இலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும்
தலையங்கம்
இலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும்
ஜனாதிபதித் தேர்தலுக்காக இலங்கை தயாராகிறது. 2020 ஜனவரியில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும். யார் தேர்வு செய்யப்படுவார் என்பதே இன்றுள்ள கேள்வியும் எதிர்பார்ப்பும். ஏனெனில் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களே சர்ச்சைக்குரியவர்களாக உள்ளனர்.
அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ஸ பல குற்றச்சாட்டுகளுக்கும் கடுமையான விமர்சனங்களுக்கும் உட்பட்டிருப்பவர். போர்க்குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இவர், விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டபோது பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்தவர். ஊடகவியலாளர்கள் பிரகீத் எக்னலிகொட, லசந்த விக்ரமதுங்க, தராகி சிவராம் உட்படப் பலருடைய கொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பாளியாகக் கருதப்படுபவர். ‘பொதுபல சேனா’ என்ற பௌத்தத் தீவிரவாத அமைப்பின் நிழலாக இருந்து முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டவர். பள்ளிவாசல்களையும் முஸ்லிம் நகரங்களையும் அழித்தவர் எனக் குற்றம்சாட்டப்பட்டவர். போதாக்குறையாக ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்ற வழக்கிற்குட்பட்டிருப்பவர்.
ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாய, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர். அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றவர் என்பதால் அந்தக் குடியுரிமையை இழந்தால்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சர்ச்சைகளும் அவரைச் சூழ்ந்திருக்கின்றன. போர்க்குற்றம், ஊழல், மனித உரிமை மீறல்கள், குடும்ப ஆதிக்கம், இராணுவ அணுகுமுறை, சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான அச்சுறுத்தல் போன்ற எதிர்மறை அம்சங்களோடு களமிறங்கும் கோத்தபாய வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமுண்டு என்பது அதிர்ச்சியானது. கோத்தாவின் வெற்றி வாய்ப்பு ஏப்ரல் 21 (ஈஸ்டர் நாள் படுகொலைகள்) ஐப் பொறுத்தது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதலால் நாட்டின் பாதுகாப்பைக் குறித்துச் சிந்திப்போர் அவரைத் தேர்வு செய்ய விரும்பும் நிலை உண்டு. கூடவே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால, ரணில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியும் கோத்தபாய ஆதரவு அலையை உண்டாக்கியுள்ளது. மேலும் சிங்கள பௌத்தத் தேசியவாதம் என்ற இனவாதமும் இவருக்கு உதவுகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப், இந்தியாவில் மோடி, பிரிட்டனில் பொரிஸ் ஜான்ஸன், துருக்கியில் தயிப் எட்டுவன் என உலகளாவிய அளவில் உருவாகியுள்ள வலதுசாரிய எழுச்சி கோத்தபாயவையும் தேர்வு செய்யக் கூடும்.
கோத்தபாயவை முன்னிறுத்தும் பொதுஜன பெரமுன என்ற மகிந்த ராஜபக்ஸவின் புதிய கட்சி, குறுகிய காலத்தில் இலங்கையின் மூத்த பெருங்கட்சிகளான ஐ.தே.க (UNP), சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவற்றுக்குச் சவாலான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இந்தக் கட்சியின் கவர்ச்சியும் செல்வாக்குமுள்ள வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஸ வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருக்குச் சிங்கள இடதுசாரிகளும் தமிழ்த்தரப்பில் ஈ.பி.டி.பி உட்படச் சில கட்சிகளும் ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றன. வடக்குக் கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பத்மநாபா அணியின் முக்கியஸ்தருமான வரதராஜப் பெருமாளும் கோத்தபாயவுக்கான ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். சுதந்திரக்கட்சியின் ஆதரவும் கிட்டும் என்று நம்பப்படுகிறது.
ஐ.தே.கவின் சார்பில் அல்லது அதனை உள்ளடக்கிய ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டுக் கட்சிகளின் சார்பில் யார் நிறுத்தப்படுவார் என்று இன்னும் முடிவாகவில்லை. ஐ.தே.கவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை ஒரு தரப்பும் வீடமைப்பு அமைச்சரும் முன்னாள் அதிபர் ஆர். பிரேமதாஸவின் மகனுமான சஜித் பிரேமதாஸவை இன்னொரு தரப்பும் சிபாரிசு செய்துள்ளன. இதனால் இரண்டு தரப்புகளுக்குமிடையில் போட்டி நிலை உருவாகி, கட்சிக்குள்ளே நெருக்கடி வலுத்துள்ளது. இந்தப் போட்டி உண்மையானதல்ல. தேர்தல் வெற்றிக்கான உபாயமாகவே இதைச் செய்கிறது ஐ.தே.க. தன் மீதான கவனத்தை அதிகரிப்பதற்கே இந்த மாதிரி முரண் காட்சிகளை அது திட்டமிட்டு உருவாக்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வரையில் இந்த மாதிரிச் சனங்களின் உளவியலைத் தனக்கிசைவாகக் கட்டமைக்கின்ற உத்திகளை அது செய்யும். எப்படியோ சஜித் அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்லது கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சபாநாயகருமான கரு ஜெயசூரிய ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம். ஆனால் சஜித்தே மக்களிடத்தில் கவர்ச்சிகரமான வேட்பாளராகத் தெரிகிறார். கிராமப்புற மக்களும் கட்சியின் பின்வரிசையினரும் சஜித்தை அதிகமாக விரும்புகின்றனர். இருந்தாலும் சஜீத்தை இலகுவில் ஏற்றுக்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவின் உயர் குழாமும் தயாராக இல்லை. இதற்கு வலுவான காரணங்களில் ஒன்றாக சஜித் பிரேமதாஸவின் சாதிப்பின்னணி உள்ளது. இவர்களில் எவர் நிறுத்தப்பட்டாலும் ஆட்சி முறையிலும் அதிகாரத்தைப் பிரயோகிப்பதிலும் வேறுபாடுகளைக் காண முடியாது. சிறுபான்மைச் சமூகத்தினரின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொருளாதார முன்னேற்றம், இந்தியா உள்ளிட்ட அயல்நாடுகளுடனான உறவு போன்றவற்றில் பெரிய மாற்றங்களோ முன்னேற்றங்களோ ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
மூன்றாவது வேட்பாளராக அனுரகுமார திஸநாயக்கவை அறிவித்திருக்கிறது ஜனதா விமுக்தி பெரமுன (JVP). இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தியாக உணரப்படும் ஜே.வி.பி அந்த இடத்தைத் தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான முயற்சியிலேயே அனுரவை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஜே.வி.பியின் தலைவரான அனுர ஒப்பீட்டளவில் கைசுத்தமானவர். சிறந்த ஜனநாயகவாதி. ஆனாலும் சிறுபான்மையின மக்களுடைய உரிமைகள் தொடர்பிலும் பிராந்திய சக்தியான இந்தியா தொடர்பிலும் ஜே.வி.பிக்கு எதிர்மறையான நிலைப்பாடே உண்டு. அத்துடன் ஜே.வி.பி ஆயுதப்போராட்ட இயக்கமாகச் செயற்பட்ட காலத்திலிருந்து அரசியற் சக்தியாக மாறிய பின்னர் கொண்டிருந்த நிலைப்பாடுகள் வரையில் கடுமையான எதிர்மறைப் பார்வைகள் பலருக்கும் உண்டு. இதைக் கடந்துவருவதென்பது அதற்குச் சவாலானதே. அத்துடன் சு.க, ஐ.தே.க, பொதுஜன பெரமுன ஆகிய மூன்று பெரிய இனவாதக் கட்சிகளுக்குச் சவாலாக ஜே.வி.பி முன்னிற்க முடியுமா என்ற கேள்வியும் உண்டு. ஆனால் தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்தவில்லையென்றால், ஜே.வி.பியின் ஆதரவாளர்கள் இரண்டு கூறாகப் பிரிந்து ஐ.தே.கவின் வேட்பாளருக்கும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்குமே ஆதரவளிக்க வேண்டியிருக்கும். இது எதிர்கால ஜே.வி.பியைப் பாதிக்கும்; பலவீனப்படுத்தும். தவறானவர்களை மேலும் பலப்படுத்தியும்விடும். ஆகவே தன்னுடைய ஆதரவாளர்களைத் தக்கவைப்பதுடன் தற்போதைய ஆட்சியாளரிலும் எதிர்க்கட்சியிலும் வெறுப்புற்றிருக்கும் மக்களையும் தன்பால் ஈர்ப்பதற்கும் ஜே.வி.பி. முயல்கிறது.
ஆக மும்முனைப் போட்டிக்கான வாய்ப்பே அதிகம். இதில் யார் வெற்றியடைந்தாலும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையில் பெரிய மாறுதல்கள் ஏற்படப்போவதில்லை. அரசியல் தீர்வை எட்டுவதற்கான சாத்தியங்களும் இல்லை. நீண்ட போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், படையின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் முயற்சிகள் கூட பெரிய அளவில் நிகழ்ந்தேறப் போவதில்லை. அப்படியென்றால் எதற்காகப் புதிய ஜனாதிபதி என்ற கேள்வி எழக்கூடும்.
இலங்கையில் ஜனாதிபதிக்கான அதிகாரம் உச்சமானது. 19ஆவது திருத்தத்துக்கு முன்பு அது வரம்புகளற்று இருந்தது. ‘ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதே தவிர, மற்ற அனைத்தையும் செய்ய முடியும்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு வலுவானதாக இருந்தது. நாடாளுமன்றத்தையே கட்டுப்படுத்தவும் தேவைப்பட்டால் கலைத்துவிடவும் கூடியது. இதனால்தான் 2004 இல் தனக்கு மாறாகச் செயற்படுகிறார் என்று அப்போது அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்க, ரணில் அரசாங்கத்தைக் கலைத்தார். 2015இல் கூட்டாட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 19ஆவது திருத்தத்திற்குப் பிறகு ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. நாடாளுமன்றத்துக்கான உத்தரவாதம் கூட்டப்பட்டது. இதன்படி நினைத்த மாத்திரத்தில் அதிபரால் எதையும் செய்யமுடியாது. ஆகவேதான் கடந்த 2018 அக்டோபர் 26 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பை ரணில் அரசாங்கத்தினால் முறியடிக்க முடிந்தது. ஆட்சிக்கவிழ்ப்பைச் செய்யக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பை ஜனாதிபதியினால் மீறமுடியாமற்போனது. இருந்தாலும் ஜனாதிபதியைப் பகைத்துக்கொண்டு வலுவான ஆட்சியை அரசாங்கத்தால் நடத்திச் செல்ல முடியாது. பாதுகாப்பு, நிலம், அமைச்சரவை, வெளியுறவு உள்ளிட்ட நாட்டின் முக்கிய தீர்மானங்களில் இறுதி செய்வது அனைத்தும் ஜனாதிபதியின் அதிகாரத்திற்குட்பட்டே இன்னும் உள்ளன. இதனாலேயே ஜனாதிபதித் தேர்தல் முக்கியமானதாக உள்ளது.
போட்டியிடவுள்ள வேட்பாளர்களில் எவரைத் தேர்வு செய்வதென்பதில் சிக்கலுக்குள்ளாகியிருப்போர் சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், மலையக (இந்திய வம்சாவளி) மக்களே. இந்த மூன்று முன்னணி வேட்பாளர்களில் ஒருவர்கூட சிறுபான்மையினர் உரிமைகள் குறித்துக் கரிசனை கொண்டவர்களல்லர். பன்மைத்துவத்தையோ ஜனநாயக அடிப்படைகளையோ தமது அரசியல் வழிமுறையில் செழிப்பாக உள்ளடக்கியவர்களுமல்லர். சிங்களப் பௌத்த மேலாதிக்கத்துக்கே முன்னுரிமையும் முதற் தகுதியும் அளிப்பவர்கள். மட்டுமல்ல, கடந்த காலத்தில் எளிதில் மறந்துவிடமுடியாத அளவுக்குக் கசப்பான அனுபவங்களைச் சிறுபான்மையின மக்களின் மனத்தில் உண்டாக்கியவர்களும் ஆவர். ஆனாலும் இந்த மூவரில் ஒருவருக்கே இந்த மக்கள் வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்த நிலையில் எவரைத் தேர்வு செய்வதென்பது பெரும் குழப்பத்திற்குரியதே.
இலங்கையில் அதிபர் தேர்வுக்கு உள்நாட்டு மக்களுக்கிருக்கும் அதிகாரத்துக்கு நிகரான செல்வாக்கை இன்று வெளிச்சக்திகளும் கொண்டுள்ளன. பிராந்திய நலன், உள்நாட்டு அரசியலின் பலவீனங்கள், மனித உரிமை மீறல் செயற்பாடுகளெல்லாம் இணைந்து வெளிச்சக்திகளின் தலையீட்டை அதிகரிக்கச் செய்துள்ளன. இதனால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நேரடியான தலையீடுகள் என்று உணரக்கூடிய அளவுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம், இந்தியா, சீனா ஆகியவற்றின் தலையீடு அல்லது செல்வாக்கு இதில் தாக்கம் செலுத்துகிறது. இவையெல்லாம் இணைந்தே புதிய அதிபரைத் தேர்வு செய்யவுள்ளன. அந்தப் புதிய அதிபர் பிணக்குகளின் இருளில் புதைந்திருக்கும் இலங்கையை மீட்பாரா அல்லது அந்த இருளுக்கு ராஜாவாக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய அதிபருக்கு முன்னுள்ள நெருக்கடிகள் அவருக்கான பொறுப்புகளை நிர்ப்பந்தித்தே தீரும். அந்த நிர்ப்பந்தத்திற்குப் பணிந்தாலே பல பயனுறு காரியங்கள் நிகழும். அந்த நிர்ப்பந்தங்களைப் புறந்தள்ளினால் நாடு மேலும் துயரத்திலேயே மூழ்கும். அந்தத் துயரத்தின் அலைகள் இலங்கையைச் சுற்றியுள்ள இந்து சமுத்திரத்தின் பேரலைகளை விடவும் சீற்றம் கொண்டவை; ஆபத்தானவை.