அமேசான்: பற்றி எரியும் கேள்வி
EPW பக்கங்கள்
அமேசான்: பற்றி எரியும் கேள்வி
ஜேய்ர் பொல்சானாரோ காலநிலை நெருக்கடியை மறுத்தமையும் பூர்வீகக் குடிகள் மீதான தாக்குதலும் இந்தப் பேரிடரை மேலும் தீவிரமாக்கியிருக்கின்றன.
பரந்துவிரிந்த அமேசான் மழைக்காட்டுப் பகுதிகளிலிருந்து ஆபத்தான முறையில் புகைமண்டலம் கிளம்பியிருக்கிறது. ஐம்பத்தைந்து இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு இந்தப் புகைமண்டலம் பரவி கார்பன் வாயு இறங்கியது. தீ மிக மோசமாகப் பரவிய கட்டத்தில், அதன் புகை பிரேசிலின் கிழக்குக் கடற்கரையோர வானத்தை வட்டமிட்டது. இந்தப் பகுதியில்தான் பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள். பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சித் தேசிய நிறுவனமான INPEஇன் கணக்குப்படி, 2018ஆம் ஆண்டைவிடத் தீப்பிடித்தலின் எண்ணிக்கை 84% அதிகரித்துள்ளது. உலகின் மிக அதிகமான பல்லுயிர்கள் நிறைந்த பிராந்தியம் ஒன்றில் 74,000க்கும் மேற்பட்ட தீப்பிடித்தல்கள் நடந்து நிலைமையைத் தலைகீழாக்கியுள்ளன. காட்டுத்தீ பொதுவான விஷயம்தான், வறண்ட காலநிலையில் அவை நடந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு காட்டுத்தீ மிகவும் வீரியமாக உள்ளது. எனவேதான் இதுகுறித்து ஒட்டுமொத்த உலகமும் கவலைப்பட வேண்டியுள்ளது.
அமேசான் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தில்(IPAM) உள்ள விஞ்ஞானிகள், இந்த ஆண்டின் காட்டுத்தீ பத்து அமேசான் நகராட்சிகளை அழித்துள்ளது, பெருமளவிலான காடுகளையும் அழித்துள்ளது என்று கூறியுள்ளனர். 2016ஆம் ஆண்டின் வறட்சி இதில் பெரும்பங்கு வகித்துள்ளதென்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; இந்தத் தீயை வறட்சிஅல்லது ஏதாவது இயற்கைச் சுழற்சி ஏற்படுத்தியது என்ற கருத்து புறக்கணிக்கப்பட வேண்டியதென்றும் அவர்கள் கருதுகிறார்கள். “வறட்சிக் காலமாக இருந்தபோதும் அமேசானிலுள்ள ஈரப்பதம் கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும்போது சராசரிக்கும் கூடுதலாக இருந்தது” என்று ஐபாம் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
காடுகளை அழிப்பது தொடர்பான விழிப்புணர்வு அமைப்பு, ஐபாமின் பணிகளின் அடிப்படையில், விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்களென்றால் காடுகளை அழிக்கும் நடவடிக்கைதான் இந்தத் தீயைப் பரவச்செய்துள்ளது; இந்த முடிவே நம்பத்தகுந்ததாக இருக்கிறது. ஆனால் பிரேசில் அதிபர் ஜேய்ர் பொல்சானாரோ காலநிலை அறிவியல், காடுகளை வளர்த்தல், அவற்றைப் பாதுகாத்தலிலுள்ள அறிவியல் போன்றவற்றை நம்புவதில்லை. ஆகஸ்டு மாதத் துவக்கத்திலிருந்து ஐஎன்பியின் (INPE) தலைவரான ரிக்கார்டோ கால்வோ, பிரேசிலில் காடுகளை அழிக்கும் விகிதம் அதீதமாக உள்ளதென்று எச்சரித்தார். 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம், அமேசான் 2,072 சதுர கிலோமீட்டர் காடுகளை இழந்துள்ளதென்றும் இந்த அளவு மாலி என்னும் நாட்டின் பரப்பளவைவிட அதிகம் என்றும் கூறினார். பொல்சனோரோ இதைப் பொய் என்றார். கால்வோவைப் பதவி நீக்கினார். மரம் வெட்டுதல், சுரங்கம் அமைத்தல், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் இவற்றின் சார்பாக சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கான பிரேசிலிய நிறுவன (ஐபாமா) நிதியை 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இருபது சதவிகிதம் குறைத்தார் பொல்சானாரோ. தங்கள் ஒழுங்கீடுகளில் ஐபாமா அதிகாரிகள் மிகவும் ஆர்வத்துடன் நடந்துகொண்டனர் என்றும் விண்ணளவுக் கட்டணங்களுடன் எப்போதும் ஒரு பேனா எடுத்துக்கொண்டு அவர்கள் வருவார்கள் என்றும் அமேசான் வணிகத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அமேசான் பூர்வீகக்குடிகள் மரம் வெட்டுதல், சுரங்கம் அமைத்தல், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்குப் பெரும்தடையாய் இருப்பார்கள் என்று அரசு கருதியது. காட்டை வியாபாரச் சரக்காக மாற்றுவதைப் பூர்வீகக்குடியினர் தடுத்தனர். 1988ஆம் ஆண்டு பிரேசில் அரசமைப்பு அமேசானில் பூர்வீகக் குடிகளுக்காகப் பெரும் செல்வங்களை ஒதுக்கியது. இவர்கள் பிரேசிலின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 0.6% உள்ளனர். பொல்சானாரோவும் அவரது வலதுசாரிச் சதிக்கும்பலும் அமெரிந்தியர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தும் மனோபாவத்தில் உள்ளனர். யவனாவா சமூகத்தின் தலைவரான தஷ்காயவனாவா, பூர்வீகக்குடியினர் அமேசானில் இனப்படுகொலையை எதிர்கொள்கின்றனர் என்று கூறினார்.
பாதுகாக்கும் மனப்பான்மையுடைய அரசுசாரா நிறுவனங்களின் மேல் இந்தத் காட்டுத்தீக்கான காரணத்தைப் பழிபோடுகிறார் பொல்சானாரோ. பிரேசிலுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதற்காகவும் தமது வணிக அலுவல்நிரலைச் சீர்குலைப்பதற்காகவும் அவர்கள் வேண்டுமென்றே தீயைப் பற்றவைத்துள்ளனர் என்றும் கூறுகிறார் பொல்சானாரோ. அவரது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை. இது பிரேசில் அதிபர் வெளியிட்ட மற்றொரு சர்ச்சைக்குரிய அறிக்கை.
ஆகஸ்டு மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பொல்சானாரோ மீதான கோபம் அதிகரித்துள்ளது. பிரேசில் முழுவதும் ரியோ டிஜெனரியோவையும் சாபாவ்லோவையும் மையமாக வைத்துப் பேரணிகள் நடைபெற்றுள்ளன. ‘அமேசான் மக்களுக்கானது; ‘அமேசான் நிலைக்கிறது’, ‘பொல்சானாரோ வெளியேறுகிறார்’ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பொல்சானாரோவின் ஒப்புதல் குறியீடு குறைந்துள்ளது. சிஎன்டி/எம்டிஏ நடத்திய ஆய்வின்படி அவரது அரசு மோசமாகவும் கொடூரமாகவும் உள்ளது என்று 39.5% சதவீதத்தினர் கூறுகின்றனர். அவர்களது தனிப்பட்ட ஒப்புதல் குறியீடு தற்போது 29.4%ஆக (ஜனவரி மாதம் 38.9%) உள்ளது. பொல்சானாரோவின் அறிவியல்பூர்வமற்ற பதில், அமேசான் தீயின் தாக்கம், போராட்டங்கள் ஆகியவை அரசின்மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஐரோப்பா பொல்சானாரோவை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியதிலிருந்து விஷயம் மோசமாகியுள்ளது. அவரது முக்கியமான வர்த்தகக் கொள்கை விளக்கங்களை அது அச்சுறுத்தியுள்ளது. பிரேசிலிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று தம் விவசாயிகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார்கள். இது மிகவும் ஆபத்தானது. ஆனால் இதையும்விட மோசமான அச்சுறுத்தல் என்னவென்றால் மெர்கோசருடனான வர்த்தக உடன்படிக்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் விலகுவதாக எச்சரித்திருப்பதுதான். மெர்கோசர் என்பது அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே, வெனிசுலா ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசம். மேலும் பிரேசிலை ஓஇசிடி - பொருளாதாரக் கூட்டுறவு, வளர்ச்சிக்கான நிறுவனத்திற்கு எடுத்துச்செல்வதாக பொல்சானாரோ நம்பிக்கை கொண்டிருந்தார். 36 நாடுகள் உறுப்பினராகவுள்ள இந்த நிறுவனம் தன்னை வளர்ச்சியடைந்த நிறுவனமாகக் கருதுகிறது. ஓஇசிடிக்கான பிரேசிலின் நுழைவு தற்போது சந்தேகமே.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 கூட்டத்தில், அமேசான் நெருக்கடி குறித்து விவாதிக்க சிறப்பு அமர்வு நடத்தப்பட்டது. பொல்சானாரோவிற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தக் கூட்டத்திற்கு வருகை புரியவில்லை. ஜி7 கூட்டம் 20 மில்லியன் டாலர்களை இந்தத் தீயை அணைப்பதற்காக ஒதுக்கியது. இந்தத் தொகை மிகவும் சொற்பம். அமேசான் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு இந்தத் தொகை போதாதென்று பொல்சானாரோ மறுத்தார். இருப்பினும், இந்த அழுத்தத்தைப் புரிந்துகொண்டு இந்தத் தீயை அணைக்க அவர் இராணுவத்தை அனுப்பியுள்ளார். அமேசான் காடுகளின் வளம், அங்கு வாழும் மக்களின் மதிப்பிலிருந்து வெளிவராமல், பெயரளவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் தெரிகிறது.
பிரேசில் காட்டுத் தீ பொலிவியாவிலும் நுழைந்தது. அந்த நாட்டின் அதிபர் ஈவா மொரேல்ஸ் உடனடியாக சூப்பர் டாங்கரை வாடகைக்கு எடுத்துத் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தார். பொலிவியாவின் புத்தகங்களில் தாய்ப் பூமிக்கான சட்டம் உள்ளது. மனிதர்களுக்குச் சமமான உரிமை இயற்கைக்கும் உள்ளது என்று அச்சட்டம் கூறுகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வேறுபாடு, ஓர் அரசின் அரசியல் கருத்தியல் சார்பு, அந்நாட்டின் சுற்றுச்சூழல், மனிதாபிமான நெருக்கடிகளை எவ்வாறு நிர்ணயிக்கிறது என்று தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. எனவே, அமேசானைப் பாதுகாக்கும் பொறுப்பை நேர்மையான நாகரிகமான சமூக அரசியல் முறையை நிறுவும் போராட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஆகஸ்ட் 31, 2019
தமிழில்: க. திருநாவுக்கரசு