தீரா உரையாடல்
மதிப்புரை
தீரா உரையாடல்
மு. கிருஷ்ணமூர்த்தி
வசை மண்
(கிளாசிக் நாவல்)
மார்ட்டீன் ஓ’கைன்
தமிழில்: ஆர். சிவக்குமார்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் & 1
பக். 360, ரூ. 390
இலக்கியத்தின் மையப்பொருளாகப் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்திலிருந்து இயல்பாக இடம்பெற்று வருவது; அதுகுறித்து உருவாக்கப்பட்டுள்ள தத்துவ நிலைப்பாடுகளுக்கு இலக்கியம் உருவம் கொடுக்க முனைந்திருக்கிறது. செவ்வியல் இலக்கியங்களிலிருந்து நவீன கதையாடல்கள் வரை இந்தத் தன்மை நீட்சிகொள்கிறது. மரணம் குறித்த அனைத்துக் கோட்பாடுகளும் வாழ்வை மதிப்பிடுவதற்கான வழிமுறையாக மொழியில் மாற்றப்படுகின்றன. மதங்களும் இத்தன்மைக்கான சாட்சியங்களைத் தன்னுள் கொண்டிருக்கின்றன. விதவிதமான வடிவங்களை மரணம் மொழியளவில் எடுத்துக்கொண்டாலும் அதைக் குறித்த முழுதான அறிவுநிலை, மொழிக்கு அப்பால் எப்போதும் நின்றுகொண்டிருக்கிறது. அதற்கு நவீன இலக்கியம் கொடுத்திருக்கும் பல உருவங்களில் தனித்துவமாக நிற்கிறது மார்ட்டீன் ஓ’ கைன் ஐரிஷ் மொழியில் எழுதிய ‘Cre na Cille ’ எனும் நாவல். செவ்வியல் இலக்கியத்தில் இடம்பெறும் இந்த நவீன நாவலை Alan Titleyஇன் மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் ஆர். சிவக்குமார் செறிவுற மொழிபெயர்த்துள்ளார்.
மொழியியல் ஆர்வலரான மார்ட்டீன் ஓ’ கைன் ஒரு மழைநாளில் நண்பருடன் பெண் சடலம் ஒன்றைப் புதைக்கச் செல்கிறார். மழையில் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் ஏற்கெனவே ஒரு பெண் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் அவளையும் புதைக்கின்றனர். அப்போது அவருடன் வந்தவர் ஒரு தகவலைச் சொல்கிறார். ஏற்கெனவே புதைக்கப்பட்டவள், புதிதாகப் புதைக்கப்படுகிறவளுடனான கருத்து முரண்பாட்டில் இருந்தவள் என்று. ஒரே இடத்தில் புதைக்கப்படுவதால் இருவருக்கிடையில் பேச்சுவார்த்தையில் உரசல்கள் நீளும் என்று ஆசிரியரின் நண்பர் சொல்கிறார். இங்கிருந்தே ‘வசை மண்’ நாவலுக்கான சிந்தனையை ஆசிரியர் எடுக்கிறார்.
1940களில் இந்நாவலை ஐரிஷ் மொழியில் எழுதுகிறார். நாவலில் உரைநடைக்கான இடத்தை முழுதுமாக நீக்கிவிடுகிறார். மேலும் நாவலில் காலம் நகர்வதில்லை. அயர்லாந்தின் கன்னிமாரா கல்லறைத் தோட்டமே நாவலின் கதைக்களம். அங்கு புதைக்கப்பட்டிருக்கும் பிணங்களுக்கிடையேயான முடிவுறாத உரையாடல்களும் அதற்கிடையில் அவை காக்கும் மௌனங்களுமே நாவலாகின்றன. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நிச்சயிக்கப்பட்ட காலத்துடன் உறைந்துவிடுகிறது. வாழ்ந்த வாழ்க்கையை அசைபோடுவதும் புதிதாக வரும் பிணங்களிடமிருந்து தம்முடைய மரணத்திற்குப் பிறகான நாட்களின் சமூகத்தையும் அதில் தமக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதுமே அப்பிணங்களின் அன்றாடமாகிறது.
உரைநடையில் கதாபாத்திரங்களைத் தனித்தனியாக ஆசிரியர் குறிப்பிடுவதில்லை. தொடர்ந்து நிகழ்த்தப்படும் உரையாடல்களே நாவலின் பக்கங்களை நிறைக்கின்றன. தமிழ் வாசகர்களுக்காகச் சில அடிக்குறிப்புகளும் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்த முன்குறிப்பு விளக்கங்களும் இடம்பெறுகின்றன. நாவலின் அளவில் பேச்சின்வழி மட்டுமே கதாபாத்திரங்களை வாசகர்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்துகிறார். பக்கங்கள் நகர நகர வாசகர்களுக்கு ஒவ்வொரு பிணத்தின் வாழ்க்கையும் அவற்றின் ஆசைகளும் தெளிவாகப் புரிபடத் தொடங்குகின்றன. இடையிடையில் ஊதுகொம்பு எனும் கதாபாத்திரத்தின் வழியே பேசுகிறார். சிறிய அளவில் இடம்பெறும் ஊதுகொம்பின் சொற்கள் பிணங்களின் உரையாடல்களுக்குத் தத்துவ முகத்தை அளிக்கின்றன. கல்லறைத் தோட்டத்தைக் குடியிருப்பாக உருவகிக்க உதவுகிறது.
புதைக்கப்பட்டவர்களின் உரையாடல்கள் பெரும்பாலும் வசைகளாக, வம்புப்பேச்சாக அவரவர்களின் பார்வையில் எழுப்பப்படும் நினைவோடைகளாகின்றன. எல்லாருடைய பேச்சிலும் பிறிதொருவர் காயப்படுகின்றனர். நாவலின் மையக்கதாபாத்திரமாக அமைவது கெய்த்ரியானோ பௌடீன். அவளைப் புதைப்பதிலிருந்தே நாவல் ஆரம்பம்கொள்கிறது. அவள்மீது ஏற்கெனவே காழ்ப்பு கொண்டிருக்கும் பல பிணங்கள் அவள் மீதான வசையையும் அவளின் இழி நடத்தையையும் வாங்கிய கடனைத் திருப்பியடைக்காத குணத்தையும் நினைவுபடுத்திய வண்ணமிருக்கின்றன. மேலும் அவளுக்கும் அவளுடைய சகோதரியான நெள் பௌடீனுக்குமான பனிப்போரையும் நினைவுபடுத்தி வசைபாடுகின்றன. உயிருடனிருக்கும் நெள்ளின் மரணத்தை விரும்பும் மனதையும் வாழும்போது நெள் பௌடீன் தனக்குச் செய்ததாக ஏற்றிச் சொல்லப்படும் பொழிப்புரையும் கெய்த்ரியானோவின் கதாபாத்திரமாக உருக்கொள்கிறது. அவளுடைய சொந்தக்காரியான பாபா பௌடீனின் நிலத்தை நெள்ளிற்கும் கெய்த்ரியானோவிற்கும் பிரித்துக் கொடுப்பது சரிவிகிதமாக அமையாது எனும் கற்பனை அவளின் தீய எண்ணங்களுக்கு வலு சேர்க்கிறது. மேலும் பொருளாதார ரீதியில் நெள்ளைவிட கெய்த்ரியானோ பின்தங்கியவள். இத்தகவல் கெய்த்ரியானோவிடம் இருக்கும் தீய எண்ணங்களுக்குப் பொருளாதார ரீதியான தாழ்வு மனப்பான்மை காரணமாக இருக்கக்கூடும் எனும் காரணத்திற்கு வலு சேர்க்கிறது. தான் இறந்தபின்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் தன்மகனுக்கு நிலத்தில் ஒரு பகுதி சென்று சேருமா எனும் எண்ணங்கள் அவளின் சிந்தனைகளாக மரணத்திற்குப் பின் நீள்கிறது.
கெய்த்ரியானோவைப் போன்று ஒவ்வொரு கதாபாத்திரமும் தத்தமக்குத் தேவையான தகவல்களைத் தேடும் வேட்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். முதலாம் உலகப் போரில் புதைக்கப்பட்டவர்கள் இரண்டாம் உலகப் போரோடு தொடர்பற்றவர்களாக இருக்கின்றனர். கதை இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் நிகழ்கிறது. ஆதலால் ஹிட்லரை ஆதரிப்பவர்களும் அவரை எதிர்ப்பவர்களும் ஒருங்கே பேச்சில் ஈடுபடுகின்றனர். எழுதி வெளியாவதற்கு முன்பே இறந்த கவிஞர் தன்னுடைய இலக்கியத் தன்மையைப் பறைசாற்றியபடி இருக்கிறார். ஒவ்வொரு வீடாகத் திருடும் மனிதனை அங்கிருக்கும் பிணங்களில் பல குறை கூறுகின்றன. இவற்றின் உரையாடல்களும் ஒரு முற்றுப்புள்ளி நோக்கி நகர்வதில்லை. மாறாக வாழும்போது பேசிய சொற்களை இறந்தபின்னும் பிரதி எடுக்கின்றன. அவை வாழும்போது முன்வைத்த குற்றச்சாட்டுகளை மீட்டுரைத்தாலும் அதற்கான தீர்வை எதிர்நோக்க மறுக்கின்றன. வாழ்ந்த வாழ்க்கையையும் அதுவரை மேற்கொண்டிருந்த பார்வையையும் பகுத்தறிய எவையுமே விரும்புவதில்லை. தங்களுடன் கருத்தில், வாழ்க்கையில் முரண்பட்டவர்கள் சீக்கிரம் கல்லறைத் தோட்டத்தை வந்துசேர வேண்டுமென்பதே பெருவிருப்பமாக அமைகிறது. தம் பிரச்சினைகளிலிருந்தே பிறரை மதிப்பீடு செய்வதில் அனைத்தும் ஒற்றுமையாக இருக்கின்றன.
புதிதாகக் கொண்டுவரப்படும் பிணங்கள் நாவலில் பெரும் பங்கு வகிக்கின்றன. கதையின் காலம் புதுப் பிணங்களாலேயே நீட்சிகொள்கிறது. புதிதாக வரும் பிணங்களிடம் அவற்றின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கையை, அவர்கள் இறந்த பின் நிகழ்ந்த வாழ்க்கையை அறிய விழைகின்றன. அன்புடன் விசாரிக்க வேண்டிய விஷயங்களைக் குறைவாகவும், சபிக்க விரும்பும் மனிதர்கள் சீரழிந்துவிட்டார்களா எனும் கேள்வியை விரிவாகவும் கேட்கின்றன. பின்னிருக்கும் கேள்வியுடன் அவற்றின் ஆசைகள் பேச்சின் மணிமகுடமாக அமைகின்றன. தம்முடைய தீராத ஆசைகளை உயிருடன் இருப்பவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா எனும் எண்ணம் அவற்றின் அமைதியைக் குலைத்துவிடுகிறது. இறந்தவர்களுக்குக் குழப்பமாகவும் தெளிவற்றதாகவும் இருக்கும் ஆசை அவர்களைப் புதைத்திருக்கும் இடம் குறித்தான கேள்வியாக அமைகிறது. கல்லறைகளை மனிதர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வூரில் பிரித்திருக்கின்றனர். வாழ்ந்த வாழ்க்கையைவிட புதைக்கப்பட்ட இடம் கௌவரமான இடமாக அமைவதில் தீவிரமாக இருந்திருக்கின்றனர். மாற்றிப் புதைத்திருப்பார்களோ எனும் கேள்வி அவற்றை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதுநாள்வரை தாம் வாழ்ந்திருக்கும் வாழ்க்கைக்கான நன்றிக்கடனாகச் சிறந்த இறுதி மரியாதையைத் தமக்கு வழங்கியிருக்க வேண்டும் எனும் ஏக்கத்தைப் பழிப்புடன் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. மற்றொரு கவலை அவற்றின் மேல் பதித்திருக்கும் சிலுவையின் வகை. அவ்வூரான கன்னிமாராவில் இருக்கும் பளிங்கில் அவை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஏங்குகின்றன. மரணத்தைச் செவ்வியல் தன்மையுடன் அவை விரும்புகின்றன.
இவ்வனைத்து விஷயங்களும் நாவலின் அடிநாதமாக இருக்கும் அபத்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. வஞ்சம், பொறாமை, கபடம், கள்ளம் முதலான முரண் சிந்தனைகள் வாழ்க்கையைச் செப்பனிட மறுக்கின்றன. இவை நிறை வாழ்க்கை வாழாது, சக மனிதர்களின் மீதான மனிதத்தையும் குலைத்துப் பேராசைகளுடன் இறப்பதற்கான வாய்ப்பையே கொடுக்கின்றன. ஆனால் சொற்களின்வழி மட்டுமே திருப்தியை உணரக்கூடிய காலத்தில் கன்னிமாரா பளிங்கையும் கௌரவமான அடக்கத்தையும் விரும்புகின்றனவாகத் தம்மை நிறுவிக்கொள்கின்றன. வாழும்போது பேசிய அத்தனை உரையாடல்களையும் மீட்கும்போது அவர்களைத் துரத்திய அத்தனை குற்றச்சாட்டுகளும் மீண்டெழுகின்றன. அவற்றிடமிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஓயாமல் வாதாடுகின்றன; தங்களைப் பற்றியே பேசுகின்றன.
வாழ்வின் வினைகளுக்குப் பிரதிபலனாக மரணம் அமையும் எனும் சித்தாந்தத்திற்கு எதிராக வாழ்வின் நீட்சியாக மரணம் இடம்பெறுவதை நாவல் பேசுகிறது. வாழ்வின் தீராத அத்தனை விஷயங்களையும் மரணமும் சுமக்கத் துவங்குகிறது. மேலும் நாவல் இறந்தவர்களைப் பேசினால் அதற்கு நிகராக அதன் அடியாழத்தில் உயிருடன் வாழ்பவர்களின் அன்றாடத்தையும் கேலி செய்கிறது. இறந்தவர்கள் குறித்து இருக்கும் கருத்தாக்கங்களையும் எதிர்மறையான எண்ணங்களையும் கேள்விக்குட்படுத்துகிறது. மறைந்தவர்களின் காலம் வாழ்பவர்களிடம் உறைந்துவிடுகிறது. அவர்கள் பேசிய சொற்கள் மட்டும் காலத்திற்கும் நிற்கிறது. அவற்றுடன் உரையாடும் தருணங்கள் வாழும்போது செய்யும் நற்செயல்களால் மட்டுமே சாத்தியப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் இந்நாவல் ஒரு நீதிக்கதை.
ஆனால் எடுத்துக்கொள்ளப்படும் வடிவமும் மொழியும் நவீன இலக்கியத்தின் பெரும் அங்கங்களாக உருமாறுகின்றன. வசைகளால் நிரம்பிய வாழ்க்கை மரணத்திலும் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது. மரணம் எல்லாருக்கும் நிம்மதியைக் கொடுத்துவிடுவதில்லை. வாழ்வில் முற்றுப்பெறாத உரையாடல்களை மரணம் நீட்சிகொள்ளச் செய்கிறது. அதைப் புனைவடிவமாக அதிலும் நவீன கதையாடல்களில் பெரும் சவாலாக மார்ட்டீன் ஓ’ கைன் வடித்துள்ளார்.
ஆர். சிவகுமாரின் மொழிபெயர்ப்பில் நாவல் தமிழிலும் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது. வட்டார மொழியியல் பிரிவில் அயர்லாந்தில் சிறந்து வழங்கும் நாவலின் தன்மையை மொழி சிதைவுறாமல் தமிழாக்கியிருக்கிறார். ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் முன்னுரைகள் இந்நாவலின் பண்பாட்டுத் தளத்தில் வாசகர்களின் புரிதல் தன்மையை மேம்படுத்த நன்கு உதவுகின்றன. இங்கிருக்கும் வழக்காற்றுக் கதையாடல்களுக்கும் சவாலான புதினமாக அமைகிறது ‘வசை மண்’.