கறுப்பர்களின் காபந்துக்காரர்
அஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)
கறுப்பர்களின் காபந்துக்காரர்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
“ஒரு பெண் எப்படியானவள் என்று முதலில் சொல்லுங்கள். அதை வைத்து ஆண் யார் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.” இது டோனி மோரிசனின் நோபல் பரிசு உரையில் ஆணாதிக்கத்துக்கு விடுத்த விளக்கக் கோரிக்கையின் ஒரு வாக்கியத்திற்கான என்னுடைய விரிந்த மொழிபெயர்ப்பு.
டோனி மோரிசன் ஒருவிதத்தில் ஒற்றைக் கரு எழுத்தாளர். அவர் தன் இனம் பற்றித்தான் எழுதினார் என்று சொல்வது ஆறுமுகநாவலர் சைவம் பற்றித்தான் எழுதினார் என்பதைப் போன்றது. ‘என்னுடைய நாவல்கள் இனரீதியில் திட்டவட்டமானவை ஆனால் அவை கட்டற்றவை’ என்றார் மோரிசன். இவரின் கதைகள் முழுக்கமுழுக்க ஆப்பிரிக்க - அமெரிக்கர்களின், முக்கியமாகப் பெண்களின் துயரத்தைப் பேசுபவை. அடிமைகள் பற்றி, அறியப்படாதவர்கள் பற்றி, விரும்பத்தகாதவர்கள் பற்றி அவர் எழுதினார். ‘பிரன்ஸ் ஃபனான்’ புத்தகத் தலைப்பில் பூமியில் மோசமானவர்களைப் பற்றியும் எழுதினார்.
இவரது படைப்புகளில் கருப்பரின அடிமை வாழ்வின் பன்முகத்தன்மைகள், மகிழ்வுகள், முறிவுகள், மாறாப்புகள் ஆகியன நேசத்துடனும் நுண்உணர்வுடனும் பலபரிமாணங்களில் பதிவு செய்யப்பட்டன. இவருடைய எழுத்துகள் வாசகர்களுக்குச் சுகம் தரும் வாசிப்புகள் அல்ல. இவரது எழுத்துகளால் பாதிக்கப்பட்டு இவரைப் பின்தொடர்ந்த கோல்சன் வைட்ஹெட் போன்றவர்களின் (‘The Underground Railroad’, ‘Nickel Boys’) படைப்புகளில் காணப்படும் சுய எள்ளல்களும் இல்லை. இங்கே தேவையில்லாத ஓர் இடைச்செருகல். இந்த நாவல்களை ஒபாமா அவருடைய கோடை வாசிப்புக்காகத் தெரிந்தெடுத்திருக்கிறார்.
இவருடைய நாவல்களுக்கு உசாத்துணையாக இருந்தவை முந்திய W. E. B. Du Bois, Frederick Douglass ஆகியோரின் ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்துக்கள்; கறுப்புப் புராணவியல், அடிமைகளின் வழக்காறுகள், வரலாற்றுப் பேச்சு வழக்கு, கறுப்பர்களின் இசை புளுஸ், கிறித்தவ வேதம்; இவ்வனைத்தையும் தன் நாவல்களில் திறம்பட, தன்நடைமூலம், உந்துவிசையுடனும் வீராப்புடனும் வாசகர்களை விம்மவும் விசனமடையவும் வியக்கவும் கையாண்டார். முந்திய எழுத்தாளர் ப்ரெட்ரிக் டக்ளஸிடம் இவர் கற்றுக்கொண்ட பாடம் ‘கிளர்ச்சி செய், கிளர்ச்சி செய், கிளர்ச்சி செய்.’ இதைத்தான் மோரிசன் தன்னுடைய எழுத்துகளிலும் பொதுவாழ்விலும் செய்துகாட்டினார். இவருடைய கதை மாந்தர்கள் ஒன்றே ஒன்றைத்தான் திரும்ப திரும்பத் தங்களுடைய போராட்டங்கள், பேரழிவுகள் மூலம் நிரூபித்தார்கள். நிறம் பிறப்பினால் அமைந்ததல்ல; ஆங்கிலச் சமூகம் உருவாக்கிய வேற்றுமை உணர்வான இன அடுக்கமைவு; அது ஒரு கட்டமைப்பு.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யாவை அறிய விரும்பினால் அன்றைய காலத்து நாளிதழ்களையோ வரலாற்று நூல்களையோ வாசிக்க வேண்டியதில்லை. டால்ஸ்டாய், செக்கொவ் நாவல்கள் போதும் என்பார்கள். அதுபோல் அமெரிக்க நிறவெறி, அடிமைமுறையின் கொடூரங்களை விளங்கிக்கொள்ள மோரிசனின் புதினங்கள் போதுமானது.
இவருடைய நாவல்கள் உருவாக்கத்துக்குப் பின்னால் தனிப்பட்ட கதைகள் உண்டு. இவருடைய முதல் நாவல் அறுபதுகளில் ‘கறுப்பு கண்ணுக்கினியது’ என்று கறுப்பர்கள் சீர்திருத்தம் செய்த நாட்களில் அவலட்சணமான ஒன்பது வயதுக் கறுப்புச் சிறுமி ஆங்கிலேயரின் நீலக் கண்களுக்காக ஏங்குவது பற்றிய கதை. மோரிசன் பிறந்த நகரில் அவருக்கும் அவரின் சமூகப் பெண்ணுக்குமிடையே நடந்த பேச்சிலிருந்து இந்த நாவல் உருவாகியது என்று பின்னுரையில் எழுதியிருந்தார். அதே போல் அவரின் ‘Beloved’ நாவல் செய்தித்தாளில் படித்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் பின்புலமாக அமைந்தது. மார்கிரேட் கார்னர் என்ற அடிமைப் பெண் தன்னுடைய பிள்ளைகள் மறுபடியும் அடிமையாகிவிடக்கூடாது என்ற காரணத்துக்காகக் குழந்தையின் கழுத்தை வெட்டிவிடுகிறார்; ஒன்பது மாத மகளை நீரில் மூழ்கடித்துவிடுகிறார். இதைத்தான் ‘Beloved’ நாவலில் வரும் தாயான செத்தெ செய்கிறார். ஆனால் கற்பனையான செத்தேக்கும் வரலாற்று மார்கிரேட்டுக்கும் வித்தியாசம் உண்டு. சரித்திர மார்கிரேட் தான் செய்த கொலைகளால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. ஆனால் மோரிசன் நாவலில் வரும் செத்தே மிகவும் பாதிக்கப்படுகிறார். மோரிசனுக்கும் கறுப்பர்களின் வாய்மொழி நினைவுகள், அவர்களின் வழக்காற்றியல்கள்தான் முக்கியமாகப் பட்டன. இவற்றை அவருடைய கதையாடல்களில் தாராளமாகச் சேர்த்துக்கொண்டார்.
மோரிசனுக்குக் கறுப்பர்களின் வரலாற்று ஆவணங்களில் அதிக நம்பிக்கையுமில்லை, மதிப்பும் இல்லை. ஏனெனில் இவற்றில் பெரும்பான்மையானவை வெள்ளை ஆண்களினால் அவர்களுடைய கண்ணோட்டத்திற்கும் கபடத் தேவைக்குமாக எழுதப்பட்டவை. மோரிசனை மெலிதாக வாசிப்பவர்களுக்கே தெரியும் இவரின் எழுத்துக்கள் வெள்ளையச் சாயலிலிருந்து முழுமையாகத் தப்பிக்கவில்லை, விடுபடவில்லையென்று!
சிறுபான்மை எழுத்தாளர்கள் ‘நாங்கள் எழுத்தாளர்கள் மட்டுமே, இனச் சுற்றுலா அலுவலகத்தின் அப்புக்காத்துகள் இல்லை’ என்று தங்கள் இனப் பின்புலத்தை மறைக்க முயன்றபோது மோரிசன் எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் நான் அமெரிக்க - ஆப்பிரிக்க படைப்பாளி என்றே கடைசிவரை சொல்லிக்கொண்டவர். இந்த அடையாளத்தைப் பெருமையாகக் கருதியவர். இந்த இரட்டை அடையாளங்களைத் தன் இலக்கியப் படைப்புகளுக்கு எந்தவித வெட்கமுமில்லாமல் தாராளமாகச் சுரண்டி எடுத்தவர்.
இவரின் நினைவு நீடிக்க மோரிசன் மூன்று காரியங்கள் செய்தார். ஒன்று, வெள்ளைப் பார்வையைத் தவிர்த்துச் சிந்தித்துக் கறுப்பு இலக்கியம் படைப்பதை வலியுறுத்தினார். கறுப்பர்களின் மூளைகளை ஆக்கிரமித்துக்கொண்ட வெள்ளைச் சிந்தனைகளையும் கண்ணோட்டங்களையும் கறுப்பர்கள் காலனிய நீக்கம் செய்து, மையமிழக்கச் செய்வதை நினைவு படுத்திக்கொண்டேயிருந்தார். இரண்டு, நிறவெறிகொண்ட ஆங்கில மொழியைத் துப்புரவாக்குவதை தன்னுடைய முக்கிய வேலையாகக் கருதினார். கறுப்பு, வெண்மை என்ற துவித எதிர்நிலையிலிருந்து ஆங்கில மொழியை விடுதலை செய்ய முயன்றார். மூன்று, வெள்ளை இனவாதத்தின் அடாவடித்தனங்களில் ஒன்றான கறுப்பர்களை வேலை செய்யவிடாமல்அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் செயல் தந்திரங்கள்பற்றித் தன் இனத்துக்கு எச்சரிக்கை செய்தார். ‘வெள்ளையர் செய்யும் சூழ்ச்சித் திறன்கள் நாம் யார் என்பதைத் திரும்பத் திரும்ப உறுதிசெய்யவைப்பது. உனக்கு மொழி உண்டா, இலக்கியம் உண்டா என்று கேட்பார்கள். அடுத்த இருபது வருடங்கள் இதை நிரூபிக்க நாம் மெனக்கெடுவோம்.’
‘வெள்ளையர்கள் இலக்குக் கம்பங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள், ஆகையினால் விழிப்பாக இருங்கள்’ என்றார். நாலாவது, அதிகம் கவனிப்புப்பெறாத ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்துகளை ஊக்குவித்தது. இவர் ராண்டம் ஹவுசில் பதிப்பாசிரியராக இருந்தபோது Toni Cade Bambara, Gayl Jones, Leon Forrest போன்ற பல கறுப்பு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். இவர் செய்த இன்னுமொரு வேலை குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் வாழ்க்கை வரலாற்றைப் பதிப்பித்தது.
மோரிசன் வித்தியாசமான கதைசொல்லி மட்டும் அல்லக் காரசாரமான விமர்சகரும் கூட. பதினொரு நாவல்களுடன் மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதினார்: ‘Playing in the Dark: Whiteness and the literary imagination’ ( 1992), ‘The Origins of the Others’ (2017) ‘Source of Self Regard’ (2019). எட்வர்ட் ஸெய்யித் அவருடைய ‘Culture and Imperialism’ நூலில் விக்டோரியன் நாவலாசிரியர்களான ஜேன் ஆஸ்டன் போன்றவர்கள் எழுத்தில் புதைந்துகிடந்த காலனிய பின்னணியையும் எண்ணங்களையும் அம்பலப்படுத்தினாரோ அதே இலக்கிய வேலையை மோரிசன் ‘Playing in the Dark’ இல் அமெரிக்க வெள்ளை எழுத்தாளர்களான Poe, Hawthrone, Melville போன்றோர்தம் படைப்புகளில் எப்படி வெள்ளையரற்றவர்களைச் சித்திரித்தார்கள் என்று உதாரணங்களுடன் விளக்கினார். இந்தக் கட்டுரைத் தொகுப்பு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பரவலாகப் பரிந்துரைக்கப்பட்ட பாட நூலாக இருந்தது. ஒருவிதத்தில் கறுப்பின ஆய்வுக் கோட்பாட்டை அறிவார்த்தமாக அறிமுகப்படுத்திய முதல் நூல் என்றும் கூறலாம். மற்ற இரண்டு தொகுப்புகளும் டிரம்ப் பதவிக்கு வந்தபின் வெளிவந்தவை. இவற்றில் ஊடகங்களும் இலக்கியமும் தினமும் பேசும் ‘மற்றமைகள்’ என்னும் பதம், மொழியைப் பற்றி மோசமாகவும் அவதூறு எண்ணங்களையும் வலுப்பெறச் செய்கின்றன என்று எடுத்துக்காட்டினார்.
மோரிசனுக்கும் முன்னால் பெண் கறுப்பின எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் Zora Neale Hurston (1891-1960), மற்றவர் Dorothy West (1907-1998). இருவருமே கறுப்புக் கதையமைப்பின் உருநிலையை மாற்றியவர்கள். இவர்களில் வெஸ்ட் சற்று வித்தியாசமானவர். ஹர்ஸ்டன் கறுப்புக் கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை பற்றி எழுதினார். வெஸ்ட் அதே இனத்தின் மத்தியதர மக்கள் பற்றிப் பதிவுசெய்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் வெஸ்டை கறுப்பு இலக்கிய உலகம் கண்டுபிடிக்கவில்லை. மறைந்துபோன அமெரிக்கத் தலைவர் கென்னடியின் மனைவி ஜக்கிதான் மீள் கண்டெடுத்தார். ஜக்கி ‘Double day’ வெளியீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.
‘நீங்கள் விரும்பிய கதைகள் கிடைக்காவிட்டால், நீங்களே அவற்றை எழுதுங்கள்’ என்று மோரிசன் உற்சாகப்படுத்தினார். அத்துடன் ‘உங்களுக்குப் பரிச்சயமானதை எழுதுங்கள்’ என்று அறிவுரை சொன்னார். எழுத்தாளர்கள் எப்போதுமே புத்திசாலித்தனமாகப் பேசுவதில்லை. இந்தத் தவறை மோரிசனும் செய்தார். இவரின் உளறலுக்கு உயர்வான உதாரணம், பில் கிளின்டனை அமெரிக்காவின் முதல் கறுப்புத் தலைவர் என்று சொன்னது.
கிளின்டன் ஆட்சியில் கறுப்பர்கள் அதிகமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவரின் கடினமான போதைப்பொருள் கொள்கை கறுப்புக் குடும்பங்களைத்தான் பாதித்தது. கிளிண்டன் கறுப்பர்களுக்கு எதிராகப் பிறப்பித்த சட்டங்கள், அதன் விளைவுகளை Nathan J Robinson இன் ‘Super predator: Bill Clinton’s Use and Abuse of Black America’ இல் படிக்கலாம்.
மோரிசனுடைய எழுத்துகளுக்கு அதிக எதிர்ப்பு வெள்ளை விமர்சகர்களைவிட அவருடைய இனத்தவர்களிடம் இருந்தே வந்தது. இவர்களில் முக்கியமானவர் Stanley Crouch. மோரிசனின் எழுத்துகள் மட்டுமீறியவை, உணர்ச்சிபூர்வமானவை என்றார். இவரின் கதைசொல்லலில் ஆப்பிரிக்க அமெரிக்கத் தடயங்கள், சம்பிரதாயங்கள் இல்லை என்றார். இவருக்குக் கொடுக்கப்பட்ட நோபல் பரிசு இவரின் எழுத்துகள் வெள்ளை இலக்கியக் கட்டுப்பாடுகள், கட்டுமானங்களை இறுகக் கடைப்பிடித்ததுதான் காரணம் என்றார்.
மோரிசனின் நோபல் உரையிலிருந்த வசனத்துடன் இக்கட்டுரையை ஆரம்பித்தேன். அதே உரையில் வரும் இன்னுமொரு வாக்கியத்துடன் முடிக்கிறேன். இது சொற்களின் ஆற்றல், மகாத்மீயம் பற்றி அவர் கூறியது. அவர் விட்டுச் சென்ற அவரின் வார்த்தைகளே அவரின் எழுத்துகளை எதிர்காலத்தில் கட்டவிழ்ப்புச் செய்ய உதவலாம் என்று மோரிசன் யோசித்திருப்பாரா என்று தெரியாது:
‘நாம் இறந்துபோகிறோம். அதுவே வாழ்வின் அர்த்தமாக இருக்கலாம். ஆனால் நாம் மொழியை உருவாக்குகிறோம். அது நம் வாழ்வை அளவீடு செய்யக்கூடும்.’
மின்னஞ்சல்: rssugi@blueyonder.co.uk