிருந்தது - இடது கன்னத்தின் மேலே வெளிர்நிறமான பெரிய பூவொன்றைச் சூடியுள்ளாள் - பூக்கள் வேலைப்பாடுகளுடைய கைகளற்ற முட்டிக்குச் சற்றுக் கீழிறங்கியிருந்த மேற்சட்டையும் கடும்நிறத்தில் தட்டையான குதியுடைய காலணியுடன் கதிரையொன்றில் அமர்ந்தபடியும் (அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட விதத்தில் அவளுடைய கால்கள் இன்னும் உயரமானதாகத் தெரிகின்றன), திருவாளர் ‘ட’ இருண்ட நிற காற்சட்டையும் மென்நிற மேலங்கியும் அணிந்து அவளின் பின்னால் நிற்கிறார். அப்போதுதான் சவரம்செய்ததுபோல இருக்கும் அவருடைய முகத்தில் மெழுகு மேற்படையிடப்பட்டதுபோல ஒரு மினுமினுப்பிருக்கும் (அதைப் பார்க்கும்போதெல்லாம் after shave வாசத்தைத் தான் உணர்வதாக அவள் கூறுவாள்). மூக்குக் கண்ணாடியை உயர்த்தி நெற்றியில் இட்டிருந்தார். இப்போது அவரின் இடது காதுக்கு அருகில் கன்னத்திலிருக்கின்ற அரை முட்டை அளவுள்ள சதைத் திரட்சி அன்று அவருக்கு இருக்கவில்லை. ஏனோ தெரியவில்லை சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு வேட்டைக்காரரை அவர் உங்களுக்கு ஞாபகப் படுத்தக்கூடும்.
‘கி’யின் மரணச் செய்தியோடு தாதி அவரை முதல்தடவை தொலைபேசியில் அழைத்த ஒலி, அதிகாலை நான்குமணிக்குக் ‘கி’யின் படுக்கையறைக் கடிகார அலார ஒலியில் அமிழ்ந்துபோயிற்று. அப்போதுதான் கண்ணயர்ந்துபோயிருந்த ‘ட’ மணிக்கூட்டைத் தேடி ஆழியைத் தட்டிவிடுவதற்குள் தொலைபேசி ஓய்ந்துபோயிருந்தது. பிறகு அடுத்த நொடி மீண்டும் ஒலித்ததும் அவர் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டபோது அவருடைய மண்டையில் இலகுவான வலியை உணர்ந்தார். அறவே திறக்க முடியாதிருந்த கண்களை மூடிக்கொண்டபடி இடது சுட்டு விரலையும் பெருவிரலையும் சேர்த்துப் பொய்க் கன்னத்தில் அழுத்திப் பிடித்தபடியே அவர் தாதியைக் கேட்டுக்கொண்டிருந்தார். ‘மிகி’ பல்கலைக் கழக வைத்தியசாலையிலிருந்து தாதி அழைத்து மரணச் செய்தியைச் சொன்னபோது ‘நான்கு வருடங்களுக்கு முன்னமே ‘கி’ மரணித்து விட்டாளே’ என்று அவருக்குள் ஏனோ தோன்றியது.
திரு திருமதி ‘ட’ தம்பதியினருக்கு வரிசையாக இரு ஆண்களும் கடைசியாக ஒரு பெண்ணுமாய் மூன்று பிள்ளைகள். எல்லாருக்கும் ‘அ’வில் தொடங்கும் நான்கு அட்சரங்கள் கொண்ட பெயர். பெண்பிள்ளையை வளர்த்து ஆளாக்குவது கடினமான காரியமென்று ‘கி’ எப்போதும் சொல்வாள். அவளின் பெண் மகள் மிகுந்த குழப்படிக்காரி - தாயைப் போலவோ அல்லது தந்தையின் இயல்போ அவளுக்கு இல்லை - அவள் தாய்வழிப் பாட்டனைப்போல என்று ‘கி’ சொல்வாள் - அவளுக்குத் தனது தந்தையின் மூக்கு என்று ஆதாரப்படுத்துவாள். திருமணத்தின் பின் சுமார் பத்துவருடங்கள் கழித்துப் பிறந்த பெண்மகள் வளர்ந்த சந்ததி மாற்றத்தை ‘கி’ புரிந்துகொள்ளத் தயாரில்லை - அநுசரித்துப் போகவும் இயலவில்லை - நச்சரிப்பதும் கண்டிப்பதும் குறைகூறுவதுமாக இருந்தாள். தனது காதலர்கள் பற்றியும், முதலாவது உடற் தொடர்பு பற்றியும் குழந்தைகளின் முன் அவள் பகிர்ந்துகொள்வதைத் தவிர்ந்தாள் - பேச்சை மாற்றினாள். பிற்காலத்தில் மகள் பட்டம் முடித்து கை நிறையச் சம்பாதிக்கிற போதும் - குழந்தைகள் குட்டிகள் என்று வாழ்வை அமைத்துக்கொண்டபோதும் - ‘பெண் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதுதான் உலகத்தில் கடினமான காரியம்’ என்ற தனது கருத்தை அவள் மாற்றிக்கொள்ளவேயில்லை. அந்தப் பேச்சை எடுக்கும்போதே முகத்தைச் ‘சோர்வுற்ற’ பாவனைக்கு மாற்றிக்கொள்வாள். எழுபத்துநான்கு வயதில் தான் மரணிப்பதற்கு நான்குவருடங்களுக்கு முன்னர், அவள் பகுதிநேரமாகப் பணிபுரிந்துகொண்டிருந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கான உதவி உண்டியலைக் கடையிலிருந்து மீளச் சேகரித்துக்கொண்டிருக்கும்போது பேச்சு வாக்கில் கடைச் சிப்பந்தியிடம் அவள் இதையே திரும்பவும் சொன்னாள்.
இந்தச் சிப்பந்திக்கு சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக ‘ட’ தம்பதியினரைத் தெரியும். மடிப்புகள் உள்ள வெள்ளைநிறக் குட்டைப் பாவாடையில் ‘கி’ டென்னிஸ் விளையாடப் போகும் வழியில் கடைக்கு வந்து பழச்சாறும் நீர்ப்போத்தலும் வாங்கிச் செல்வாள். அவளை இச்சையோடு அவர் நோக்கியிருக்கிறார். நேர்த்தியான கால்களும் மார்புகளும் கொண்டவள் அவள் என்ற உறுதியான கருத்தை அவர் கொண்டிருந்தார். அவரின் நகைச்சுவை கலந்த பேச்சுகளுக்கு அவள் சிரிப்பாள். கன்னங்களில் இதழ்கள் தொடங்கும் இடங்களில் மேற்புறமாய்ச் சுருண்டு ஆரம்பிக்கும் உதடுகள் சீராக நாற்பத்தைந்து பாகையில் ஆர்முடுகி மூக்கின் கீழே செம்மையாக நாற்பத்தைந்து பாகைகள் இறங்கி உடனே அடுத்து நாற்பத்தைதந்து பாகைகள் ஏறிப் பிறகு எதிர்ப்புறக் கன்னத்தில் மேல்நோக்கிச் சுழியும்வரை வளர்ச்சி அமர்முடுகும். அவளுடைய சிரிப்பு குறித்து ‘இதை ஒருபோதும் கைவிட்டு விடாதே’ என்று இந்தச் சிப்பந்தி அவளுக்கு அடிக்கடி சொல்லுவார். பிறகு வந்த நீண்டகாலத்திற்கு அவள் ஒருபோதும் சிரிப்பைக் கைவிட்டதேயில்லை. இந்தக் காலத்தில் அவள் ‘ட’வுடன் உறவில் இருந்தாள் - பிறகு அவரையே மணந்துகொண்டாள். அதன் பின்னர்தான் அவள் அவருக்காகச் செய்தித் தாள்களைக் கொள்வனவு செய்வதற்காக வரத்தொடங்கினாள். கடைசியாக அவர் ‘கி’யைக் கண்டபோது அவளிடம் ஏதோ ஒன்று குறைந்திருக்கக் கண்டார். அவள் அங்கிருந்து சென்ற நீண்ட நேரத்தின் பின் அது அவளுடைய புன்னகையென்று சிப்பந்தி புரிந்துகொண்டார் - அந்தப் புன்னகைதான் ‘கி’ என்பதையும்.
கடந்த சிலநாட்களாக திருவாளர் ‘ட’வே பத்திரிகைகளை வாங்கிச் சென்றார். ‘கி’ வராதது ஏதோ மாதிரி இருந்தது. திருவாளர் ‘ட’ நல்ல மனிதர்தான் - ஆனால் அவர் ‘கி’ மாதிரி மனத்தைத் திறப்பதில்லை. தேவையானதைத் தேவைக்கும் குறைவாகவே ஒப்புவிப்பார். அவருடைய முகபாவனையைக் கொண்டு மனத்தினை அறிந்துகொள்ளுதல் மிகவும் கடினமானது - துக்கத்திலும் மகிழ்விலும் ஒரே பாவம் - யாராகிலும் அவருக்காகக் கதவைத் திறந்துவிட்டுக் காத்து நிற்கின்றபோது நன்றி சொல்லிப் புன்முறுவார் - அதுதான் அவரிடம் தரிசித்த, அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியாக அதுவரை இருந்தது - ஆனால் ‘கி’யுடன் சேர்ந்துவரும்போதுகளில் அவளோடு சிரித்துப்பேசிக்கொண்டிருப்பார். அவர் யாருடனும் தன்னைப் பகிர்ந்துகொள்ள விரும்பாதவர் - அவருடைய உலகத்தில் நுழைய யாருக்கும் அனுமதியில்லை - சிலபோதுகளில் எனக்கும்கூட என்று ‘கி’ சிரித்துச்சொல்வாள். திருவாளர் ‘ட’ என்று சொன்னால் தட்டையான கறுப்புநிறத் தொப்பியுடன் கடினப் பச்சை நிறமான மேலங்கியும் மஞ்சள் நிறத்தில் கழுத்துப் பட்டையும் அணிந்த கொஞ்சம் கடினமான மனிதர் அவரின் ஞாபகத்திற்கு வருவதை ஒருபோதும் தவிர்க்க முடியவில்லை.
சிப்பந்தி அவளைப் பற்றி விசாரித்தபோது சுகக்குறைவு பற்றிச் சொன்னார். அவரது நினைவுகளில் மடிப்புகள் உள்ள வெள்ளை நிறக் குட்டைப் பாவாடையும் வெள்ளை ‘போலோ’ ரிசேர்ட்டும் அணிந்த ‘கி’ குறுகுறுத்துப் போனாள். அவளுடைய பிரத்தியேகமான புன்னகைக்கும் உதடுகள் வந்துபோயின - ‘சிரிப்பை விட்டுவிடாதே’ என்று அவர் கேட்டுக்கொண்டதை நினைத்துக்கொண்டார். அவள் மீண்டு வரவேண்டும் என்று விரும்பினார் - அவளுக்காகப் பிரார்த்திப்பதாக அவரிடம் சொன்னார் - அப்போது திருவாளர் ‘ட’ என்றுமில்லாதவாறு புன்னகைத்தார் - அவனுக்கு நன்றி சொன்னார்... அந்த ஞாயிறன்று மெழுகுதிரி கொளுத்தி முழந்தாளிட்டு அவளுக்காகப் பிரார்த்தித்தார்.
அடுத்த தடவை ‘கி’யை அவர் கண்டபோது அவள் பாதி ‘கி’ போல இருந்தாள் - அல்லது வேறு யார்போலவோ தெரிந்தாள். அவள் அணிந்திருந்த நீளக் காற்சட்டையும், முழுக்கை மேற்சட்டையும் அவளுக்கு அவசியமில்லாத உயரத்தைக் கொடுத்திருந்தன. குட்டையாகத் தறிக்கப்பட்டிருந்த கேசத்தின் வகிடுகளில் நரையும் பிறகு கறுப்பாக்கப்பட்ட முடியுமாக வந்து நின்றாள். ஒவ்வொரு வார்த்தையையும் தேடித் தேடிப் பேசினாள் - சொற்களின் இடையே அறுந்து எங்கோ போனாள் - திரும்பிவந்து தடுமாறினாள். அன்றும் அவள் சிரிக்கவில்லை - அந்நியர்களை நோக்கி நான் சிரிப்பதில்லை என்றபடி அவள் முகபாவனை இருந்தது. அவள் வழமைக்கு மாற்றமாக வேறொரு பத்திரிகையைக் கையில் வைத்திருந்தாள். சிப்பந்தி அதை வாங்கி உரிய பத்திரிகையை மாற்றிக் கொடுத்தபோது வெட்கத்துடன் சிரிக்க வேண்டுமென்று கூட அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
பிறகு வந்த நாட்களில் அவள் இரண்டு காகிதத் துண்டுகளைக் கொண்டு வரத் தொடங்கியிருந்தாள். ஒன்றில் அவள் கொள்வனவு செய்யவேண்டிய பத்திரிகையின் பெயர் இருந்தது. மற்றத் துண்டில் அவளுடைய வீட்டு விலாசம். சிலநாள் கழித்து, தான் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவேண்டுமென்பதே மறந்து போனது - அங்கிருந்து செல்லவேண்டும்; ஆனால் எங்கு எப்படியென அறியாமலே அவள் தவறவிட்டிருந்தாள் - பதற்றம் அவளை அழுகைக்கு அருகில் நிறுத்தியிருந்தது - எப்போதும் சிரிப்பதற்காக மட்டுமே குவியும் உதடுகள் அப்போது அழுவதற்கு எத்தனித்துக்கொண்டிருந்தன. கடைச் சிப்பந்தி முன்ஜாக்கிரதையுடன் வாங்கிவைத்திருந்த திருவாளர் ‘ட’வின் தொலைபேசிக்கு அழைத்து நிலைமையைச் சொல்ல அவர் வந்து அழைத்துப் போனார். அதுவே கடைசியாகச் சிப்பந்தி ‘கி’யைக் கண்ட கோலம்.
அந்த ஆண்டின் இலையுதிர்கால மழைவீட்சி உக்கிரமாக இருந்தது. ‘பே’ வாவியில் தேக்கத்தின் அளவு அதிகமானது. வெறும் நீர்நிலைகளுடன் தொடர்புகளற்ற வாவிக் கரைகளில் அது நிலங்களை ஊர்ந்து பரவிக்கொண்டது. புற்களின் ஊடுபோன நடைப்பாதைகளில் நீர்தேங்கிற்று. பாதங்களின் கீழ் நத்தைகளின் ஓடுகள் நெரியும் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நீர் நச்சேற்றத்தினால் அன்னப் பறவைகள் செத்து அருகின - புறாக்களும் தாராக்களும் ‘கி’யின் வீட்டு வாசலில் ஒதுங்கிக்கொண்டன. பலத்த காற்றில் பழுத்த இலைகளோடு சேர்ந்து பச்சையிலைகளும் கிளைகளும் வீழ்ந்துகொண்டிருந்தன - எங்கும் குப்பையின் காடுபோல ஆகிற்று. எல்லாவற்றையும் விட ‘கி’யின் ஞாபகங்கள் இறந்துஉதிர்ந்துகொண்டிருந்தன. அந்த ஆண்டில் ‘கி’ நாட்குறிப்பு எழுதுவது இயலாது போயிற்று - எழுத முடிந்திருக்குமானால் ‘‘இந்த அறையில் மெழுகுச் சுவாலையைப் பேய்ப் பிடித்தாட்டுகிறது, இந்தப் பலவீனமான நடுங்கிக்கொண்டிருக்கும் கைகளினால் அதன் ஆயுளைக் காப்பாற்றியபடி நீண்டநேரம் நிற்கின்றேன் - பிறகு அது நூர்ந்துபோவதை நான் காண்கிறேன்,’’ என்று குறிப்பிட்டிருக்கக் கூடும்.
துர்அதிஷ்டத்திற்குச் சுமார் நான்குவருடங்கள் எடுத்தன, அவளிடமிருந்து ‘ட’வின் நினைவுகளை முற்றிலும் துடைத்து அழிக்க. ஒருநாள் அதிகாலையில் படுக்கையிலிருந்து பதறியெழுந்து ‘நீ யார்?’ என்று கேட்டாள். அதன் தொடக்கம் ஒவ்வொரு தடவை வீட்டுக்கு வரும்போதும் தன்னை அவளது கணவன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் திருவாளர் ‘ட’. குழந்தைகளை, அயலவர்களைத் தனது வளர்ப்புநாயை எதையுமே அவளால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. தனது ஒரே புத்திரி ‘அ’விடம் முன் பரிச்சயமற்ற நபரிடம்போல கேள்விகள் கேட்கத் தொடங்கினாள் - அவள் ஓடிவந்து திருவாளர் ‘ட’வின் மார்பில் தொங்கி ஓவென்று அலறினாள். பேரக் குழந்தைகள் அவளிடம் அண்டுவதற்கு அஞ்சினார்கள். ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றையும் எல்லாரையும் புதிதுபுதிதாக அறிந்துகொண்டாள் - ஒவ்வொரு கணத்திலும் அவள் புதிதாய்ப் பிறந்துகொண்டிருந்தாள் ‘கி’.
தான் அனுபவித்துக்கொண்டிருந்த நெருக்கடிகளை விடவும் ‘கி’யின் இந்த நிலைமை திருவாளர் ‘ட’வை மிகவும் களைக்கவைத்துவிட்டது. ‘பே’ வாவிக்கு நடந்து திரும்ப அவளை அழைத்துச் சென்றபோது அந்த தீவுப் பிராந்தியத்தை அவள் தீவு என்று தெரியாமலே கடந்துபோனாள். அவளிடம் நாணத்தின் ஒரு தெறி கூடத் தோன்றவில்லை. பிறகு அவர் அவளிடம் அந்தத் தீவுகுறித்துச் சொன்னபோது, அப்போதுதான் வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு தீவு என்ற சொல்லைக் கேட்பதுபோலப் பார்த்தாள்.
வாரத்திற்கொருமுறை படுக்கை விரிப்புகளும் தலையணை உறைகளும் புதிதாய் மாற்றும் ‘கி’யின் படுக்கையிலிருந்து சிறுநீர் மணம் பரவிய அன்று நிலைமைகள் கைகளைவிட்டும் நழுவிச்செல்வதைத் திருவாளர் ‘ட’ உணரத்தொடங்கினார். சாத்தியங்களுக்கு வெளியே - மருத்துவர்களின் கணிப்பையும் மீறி - பிறரின் ‘முட்டாள்’ என்கிற முதுகின்பின்னான வசவுகளையும் பொருட்படுத்தாது கண்ணுக்குப் புலப்படாத ஏதோ இழையொன்றில் அவருடைய நம்பிக்கை தொங்கிக்கொண்டிருந்தது அதுவரை. பிறகு அவர் வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரானார் - தோல்வி அவருக்குக் கிழட்டு உருவத்தைக் கொடுத்தது.
அவள் மெல்ல மெல்லக் குழந்தையாக மாறிக்கொண்டிருந்தாள். வைத்தியசாலையிலிருந்து மரணச்சேதி வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்னம் ‘கி’ உண்பதை மறந்துவிட்டாள். திருவாளர் ‘ட’ புகட்டிவிட்ட உணவை மென்று விழுங்க வேண்டுமென்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை - வாய்க்குழியுள் புகட்டப்படும் நீரைத் தொண்டையூடு உள்வாங்க வேண்டுமெனவும் அவள் அறியாதிருந்தாள். அந்தக் கட்டளைகளைப் பிறப்பிக்கும் மூளையின் கலங்கள் சேதமுற்றுப் போயின - இனி அவளை வீட்டில் வைத்திருந்து பேணிக்கொள்ள முடியவில்லை. மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் மீதமிருந்த ஞாபகங்களை இழந்துகொண்டிருந்தாள் ‘கி’. வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாய் ஓடி ஓடி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் ‘ட’.
வாழ்க்கையில் முதல்முதலாக நம்பிக்கையை மொத்தமும் இழந்துபோனார் திருவாளர் ‘ட’. மருத்துவமனைக் கட்டிலில் உடலின் துவாரங்கள் அனேகத்தினூடாயும் குழாய்கள் உள்ளேயும் வெளியேயும் பதார்த்தங்களைக் கடத்த கிழிந்த பழைய கந்தல்துணிபோல ‘கி’யைக் காணச் சகிக்கவில்லை அவருக்கு - அவளைப் பார்க்க இருநூறு வயதினள் மாதிரி இருந்தாள் - (வருடங்கள் முன்பு, கேள்விப் புலனில் குறைபாடு கொண்டிருந்த அவள், தன்னை வயதாக்கிக் காட்டுவதாகச் சொல்லிக் கேட்டல் உதவி இயந்திரத்தை அணிய மறுத்திருந்தாள்). அவள் இறந்துபோகட்டும் என்று விரும்பினார் - மரணமே மாமருந்து என்று அரற்றிக்கொண்டிருந்தார். மருத்துவத்தின் கெடுவையும் மீறி இரண்டு பகல்களும் மூன்று இரவுகளும் அவள் சாவோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தாள் - அவள் தோற்றுக்கொடுக்கத் தயாராக இல்லை.
‘கி’ இந்தப்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலையாக இருந்தது. அந்த இரவே திருவாளர் ‘ட’ இதுபற்றி முன்னறிந்தவர்போல மரணத்தின் பின்னரான ஏற்பாடுகள் குறித்துச் சிந்திக்கத் தொடங்கியிருந்தார். காலந்தாமதியாது மறுவெள்ளியில் சடங்குகள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார் திருவாளர் ‘ட’. கடைச்சிப்பந்தியும் அவளுக்காகக் கறுப்பு உடையணிந்து வெள்ளை லில்லி மலர்க்கொத்தையும் கொண்டு சென்றார். இழவை ஞாபகப்படுத்தும் வலிதான நறுமணமுடையதும் மேரிமாதாவின் கல்லறையை மூடியிருப்பதுமான இந்த லில்லி மலர்கள் ‘கி’யின் ஆத்மாவைப் பரிசுத்தமானதும் அமைதியானதுமான நிலைக்கு எத்திக்கும் என்று அவர் நம்பினார். எல்லாரும் கலைந்துபோன பிறகு ‘சென்று வா கி’ என்று துயரம் தொண்டையை நெருக்க வழியனுப்பிவைத்தார் - கடைசியாக நீங்கிச்செல்லும் காலடி ஓசையாக அவள் சிப்பந்தியினுடையதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
சடங்குகள் முடிந்த கையுடன் மகன்மாரையும் மகள் குடும்பத்தினரையும் தத்தமது வீடுகளுக்குத் திரும்புமாறு வேண்டிக்கொண்டார் திருவாளர் ‘ட’. அவர்கள் தயக்கங் காட்டியபோதும் அவர் நிர்ப்பந்தித்து அனுப்பிவைத்தார். எல்லாரும் முக்கால்மணி பயணத் தூரத்திலேயே வசித்தார்கள். மகன்மார் இருவரும் அடிக்கடி வந்து பார்ப்பது அல்லது தொலைபேசுவது என்றும் அடுத்த வெள்ளிக்கிழமை மாலை எல்லாரும் திரும்பவும் கூடுவதென்றும் முடிவுசெய்துகொண்டு அவர்கள் கலைந்துபோனார்கள்.
வீடு வெறுமையாகிற்று. அவர் விரும்பியிருந்த தனிமை கிட்டியது. ஜன்னலுக்கு வெளியே ‘பே’ வாவியின் கரையில் அந்தச் சிறிய தீவில் யாரோ முகாமிட்டிருந்த கூடாரத்திலிருந்து ஒளிகசியக் காண்கிறார் - அவர் நின்றுகொண்டிருந்த இடத்தில் நின்றபடிதான் ‘கி’ அவரைக் கண்டுகொண்டிருந்தாள் ஒருகாலம். பிறகு, அவர் தனது புறங்கையின் சுருக்கங்களை அவதானித்தபடி ‘வயதாகிவிட்டது’ என்று கூறிக்கொண்டவராய்த் திரும்பி நடப்பதற்கு ஏற்பட்ட சிரமத்தை உணர்ந்தார்.
படுக்கையறையை வழமைபோல அலங்கரித்த பின்னர், ‘கி’ மிகவும் விரும்புகிற நீல நிறத்தின் மூன்று பேதங்களில் மேலிருந்து கீழாய் நீளும் கோடுகளுடைய இரவு ஆடையை அணிந்தபின், அவள் உறங்கும் பாதியில் உடலைச் சாய்த்துக்கொண்டபடித் தனது பழைய நாட்குறிப்பில் புரட்டிக்கொண்டிருந்தார். பிறகு ஒருபக்கத்தில் நிலைத்துக்கொண்டார் - பெருவிரலுக்கும் சின்னவிரலுக்கும் இடையில் நாட்குறிப்பைச் சொருகி ‘‘முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு நத்தார்தின இரவில் வெண்பனி கொட்டியது - அது எங்களுக்கான ஆசீர்வாதமாக நாங்கள் ஏற்றுக்கொண்டோம்’’ என்ற வரிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அடுத்துவந்த திங்கட்கிழமைவரை செய்தித்தாள்களை வாங்கிச் செல்ல திருவாளர் ‘ட’ வரவில்லை. தொலைபேசி அழைப்புகளுக்கும் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அவரை ஒரு தரம் சுகம் விசாரிக்க விரும்பினார் சிப்பந்தி. குளிர்காலம் தொடங்கிப் பிற்பகல் நான்குமணிக்கெல்லாம் இருளத்தொடங்கியிருந்த அன்று அவரைத் தேடி வீடுசென்று அழைப்புமணியை அழுத்திக் காத்திருந்தார். அவருடைய கார் வாசலையொட்டி நிறுத்தப்பட்டிருந்தது. யன்னலில் தட்டிப் பார்த்திருந்தார். திரும்பத் திரும்ப அவரின் தொலைபேசிக்கு அழைத்தார் - மணிச் சத்தம் கேட்டது - அழைப்புகளுக்குப் பதிலேதுமில்லை. சுமார் அரைமணிநேரம் அவருக்காகக் காத்திருந்தார் - பலனில்லை. பிறகு வீட்டினுள் எட்டிப் பார்த்தார் - வெளிச்சம் எரிந்துகொண்டிருந்தது. மீண்டும் காத்திருந்தார் - அவருக்கு எண்ணங்கள் பல பக்கத்திற்கும் பாய்ந்துகொண்டிருந்தன - பிள்ளைகளோடு சென்று தங்கியிருக்கலாம் என்று உத்தேசித்தார் - ஆனால் கைப்பேசி அழைப்பிற்கு ஏன் பதிலில்லை என்று ஐயுற்றார். பிறகு ஏதேதோ நினைத்தார் - உடனே, இருக்காது என்று அவரே மறுத்தும் நினைத்தார். திடீரென்று துர்வாடையை உணர்வதுபோல தோன்றியது - அவர் அங்கிருந்தும் விரைவாக வெளியேறி நடந்தார் - மிகவும் அமைதியாக சலனமின்றித் தேங்கியிருந்த ‘பே’ வாவியின் மீது தெளிவாக நிலவு தெரிந்தது - அவரின் வலதுபுறமாய்ப் ‘பே’வாவி வளர்ந்துகொண்டு வருவதாக உணர்ந்தார் - நிலவு பின்தொடர்வது திகிலூட்டிற்று - எதுவுமே அசையாது உறைந்திருந்தது - மிகவும் பிரம்மாண்ட அளவில் வரையப்பட்ட இரவுக்காட்சியின் முன்னால் தான் நடந்து போவதுபோலத் தோன்றியது. திடீர் திடீரென்று நடைவழியில் தேங்கியிருந்த வாவியில் அவருடைய கால் அலசும் சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது - பறவைகள் அங்கிருந்து குடிபெயர்ந்து போய்விட்டதுபோல தோன்றிற்று - எல்லாமே அச்சமூட்டுவதாக இருந்தன. அவர் நடக்கவேண்டிய தூரம் கூடிக்கொண்டு வருவதுபோல இருந்தது - நடையைத் துரிதப்படுத்தினார் - தூர விளக்கெரியும் வாவியோரத் தங்கும் விடுதியிலிருந்து யாராகிலும் ஒருவர் வெளிப்பட்டு வரவேண்டும் என்று பிரார்த்தித்தார் - பிறகு ஓடத் தொடங்கினார்.
ஓடும்போது அவர் சொல்லிக்கொண்டார் ‘‘அது தோற்றம் மட்டும்தான்’’.
மின்னஞ்சல்: amrashmy@gmail.com