நிலவுண்ணும் மண்
அவர்கள் இருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டிருந்தனர். மனைவி ஸாரா ஓமர் அரபியிலும் கணவன் அராஃபத் ஹம்சா பிரஞ்சிலும் பேசிக்கொண்டிருந்தனர். தம் குழந்தைகள் இருமொழிகளையும் கற்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர்கள் கதைத்துக்கொண்டிருந்தனர். அதைவிட முக்கியமான சங்கதி என்னவென்றால், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் பேசி இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. ஏகதேசம் பதினான்கு மாதங்களிலிருந்து இருவரும் சாடை சாடையாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலசமயம் வீட்டிலுள்ள பாத்திரங்கள், சுவர், தலையணைகள் இவர்களுடன் பேச்சுக் கொடுத்து விடயத்தைப் பரிமாறிக்கொண்டிருந்தன. வீட்டிலொரு நாய்க்குட்டி வைத்துக்கொள்ளும் கணவரின் விருப்பத்திற்கு ஸாரா ஒப்புகை கொடுத்திருக்கவில்லை; நாய் வளர்ப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்று நிராகரித்திருந்தாள். மனைவியின் அந்தத் தீர்மானத்திற்கெதிராக எதுவும் கூறாமல் மௌனமாக நாட்களைத் தள்ளிக்கொண்டிருந்தார் அராஃபத்