நம்பூதிரிபாடு பட்டபாடு
கரிச்சான் குஞ்சு 100
கட்டுரை
நம்பூதிரிபாடு பட்டபாடு
கரிச்சான் குஞ்சு
கரிச்சான் குஞ்சு, புகழ்பெற்ற பழைய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர், படைப்பிலக்கிய விமர்சனத் துறைகளில் இவரை அறியாதவர்கள் இல்லை எனலாம். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான சம்பவம் ஒன்றை அவர் எழுதியபடியே கொடுத்துள்ளோம். தலைப்பு மட்டுமே எம்முடையது
நமது நாட்டின் மார்க்சியத்தையே கொச்சைப்படுத்தும் முதல் எதிரிகளாக இங்குள்ள திரிபு கம்யூனிஸ்டுகள்தான் விளங்குகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராகிய ‘தோழர்’ இ.எம்.எஸ். தினசரி பத்மநாப சுவாமி தரிசனம் செய்த கொடுமையைத் தோலுரித்துக் காட்டுகிறார் கரிச்சான் குஞ்சு. கோயிலுக்குப் போவது அவாள் அவாள் விஷயம் என்று வெட்கமில்லாமல் சொன்னவர்கள் அல்லவா? எனவே இது அவர்களைப் பொறுத்தமட்டில் பெரிய விஷயமில்லைதான்!
- விடிவு
சுதந்திரம் பெற்ற இந்தியாவில், மிகப்பெரும்பான்மை ஓட்டுக்களைப் பெற்றும் பொதுவுடைமைவாதிகள், தூய மார்க்சிய அறிஞர்கள் - இருபதாம் நூற்றாண்டின் எதிர்பார்ப்புகளுடைய புதுயுகத் தோன்றல்கள் திருவனந்தபுரத்தில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் தலைமையில் அமைச்சர்கள் ஆனவர்கள். காந்திஜீ கண்ட கனவு - (இன்று நம்பமுடியாத பழங்கதையாகிவிட்ட ஒன்று) ஐந்நூறு ரூபாய்ச் சம்பளம், சைக்கிளில் வரும் மந்திரிகள்.
இந்தியாவிலுள்ள விவேகம் படைத்த சிலர் - புதிய சிந்தனைகளில் பழைய சாபக்கேடுகளுக்கு விமோசனம் வந்தே விடும் என்று நம்பி, மகிழ்ந்து, பரவசமான விவேகம் படைத்த சிலர் திருவனந்தபுரத்தில் புத்துலகம் பூத்துவிட்டதென்று பெரிதும் ஆனந்தமுற்றனர், ஒன்றுக்கும் பற்றாத வைதிகப் பார்ப்பனனான நான் அந்த நாட்களில் இன்பப் பரவசத்தில் துள்ளிக்கொண்டிருந்தேன். என் நண்பர் ஒருவர் - சிறு வியாபாரி - பெரிய முதலாளியாக மாறும் வாய்ப்புகளைத் தேடி ஏமாற்று வித்தைகளைக் கையாண்டு கொண்டிருந்தவர். பொதுஉடைமைக் கொள்கைகளை மிகவும் இழித்துப் பேசும் இயல்பு உடையவர்; அவர் திருவனந்தபுரம் போய்விட்டு வந்தார். அவர் என்னிடம் கூறிய ஒரு செய்தி என்னை ஏனோ கலக்கியது. சுதந்திரம் பெற்றுவிட்டோம்; இன்னும் பத்துப் பதினைந்து வருஷங்களுக்குள் நாட்டின் வறுமையும் அறியாமையும் பழைமையும் மூடநம்பிக்கைகளும் மறைந்து மளமளவென்று முன்னேறப் போகிறோம் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்த என்னைக் கலக்கியது அச்செய்தி.
உடனே மிகவும் சிரமத்துடன் பணம் புரட்டி எடுத்துக்கொண்டு திருவனந்தபுரத்திற்கே போனேன். ஒருநாள் விடியற் கருக்கலில் நாலரை மணிக்கே கிளம்பிப் பத்மநாபசுவாமி கோயில் வாசலில் போய் நின்றேன். விடிவதற்குள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்த தோழர் திரு இ.எம்.எஸ்ஸைப் பிடித்துக்கொண்டு, “இதென்ன What is this?” என்று உணர்ச்சி வசத்தில் கத்தினேன் செக்யூரிட்டி பரிவாரங்கள் ஏதுமில்லாத - தூய - நூற்றுக்கு நூறான அன்றைய இ.எம்.எஸ்.; போத்தி கொடுத்த சந்தனப் பிரசாதம் வாங்கிக்கொள்ளாத பக்தர்; என்குரலே அவருக்கு விரிவுரை கூறிவிட்டது. அவரும் ஆத்திரமாய் சொல்லிவிட்டு நகர்ந்து விரைந்தார்... “It is in my veins. I can’t help it” (என் நரம்புகளில் ஓடிக்கொண்டிருப்பதை என்னால் மாற்ற முடியாது) என்பதே அது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தத் தரிசனமே ஒரு புரட்சி. அதாவது நாட்டுப்பழக்கத்திற்கு மாறானது. நாள் தொடங்கு முன் முதன்முதலின் ராஜாதான் சுவாமி தரிசனம் செய்வதுதான் சட்டம் - மரபு. இவர் அதை நொறுக்கிவிட்டார்.
இதிலிருந்து நான் இந்தியாவுக்குப் பொதுவுடைமை வந்தால் அது கடவுள் நம்பிக்கை அற்றதாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை என்று கொண்டேன். தோழர் திரு. P. ராமமூர்த்தி அவர்களிடம் கூட இதைப்பற்றி நான் விவாதம் செய்ததுண்டு. அவர் அதை ஏற்கவில்லை. கடவுள் நம்பிக்கை மிகமிகத்துளியளவு கலந்தாலும் பொதுவுடைமைப்பால் திரிந்திவிடும் என்றே அவர் வலியுறுத்தினார், சிரித்துக்கொண்டே “நீ பார்த்தது இ.எம்.எஸ்ஸை இல்லை” என்று அடித்துப் பேசி விட்டார். பிறகு நானும் இதுபற்றிப் பிரமாதப்படுத்தவில்லை. ஆராயவும் முற்படவில்லை. இன்றும் தோழர் இ.எம்.எஸ். அப்படித்தான் இருக்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது.
- ஆகஸ்ட் 84, விடிவு