மறைந்தும் மலரும் சிநேகிதம்
கரிச்சான் குஞ்சு 100
மறைந்தும் மலரும் சிநேகிதம்
ரவிசுப்பிரமணியன்
கரிச்சான் குஞ்சு எழுதிய ‘பசித்த மானிடம்’ நூல் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரிடமிருந்து கிடைத்தது. ஏதோ சரோஜாதேவி புத்தகத்தைத் தருவதுபோல, ரகசியமாய் பேப்பரில் சுருட்டிக்கொண்டுவந்து கொடுத்தார். அதைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்ததால் பெரும் எதிர்பார்ப்புடன் கல்லூரியினுள்ளே குளக்கரையின் மர நிழலில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். மதியம் ஒருமணிக்குள் படித்து முடித்துவிட்டேன். எனக்குப் பெருத்த ஏமாற்றம். இவர்கள் சொன்னபடி அதில் எந்த அம்சமும் இல்லை. எல்லாமே ரொம்ப நாசுக்காக இருக்கின்றன. இதற்கா இவ்வளவு அருவருப்பு?
காமத்தின் பேசப்படாத ஒரு பக்கத்தை மனத்தடையின்றிக் கரிசனமாகப் பேசிய நாவல் அது. ஓரினப் புணர்ச்சி பற்றிப் பேசினாலும் அது பாலியல் நாவல் இல்லை. நாவல் தந்த அனுபவம் ரொம்பவும் புதிதாக இருந்தது. பேசாப் பொருளை அவர் பேசிய விதமும் அதை அருவருப்பு தோன்றாமல் கொண்டுசென்ற மொழிநடையும் பிடித்திருந்தன. வித்தை இருந்தால் எந்த விஷயத்தையும் இலக்கியப் பனுவலாக மாற்றிவிடலாம் என்பதற்கு அந்த நாவல் ஓர் உதாரணம்.
கும்பகோணத்தில் வைகறை வீதி என்றோர் இலக்கிய அமைப்பு எண்பதுகளில் இயங்கிவந்தது. மாதத்தின் மாலை நேரங்களில் காந்தி பார்க் எதிரேயுள்ள சாது சேஷையா நூலகத்தில் அந்தக் கூட்டங்கள் நடக்கும். அப்படி ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளத்தான் கரிச்சான் குஞ்சுவும் எம்.வி. வெங்கட்ராமனும் (எம்.வி.வி.) வந்திருந்தார்கள்.
கரிச்சான் குஞ்சு சாம வேதத்தின் ஏதோ ஒரு ஸ்லோக விளக்கத்தைத் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் சொல்ல, எல்லாரும் அதை உற்சாகமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். சாம வேதத்தில் இசைக்கூறுகள் உண்டு என்றும் அதைச் சற்று இசைபாவத்தோடு உச்சரிக்க வேண்டுமென்றும் சொல்லி, பாடுவதைப்போல ஸ்லோகங்களை நீட்டியும் இழுத்தும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதுதான் இசையைப் படிக்கத் தொடங்கிய எனக்கு அது சுவாரஸ்யமாக இருந்தது.
வாசகர்களுடன் சிறிது நேரம் உரையாடிய எம்.வி.வி., நீங்க ஏதும் படிச்சிருக்கிங்களா என்று என்னைப் பார்த்துக் கேட்டார். சொன்னேன். “சாரோட பசித்த மானிடம் இந்த மாசம்தான் படிச்சேன். ரொம்ப பிடிச்சிருந்துது” என்றேன். கரிச்சான் குஞ்சுவைத் தட்டி, “கேட்டிங்களா” என்றார். “ம்” என்றார் அவர்.
“வியாபாரி, மைனர் செயினும் மோதரங்களும் போட்டுண்டு இருக்கேள். படிக்க வேற செய்றேள். ஆச்சர்யம். பேஷ் பேஷ் வாழ்க நன்னா இருங்கோ” என்றார்.
அதுதான் அவர் என்னோட பேசிய முதல் பேச்சு. அவர் என்னோடு பேசியதே மகிழ்ச்சியாய் இருந்தது.
அரைக் கவுளி வெத்தலை, ஏ.ஆர்.ஆர். சீவல், மைதீன் புகையிலை, சுண்ணாம்பு, ரெண்டு கிளாஸ்கோ பிஸ்கட் பாக்கெட் இவற்றோடுதான் பெரும்பாலும் அவரைப் பார்க்கப் போவேன். மணிக்கணக்காகப் பேசுவோம். எல்லாம் இலக்கிய விசாரங்கள். சில சமயம் அரசியல், சொந்த ஊர்ப் பெருமை இப்படியாகப் போகும். பேச்சினூடே கவிதைகளை, ஸ்லோகங்களையெல்லாம் சொல்லுகையில் அததற்கான உணர்ச்சி பாவங்களோடு சொல்வார். கெட்ட வார்த்தைகள் சகஜமாக இருக்கும். இடையிடையே அவர் வெற்றிலை போட்டுக்கொள்வது அலாதி அழகு.
ஒருவரைப் பிடித்துவிட்டால் வயசு வித்தியாசமே தெரியாதபடி ஈஷிக்கொண்டுவிடுவார். நகைச்சுவை உணர்வு, குழந்தைபோலச் சிரிப்பு, கைதட்டிப் பேசுவது, கொஞ்சமும் ஈகோ இல்லாமல் இயல்பாக இருப்பது இப்படி அவர் குணங்களைச் சொல்லலாம். எதையும் உடைத்துப் பேசுவார். நம்மையும் அப்படிப் பேச வைத்துவிடுவார். கோபம் வந்தால் சண்டமாருதம்தான்.
கோபத்தைப் போலவே பிடிவாதமும் அதிகம். கண் ஆபரேஷன் ஆகியுள்ளது. வாய் அசைக்கக்கூடாது என்கிறார் டாக்டர். அந்த நேரத்தில் வெற்றிலை போட்டே தீருவேன் என்று அடம்பிடித்துப் போட்டுக்கொள்கிறார். அவர் மகள் விஜயாள் “வேண்டாம்ப்பா” என்று தடுக்கிறார். “தகப்பன் சாமி ஆகாதேடி” என்று சொல்லிவிட்டுப் போட்டுக்கொள்கிறார்.
ருசியான சாப்பாட்டில் கரிச்சான் குஞ்சுவுக்கு ஆசை இருந்தது. கொஞ்சமாக இருந்தாலும் ருசியா இருக்கணும் என்பார். தமிழ் தவிர சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்திருந்தது அவருக்கு. இந்த மொழிகளிலுள்ள இலக்கிய விஷயங்களையெல்லாம் சொல்வார். பாரதியின் ‘சக்திக் கூத்து’, ‘நிற்பதுவே நடப்பதுவே’ போன்ற கவிதைகளுக்கெல்லாம் அவர் விளக்கம் சொல்லிக் கேட்க வேண்டும்! ஒருமுறை சக்திக் கூத்தில் வரும் “மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம்” என்ற வரிக்கு மட்டும் அரைமணிநேரத்துக்கு மேல் பொருள் சொன்னார்.
‘பசித்த மானிடம்’ நாவல் பத்தி யாருக்கும் தெரியலயே சார் என்று ஒருமுறை சொல்லி, அது பற்றித் தமிழ் ஆசிரியர்கள் சொன்ன கதைகளைச் சொன்னேன்.
“அவாள்ளாம் அப்படி இல்லன்னாதான் ஆச்சர்யம். சக எழுத்தாளர்களே பேசலயே, அதான் நேக்கு வருத்தம். வாயையும் இதையும் அழுத்தி மூடிண்டு இருக்கான்களேய்யா. இதெல்லாம் புரிய, பேச இன்னும் அம்பது வருஷமாகும்ன்னு நினைக்கிறேன். நான் எம்.வி.வி. எல்லாம் காலத்துக்கு முன்ன பொறந்துட்டோம்.”
“அப்படில்லாம் இல்ல சார். நானும் தேனுகாவும் முந்தா நாள் பிரகாஷ் நடத்துன கூட்டத்துக்கு தஞ்சாவூர் போயிருந்தோம். க.நா.சு. பேசி முடிச்சதும் உங்களையும் எம்.வி.வி.யையும் பத்தி எங்ககிட்ட விசாரிச்சு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தார். அப்போ உங்க ‘பாரதி தேடியதும் கண்டதும்’ பத்தி ரொம்பவும் பாராட்டி சொன்னார்” என்று அவர் சொன்னதை விளக்கமாகச் சொன்னேன்.
கரிச்சான் குஞ்சு சலனமில்லாமல் இருந்தார். “என்ன சார் ஒண்ணும் சொல்ல மாட்டங்கறீங்க” என்றேன்.
“அவர் ஏற்கனவே லெட்டர்ல எனக்கு எழுதிட்டார். இதவிட கூடவே எழுதிட்டார். உங்ககிட்ட என்ன சொன்னார்ன்னு கேக்கத்தான் கேட்டுண்ட்ருந்தேன். அந்த புஸ்தகத்துக்கு இது போறாதா, வேற என்ன வேணும்? சரி. அந்த பொன்னாடைய அப்படியே கழட்டி வச்சிருவோம். வேற எதாவது கேளுங்கோ.”
“இடைல இடைல வேலைய விட்டுட்டு இருக்கப்ப குடும்பத்த எப்படி சார் சமாளிச்சிங்க?”
“என்னன்னவோ செஞ்சேன். அதெல்லாம் எதுக்கு இப்ப... இலக்கியத்த பத்தி பேசுங்கோ. எழுத்தாளர்கள் பத்தி எதும் வம்பு தும்பு இருந்தாலும் பேசலாம். அதெல்லாமும் ஒரு சுகம்தான் இல்லியா. என்ன, இங்க ஆத்துல செக்ஸ் பத்தி பேச முடியாது. ஹா ஹா” என்று சிரிப்பார்.
வீட்டில் அடிக்கடி சாராதா அம்மாவோடு அவர் சண்டை போடுவார். சிலசமயம் அவர்கள் கையில் கரண்டியோடு வெளியே வந்து கத்துவார்கள். ஆனால் அடிப்படையில் நல்ல மனுஷி. பெண்களை வளர்க்க அவர் பட்ட பாடுதான் அவரை அப்படியெல்லாம் பேச வைத்தது.
மன்னார்குடி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் அறுபது ரூபாய் சம்பளத்துக்குக் கரிச்சான் குஞ்சு தமிழாசிரியராக வேலை செய்த காலத்தில் குடும்பம் கடும் கஷ்டத்தில் இருந்துள்ளது. சிலநாட்கள் வேலைக்கே போகாமல் சீட்டாடித் தோற்பதும் ஜெயிப்பதுமாக இருந்துள்ளார். அந்தப் பள்ளியின் தாளாளர் சாமிநாத உடையார் இவரைக் கூப்பிட்டு, “உம்மகிட்ட படிக்கிற பசங்க எப்படிங்காணும் உருப்படுவான்” என்றெல்லாம் அடிக்கடி கடிந்துகொள்வார்.
“இதை வச்சிதான் எங்கிட்ட படிக்கிற பையன்ல்லாம் உருப்பட போறானா. அதெல்லாம் கர்மா. விதி. அது விளையாடிண்டிருக்கப்ப நான் சீட்டுதான் விளையாடணும். ஏன், திருடக்கூட செஞ்சிருக்கலாம். இதெல்லாம் நான் மனசுல சொல்லிண்டேன். அவன்கிட்ட நேர கேட்டா சாப்டுண்டுருக்க பூவாவும் போயிடுமே” என்று என் தாய் மாமா டி.கே. சுந்தர மூர்த்தியிடம் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கர்மா, விதி ஆகியவற்றை கரிச்சான் குஞ்சு நம்பத்தான் செய்தார். தன் அப்பா அம்மாவுக்கு அவ்வளவு சிரத்தையாய்த் தவசம் தருவார். மந்திரம் சொல்லும் வாத்தியார்கள் எதும் தப்பாகச் சொன்னால் பிடி பிடி என்று பிடித்துவிடுவார். சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தியெல்லாம் விசேஷமாகக் கொண்டாடுவார். ராம் ராம் என்று ஜபம் பண்ணுவார்.
பொதுவாய் வீட்டைப் பற்றிக் கவலையின்றி விட்டேத்தியாகத்தான் இருப்பார். அதுபற்றி எதாவது கேட்டாலும் பல சமயங்களில் பேச்சை மாற்றிவிடுவார். “நேக்கு பால்யத்துலேர்ந்து தொடர்றது கஷ்டம். அவன்தான் நம்ம ஆத்ம சிநேகிதன் இல்லியா. இந்த இன்பம் இருக்கே அது திருட்டுப் பண்டாரம். சட்டுன்னு ஓடிடறது பாத்தேளா” என்று சொல்லிவிட்டு, அதற்கும் கை தட்டிச் சிரிப்பார். “லௌகீகக் கஷ்டம்தான் கலைஞனைப் பாடா படுத்திக் கொல்லும். பாரதியையே படுத்தலையா சொல்லுங்கோ. வேற கஷ்டத்த எல்லாம் கலைஞன் ஈஸியா கடந்துடுவான். இல்லன்னா அத எப்படி நிர்வகிக்கறதுங்கிறதாவது அவனுக்குத் தெரியும்” என்று சொல்லிச் சிரிப்பார்.
“வக்காள ஓழி, தாயோழி, தேவடியா, அவுசாரி முண்டை அப்படின்னுல்லாம் அடிக்கடி சொல்றீங்க. இந்தக் கெட்ட வார்த்தையெல்லாம் எங்க சார் கத்துகிட்டிங்க?”
“சொன்னா நம்புவேளா?”
“சொல்லுங்க சார்.”
“எல்லாம் வேத பாடசாலைலதான்.”
“என்ன சார் இப்படி சொல்றீங்க?”
“நீங்க எதெல்லாம் புனிதம்ன்னு நினைக்கிறேளோ அங்கெல்லாம் ஒரு கைப்பு இருக்குமே” என்றார்.
1990ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி, அவர் பிறந்த நாளில் வழக்கம்போல வெற்றிலை சீவல் பிஸ்கட்டோடு சென்று பார்த்த பின் சட்டை பாக்கெட்டில் எழுதிவைத்திருந்த பாரதியின் கவிதை வரிகளை, ‘உங்க பிறந்தநாளுக்காக’ என்று எடுத்துக்கொடுத்தேன். கவிதையைப் படித்ததும் அவர் சற்றுக் கலங்கிவிட்டார். என் கையைப் பிடித்தபடி வீட்டுப் பக்கம் இருந்த மரத்தின் அசைவையே வெறித்துப் பார்த்தார். சற்று நேரம் கழித்து, “எப்படி தோணித்து இத எடுத்து இன்னிக்கு எனக்கு படிக்க குடுக்கணும்ன்னு, நீ நன்னா இருப்ப” என்றார். அந்த பாரதியார் கவிதை இதுதான்:
நிதி அறியோம் இவ்வுலகத்து ஒருகோடி
இன்பவகை நிமித்தம் துய்க்கும்
கதி அறியோம் என்றுமனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதி அறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே
இது உ.வே. சாமிநாதய்யருக்கு பாரதி எழுதிய வாழ்த்துக் கவிதையின் கடைசிப் பகுதி. பாரதியில் தோய்ந்த அவரை இந்தக் கவிதை வரிகள் கலங்கடித்துவிட்டன.
என் முதல் தொகுப்புக்குத் தமிழக அரசு பரிசு கிடைத்தபோது ஆசி வாங்க முதலில் எம்.வி.வி. வீட்டுக்குப் போனேன். அவரிடம் சொல்லிக் காலில் விழுந்தேன். ரொம்ப சங்கோஜப்பட்டு விலகிவிட்டார். அடுத்து கரிச்சான் குஞ்சு வீட்டுக்கு வந்தேன். வெற்றிலை, சீவல், புகையிலையோடு சாக்லெட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு போயிருந்தேன். “எதுக்கு சாப்டக் கூடாததா பாத்து வாங்கிண்டு வர” என்று கேட்டார்.
“நீங்கதான் எதும் வேணாம்கறீங்க. நல்ல சேதி சொல்றப்ப ஸ்வீட்டோட சொல்லணும் இல்லியா.”
எழுந்து சென்று ஒரு ஸ்பூனில் சர்க்கரை எடுத்து வந்து வாயில் போட்டார்.
அவர் ஈஸிசேரில் அமர்ந்ததும் காலைத் தொட்டு “ஆசீர்வதியுங்கள்” என்றேன்.
“அய்யோ அசடே, சாஷ்டாங்கமா விழ வேண்டாமா. உள்ள வா” என்றார்.
அவர் ஸ்வாமி படத்துக்கு முன்சென்று விபூதி எடுத்துக்கொண்டார். கிழக்குப் பார்த்து நின்றார். “இப்போ விழு. சொல்றவரை எழுந்துக்காத” என்றார்.
நான் காலில் விழுந்திருந்தேன். அவர் எதோ ஒரு மந்திரம் சொல்லிக்கொண்டே போகிறார். கிட்டத்தட்ட முப்பது வினாடிகளுக்கு மேல் போகிறது மந்திரம். “இப்போ எழுந்துக்கோ” என்றார். எனக்கு விபூதி பூசித் தானும் பூசிக்கொண்டார்.
“என்னமோ பாலகுமாரனைப் பத்திப் பெரிசா சொல்லிண்ட்ருக்கியே அவன் கமர்ஷியலா போயிட்டான். நீ இலக்கியத்துல அவனவிட பெரியாளா நன்னா வருவ. ஈஸ்வரோ ரக்ஷிது. வாழ்க வாழ்க” என்றார்.
1992 ஜனவரி 12ஆம் தேதி மார்கழி மாசம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இது நடந்தது. நான் அவரைக் கடைசியாகப் பார்த்ததும் பேசியதும் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதமும் அதுதான். தன் வாழ்வில் அவர் கடைசியாகப் பேசிய பேச்சும் அதுதான். அதன்பின் கழிவறை சென்றவர் அங்கே விழுந்து நினைவு தப்பி மறைந்தார். அதன் பின் எந்தப் பேச்சும் இல்லை. நான் சென்னை கிளம்பி வந்துவிட்டேன். அவர் இறந்தது எனக்கு அப்போது தெரியாது. இறுதிச் சடங்கில் இருக்க முடியாத துர்ப்பாக்கியம். இன்று அவர் இல்லை ஆனால் அவர் சொன்ன சொல் இன்றும் என் மனத்தில் நின்று நிலைக்கிறது.
3.9.2019 அன்று கும்பகோணத்தில் சாகித்ய அகாதெமியும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையமும் இணைந்து நடத்திய கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.
மின்னஞ்சல்: ravisubramaniyan@gmail.com