காலனியமும் காதலும்: விறலிவிடு தூது
கட்டுரை
காலனியமும் காதலும்: விறலிவிடு தூது
சௌ. குணசேகரன்
கீழைநாடுகளில் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வருகை, அதனைத் தொடர்ந்தெழுந்த காலனியத்தின் தாக்கம் ஆகியவற்றை வெறும் அரசியல், சமூக, பொருளாதார மாற்றம் என்ற நிலைகளிலிருந்து வரையறுப்பதுடன், அறிவு, பண்பாட்டுத் தளங்களில் இவற்றின் அணுகுமுறையை வாசிப்பதும் அவசியமாகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘விறலிவிடு தூது’ என்ற தலைப்பிலான நூல்களை முன்வைத்துக் காலனிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள், தமிழ் அறிஞர்கள் மேற்கொண்ட நீண்டதொரு விவாதத்தைத் தொகுத்தளிக்கின்றது இக்கட்டுரை. இதன்மூலம் பால் – பாலுணர்வு - புணர்ச்சி குறித்த செய்திகளைப் பேசுதல், எழுதுதல், கேட்டல், வாசித்தல் என்பனவற்றில் நிலவிய பல்வேறு சமூக, பண்பாட்டு அணுகுமுறைகளையும் பின்புலங்களையும் விவரிக்கிறது. அக்காலத்தில் பெரும்பாலான காலனிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ‘விறலிவிடு தூது’களை ‘ஆபாச நூல்கள்’ எனக் கருதித் தடைசெய்ய முயன்றனர்; எதிர்வினையாக, தமிழ் அறிஞர்களும் பதிப்பகத்தாரும் இவை செந்தமிழ் இலக்கியத்தின் ஒருவகையைச் சார்ந்தன என்ற வாதத்தை முன்வைத்துத் தடையை மறுத்தனர். இந்தக் கட்டுரையின் நோக்கம், இவ்விரு தரப்பினரின் கருத்துகளுக்கு அப்பால், சமூகத்தில் சாமானிய மக்களுக்கு இந்நூல்களின் பயன்பாடு என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்வியை முன்வைப்பதே ஆகும்.
விறலிவிடு தூதுகள்
பொதுவாக தூது வகை, சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டாலும், விறலிவிடு தூதுகள் ஏனைய தூது நூல்களிலிருந்து வேறுபட்டவை. 17, 18ஆம் நூற்றாண்டுகளிலிருந்து பல்வேறு விறலிவிடு தூதுகள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றுள், ‘கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது’, ‘சேதுபதி விறலிவிடு தூது’, ‘செண்டலங்காரன் விறலிவிடு தூது’, ‘மூவரையன் விறலிவிடு தூது’, ‘தெய்வச்சிலையார் விறலிவிடு தூது’ போன்றவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இவை இவற்றை இயற்றிய புலவர்களை (சுப்ரதீபக் கவிராயர், சரவணப்பெருமாள் கவிராயர் போன்றோர்) ஆதரித்த புரவலர்களின் பெயரால் (கூளப்ப நாயக்கன், சேதுபதி போன்றோர்) இந்நூல்கள் அறியப்பட்டன. ஆங்காங்கு, இலக்கிய நடையில், கதையில், கதைமாந்தர் பெயர்களில் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும், பொதுவாக அனைத்து விறலிவிடு தூதுகளும் ஒத்த கதை அமைப்பினைக் கொண்டவை. ஒரு புலவன் - அவதானிதன் வரலாற்றை விறலியிடம் கூறுவது போன்ற கதை அமைப்பு. அந்தணப் புலவன் ஒருவன் தன் மனைவியிடம் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக (பரத்தையரிடம் சென்றதாகச் சந்தேகம், சண்டை), தெய்வதரிசனம் வேண்டி வெளியூர், கோவில் நகரத்திற்குச் செல்ல, நண்பனின் அறிவுரையையும் மதியாது முடிவெடுக்கிறான். சபலபுத்தியால், கோவிலில் நடனம் ஆடிய தாசியின் அழகில் மயங்கி, காதல் கொண்டு, கலவி இன்பத்தில் சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்து, தன்னிடமிருந்த செல்வம் அனைத்தையும் இழக்கிறான். பின் உதவாக்கரையென, தாய்க்கிழவியால் விரட்டப்பட்டு, கோவில் நகரத்துச் சபையோர் அறிவுரையின் பேரில் ஊர்திரும்பி, மனைவியிடம் சேர விரும்புகிறான். வரும் வழியில் தன்னை ஆதரிக்கும் புரவலரின் அவையில் பாடல் இயற்றிப் பரிசில் பெற்று, விறலியிடம் தன் கதையைக் கூறித், தனக்காக மனைவியிடம் தூது செல்லுமாறு வேண்டுதலோடு கதை முடிகிறது. ‘தாசியிடம் கொடுத்த காசு திரும்பாது’, ‘காசிக்குப் போனாலும் வேசி புணர்ந்த பாவம் போகாதே’, என்பவை இதன் நீதியாக முன்வைக்கப்படுகின்றன.
இதுபோன்ற கருவைக் கொண்ட பாடல்கள் சங்ககாலம் தொட்டு தமிழ் இலக்கியங்களில் வருபவை. ஆனால் விறலிவிடு தூதுகளில் வரும் காமம், புணர்ச்சி, பரத்தையருடன் உறவு போன்ற நிகழ்வுகள் குறித்த நீண்ட விளக்கங்கள், வருணனைகள், ஏனைய இலக்கியங்களிடமிருந்து வேறுபடுவை. இவை, இலக்கிய மொழி, மக்கள் மொழி இரண்டும் கலந்த ஒரு மொழிநடையில் இரட்டை அர்த்த நையாண்டிகளுடன், வருணனைகளும் நிறைந்தவை. குறிப்பாக, விறலியின் உடல் அழகு, தாசிகளின் (மதனாபிஷேகம், மோகனமுத்து, சித்திரவல்லி போன்றோர்) பருவ வளர்ச்சி, உடல் அழகு, தாசிகள் மோகவலையின் அபாயத்தைக் குறித்து அவதானியின் நண்பன் கூறுபவை, தாய்க்கிழவியின் (மாணிக்கமாலை, செங்கமலவள்ளி போன்றோர்) உடல் தளர்ச்சி, தொழில் உத்திகள், தாய்க்கிழவி தாசிக்குக் கற்பிக்கும் போதனைகள், வாடிக்கையாளர்களின் மனோபாவங்கள் - செயல்பாடுகள், கலைத்தன்மையுடைய படுக்கையறையின் தோற்றம், தாசியுடன் புணர்ச்சியில் ஈடுபடுதல் போன்றவை குறித்த வருணனைகள், முன்பு குறிப்பிட்டதுபோல், 1912ஆம் ஆண்டுவாக்கில் தமிழ் அறிஞர்களுக்கும் காலனிய ஆட்சியாளர்களுக்கும் இடையே, இவை ஆபாசமா - இலக்கியமா என்ற கேள்வியை முன்வைத்துத் தீவிர விவாதத்தை ஏற்படுத்தின. இவ்விவாதத்திற்குச் செல்வதற்குமுன், பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு மாற்றங்களைப் பேச வேண்டியுள்ளது.
கிழக்கத்தியமும் ஆபாசமும்
மேற்கத்திய நாகரிகத்திற்கு மாற்றாகப் பார்க்கப்பட்ட கீழைநாடுகளின் நாகரிகம் என்ற சிந்தனை, 18 - 19ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய வெவ்வேறு செயல்பாடுகளின் ஊடாகக் கட்டமைக்கப்பட்டது. குறிப்பாக, ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி - ஆசிய நாடுகளில் தனியுடைமை வளராதிருத்தல் குறித்து ஆதம் ஸ்மித், ஹெகல், கார்ல் மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்கள் முன்வைத்த விவாதங்கள், இந்தியாவில் இந்து சமூகத்தின் பிற்போக்குத் தன்மையை வலியுறுத்தி ஐரோப்பிய கிறுத்துவ மதபோதகர்கள் மேற்கொண்ட பரப்புரைகள், இவை இரண்டையும் பயன்படுத்திக் காலனிய ஆட்சியாளர்கள் இந்தியச் சமூக முன்னேற்றத்திற்குத் தம் ஆட்சியின் தேவையை நியாயப்படுத்த விழைந்தமை போன்றவை ஒரு பின்தங்கிய, நாகரிக வளர்ச்சியற்ற ஆசிய / இந்திய சமூகம் என்ற பிம்பத்தை வலுவாக முன்வைத்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மதகுருமார்கள் போன்று, காலனி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இந்தியச் சமூகத்தை விக்டோரியன் ஒழுக்கம் என்ற கண்ணோட்டத்தின் ஊடாகவே பார்த்தனர். இதன் முக்கியக் கூறுகளாகத் தனிமனித ஒழுக்கம், மேம்பட்ட நடத்தை, பாலுணர்வுசார்ந்த சமூக நெறிமுறைகள் போன்றவை இருந்தன. இவை காலனிய சமூகங்கள் குறித்துக் கொண்டிருந்த மதிப்புகள், அணுகுமுறைகள் மீதான அறிதலுக்குத் தடையாக இருந்தன. இவற்றில், வெளிப்படையானஆபாசம் - புணர்ச்சி பற்றிய பேச்சு, எழுத்து என்பவை தனிப்பட்ட ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் செயலாகக் கருதப்பட்டுச் சீரிய தணிக்கை விதிகள் உண்டாக்கப்பட்டன. ஆனால் விக்டோரியா காலத்திலும், அதற்கும் முன்பும் பின்பும், ஐரோப்பியச் சமூகத்தில் காம எழுத்துகளும் கதையாடல்களும் வெவ்வேறு வடிவத்தில் பொதுமக்களிடையே தொடர்ந்து புழக்கத்திலிருந்ததை அண்மை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு தணிக்கை நெறிகளுக்கு அப்பால், காம நூல்கள் பிரசுரிக்கப்பட்டுப் பொதுமக்கள் வாசிப்பிற்குக் கொண்டுவரப்பட்டன. எடுத்துக்காட்டாக, 1883இல் வாத்சாயனாவின் ‘காமசூத்ரா’வை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அர்புத்நாட், பர்டன் போன்றோர் பிரிட்டானிய தணிக்கைச் சட்டங்களின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காகப் போலியான இந்தியப் பதிப்பகத்தை உருவாக்கி அதன் பெயரில் வெளியிட்டனர். இதன் தலைப்பில், ‘தனிச் சுற்றுக்கு’ என்ற குறிப்புடனும் வெளியிட்டனர். எப்படியாயினும், அரசின் சட்டங்களையும் மீறிப் பெரும்பாலாக வாசிக்கக்கூடிய ஐரோப்பிய மக்களுக்கு, ‘காமசூத்ரா’ மிக எளிதில் கிடைக்கக்கூடிய நூலாகவே இருந்தது. ஆக்ஸ்போர்டு அறிஞர் மாக்ஸ் முல்லர் போன்றோர் ‘காமசூத்ரா’வை இந்தியப் புனிதப் புத்தகங்கள் பட்டியலில் சேர்த்திருந்தனர். பொதுவாகக் காமம், புணர்ச்சி, ஆபாசம் போன்றவை மற்ற சமூகத்தில், நாகரிகத்தில் ஏற்படுவதாகச் சித்திரிக்கப்படும்போது அல்லது மதம், புனிதம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டபோது பொதுவாக அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு இந்தியாவிலிருந்தும் இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்தும் காமப் புத்தகங்கள் இறக்குமதியாயின.
ஐரோப்பியர்களை (அதிகாரிகள், பயணிகள், மதகுருக்கள்) பொறுத்தமட்டில் இந்தியா காமத்தை வெளிப்படையாகக் கொண்டாடும் தேசம். இதற்குக் ‘காமசூத்ரா’ போன்ற புத்தகங்கள், கோவில் சிற்பங்கள் போன்றவை எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டன. இது பொதுவாக அவர்களது விக்டோரியன் ஐரோப்பிய மனநிலையைப் பிரதிபலித்தது. இந்தியா ஐரோப்பாவின் காலனியானபோது, அங்கு நிலவியதுபோல, ஆபாசப் புத்தகங்களுக்கு எதிரான சட்டங்களையும் தணிக்கை நெறிகளையும், இந்தியாவிலும் கொண்டுவந்து, அம்முயற்சிகளில் தோல்வி அடைந்தனர்.
காலனியத் தணிக்கையும் நிர்வாகமும்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு எந்திரப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பிறகு வாய்வழியாகவும் ஓலைச்சுவடி வடிவிலும் புழக்கத்திலிருந்த தமிழ் இலக்கியங்கள் பிரசுரத்திற்கு வந்தன. இவற்றுள், சாதாரண மக்களிடம் பெருவாரியான வரவேற்பைப் பெற்றிருந்த ‘விறலிவிடு தூது’, ‘காவடிச் சிந்து’ போன்ற நூல்களும் அடங்கும். அச்சுக்கூடங்கள், புத்தக விற்பனை போன்றவை காலனிய அரசுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் ஆதாரங்களாக இருந்தபோதிலும், காலனிய அரசின் வளர்ச்சிக்கும் ஆட்சியாளர்கள், மதகுருக்கள் பேண முயன்ற அறநெறிகள் மதிப்புகளுக்கு எதிராக இவை செயல்படக்கூடும் என்ற பயமும் மேலோங்கியிருந்தது. விளைவாக, காலனிய அரசாங்கம் இதற்கெனச் சிறப்புத் தணிக்கைச் சட்டங்களைக் கொண்டுவந்து அச்சுக்கூடங்களையும் பிரசுரங்களையும் தீவிரக் கண்காணிப்புக்குட்படுத்த விழைந்தது. இரண்டு வகையான பிரசுரங்கள்மீது தணிக்கை நடவடிக்கைகள் தொடரப்பட்டன. ஒன்று, அரசுக்கு எதிரான சிந்தனைகளைப் பரப்பி மக்கள் கிளர்ச்சிக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் துணைபோவதாகக் கருதப்பட்டவை; மற்றொன்று பால், பாலுணர்வு சார்ந்த சிந்தனைகளை வெளிப்படையாக வர்ணிப்பவை அல்லது உடலுறவுக் காட்சிகளை வர்ணிப்பதன் மூலம் பாலுணர்வைத் தூண்டிச் சமூக ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிப்பவையாகக் கருதப்பட்டவை. 1867 புத்தகச் சட்டம், 1910 இந்திய அச்சுச் சட்டம், 1931 இந்திய அச்சுச் சட்டம் (அவசரகால அதிகாரங்கள்) போன்றவை இதனை மையப்படுத்தியே வரையப்பட்டு அமலுக்கு வந்தன. இச்சட்டங்களின் ஊடாக, வெவ்வேறு நிறுவனங்களும் செயல்முறைகளும் நிறுவப்பட்டு நடைமுறைச் சாத்தியங்கள், பிரச்சினைகள் பரிசோதிக்கப்பட்டன. பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களைக் கணக்கெடுப்பதற்கென பதிவாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். பின் பிரசுரங்களின் காலாண்டு, ஆண்டு அட்டவணைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. வட்டார மொழிப் புத்தங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதற்கென மொழிபெயர்ப்பாளர் நியமனம், அவருக்குத் துணையாக உதவி மொழிபெயர்ப்பாளர்கள் நியமனம், மாவட்டக் குற்றவியல் நடுவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் போன்றோருக்கு இச்சட்டங்களை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சிறப்பு அதிகாரங்களைக் கொடுத்தல் என வெவ்வேறு வழிமுறைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன.
முதன்முதலில் ஆபாசப் புத்தகப் புழக்கத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்து பிரசுரங்களை ஒழுங்குபடுத்தவேண்டியதை வலியுறுத்திய கோரிக்கை கிறித்துவ மதபோதனை சார்ந்தவர்களிடம் இருந்து எழுந்தது. 1860களில், கல்விச் சீர்திருத்தங்களில் அக்கறை காட்டியவரும், விரிவான தமிழ்ப்புத்தங்களின் பட்டியலை வெளியிட்டவருமான ஜான் முர்டாக் பாடப்புத்தகங்களில் மலிந்திருக்கும் ஆபாசமான இலக்கியங்களுக்கு எதிரான கருத்தை முன்வைத்தார். வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, “முர்டாக்கின் இந்தக் கருத்து அவருடைய ஒட்டுமொத்த கிறித்துவர் அல்லாத கீழைநாகரிகத்தின் மீதான விமர்சனத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது” என்கிறார். எப்படியாயினும், ஆபாசமெனக் கருதப்பட்ட தமிழ் நூல்களின் மீதான தணிக்கை ஒழுங்குமுறைகள் பற்றிய விவாதம், 1911இல் காலனிய அரசு ஆபாச வர்ணனைகளுக்காக ‘விறலிவிடு தூது’, ‘காவடிச் சிந்து’, ‘சரசமோகனஜவாலி’ ஆகிய நூல்களைத் தடைசெய்து அவற்றைப் பிரசுரித்த பதிப்பகத்தார் மீது குற்ற விசாரணையை மேற்கொண்டபோதுதான் பொதுவெளிக்கு வந்தது.
தமிழ் அறிஞர்களின் தீர்மானம்
1912இல் மதராஸையும் மதுரையையும் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் சங்கங்களில் காலனிய அரசின் புத்தகத் தடைகள் பற்றித் தீவிரமாக விவாதித்துத் தமது கோரிக்கைகளை எழுத்துவடிவில் மனுவாக அரசாங்கத்திடம் சமர்ப்பித்தனர். மதராஸ் தமிழ் அறிஞர்கள் 1912 ஜூலை, 27ஆம் தேதி, ஒரு பொதுக்கூட்டம் கூட்டி, அதில் ஆபாசம் என்பதன் பேரில் பதிப்பகத்தார்மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு முன்பு இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட பதிப்பகத்தாரிடம் காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். மேலும், ‘விறலிவிடு தூது’ மீதான நடவடிக்கையைக் குறித்துப் பேசுகையில், இது தொன்மைத் தமிழில் எழுதப்பட்ட கவிதை வடிவிலான நூல் எனவும், இதன் முக்கிய நோக்கம் நடத்தை தவறிய வாழ்வின் தீமைகளை ஆணித்தரமாக எடுத்துரைப்பதே என்றும் கூறினர். இதுபோன்ற நூல்கள் ஆபாசத்திற்காக விற்பனையாகுபவை அல்ல என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், இதன் இலக்கிய மொழியையும் அதன் நடையையும் புரிந்துகொள்ள தமிழ் இலக்கணத்தில் போதுமான பயிற்சியும் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்; சாமானிய மக்கள் இவற்றை வாசிக்க இயலாது என்று வாதிட்டனர். சட்டத்தின்படிச் சில பக்கங்கள் ஆபாசம் எனப் பார்க்கப்பட்டால் அப்பக்கங்களை நீக்கிப் புதிய பதிப்பைக் கொண்டுவரப் பதிப்பகத்தார் தயாராக இருப்பதாகவும், இதுபோன்ற சட்ட ஒழுங்குமுறைகளைக் கொண்டுவருவதற்கு முன்பு இதுகுறித்துக் கற்றறிந்தோரின் அமைப்புகளுடன் ஆலோசனை செய்ய வேண்டும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏறக்குறைய, மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் இதுபோன்ற கோரிக்கையை முன்வைத்து ‘காவடிச் சிந்து’, ‘விறலிவிடுதூ’தினைப் பதிப்பித்த பதிப்பகத்தார்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என வாதிட்டனர். குறிப்பாக ‘விறலிவிடு தூது’ பற்றித் தம் தீர்மானத்தில் இவ்வாறான கருத்தைப் பதிவு செய்தனர்.
அறம் தவறிய வாழ்வின் சீர்கேடுகளையும் ஆபத்தையும் தோலுரித்துக் காட்டும் நோக்கத்துடன் தொன்மைத் தமிழில் எழுதப்பட்ட நூல் ‘விறலிவிடு தூது’, எவ்வாறு சிற்றின்ப வேட்கை கொண்டு மானிடர் இவ்வுலகில் பெரும் கஷ்டத்திற்குள்ளாகிக் கடவுளின் கருணையை இழக்கின்றனர் என்பதை விளக்குவது. இந்நூல் சிற்றின்ப இச்சையில் எளிதாக வழுக்கி விழக்கூடும் சிறத்தன்மையற்ற மனத்தினைக் கொண்டோர்க்கானது அன்று, மாறாக திட மனநிலையோடு வாழ்வோர் படிக்கக் கூடியது. தமிழில் தேர்ந்த புலமையும் தேர்ச்சியும் கொண்டவர்கள் மட்டுமே வாசிக்க இயலக்கூடிய கடின மொழிநடையிலானது.
இந்நூல் எந்த வகையிலும் இதன் வாசகர்களை முறை தவறிய வாழ்க்கைக்கு இட்டுச் செல்லாது, மாறாக அதற்கு எதிர்ப்பான நீதியைப் போதிப்பது எனவும் அவர்கள் கூறினர். அரசு தவறாகப் புரிந்துகொண்டதன் காரணமாகவே இந்நூல் மக்களின் ஒழுக்கநெறிக்குக் கேடு விளைவிப்பவை என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகக் கூறினர்.
அரசாங்கத்தின் விசாரணை
காலனிய ஆட்சியாளர்கள் தமிழ் அறிஞர்களின் கோரிக்கையைத் தீவிர பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, பதிப்பகத்தார்மீது காவல் துறை நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தவும் செய்தனர். மேலும் இப்புத்தகங்களின் உண்மைத் தன்மையையும் நோக்கத்தையும் அறிந்துகொள்ளும் முயற்சியில், மொழிப் பிரச்சினையால் ஆங்கிலேய அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட இயலாமல் போனது. மேலும் தவறான மொழிபெயர்ப்புகள் தாமதத்தை ஏற்படுத்தின. மதராஸ் தமிழ்ச் சங்கத்தாரின் மனு கிடைக்கப்பெற்றவுடன், மதராஸ் மாகாண அரசு கீழ்ச் செயலர் C.W.F. காட்டன் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளுமாறும் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தமக்குத் துரிதமாக அனுப்பும்படியும் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆணை பிறப்பித்தார். எனவே இரண்டாவது மனு, அதாவது மதுரை தமிழ் அறிஞர்களின் கோரிக்கை மனு தம் கைக்குக் கிடைப்பதற்கு முன்பே, காட்டனிடம் பிரசுரமான இப்புத்தகங்களும் அதில் ஆபாசம் எனக் கருதப்பட்ட பக்கங்களின் மொழிபெயர்ப்புகளும் வந்து சேர்ந்தன. பிறகு அவற்றை அரசுத் தலைமை மொழிபெயர்ப்பாளர் வி. ராகவ சார்லுக்கு, ‘இப்புத்தகங்களின் காலம், ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு அனுப்பிவைப்பதோடு, இப்புத்தகங்கள் செந்தமிழ் இலக்கிய வகையைச் சார்ந்தவை என்ற வாதத்தின் மீதான தங்களின் கருத்தைத் தெரிவிக்கவும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். தணிக்கை செய்யப்பட்ட இப்புத்தகங்களின் பதிப்புகளை விற்பனைக்கு அனுமதிப்பது குறித்தும் கருத்துத் தெரிவிக்குமாறு தலைமை மொழிபெயர்ப்பாளர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
தலைமை மொழிபெயர்ப்பாளர் கருத்து
சில மாதங்களில், விசாரணைக்குட்பட்ட இப்புத்தகங்களின் மீதான தன் கருத்தை வி. ராகவ சார்லு அரசுக்கு அனுப்பிவைத்தார். அதில் ‘விறலிவிடு தூது’ (A message sent through a girl of sixteen years என மொழிபெயர்க்கப்பட்டிருந்தது) பற்றி இவ்வாறான கருத்தைக் குறிப்பிட்டிருந்தார்:
இணைப்புப் பட்டியல் இரண்டில், இப்புத்தகத்தையும் இதே தலைப்பில் சரவணப்பெருமாள் என்பவரால் எழுதப்பட்டு வெளிவந்த, உளவுத் துறையினரின் வேண்டுகோளிற்கிணங்க நான் விசாரணை மேற்கொண்ட, மற்றொரு புத்தகத்தின் சுருக்கத்தையும், மேலும் இவற்றில் ஆபாசம் எனக் கருதப்படும் பகுதிகளின் மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளேன். இப்புத்தகங்களின் பல பக்கங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதால், இவை இந்த வடிவில் இருப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று கருதுகிறேன். பதிப்பகத்தார் இவற்றைப் பிரசுரம் செய்ய வேண்டும் என்று விழைந்தால், இப்பக்கங்களை நீக்கிவிட்டுப் பதிப்பிக்கலாம்.
தலைமை மொழிபெயர்ப்பாளர், இப்புத்தகம் செந்தமிழ் இலக்கிய வகையைச் சார்ந்தது என்ற கருத்தை ஏற்றுக்கொண்டார். இப்புத்தகம் இருநூறு ஆண்டுகளுக்கு (பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்) முன்பு எழுதப்பட்டதையும் குறிப்பிட்டிருந்தார்.
தி இந்து, சுதேசமித்திரனில் செய்தி
தமிழ் அறிஞர்களுக்குக் கூடிய விரைவில் ஏறக்குறைய சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இதற்கு முக்கியக் காரணம் இவற்றுக்குப் பின்னால் திரைமறைவில் பலபேர் மேற்கொண்ட முயற்சிகள். அறிஞர்களும் பதிப்பகத்தாரும் தங்கள் கோரிக்கையை ஊடகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை நிர்வாக சபைப் பிரதிநிதிகள் ஆகியோரின் மூலம் முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். தி இந்து, சுதேசமித்திரன் போன்ற ஆங்கிலத் தினசரிகள் மதராஸிலும் மதுரையிலும் நடந்த கூட்டங்களையும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மிக விரிவாகச் செய்திகளாக வெளியிட்டிருந்தன. தி இந்து 1912 ஜூலை 29ஆம் நாள், இப்பிரச்சினை குறித்து இவ்வாறு எழுதியது:
‘...மேற்குறிப்பிட்ட இரண்டு நூல்களும் செந்தமிழ் நூல் வகைகளைச் சேர்ந்தவை. சமுதாயத்தின் குறிப்பிட்ட தரப்பினரின், வயதினரின் பயன்பாட்டுக்காக இந்த வகை நூல்கள் எழுதப்பட்டன; பொதுமக்களுக்கானது அன்று. இதில் அரிதாகக் காணப்படும் ஆபாசச் செய்திகளால் எளிதில் மனதளவில் சிதைவடையாத, படித்த, கல்விக்கு அர்ப்பணித்த மிகச் சிறிய வட்டத்தினருக்குப் பயன்படும் விதத்தில் எழுதப்பட்டவை. இன்றைய சாமானிய மக்கள் இவ்வகை நூல்களைப் படிப்பதற்கான சாத்தியம் இல்லை. கல்வி அறிவு மிகுந்த தெய்வபக்தியுடையோரின் புத்தி இந்த ஆபாசப் பக்கங்களால் சீர்கெடும் என்று கருதுவது மிகத் தவறு. இத்தகைய நிலை ‘காவடிச் சிந்து’க்கும் ‘விறலிவிடு தூது’க்கும் ஏற்படுமானால், விரைவில் ஏனைய தமிழ்ப் புத்தகங்களுக்கும் இதே முடிவு வரக்கூடும் எனத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மிகவும் பதற்றமடைகின்றனர். காவல்துறை பொதுமக்களின் மனது மாசாகாமல் காக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் கவனிக்க வேண்டிய புத்தகங்கள் எவை என்றால், அன்றாடம் பதிப்பகத்திலிருந்து வெளிவருகின்ற மலிவு விலைப் புத்தகங்கள்தான். மேலும் தெருவில், சாமானிய மக்களின் கண்களைக் கவர்ந்திழுக்கும் வெளிப்படையான உடலுறவுக் காட்சிகளைக் கொண்ட அந்த விளம்பரங்களை (உடைய புத்தகங்களை) கூடத் தடை செய்ய வேண்டியிருக்கின்றது. இவையே பொதுமக்களின் புத்தியைச் சீர்குலைப்பவை.’
தி இந்து செய்தி, தமிழ் அறிஞர்கள் தங்கள் தீர்மானங்களில் வெளிப்படுத்தியிருந்த ஆதங்கத்தையே சற்று ஏற்றிக் கூறியிருந்தது. என்றபோதிலும் இது இப்பிரச்சினைமீது பொதுமக்கள், ஏனைய தரப்பினரின் கவனத்தை ஈர்க்க உதவியது.
நிர்வாகச் சபை உறுப்பினருக்கு வேண்டுகோள்
அதிகாரிகள், செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆளுநரின் நிர்வாக சபை உறுப்பினர்களின் கவனத்தைத் தினசரிகளில் வந்த செய்தி வெகுவாக ஈர்த்தது. இதைப்பற்றி அறிஞர் குழுக்கள் நிர்வாகச் சபையில் இந்தியப் பிரதிநிதியும் உறுப்பினருமான பி.எஸ். சிவசாமி ஐயருக்குக் கடிதம் எழுதுவதற்கு முன்னரே, தி இந்து செய்தி மூலம் இப்பிரச்சினையை அவர் அறிந்திருந்தார். முறைப்படி, 1912 ஜூலை 30ஆம் நாள் மதுரையிலிருந்தும், அதன் பிறகு மதராஸ் தமிழ் சங்கத்தாரிடமிருந்தும் சங்கப் பிரதிநிதிகள் கையொப்பமிட்ட வேண்டுகோள் கடிதங்கள் ஐயருக்கு வந்தடைந்தன.
மதுரைச் சங்கத்தார் சார்பாக எழுதிய பி. நாராயண ஐயர், இப்பிரச்சனையை முழுக்கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதோடு, “நான் இந்தப் புத்தகங்களை வாசித்துப் பார்த்தேன். என் கருத்துப்படி, ஸ்ரீ கிருஷ்ணாவின் புகழைப் போற்றி எழுதப்பட்ட ‘கர்ணாமிர்த ஸ்லோகங்கள்’ அல்லது அதிவீரராமபாண்டியன் எழுதிய ‘நவிஷாட்ரம்’ போன்ற பல நூல்களோடு ஒப்பிடும்போது, இவை மோசமானவை அல்ல” என்றும் எழுதியிருந்தார். இதுபோன்ற அடக்குமுறைகள் தொடர்ந்தால், வருங்காலத்தில் தமிழ்மொழியின் தலைவிதி என்னவாகும் என்ற கவலையையும் முன்வைத்தார். மேலும், அதேநேரத்தில் மேல்நாடுகளிலிருந்து நமது புத்தகச் சந்தைகளுக்கு வந்து குவியும் கடவுள் அல்லது பக்தியின் நிழல்கூட படாத ஆபாசப் புத்தகங்களையும் படங்களையும் பற்றிக் கவனத்தில் கொள்ளுமாறும், ஆங்கில எழுத்தாளர் ரேடனோல்டின் ‘தி மிஸ்டிரிஸ் ஆப் பாரிஸ், லண்டன்’ உள்ளிட்ட ஏனைய நாவல்களைப் பற்றிய தங்களது கருத்து என்ன எனவும் வினவியிருந்தார். இதுபோல், மதராஸ் சங்கத்தின் தலைவரிடமிருந்தும், சிவசாமி ஐயருக்கு இந்தப் பிரச்சனையைக் குறிப்பிட்டுத் தந்தி வந்திருந்தது.
தமிழ்ச் சங்கத்தாரின் முயற்சி பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டியது. கடிதம் கிடைக்கப்பெற்ற அன்றே, சிவசாமி ஐயர் நிர்வாக சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கு இக்கடிதங்களை அனுப்பி வைத்து நிர்வாக சபைக் கூட்டத்திலும் இது குறித்துப் பேசினார். இதனையடுத்து மாகாண ஆளுநர், செயலாளர்கள் உள்ளிட்டோரிடமும், இது குறித்துத் தொடர்ந்து கடிதம், தந்திகள் மூலம் விவாதித்தார். முயற்சிகளின் விளைவாக காலனிய அரசாங்கம், மேற்படி புத்தகங்களைப் பதிப்பித்தோர், விற்பனை செய்தோர்மீதான குற்ற விசாரணையைத் தற்காலிகமாக ஒத்திவைத்தது.
துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலின் கருத்து
காலனிய ஆவணங்களான ‘டெமி ஓஃபிஸியல் கம்யூனிகேஷன்ஸ்’ (Demi-official communications) இப்பிரச்சனை குறித்து நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் மாகாண கவர்னருக்கும் காலனிய அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற தனிப்பட்ட உரையாடல்களைக் கொடுக்கின்றன. 1912ஆம் ஆண்டு ஆவணங்களின்படி சிவசாமி ஐயர், ஹரோல்டு ஸ்டுவர்ட் (நிர்வாக சபை உறுப்பினர்), வி. ஹம்மிக் (மதராஸ் மாகாணஆளுநர்) ஆகஸ்ட் முதல் இரண்டு வாரங்களில் தொடர்ந்து கடிதம் / தந்தி மூலம் தத்தமது கருத்துக்களைத் தங்களிடையே பகிர்ந்துகொண்டுள்ளனர். இவர்களுக்கிடையேயான தனிப்பட்ட விவாதங்கள், கருத்துகள் இது தொடர்பான இறுதி முடிவை எட்டுவதற்கு உதவின. முதலில், நிர்வாக சபை உறுப்பினர்கள் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலிடமிருந்து (ரயில்வே, CID) பதிப்பகத்தார்மீது மேற்கொண்ட குற்ற விசாரணை பற்றிய ஓர் அறிக்கையையும் மொழிபெயர்க்கப்பட்ட ஆபாசப் பக்கங்களையும் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தம் பதிலில், இப்புத்தகங்களின் மீது தனது தனிப்பட்ட கருத்தையும் குறிப்பிட்டிருந்தார். C.J. Cockburn வகுத்தளித்த வரையறைகளின்படித் தாம் இந்தக் குற்ற விசாரணையை மேற்கொள்வதாகவும் இதன்படி அவரது பணி, ஆபாசமெனக் கருதப்படுகிற புத்தகங்கள், இவற்றால் எளிதில் கவர்ந்திழுக்கப்படக்கூடிய பலவீனமான மனநிலை கொண்டோரைச் சென்றடைந்து கேடு விளைவிக்கும் தன்மைகொண்டனவா என்று விசாரித்து உறுதிப்படுத்துவதாகும். ஜெனரலின் கருத்துப்படி, ‘விறலிவிடு தூது’ சமயம் சார்ந்ததோ அல்லது செந்தமிழ் வகையைச் சார்ந்த நூலோ இல்லை. மேலும் இதில் ஆபாசம் எனக் கருதப்படும் பக்கங்கள் சாமானிய வாசகர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது எனக் கூறமுடியாது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்களின் குறிக்கோள் தாசிகளின் மோசவலையையும் சூழ்ச்சியையும் பற்றி விளக்குவதாகக் கருதினாலும், அங்ஙனம் செய்யும்போது தாசிகளின் வீடுகள் பற்றியும் உடல் உறவு பற்றியும் விளக்கமாகக் கூறுகின்றனர்.
தனிப்பட்டோரின் கருத்துக்கள்
மேற்குறிப்பிட்ட டெமி ஓஃபிஸியல் கடிதங்களிடமிருந்து ‘விறலிவிடு தூது’ பற்றிக் காலனிய அலுவலர்களும் நிர்வாகச் சபை உறுப்பினர்களும் தெரிவித்திருந்த வெவ்வேறு விதமான தனிப்பட்ட கருத்துகளை அறிகிறோம். எடுத்துக்காட்டுக்குச் சில வாதங்களைப் பார்ப்போம்: 1. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தப் புத்தகம் ஒழுக்கநெறி அற்றது எனக் கூற இயலாது; என்றபோதிலும் குறிப்பிட்ட பக்கங்கள் மோசமான ஆபாசத்தைக் கொண்டு, கற்பனை செய்யமுடியாத அளவிற்குப் படிப்பவரின் மனத்தைப் பாழ்படுத்தக் கூடியவையாகத் தோன்றுகின்றன. (S.H.Slater, 1.9.12) 2. இந்தக் குறிப்பிட்ட (ஆபாச) பக்கங்களைப் பார்க்கும்போது, ‘விறலிவிடு தூது’ ஒழுக்கநெறியைக் கற்பிக்கும் நூல் அன்று, அதற்கு மாறான செயலைச் செய்யக்கூடியது. 3. சட்டப்படிப் பார்க்கும்போது, இந்தக் குறிப்பிட்ட பக்கங்கள் ஆபாசமானவை (H.A.Stuart, 11.9.12) 4. இந்தப் புத்தகங்கள்ஆபாசமானவை அல்ல என்ற வாதத்திற்கு ஆதரவு அளிப்போரிடம் இந்தக் கேள்வியை முன்வைக்க விரும்புகின்றேன் - உங்கள் கல்லூரி செல்லும் பிள்ளைகளின் கையில் இதுபோன்ற புத்தகங்கள் இருப்பதை விரும்புவீர்களா? (H.A.Stuart, 11.9.12) 5. ‘காவடிச்சிந்து’ அந்த அளவிற்கு ஆபாசமான புத்தகம் அல்ல, ஆனால் ‘விறலிவிடு தூது’ மிகவும் ஆபாசத்தன்மை கொண்டது. (P.S.Sivasami Aiyar, 6.10.12) 6. ‘விறலிவிடு தூது’ பதிப்பகத்தாரைத் தவிர, மற்ற எவர்மீதும் நான் நடவடிக்கை எடுக்க விரும்பமாட்டேன்(C.S.E.Cotton, 9-9-12). 7. மொழிபெயர்ப்பாளர்களின் அறிவுரையின்படி, நான் நடவடிக்கை எடுப்பேன் 8. ‘காவடிச்சிந்து’ பதிப்பகத்தாரின் மீதான குற்றவிசாரணையைத் திரும்பப் பெற வேண்டும். (P.S.Sivasami Aiyar, 6.10.12) 9. தற்போது, ‘காவடிச்சிந்து’ மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என முடிவு செய்வதற்கு நான் தயாராக இல்லை. (H.A.Stuart, 10.10.12) 10. மொழிபெயர்ப்பாளரின் கருத்துப்படி ‘காவடிச் சிந்து’ மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை, ஆபாசமான பக்கங்களை நீக்கிய பிறகே ‘விறலிவிடு தூது’வினைப் பிரசுரம் செய்ய வேண்டும், ‘மோகன ஜவாலி’யை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் (S.H.Slater, 15.1.13) 11. என் கருத்தின்படி மொழிபெயர்ப்பாளர், மிகவும் ஏற்றுக்கொள்ளமுடியாத பக்கங்களைக் கொண்ட ‘காவடிச் சிந்து’ மீது மிகவும் தாராளமாகவே அணுகியுள்ளார். (A.J.Curgenven, 16.1.13) 12. மொழிபெயர்ப்பாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். (H.A.Stuart, 25.1.13) 13. என் சக அலுவலர்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். (P.S.Sivasami Aiyar, 29.1.13)
இங்கு குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் பொதுவாக மேற்குறிப்பிட்ட மூன்று புத்தகங்களை மையப்படுத்திப் பகிர்ந்துகொள்ளப்பட்டாலும், 1912-13 ஆண்டுகளில் இன்னும் பல தமிழ், தெலுங்கு புத்தகங்களின் பதிப்பகத்தார் மீதும் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற இடைவிடா உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள், இறுதியில் இக்குற்ற விசாரணையோடு தொடர்புகொண்டோர் ஓர் ஒருமித்த கருத்தை எட்ட வழிவகுத்தன.
இறுதி முடிவு
இப்பிரச்சினை மீதான இறுதி முடிவு, 1913ஆம் ஆண்டு பிப்ரவரி 11இல் எடுக்கப்பட்டது. அப்போது, அரசு செயல் தலைமைச் செயலாளராக இருந்த A. G. கார்டீவ் இப்புத்தகங்களின் பதிப்பாளர்களுக்கு அரசின் முடிவைத் தெரிவித்தார். அதன்படி, ‘சரச மோகன ஜவாலி’ பிரசுரத்தை முற்றிலுமாகத் தடை செய்யும்படியும், புதுப் பதிப்பு கொண்டுவரும்போது ‘காவடிச் சிந்து’வின் சில (ஆபாச) பக்கங்களை நீக்குமாறும் குறிப்பிட்டிருந்தார். ‘விறலிவிடு தூது’ பற்றிக் கார்டீவின் தீர்ப்பு இவ்வாறாக இருந்தது:
“இப்புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்கள் ஆபாசமானவை. இதனைப் பிரசுரித்த பதிப்பாளர்களிடமிருந்து இவற்றை இனி விற்பனை செய்யமாட்டோம் எனப் பொறுப்பேற்பு எழுதிப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஆபாசப் பக்கங்களை நீக்கிய மறுபதிப்பை இவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதிக்கலாம். தற்போதைய பதிப்பின் அனைத்துப் பிரதிகளையும் பதிப்பகத்தார் உடனடியாக விற்பனையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆபாசப் பக்கங்களை நீக்காத பிரதிகளைப் பதிப்பிப்பவர்கள், விற்பனை செய்வோர் மீது புதிய குற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற அரசின் உத்தரவை அவர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.”
இலக்கியமா - ஆபாச எழுத்தா?
தமிழ்ப் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்தவரை இது ஒரு முடிவற்ற விவாதமாகவே இருக்க முடியும். சங்க இலக்கியக் காலம் தொட்டுத் தமிழர் பண்பாடு, காதல், புணர்ச்சி குறித்துச் செய்திகளை வெவ்வேறு கலைவடிவில் வெளிப்படுத்தியே வந்துள்ளது. இவை குறித்து சாமானிய மக்களின் உணர்வின் வெளிப்பாடுகளை, கலை வடிவங்களை, மேட்டுக்குடியினர் தமக்கானதாக உரித்தாக்கிக்கொண்டு அதை மீண்டும் வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் வெளிப்படுத்தியபோது அவை அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுப் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றன. கோயில் கட்டுமானங்களில் காணப்படும் காதல் சிற்பங்கள், இலக்கியங்கள் பேசும் இலைமறைகாயான மனிதக் காதல், புணர்ச்சிகள் பற்றிய வர்ணனைகள் சாதாரண மக்களின் நுகர்வுக்கானவை அல்ல என்ற கருத்து இருந்தது. சங்க இலக்கியங்கள் பேசிய அதே உணர்ச்சிவயமான காதலை - புணர்ச்சியை பக்தி இலக்கியங்கள் கடவுளுக்கும் பக்தருக்குமான காதலாக மாற்றி வெளிப்படுத்தின. ஆண்டாள் போன்ற பெண் புலவர்கள் தம் எழுத்தில் வெளிப்படுத்திய காதல், புணர்ச்சி துடிப்பானவை. சமூக அங்கீகாரத்திற்குப் பயந்து இவை வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்திப் பேசப்பட்டன. காதலும் புணர்ச்சியும் கனவில் நிகழ்வதாக நினைவுகூர்தல் (ஆண்டாள்), கடவுளுக்கும் பக்தனுக்கும் இடைபட்டதான காதல் வெளிப்பாடுகள், காதலையும் புணர்ச்சியையும் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத வகையில் இலக்கிய வர்ணனையில் புதைத்தல் போன்றவற்றின் மூலம் பேசுமுறை தொடர்ந்தது.
தமிழகத்தில் சோழர் ஆட்சியைத் தொடர்ந்து விசயநகர, மராத்தியர் ஆட்சிக் காலத்தில் வெவ்வேறான சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன. பக்திச் சிந்தனையின் பிடி தளர்தல், குடிகளின் இடப்பெயர்ச்சி, சமூக அடையாள மாற்றங்கள், புதிய சாதிகளின் தோற்றம், நிலவுடைமை, நிலக்கிழார்களின் வளர்ச்சி, பொருளாதார மாற்றம் போன்றவற்றோடு, எழுத்தின் பயன்பாடும் வாசிப்பும் மேட்டுக்குடியினரிடமிருந்து சற்று விலகிச் சமூகப் படியமைப்பின் இடைமட்டத்திலிருந்தோரிடமும் வந்தடைந்தது. இலக்கியத்தைக் கேட்பதன் மூலம் நுகர்வது பரவலான நடைமுறையானது.
தமிழில் காணப்படும் சிற்றிலக்கியங்கள் இத்தகைய சமூக, பொருளாதாரப் பின்புலத்தில் தோன்றியவை. இவை சாதாரண மக்களின் மொழியை இலக்கியத்தில் பயன்படுத்தியவை. படிப்பதுடன், கேட்பதற்கான (படிப்பறிவற்றோர்) மொழிநடையுடன் எழுதப்பட்டவை. இதன் ஆசிரியர்கள் வட்டார நிலக்கிழார்களால் பேணப்பட்டவர்கள். இக்காலத்தில் தோன்றிய நூல்களுள் ‘விறலிவிடு தூது’களும் அடங்கும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து, ‘விறலிவிடு தூது’ நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து படியெடுப்பதிலும் அவற்றை அச்சில் பதிப்பிப்பதிலும் தமிழ் அறிஞர்களிடையே தர்மசங்கடமான நிலை இருந்திருக்கிறது. காலனிய ஆட்சிக்குப் பிறகும் இது தொடர்ந்தது. எடுத்துக்காட்டுக்கு, சுதந்திரத்திற்குப் பின் வெளிவந்த சில ‘விறலிவிடு தூது’ புத்தகங்களின் முகவுரைகளைப் பார்ப்போம்.
1947இல் ‘சேதுபதி விறலிவிடு தூது’வினைப் பதிப்பித்துக் காரைக்குடியிலிருந்து வெளியிட்ட ராய. சொக்கலிங்கம், நூலின் அறிமுகத்தில் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். “இந்நூல் சிற்றின்பம் சம்பந்தமாக எல்லை கடந்து சென்றிருக்கிறது என்பது உண்மையே. இடக்கரடக்கலுக்குரிய சொற்கள், சொற்றொடர்கள் பெய்யப்பட்டிருக்கின்றன. பலர் சேர்ந்து கூட்டமாக இருந்து கூசாமல் படிக்க முடியாதபடி சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் அவற்றை நீக்கிவிட்டால் நூலின் அழகு கெட்டுச் சிதைந்துவிடும் என்று அப்பகுதிகளை விட்டுவிடலாம். அவற்றை விருந்தாகக் கொள்ளும் காதலர்கள் உண்டு மகிழலாம்.”
இதைப்போல் 1958இல், சென்னை பிரேமா பிரசுரத்திலிருந்து சிரஞ்சீவி என்பவரால் பதிப்பிக்கப்பட்டு, ‘மூன்று காதல் பிரபந்தங்கள்’ என்ற தலைப்பில் ‘கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது’, ‘சேதுபதி விறலிவிடு தூது’ போன்ற நூல்கள் வெளிவந்தன. இதற்கு முகவுரை எழுதிய ‘சேக்கிழார் அடிமை’ பெ.கா. சண்முகநாதன் இந்நூல்களைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்: “இவ்விரண்டு நூல்களில் மதன சாஸ்திர நுட்பங்கள் பல இருப்பதை நேயர்கள் அறிவார்கள். மேலும் அவற்றை ஒளிவுமறைவின்றிக் கூறியிருக்கின்றார் கவிராயர் என்று நினைக்கலாம். அதனாலேயே இவ்விரண்டு நூல்களையும் திருத்திப் பதிப்பிக்க முற்பட்டவர்கள் முகநூலில் பல கண்ணிகளை அறவே அகற்றியும், பல சொற்களை மாற்றியும் மாற்ற முடியாத சொற்களுக்கு நட்சத்திரக் குறிகள் கொடுத்தும் புதுப்பித்தனர்.” வேறொரு பக்கத்தில், “ஆகவே காவிய ரஸனையோடு பார்ப்பவர் கண்களுக்குக் காம விகாரம் தோன்றக் காரணம் இல்லை. காமக் கண்களோடு பார்ப்பவர்கள் காவிய ரஸனையை இழந்துவிடுகின்றார்கள்” என எழுதுகிறார்.
இறுதியில் 1986இல், லேனா. தமிழ்வாணன் எழுதிய ‘விறலிவிடு தூதுகள்’ என்ற நூல் முகவுரையில் இவ்வாறு எழுதுகின்றார்: “கடந்தகாலச் சமுதாய அமைப்பை ஏதோ அருங்கலைப் பொருட்களின் கூடத்தில் பார்ப்பதுபோல் பார்த்து ரசிக்க வேண்டும். வேறுவிதத்தில் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன். சில வார்த்தைகள் கொச்சையாக இன்றைக்குத் தோன்றலாம். கொச்சை, மனத்தில்தான்; வார்த்தைகளில் இல்லை.”
எனவே இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை, விறலிவிடு தூதுகளை ஆபாசமெனத் தூக்கியெறிந்துவிடவோ இலக்கியமெனப் புகழ்ந்து கொண்டாடவோ முடியாத நிலையே தமிழ் அறிஞர்களிடையே மேலோங்கியிருந்தது. இவற்றுக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று, இவ்வகை நூல்களுக்கு மக்கள் மத்தியிலிருந்த வரவேற்பைக் கண்டு அச்சுக்கூடங்கள் வியாபார நோக்கில் இவற்றின் முக்கியத்தை உணர்ந்தன; இரண்டாவதாக தமிழ்ச் சமூகம், பண்பாடு இவற்றைப் புகழ்ந்து பேசியே பழக்கப்பட்ட தமிழாசிரியர்கள், காதல் - புணர்ச்சி உணர்வுகளை வெளிப்படையாக, மக்கள் மொழியில் பேசுவது பண்பட்ட சமூகத்தில் ஏற்கக் கூடியதன்று என்றதொரு தவறான கருத்தைக் கொண்டிருந்தார்கள்.
விறலிவிடு தூதுகள் ஆபாசத்திற்காகவே வாசிக்கப்பட்டன என்ற கருத்துக்கும் இவை தாசிகளின் வலையில் சிக்கி வாழ்விழந்த மானிடரின் கதையைக் கூறி மக்களை நல்வழிப்படுத்தும் நூல் என்ற கருத்துக்கும் சார்பாக இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
மதனாபிஷேகம்
மதராஸ், தியாகராயநகரைச் சேர்ந்த ‘பி.வி. கண்ணன் அண்டு கோ’ பதிப்பகத்தார், 1940இல் ‘மதனாபிஷேகம் அல்லது விறலிவிடு தூது’ என்ற தலைப்பில் நாலணா விலையுடன் ஒரு சிறிய புத்தகத்தை வெளியிட்டனர். ‘மதனாபிஷேகம்’ சுப்ரதீபக் கவிராயர் இயற்றிய ‘கூளப்பநாயக்கன் விறலிவிடு தூ’தின் நாயகி, தாசி. மேலும் இதில், விறலிவிடு தூதுவின் கதையை எளிய நடையில் உரைநடையாக வெளியிட்டிருந்தனர். இதன் துணைத் தலைப்பில் ‘உண்மையாக நடந்த பழங்காலத் தாசிகளின் முழுத் தத்துவத்தையும் விளக்கும் நூல்’ என்று கொடுத்திருந்தனர். முன், பின் அட்டைகளிலும் சில உள்பக்கங்களிலும் பெண்களின் நிர்வாணப் படங்கள் / வரைபடங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும் அட்டைகளில் ‘முத்தத்தின் இன்பம்’, ‘மாதர் இன்பரகசியங்கள் அல்லது சிற்றின்பக் கனிரசம்’ என்ற மற்றப் புத்தகங்களின் விளம்பரங்களையும் ‘இழந்த பலத்தை உடனே கொடுக்கும் மதனலீலை செந்தூரம்’ என்ற மருந்துக்கான விளம்பரத்தையும் கொடுத்திருந்தனர்.
‘மதனாபிஷேகம்’ பற்றிய இந்தச் சிறுகுறிப்பு, இப்புத்தகம் எதற்காக விற்பனையானது, படிக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றது. எனவே தற்கால ஆபாசப் புத்தகங்களுக்கு ‘விறலிவிடு தூது’வின் கதையே முதலாக அமைந்துள்ளதெனில், இந்நூல்கள் ஓலைச்சுவடி வடிவில் புழங்கிய காலங்களில் இதன் ஆபாச எழுத்திற்காகவே மிகவும் பேசப்பட்டிருக்க வேண்டும் எனக் கருத முடியும்.
‘தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’
அதே நேரத்தில் தாசிகளின் குலத்தில் பிறந்து, தேவதாசிகள் ஒழிப்புப் போராட்டத்தில் சுப்புலட்சுமி ரெட்டி, பெரியார் ஈ.வெ. ராமசாமி போன்றோர்களுடன் சேர்ந்து கடுமையாகப் போராடிய திருமதி மூவலூர் இராமாமிர்தம்மாள் எழுதிய ‘தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ (1935) என்ற புதினம் தாசிகளின் அவலநிலை, சூழ்ச்சி, ஆடவர்களின் வலையில் சிக்கி அவதிப்படுதல் போன்ற கருத்துகளை முன்வைத்து எழுதப்பட்டது. பெண்விடுதலை நோக்கில் எழுதப்பட்ட நாவல் என்றாலும், சமூகத்தின் இந்த இழிநிலைக்குத் தாசிகள்தான் காரணம் என்பதுபோல் சித்திரிக்கின்ற நூல்.
இங்கு, ‘விறலிவிடு தூது’விற்கும் ‘தாசிகளின் மோசவலை’க்கும் நேரடியாக எந்தவிதத் தொடர்பும் இல்லையெனினும், இவ்விரு நூல்களும் சமூக நெறியை, ஒழுக்கத்தை வலியுறுத்திப் பேசுபவை. ‘விறலிவிடு தூது’வின் அவதானியும் ‘தாசிகளின் மோசவலை’யின் மைனரும் வாழ்வில் தாசிகளின் சூழ்ச்சியால் வீழ்ந்து பின் மதிபெற்றவர்கள். எனவே இராமாமிர்தம்மாள் போன்று, விறலிவிடு தூதுகளின் ஆசிரியர்களும் சமூக மேம்பாட்டை மனத்தில் கொண்டு இக்கவிதை, கதைகளை இயற்றியிருக்கலாம். தாசிகளால் சீரழிவோரைக் காக்கும் தேவை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்தது என்ற கருத்தையும் முன்வைக்க முடியும். ஆனால் இப்படி ‘ஆபாச’க் கதைகளை விளங்கச் சொல்வதன் மூலம் விறலிவிடு தூதுகளால் சமூக ஒழுக்கத்தைப் பேண முடிந்ததா என்பது இயல்பாக எழுகின்ற கேள்வி.
எது எப்படியாயினும், ‘விறலிவிடு தூது’வினை முன்வைத்துத் தொடரப்பட்ட மேற்கண்ட விவாதங்கள், சமூகங்களுக்கு ஆபாச நூல்களின் தேவையை மறுதலிப்பவையாகவே உள்ளன. பால், பால்சார்ந்த உணர்வுகளைச் சாதாரண மக்களால் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத இலக்கியமொழியில் மூடிய வடிவில் எழுதினால் அவற்றைக் கலையாகவும் இலக்கியமாகவும் பார்த்தனர். அவற்றையே, வெளிப்படையாக, மக்கள் மொழியில் எழுதினால் ஆபாசமாகப் பார்த்தனர். எனவே, ‘விறலிவிடு தூது’ குறித்து காலனிய ஆட்சியாளர்களும் தமிழ் அறிஞர்களும் வெவ்வேறு பார்வையைக் கொண்டிருந்தபோதிலும், அவை சமூகத்தில் இவ்வகை எழுத்துகளின் உண்மையான பங்கை, இவற்றின் வாசகர்களின் மனப்பான்மையைப் பிரதிபலித்தனவா என்பது ஐயமாகவே உள்ளது.
நன்றி: தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தினர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தினர், ஆய்வாளர்கள் இரா. சித்தானை, ச. கார்மேகம், அருண்குமார்
உதவிய நூல்களும் சான்றுகளும்:
G.O.No.348, Judicial, Dated 4th March 1912
G.Go.No.680, Judicial, Dated 26th April 1912
G.O.No.289, Judicial, dated 11th February 1913
G.O.No.874, Judicial, dated 6th May 1913
G.O.No.289, Judicial (Confidential) 11th February 1913
G.O.No.1344, Judicial (Confidential), 3rd July 1913
G.O.No.1533, Judicial (Confidential), 29th July, 1913
G.O.No.1198, Judicial (Confidential), 18th June, 1913
G.O.No.208, Judicial, 1911.
G.O.Nos.125, 126, Educational, 5th March 1896
G.O.No.348. Educational (Confidential), 3rd April 1912
Proceeding of the Madras Government, Educational Department, 3rd October, 1874
G.O.58, Public (General), 10th January 1935.
Notes connected with G.O.No.874, Judicial, Dated 6th May 1913.
Notes connected with G.O.No.289, Judicial, Dated 11th February 1913.
Frederic Moultan, ‘Before Pornography, Erotic Writing Early Modern England’, Oxford University Press, 2000.
A.R.Venkatachalpathy, ‘The Province of the Book- scholars, scribes, and scribblers in colonial Tamilnadu’, Permanent Black, New Delhi, 2012
T.Chandrasekharan and the staff of the library (ed), தூது திரட்டு, government oriental Manuscript library, Madras, 1957.
கோனேரி முதலியார், குறட்டூர் கணபதி முதலியார், திருநின்றையூர் பொன்னம்பல முதலியார் (பதிப்பாசிரியர்கள்), சுப்ரதீபக் கவிராயர் ‘கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது’, சென்னப்பட்டனம், தமிழ்விளக்க அச்சுக்கூடம், 1843.
சண்முக முதலியார் (பதிப்பாசிரியர்), சுப்ரதீபக் கவிராயர், ‘கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது’, சென்னை, 1850.
ராய. சொக்கலிங்கம் (பதிப்பாசிரியர்), சுப்ரதீபக் கவிராயர், ‘கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூது’, 1898.
மணிமங்கலம் வடிவேலு முதலியார் (பார்வை), ‘கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது’, வித்தியாரத்நகர அச்சுக்கூடம், 1903.
சுப்ரதீபக் கவிராயர், ‘கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது’, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், மயிலம், 1909.
கோவிந்தராசனார் (பதிப்பாசிரியர்), ‘செண்டலங்காரன் விறலிவிடுதூது’, 1920.
சரவணபெருமாள் (பதிப்பாசிரியர்), சுப்ரதீபக் கவிராயர் ‘கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது’, மதராஸ், 1927.
மூவலூர் ஆ. ராமாமிர்தம்மாள், ‘தாஸிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’, மெதராஸ், பியர்ல் பிரஸ், 1936
‘மதனாபிஷேகம் அல்லது விறலிவிடு தூது’ (உண்மையாக நடந்த பழங்கதை தாசிகளின் முழுத் தத்துவத்தையும் விளக்கும் நூல்), பி.வி.கண்ணன் அன் கோ, மதராஸ், 1940.
சிரஞ்சீவி (பதிப்பாசிரியர்), ‘மூன்று காதல் பிரபந்தங்கள்; கூளப்ப நாயக்கன் காதல், விறலிவிடுதூது, சேதுபதி விறலிவிடுதூது’ ( வசன விளக்கத்துடன்), பிரேமா பிரசுரம், சென்னை, 1958.
இரா. நாகசாமி (பதிப்பாசிரியர்), மதிலைப்பட்டி / சிற்றம்பலக் கவிராயர் இயற்றிய மூவரையன் விறலிவிடு தூது, சாமிநாதயர் நூல்நிலையம், 1982.
லேனா தமிழ்வாணன், ‘காதற்சுவை நிரம்பிய விறலிவிடு தூதுக்கள்’, மணிமேகலை பிரசுரம், 1986.
சி. கோவிந்தராசனார் (பதிப்பாசிரியர்), ‘செண்டலங்காரன் விறலிவிடுதூது’, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1990.
ராய. சொக்கலிங்கம் (பதிப்பாசிரியர்), சரவணப் பெருமாள் கவிராயரின் ‘சேதுபதி விறலிவிடுதூது’, இலக்கிய பதிப்பகம், காரைக்குடி 1945
மின்னஞ்சல்: jsguna@gmail.com