கடிதங்கள்

தமிழின் சிறந்த அரசியல் நாவல்களில் ஒன்றான ‘பயணம்’ நாவலை எழுதிய அரவிந்தன் மறைவை ஒட்டிக் காலச்சுவடில் வெளியான ‘அரவிந்தன் நினைவுகள்’ பகுதியில் எழுவர் அரவிந்தனின் எழுத்தாளுமை குறித்தும் அவரின் தனிப்பட்ட பண்புகள் குறித்தும் சிறப்பான முறையில் நினைவு கூர்ந்துள்ளார்கள். அவர் இதழியலுக்கு வந்த 25- 30 ஆண்டுகளை முன்னிட்டோ அல்லது அவருக்கு 60 வயது நிறைவை ஒட்டிய சிறப்பு மலராக வந்திருக்க வேண்டிய கட்டுரைகள், அஞ்சலிக் குறிப்புகளாக மாறியிருப்பது துயரம்தான்.
சுந்தர ராமசாமியின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஒன்று ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலை முன்வைத்து பொன்முகலி எழுதியுள்ள ‘இன்றும் பொருந்தும் ஆக்கம்’ என்ற கட்டுரை நாவல் வெளியாகி 60 ஆண்டுகள் கடந்தபின்னும் எப்படி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை மிக அழகாக நிறுவியுள்ளார். நாவலில் இருக்கும் சம்பவங்கள் சமகாலத்தில் எப்படியெல்லாம் நிகழ்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல், தத்துவக் கோட்பாடு மற்றும் சினிமா சார்ந்து அதிக கட்டுரைகள் எழுதியுள்ள (நான் பார்த்த அல்லது படித்த அளவில்) ராஜன் குறை ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை முன்வைத்து ‘நாவலை வாசிப்பது எப்படி?’ என்ற கட்டுரை மற்றொன்றாகும். இந்த நாவல் எதனால் சிறந்த நாவலாக இருக்கிறது என்பதை மிக விரிவாகவும் ஆழமாகவும் கூர்மையாகவும் எழுதியுள்ளார்.
சா.ரு. மணிவில்லன்
சென்னை
***
சித்திரவதைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை ‘சாத்தான்குளம் தீர்ப்பு’ குறித்தான தலையங்கத்தில் சரியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது, சிறப்பு. அரவிந்தன் மாபெரும் இழப்பு; இதழியலுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும்தான். நான்கில் ஒரு பங்கு பக்கத்தில் (20/84) அரவிந்தன் நினைவலைகள் என்றும் மறக்க முடியாத பதிவுகள். ‘மூடிய சாளரம்’ கதை! ‘பணம்’ மட்டுமே எல்லாம் என நினைக்கும் உறவுகள், மக்கள் மத்தியில் வாழ்வில் முன்னேறலாம் என்பதை குட்டிமணி மூலம் தலையில் குட்டியுள்ளார் எம். கோபாலகிருஷ்ணன். கு. அழகிரிசாமியின் டைரி குறிப்புகள், நாட்குறிப்பு எழுதுவதால் என்ன பயன் என்பதை ‘காதலரின் நாட்குறிப்’பாகப் பதிவு செய்திருப்பது சிறப்பு.
சீனி. மணி
மின்னஞ்சல் வழி
***
‘அகலாத நினைவு சொல்லும் நன்றி’ என்கிற தலைப்பில் மறைந்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே பற்றி ஜான் சுந்தர் எழுதிய அஞ்சலிக் கட்டுரை ரசிக்க வைத்தது. தனது சகோதரி லதா பாட விரும்பாத பாடல்களையெல்லாம் தனது பாடல்களாக எடுத்துக்கொண்டு, எல்லாத் தரப்பு ரசிகர்களையும் தன்வசப்படுத்தியவர். ஹிந்திப் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டிருந்த தமிழர்களை மட்டுமல்லாது, ஹிந்திக்காரர்களையும் தமிழ்ப் பாடல்களை முணுமுணுக்க வைத்த இளையராஜாவின் இசையில் அதிகமாகப் பாடியவர். கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோலத் தமிழைச் சில இடங்களில் சிதைத்தாலும் அதனையும் ரசனையுடன் ஏற்றுக்கொண்டது தமிழ்ச் சமூகம். வேறு எந்த மாநிலங்களிலும் இதை ஏற்பார்களா? அல்லது ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
என். பாபு அருள் ஜோஷி
களக்காடு
***
