மகராசாவின் வெள்ள நாக்குட்டி
கிருஷ்ணனின் கோட்டோவியத்திற்கு எடுத்துக்காட்டு. அவரது நாய் சொக்கியின் படம்.
கதை
புலிவீரப்பட்டி ஜமீன்தாரின் தோட்டம் நீண்டு போதுமான அகலமற்று இருந்தாலும், செடிகள் அடர்ந்துள்ளன: அன்று ஜமீன்தாருடன் தோட்டத்தைச் சுற்றிவருகையில், “இதென்ன கத்தரிப்பாத்தி போல் நெடுகச் செடிகள் செறிந்திருக்கின்றனவே” என்று நான் எண்ணினேன். போகுமிடமெல்லாம் ஜிம்மி என்ற கறுப்புச்சடை நாயும் எங்கள் பின் வந்துகொண்டிருந்தது. ஜமீன்தாருக்கு நாய்களிடத்தில் அபார வாஞ்சை. தம் தகப்பனார் காலத்திலிருந்து கிழக்கு மூலையிலிருந்த குதிரை லாயங்களை அழித்து, சுமார் இருபது நாய்களுக்கு இடம் போதுமானபடி, நாய்க் கொட்டில்களாகக் கட்டியிருந்தார். தன்னிடம் ஏற்கெனவே மூன்று வேட்டை நாய்கள் இருப்பதாகவும், தினுஸுதினுஸாக நாய்கள் வாங்கிக் கொட்டில்களை நிரப்பப் போவதாகவும் அவர் என்னிடம் சொன்னார். புதுக்கொட்டில்களையும் வேட்டை நாய்களையும் பார்ப்பதற்காகவே, தோட்டத்தைக் கடந்து நாங்கள் காலைச் சூரியனை நோக்கி நடந்துகொண்டிருந்தோம்.
“இந்த சிம்மியை வாங்கி இப்பம் ரெண்டு வாரமாகலை, அதுக்குள்ள என்ன விஸ்வாஸமா நம்ம பின்னோடயே வருது பாத்தீகளா! சாதி ஒஸந்த சாதியில்லே? அதுதான்...” எதிரிலொரு வேலையாள் கைகூப்பி நிற்பதைக் கண்டு, அவர் ‘ஜிம்மி’யின் பிரஸ்தாபத்தை நிறுத்தி “என்னடா?” என்றார்.
சேவகன் கூப்பிய கைகளை இன்னும் கூப்பினான். “மாமா வந்திருக்காக, மகராசாவக் கண்டு போகணுமாம்” என்று தாழ்ந்த குரலில் அவன் பதில் மொழிந்தான்.
“இப்பம் ரொம்ப வேலையா இருக்கேன். நேரமில்லைன்னு தெரியலே? பின்ன ஏன் குண்டாங்களுதையாட்டமா வளியிலே வந்து நிக்கறெ, களுதை” என்று ஜமீன்தார் சீறிவிழவே, அவன் இருக்குமிடம் தெரியாதபடி மறைந்துவிட்டான்.
இதென்ன ஆச்சரியம் என்று நான் நினைத்தேன்: ஏனென்றால், இந்த மாமாவை எனக்கு நன்றாகத் தெரியும். இவர் ஜமீன்தாருக்கு மிகவும் வேண்டியவர். ஏதோ ஓர் எட்டினமுறையில் இவர் ஜமீன்தாருக்கு உறவு - ஆகையினாலேதான் இவருக்கு ‘மாமா’ என்ற பட்டம். ஆனால் நெருங்கிய பந்துக்களிடங்கூட, இவர்களுக்குள் இருந்த தோழமையைக் காணமுடியாது. மாமா பதினெட்டு மைல்களுக்கு அப்பாலிருந்த ஒரு கிராமத்திற் குடியிருந்தார்; மாதத்திற் கொருமுறை ஜமீன்தாரைப் பார்ப்பதற்கு வருவார். அன்று புலிவீரப்பட்டியில் இருந்துவிட்டு, மறுநாள் சன்மானங்களுடன் ஊருக்குப் போவார். இவர் ஜமீன்தாருக்கு மூத்தவர்; அறுபது அறுபத்தைந்து வயதானவராயிருந்தும், நல்ல கம்பீரமான தோற்றமுடையவர். முறுக்கிய வெண் மீசை, பருத்துத் திரண்ட புயங்களுக்கேற்ற பொற்காப்புகள், அன்றுதான் தோய்த்து வெளுத்த தலைப்பாகை - இவைகளில்லாமல் இவரைக் காணமுடியாது. எழுதப் படிக்கத் தெரியாதிருந்தும், உலக அனுபவத்திலே தேர்ச்சி பெற்றவர்; வெகுசாதுரியமாகப் பேச வல்லவர். இவர் ஜமீன்தாரிடத்தில் மிகப் பணிவுடனும் ஆதரவுடனும் நடந்துகொள்வார்; அவர் சந்நிதியில் உட்காரமாட்டார்; உரக்கப் பேசமாட்டார்; வாய்விட்டுச் சிரிக்கக்கூட மாட்டார். ஜமீன்தாரும் இவரை மதிப்புடன் பாராட்டுவார். மறைவில் இவர் ஜமீன்தாரைத் தூற்றியதன் பயனாக, சில நாட்களாக இவர்களுக்குள் மனஸ்தாபம் என்றும், இனி புலிவீரப்பட்டிக்குள் மாமா காலெடுத்து வைக்கக்கூடாதென்று ஜமீன்தார் கட்டளையிட்டு விட்டாரென்றும் ஊரில் யாரோ சொன்னதைக் கேட்டிருந்தும், அதுமட்டும் நான் நம்பவில்லை. இத்தனை நாட்களாகத் தங்கள் நட்பிற்குப் புறமில்லாதபடி நடந்துகொண்ட மாமா திடீரென்று இதற்கு இடங் கொடுப்பாரென்று நான் எண்ணவில்லை. ஆனால் அப்பொழுது, ஜமீன்தாரின் வெறுப்பையும் அவர் உதடுகள் துடித்ததையும் கண்டபொழுது, நான் கேள்விப்பட்டது உண்மைதான் என்று அறிந்தேன்.
தான் ஜிம்மியைப் பற்றிச் சொல்லவந்ததை ஜமீன்தார் சொல்லாதிருந்துவிடவே, நாங்கள் பேசாது வேட்டை நாய்களை நோக்கி நடந்தோம். கொட்டில்களினருகில் செடி மறைவாக யாரோ இருப்பதுபோல் தோன்றிற்று - கிட்டிய பின்புதான் இன்னாரென்று புலப்பட்டது. காப்புங் கையுமாகக் கும்பிட்டுக்கொண்டு, மாமா எங்கள் வழியில் நின்றார்.
“மகராசாவக் கும்பிடறேன்” என்று அவர் சொன்னதைக் கேட்காதவர்போல, ஜமீன்தார் மேல் நடந்தார்: “மகராசா புதுசா வாங்கின நாய் இதுதானோ?” என்று ‘ஜிம்மி’யைச் சுட்டிக்காட்டி அவர் கேட்டதும் ஜமீன்தார் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. ‘ஜிம்மி’யுடன் மாமா எங்களைப் பின்தொடர்ந்ததையும், ஜமீன்தார் கவனிக்காதவர்போல் இருந்துவிட்டார்.
கொட்டில்களின் வெளியில் தங்கள் மெலிந்த உடல்களை எடுத்துக்காட்டும்படிக் கனத்துள்ள சங்கிலிகளால் மூன்று கோம்பை நாய்கள் கட்டியிருந்தன.
“அதோ நடுவில் குந்திக்கிட்டிருக்கிறதே, அதுதான் ரொம்ப சாதி - முந்தாநாள் ஒரு ஆட்டுக்குட்டியக் கிளிச்சுப் போட்டிடுச்சு” என்று ஜமீன்தார் என்னிடம் சொன்னார். சிறிது நேரம் நாய்களை உற்றுப்பார்த்துக்கொண்டு நாங்கள் மௌனமாய் நின்றோம். முடிவில் மாமா மெல்லக் கமறிவிட்டு என்னை நோக்கித் திரும்பினார்.
“நம்ம மகராசாவுக்கு நாயின்னா என்ன கிறுக்குன்னு உங்களுக்குத்தான் தெரியுமே - இந்தத் தோட்டம் என்னென்ன நாயெல்லாமோ பாத்திருக்குது. ஆனாலும் அப்பம் அரண்மனையிலிருந்த ஒரு வெள்ள நாக்குட்டிக்கு ஜதை நான் கேட்டதுமில்லெ பாத்தது மில்லெ” என்று அவர் ஆரம்பித்தார்.
“அந்த நாக்குட்டி நல்ல சுத்த வெள்ள நிறம் - சும்மா - பால்போலிருக்கும். சீம நாய் சாதி: அதென்னமோ பேர் மறந்து போச்சுது. அந்த சாதிக்கு - மகராசாவுக்கு ஒரு வேளை க்யாபகமிருக்கலாம்.”
ஜமீன்தார் சுழித்த புருவங்களுடன் பூமியை நோக்கிய வண்ணமாயிருந்தார்; தம் கைப்பிரம்பால் ஒரு புல்மூட்டினைக் குத்திக்கொண்டிருந்தார். மாமா மேலும் பேசலானார்.
“அந்த நாக்குட்டி யிருந்திச்சே, அது காலெல்லாம் தூண்போலிருக்கும். காது லேசாத் தூக்கிக்கிட்டிருக்கும். வால் கத்தி மாதிரி. அதை மகராசா ஆசப்பட்டு வாங்கி, அவுகளே பேர்வெச்சு எப்படிப் பிரியமா வளத்து வந்தாக! பாளாப்போன மறதி யெனக்கு அந்த நாக்குட்டி பேர்கூட மறந்துபோச்சுது. என்ன ‘டைகரா?’ ஆமாம், ‘டைகர்’னு பேர்.”
ஜமீன்தார் திடீரென்று தலைநிமிர்ந்தார். ‘சாக்கி’ என்று கர்ஜித்துவிட்டு மறுபடியும் கீழிருக்கும் புல்லாந் தரையி லாழ்ந்துவிட்டார்.
ஆமாமாம் - சாக்கி, அதுக்கு சாக்கினு பேரில்ல சாக்கிதான். இந்த சாக்கிக்கு என்ன ரோசந் தெரியுமா? என்ன, நானு அரமனையில் எத்தனை நாயோ பாத்திருக்கேன், பெரிய பெரிய வேட்ட நாயெல்லாம் மகராசாகிட்ட யிருந்தில்லெ! முயல் வேட்டை, மான் வேட்டை, பன்னி வேட்டைக்குக்கூடச் சரியான நாயில்லெ? ஆனா எந்த நாயானாலுங் காக்காயப் பிடிச்சு நீங்க பாத்திருக்கீகளா? இருக்காது. காக்காயெ குண்டு வெச்சுச் சுட்டாக்கூட விளாது - அம்மாஞ் சுருசுருப்பு காக்காய்க்கு. ஆனா, இந்த சாக்கி ஒருநாள் ஒரு காக்காயப் பிடிச்சுடிச்சு, மகராசாவே இதுக்கு சாக்கி! சாக்கி மகராசா காலுங்கிட்டப் படுத்துக்கிட்டு தூங்கறாப்பல இருந்திச்சு - காக்கா அதோ அந்த மருதாணிச் செடியிருக்குதே. அம்மாந் தூரத்திலே மேஞ்சுக்கிட் டிருந்திச்சு. திடீரின்னு ஒரே தவ்வில தவ்வி, சாக்கி அந்தக் காக்காய லபக்கின்ன கவ்விப் பிடிச்சுடிச்சு - அவ்வளவுதான்.”
இந்த அதிசயத்தை எடுத்துரைத்துக்கொண்டே நாய் பாய்ந்த விதத்தை விளக்கும்பொருட்டு மருதாணிச் செடியை நோக்கிக் குதிப்பதுபோல் மாமா பாவித்தார். ‘ஜாக்கி’ காகத்தைப் பிடித்த வரலாறு முடிவதற்கு முன்பே, ஜமீன்தாரின் புருவச்சுளிப்பு மறைந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை நினைத்தோ, அல்லது மாமா தாவுவது போல் நடித்ததைக் கண்டோ, அவர் கொல்லென்று சிரித்துவிட்டார்.
“ஹோ, ஹோ, ஹோ! அந்த - ஹீம் - குடுகுடுப் பாண்டிய வெரட்டிச்சே - ஹோ, ஹோ - அது நெனவிருக்குதா?” என்று ‘ஜாக்கி’யின் செயல்களை மேலும் விளக்கிக் கூறுமாறு, ஜமீன்தார் மாமாவைத் தூண்டினார்.
“அதக்கூடவா மறந்துட்டேன் - நல்லா நெனவிருக்குது. மகராசா, தோட்டத்தில சாக்கியோட இப்படி லாத்திக்கொண்டிருந்தாக. அப்பம் ஒரு குடுகுடுப்பாண்டி.”
ஆனால் இந்தக் கதையைக் கேட்காமலே நான் வந்துவிட்டேன். அதற்குமேல் நான் அங்கு இருப்பது சரியல்ல என்று எனக்குத் தோன்றிற்று. மனஸ்தாபப்பட்டு, பிறகு ‘சாக்கி’யின் திருவிளையாடல்களை நினைத்து உற்சாகமடைந்து கூடும்’ இவர்களுடன் நானும் இருப்பது-
ஏதோ சாக்குச் சொல்லி அவசர விடை பெற்றுக் கொண்டு நான் வந்துவிட்டேன்.
(தினமணி பிரசுரமாக 1944இல் வந்த ‘முன்னிலா’ என்ற நூலில் இடம் பெற்ற கதை)