கண்படாக் கருவூலம்
மதிப்புரை
கண்படாக் கருவூலம்
அ.கா. பெருமாள்
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விருந்து
(திறனாய்வு நூல்)
தக்கலை எம்.எஸ். பஷீர்
வெளியீடு:
தில்ஷாத் பதிப்பகம்,
எண் 36, காந்தி தெரு, செல்லியம்மன் நகர்
ஓட்டேரி விரிவு, வண்டலூர், சென்னை.
பக். 200
ரூ. 100
இஸ்லாமியப் பழம் தமிழ் இலக்கியங்கள் பற்றிய விமர்சனங்கள் மிகக் குறைவாக வந்துள்ளன. முகம்மது உவைஸ் விரிவாக எழுதியிருந்தாலும் அதை இலக்கிய வரலாறாகவே கொள்ளலாம். பழைய இசுலாமிய காவியங்கள், சிற்றிலக்கியங்கள் போன்றவற்றை மறுபதிப்பு செய்யும் முயற்சி குறைவாகவே நடந்திருக்கிறது. அண்மையில் மஃறாஜ் மாலை காப்பியத்தை உத்தமபாளையம் கல்லூரிப் பேராசிரியர் அப்துல் சமத் வெளியிட்டுள்ளார். இப்படி நடந்த நிகழ்ச்சிகள் மிகக் குறைவு. இந்த நிலையில் தக்கலை பஷீர் பழம் இசுலாமிய இலக்கியங்கள் பற்றிய செய்திகளைப் பதினெட்டு தலைப்புகளில் தொகுத்துள்ளார்.
பெருங்காப்பியங்கள், குறுங்காப்பியங்கள் பற்றி ஏழு கட்டுரைகள் சிற்றிலக்கியங்களான பிள்ளைத்தமிழ், ஆயிரம் மஸ்அலா, அற இலக்கியங்கள் பற்றி ஐந்து கட்டுரைகள், பிற எல்லாம் புராணம் தத்துவம் பற்றியவை.
இசுலாமியத்தின் தமிழ் பங்களிப்பு கணிசமாக இருந்தாலும் இசுலாமியத் தமிழ் அறிஞர்களோ பேராசிரியர்களோ இவற்றை முன்னெடுக்கவில்லை. பிரபந்த வகைகளில் மஸ்அலா, படைப் போர், கிஸ்ஸா, முனாஜாத் என்னும் தமிழிற்குப் புதிய வலுவான வகைப்பாடுகள் பலரும் அறியாதவை.
இந்த நூலில் முகைதீன் அப்துல் காதர் ஜிலானியைப் பாடுபொருளாகக்கொண்ட இரண்டு பிள்ளைத் தமிழ் நூற்கள், சையது முகைதீன் பிள்ளைத் தமிழ் என மூன்று பிரபந்த நூற்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். பெருங்காப்பியங்களான ‘சீறாப்புராணம்’ உட்பட பதினான்கு காப்பியங்களின் - அவை எழுதப்பட்ட காலத்துடன் பட்டியல் தந்து சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார். சேகனாப் புலவரின் புதூகுஷ்ஷாம் என்ற காப்பியம் பெரும்பாலும் அறியப்படாத நூல். தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பலர் இந்நூலின் பெயரைக்கூடச் சொல்லவில்லை. இந்நூல் பற்றி இரண்டு கட்டுரைகள் இதில் உள்ளன.
இசுலாமியத் தமிழ் இலக்கியங்களில் தனக்கென ஓர் இடம் பிடித்துக்கொண்ட பல புலவர்களுக்குப் பாடுபொருளாக இருக்கும் முகையத்தின் அப்துல்காதர் ஜீலானி பற்றிய இரண்டு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இவை முக்கியமானவை.
நபிகளின் பரம்பரையினரான ஹசன், ஹுசைன் மரபில் வந்த ஜீலானி அரபுத் தமிழில், உரைநடையில் மட்டுமல்ல பிள்ளைத் தமிழ், தாலாட்டு, ஒசல், மாலை சதகம் எனப் பல்வேறு சிற்றிலக்கிய வடிவங்களிலும் தனிப் பாடல்கள் பலவற்றிலும் பாராட்டப்பட்டவர். இதையெல்லாம் நூலாசிரியர் தொகுத்துத் தருகிறார். இப்படி பல சொல்லலாம்.
இந்நூலின் அச்சு, மொழிநடை இரண்டிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.