அடிமை விண்ணப்பம்
கரிச்சான் குஞ்சு 100
கவிதை
அடிமை விண்ணப்பம்
கரிச்சான் குஞ்சு
ஓவியம்: டிராட்ஸ்கி மருது
சென்னை வாழ் எழுத்தாளர் திருக்கூட்டத்தடியேன்;
சிவஞான மணம் வீசும் செம்மைத் தமிழ்க்கடியேன்;
அன்னை நம் அருந்தமிழால் அரசியற் போர்க்கடிகோலும்
ஆண்சிங்க மனையார்தம் அடியார்க்கு மடியேன்;
இன்னார்தாம் எழுத்தாளர் என்றெல்லாம் பேசி வந்த
இலக்கியக் கூட்டத்தை எடுத்திட்டார்க்கடியேன்;
தன்னையே தான்புகழும் தைரியத்தோ டெந்தமிழைத்
தட்டியெழுவிக்கின்ற தனிவீரர்க்கடியேன்;
பத்திரிகைப் பக்கத்தின் பான்மையினைப் பகுத்தறிந்து
பக்கத்தில் சிக்கனமாய்ப் பத்தி, வரி, எழுத்தெண்ணிச்
சித்திரித்துச் சிறுகதையும் தொடர்கதையும் சிருட்டித்துச்
செந்தமிழைத் தெம்பூட்டும் தேவர்களுக்கடியேன்;
புதையாமல் பழந்தமிழின் பொன்னான உவமைகளாம்
பூரணமாமதி, கமலப் பூ வெல்லாம் போற்றிவைத்துக்
கதையெழுதாவிட்டாலும் கவிதைகள் எழுதிவரும்
கனவான்கள் கமலபதத் தடியார்க்கு மடியேன்;
எழுதிக்குவித்தபின் ஏகாந்தம் நாடியுள்ள
இருடி* எழுத்தாளர் எல்லார்க்கு மடியேன்;
எழுதாக்குறை நீங்க எப்பொழுதோ எழுதியதை
ஏதேனும் பெயர்மாற்றி ஈவார்க்கு மடியேன்;
வயிற்றை வளர்க்கின்ற வசதிபிற வாய்த்துவிட்ட
மலர்எழுத்தாளர்தம் மரபுக்கு மடியேன்;
மனத்தின் அலைஓய்ந்து மௌனம் பிடித்துள்ள
மாமாங்க எழுத்தாளர் மதிப்புக்கு மடியேன்;
தடுக்கிவிழுமிடமெல்லாம் தாளத்தின் கட்டோடு
அடுக்குமொழி வீசிவைக்கும் அண்ணன்மார்க்கடியேன்;
“இனிமேல்தான் எங்கள் யுகம்; எழுதத்தான் போகின்றோம்;
தனிமனிதன் உரிமையது தாருங்கள்” என்றெழுந்து
பேனாவும் வாங்கிவிட்ட பிஞ்சு எழுத்தாளர்தம்
ஆனா ஆவன்னாவாம் அருமைத் தமிழ்க்கடியேன்;
இலக்கியமென் றேதேதோ இன்னும் எழுதிவரும்
இனியதமிழ்த் திருத்தொண்டர் எல்லார்க்கு மடியேன்;
பகுத்தறிவுப் பார்வையினால் பழந்தமிழின் பலம்காட்டிப்
படைத்தளிக்கும் பகவானாம் பச்சைப்பொய்ப்பாழ் வெளியை
உகுத்துதிர்த்து ஓட்டுகிற உயிர்த்தோழர்க் கடியேன்;
உயர்வான வசைத்தமிழை ஒப்புவிப்பார்க் கடியேன்;
தேவாரப்பாட்டமுதைத் திருவாசகத்தேனைத்
தித்திக்கும் திருத்தமிழில் தேடியளிப்பார்க் கடியேன்;
நாவார நாமத்தை நாளும் சொலத்தூண்டித்
தெய்வத்தைக் காக்கின்ற தீரர்களுக் கடியேன்;
“சக்கனிரா, சடபெட்டு, சாலகல்ல...” என்றெல்லாம்
சற்றும் விளங்காத சங்கீதம் விரட்டிவரும்
தக்கதெருத்தமிழ் நடையில் தங்கச்சியும் பாடும்
சாகித்திய கர்த்தாக்கள் தாசர்க்கும் தாசன்நான்.
பேரத்தில் பிந்தாத பெருங்கதையும் சிறுகதையும்
பீடுநடைக்கட்டுரையும் பெரும்பக்தி விரிவுரையும்
வாரத்திற் கொருநூலாய் வாணம்போல் விட்டுவரும்
வையத்தைக்காக்கின்ற வள்ளல்களுக் கடியேன்.
இங்ஙனம்,
தமிழ் வெறியில் தனைமறந்த தமிழ்நாட்டுத் தனித்துரும்பு; குறும்பல்ல!
*இருடி - ருஷி
சுதேசமித்திரன், மார்ச் 20, 1955