கலை மிளிரும் கட்டுடைப்பு
மதிப்புரை
கலை மிளிரும் கட்டுடைப்பு
கஸ்தூரி சுதாகர்
தாடங்கம்
(சிறுகதைகள்)
சத்யானந்தன்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு
நாகர்கோவில் & 1
பக். 120
ரூ. 140
கால அச்சில் நேராகப் பயணித்தோ, அல்லது கதையின் ஒழுக்கில், தருக்கத்தில் நேராகப் பயணித்தோ உருவாக்கப்படும் நாவல்கள், குறுநாவல்கள் தமிழில் பரீட்சார்த்த நிலையை எப்போதோ கடந்துவிட்டன. நேரான கதை வாசிப்பை விலக்கி, நேர்கோடற்ற வாசிப்பு முறைமை எந்த அளவிற்கு நிறைவையும், தேடலின் பயனையும் தருமென முதல் கதையான ‘தாடங்க’த்தில் தொடங்கி முழுதுமாகக் கதைத்தொடரில் அனுபவிக்க வைக்கிறார் சத்யானந்தன். சில்லென்ற நதியில் முதலில் இறங்கும்போது வரும் உடல் விறைப்பு, சில்லிப்பு மாறிச் சுகமாக வியாபிப்பதைப்போன்ற ஓர் உணர்வு.
வளர்ப்புப் பறவைகளில், யதார்த்தமான காலை நேரத்தைக் காட்டி, அதிலிருந்து மாய உலகிற்குப் பயணிக்கிறார். ஒன்றிலிருந்து மற்றதற்கு எளிதாகச் சென்றுவர அவரால் முடிகிறது.
தொலைக்காட்சியில் விவாதத்தைக் கேட்கும்வேளையில் அதன் ஒலியன்றிக் கேட்கவேண்டிய நிர்ப்பந்தம், இரண்டும் ஒருசேர நடக்கவேண்டிய வாழ்வியற் சூழல்... ஒரு chimera போன்ற வாழ்வைச் சுட்டுகிறது. நவீனத்துவத்தின் ஒரு புதிய தடத்தில் முன் செல்வது இதன் பலம்.
‘காத்யாயினி’யில், காலம் இடம் என்பதன் தொடர் நீட்சியை இடறி, நான்-லீனியரில் கதையை நீட்டுவதில் ஒரு மர்ம உற்சாகம் தோன்றுகிறது. ஆண்களைப் பாறைகளாகவும் பெண்ணைப் பசுங்காடாகவும் உவமைப்படுத்திய கொலாஜ் வடிவம் கதையெங்கும் நீட்டிச் செல்ல ஓர் உரிமையைக் கொடுப்பதில், புரிதலைவிட உணர்தல் முன் நிற்கிறது. ஓரினச் சேர்க்கையில் தனது இணை மீது மற்றோர் ஆண் இணை கொள்ளும் பிடிமானமும் காதலும் ஒரு பெண்ணின் மனப்பாங்கிற்கு - அதாவது காதலன்மீது அவள் வைக்கும் பற்று - இணையானது என்பதை மையமாகக் கொண்ட இந்தக் கதை ஒரு பாலினத்திலிருந்து எதிர்ப்பால் மீது காதல் கூர்மையாக வெளிப்படுகிறது.
‘பீஷ்மனின் அம்புப்படுக்கை’ உன்னத மாயவலை பின்னும் எழுத்தாளர்கள் பலரைக் கவர்ந்திருக்கிறது. ‘உத்தராயணம்’ என்று லா.ச.ரா எழுதினார். அம்புப்படுக்கை, அதனடியில் நிகழ்ந்த உரையாடல்கள் என மகாபாரதம் நீள, அதனின்று கிடைத்த தூண்டுதலில் மாயாஜால யதார்த்தம் விரிகிறது. வரிசைக் கிரமமான தொடர் நீட்சியின்றி பீஷ்மரின் அம்புப் படுக்கையைக் கொண்டுசெல்லும் கதைத் தளம் அருமை. வாழ்க்கையே போராகயிருக்கும் தற்காலத்தில் மதிப்பீடுகளும் நெறிகளும் காலங்காலமாக மாற்றங்கண்டு வந்துள்ளன. நியாய தருமம் ஏதுமில்லை என்று ராமய்யா சொல்லக் கேட்பதில் பீஷ்மருக்கு ஆயாசம். சமயம், அது சார்ந்து செய்யப்படும் வணிகம், பட்டுவாடாவில் போலிசின் பங்கு என்று இன்றைய வாழ்க்கையில் புரையோடிக்கிடக்கும் கசடுகள், அவை நெறிகள் என்ற ஒன்றையே மறந்துபோன சமூகம். ராமைய்யா குருஷேத்திரத்துக்குப் போய் பீஷ்மருடன் பேசுவது என்பது மாயா எதார்த்தமாக, துண்டாக நிற்காமல் மிக இயல்பாக அழகாக நெய்யப்பட்டுள்ளது. தர்மம் X அதர்மம், நியாயம் X அநியாயம் எந்த உரைகல்லில் நிர்ணயமாகின்றன எனும் கேள்விக்கு மகாபாரதம் முதல் இன்றைய காலம்வரை விடை இல்லை.
இயல்பால் பலமற்றிருக்கும் ஓரினம் தன்னை எப்படிப் பார்க்கிறது, பார்க்க வேண்டுமென்பதைக் குரூரத்தின் வலிமிக எழுதப்பட்ட ‘மான்கறி’, பிறகதைகளைவிட அதிக தாக்கத்தைத் தந்திருக்கிறது. படிமங்களும் கலையெழுத்தும் எளிய நடையில் வாசகனைச் சிக்கச் செய்கின்றன. ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாலும், ஒருதலைக் காதலால் அமில வீச்சு, கொலைக்குப் பலியானாலும் ஊடகங்களுக்கு அவை பரபரப்புச் செய்தி மட்டுமே. இந்த பரபரப்புக் பின்னணியில் மனித நேயம் மரித்த ஒரு பெரிய வலை இருக்கிறது. நாம் செல்லரித்துப் போன மனித உறவுகளைப் பேணிக் கொண்டாடி வருகிறோம்.
‘சிவப்புத் துளசி’ காலவரையில் நீட்சியற்று யதார்த்தத்தை உடைத்ததெனினும் கதையின் போக்கு காலமின்றி, தன் நீட்சியாகவே செல்வது பல வாசகர்களுக்கு எளிதாக இருக்கலாம். ஆயின் காதல் தோற்று, கண்டுபிடிப்பு வெல்வது, எந்தத் தீவிரமான தேடலும் தனக்கான தியாகங்களுடனே வருகின்றன என்பதைச் சுட்டுகிறது. பண்டைய தேடல்களும் கண்டுபிடிப்புகளும் மர்மமாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை எனினும், கதைக்குச் சுவையூட்ட வருவதைச் சமரசமாக எடுத்துக்கொள்ள முடியும்.
கதைகளில் புரிதலை முன்வைக்காமல், உணர்தலை முன்னிறுத்தியிருக்கும் உத்தி கத்தி மேல் நடப்பதைப் போன்ற வித்தை. கொஞ்சம் தவறினாலும், வாசகரின் மதிப்பிலிருந்து கதை நழுவும் சாத்தியமிருக்கையில், தன் கதை சொல்லும் திறமையின் மீதான நம்பிக்கையில், ஆர்வத்தில் கட்டமைக்கப்பட்ட கதைத்தொகுப்பு ‘தாடங்கம்’.