தனிநபர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்துதல்
EPW பக்கங்கள்
தனிநபர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்துதல்
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்திற்குக் கொண்டுவரப்படும் திருத்தம் தனிநபர் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றைக் கறைபடியச் செய்த கொடூரமான ‘தேசிய பாதுகாப்பு’ சட்டங்களை அளவுகோலாகக் கொண்டால்கூட ‘சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்தச் சட்டம் 2019’ (சநதச) தனித்து நிற்கிறது. இந்தத் திருத்தம் பற்றிய பெரும்பாலான பொது விவாதங்களும் அக்கறைகளும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967இனுடைய நோக்கங்களுக்காக ஒரு தனிநபரைத் ‘தீவிரவாதி’ என அறிவிக்க மத்திய அரசுக்குள்ள அதிகாரம் பற்றியே கவனத்தைக் குவித்தன. நேர்கொண்ட சிந்தனையுடைய எந்தவொரு குடிமகனையும் இந்தச் சட்டம் அச்சங்கொள்ள வைக்கும்.
எந்தவொரு அமைப்பையும் ‘தீவிரவாத அமைப்பாக’ முத்திரை குத்த மத்திய அரசை அனுமதிப்பதுடன் அதன் உறுப்பினர்கள் மீதும், செயலூக்கமான ஆதரவாளர்கள் மீதும் வழக்கு தொடரவும் அனுமதிக்கிறது இந்த சநதச. இவ்வாறு முத்திரை குத்தப்படும் முன்னர் எந்த வழக்கு விசாரணையும் நடைமுறையும் இருக்காது. ஓர் அமைப்பு அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்னர் அல்லது அவ்வாறு ஒரு தனிநபர் அறிவிக்கப்பட்ட பின்னர், மீளாய்வுக் குழு ஒன்றால் (பணியிலுள்ள அல்லது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலானது) விசாரிக்கப்பட்டு அவர்கள்மீது குத்தப்பட்ட முத்திரை தொடர வேண்டுமா, இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.
தீவிரவாதச் செயல்கள் அமைப்புகளால் செய்யப்படவில்லை, தனிநபர்களால் செய்யப்படுகின்றன என்று மாநிலங்களவையில் அரசு கூறியிருக்கிறது. தனிநபர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தாவிட்டால் அவர்கள் சட்டத்திலிருந்து நழுவ வாய்ப்புக் கிடைத்து, வேறு பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தொடர்வார்கள் என்றும் அரசு கூறியுள்ளது. இந்தத் திருத்தம் கொண்டுவருவதற்கு முன்பே தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லது தீவிரவாதச் செயல்களுக்குத் துணைபோகிறவர்கள், உதவுகிறவர்கள்மீது சநதச - படி வழக்குத் தொடுக்க முடியும் என்றிருக்கும் நிலையில் இப்போது தனிநபர்களை ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்துவதற்கான திருத்தத்தின் பலன் என்ன என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தனிநபர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதால், ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் கையொப்பமிட்டுள்ள நாடுகளுள் ஒன்றான இந்தியாவும் அதைப் பின்பற்றுகிறது என்று காரணம் சொல்லப்படுகிறது. இந்தக் காரணம் சட்டம் ஏன் என்பதைப் பகுதியளவு விளக்குகிறது; என்றாலும் ஒரு தனிநபரைத் தீவிரவாதி என்று முத்திரை குத்தும் அதிகாரம் மத்திய அரசிற்கு ஏன் வழங்கப்படுகிறது என்பதற்குப் பதில் இல்லை.
தனிநபரைத் ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்துவதற்கான வழிமுறையும் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. அமைப்புகளைத் ‘தீவிரவாத அமைப்புகள்’ என்று முத்திரை குத்தப் பின்பற்றப்படும் அதே வழிமுறையைத் திருத்தம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஓர் அமைப்பைப் போலல்லாமல் ஒரு தனிநபருக்கு அரசமைப்புச் சட்டத்தால் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் உண்டு. அரசமைப்புச்சட்ட உறுப்பு 21 பற்றி அரசுக்குத் தெரியாதா அல்லது தெரிந்தும் அதைப் புறந்தள்ளுகிறதா?
உள்ளார்ந்த வகையில் சநதச - கீழ் இவ்வாறு முத்திரை குத்தப்படுவதற்கு உடனடியாகச் சட்டப் பின்விளைவுகள் ஏதுமில்லை; ஆனால் இத்தகைய முத்திரை குத்தப்படுவதன் விளைவுகள் வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். இவ்வாறு முத்திரை குத்தப்பட்ட ஒருவர்மீது தீவிரவாதக் குற்றம் நிரூபிக்கப்பட வேண்டிய அவசியமோ அல்லது தீவிரவாதக் குற்றம் தொடர்பாக அரசு அமைத்திருக்கும் குழுவின் விசாரணையை அவர் எதிர்கொண்டிருக்க வேண்டிய அவசியமோ இல்லை.
தீவிரவாதம் தொடர்பான வலுவற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றமற்ற முஸ்லிம்கள் பலர் பல ஆண்டுகளாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையிலும் முஸ்லிம்கள் மீதான தீவிரவாதத் தாக்குதல்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளைத் தேசிய புலனாய்வுக் கழகம் பலவீனப்படுத்திவரும் நேரத்திலும் இந்தச் சட்டம் எவ்விதம் பாரபட்சமின்றிப் பிரயோகிக்கப்படும்? புலனாய்வு செய்து வழக்குத் தொடுப்பதிலுள்ள ‘கஷ்டங்களை’ச் சமாளிக்க இந்தத் திருத்தங்கள் அவசியம் என்று சொல்லப்படுவதைத் தீவிரமாக ஆராய்ந்து பார்க்கையில் அதில் உண்மையில்லையென்று தெரிகிறது. புதிய விதிகள் தீவிரவாதக் குற்றங்களின் புலனாய்வையும் வழக்கையும் உண்மையில் பாதிக்கவில்லை, மாறாகப் புலனாய்வுகளும் வழக்குகளும் வலுவற்றிருப்பதால் பெரிதும் நாசத்திற்குள்ளாகியிருக்கின்றன.
சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலும் கவலையை ஏற்படுத்துகிறது. ஜூலை 8ஆம் தேதி மக்களவையிலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது இந்தத் திருத்தம். நிலைக் குழுவிற்குச் சுட்டப்படவில்லை என்பதுடன் எந்த ஆய்விற்கும் விவாதத்திற்கும் உட்படுத்தப்படவில்லை. இந்த வகையில், தங்களுக்கு மக்களவையில் போதுமான எண்ணிக்கை இருக்கிறது, மாநிலங்களவையில் மாநிலக் கட்சிகளின் ஆதரவு இருக்கிறதென்று பல மசோதாக்கள் அடுத்தடுத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதத்திலிருந்து இது வேறுபடவில்லை. நாடாளுமன்றம் வெறும் சம்பிரதாயமாகிவிட்டது. அதன் ‘உற்பத்தித் திறன்’ பற்றிய தேவையற்ற பெருமை இந்த மொத்தச் செயல்பாட்டையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 2019 தேர்தலுக்குப் பிறகு நிலைகுலைந்துபோயிருக்கும் எதிர்க்கட்சிகள் அடையாள எதிர்ப்பிற்கு மேல் எதுவும் செய்யவில்லை. இந்தியாவில் மக்களாட்சியின் நிலை நாம் நினைப்பதைவிட மோசமாக இருப்பதை இது காட்டுகிறது.
2018இல்தான் மாறுபட்ட கருத்து கொண்டவர்களும் செயற்பாட்டாளர்களும் ‘நகர நக்சல்கள்’ எனக் குற்றம்சாட்டப்பட்டுத், தெளிவற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிணைகூட இல்லாது சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதத்தை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவையே. ஆனால் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்கள் தவறாகவே பயன்படுத்தப்படும். இந்த விஷயத்தில் சட்டமியற்றும்போது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஆகஸ்ட் 10, 2019
தமிழில்: க. திருநாவுக்கரசு
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com