ஒழுங்கின்மையின் நிழல்
மதிப்புரை
ஒழுங்கின்மையின் நிழல்
கிருஷ்ணமூர்த்தி
இழப்பின் வரைபடம்
(கிளாசிக் நாவல்)
லாரா ஃபெர்கஸ்
தமிழில்: அனிருத்தன் வாசுதேவன்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு
நாகர்கோவில் & 1
பக். 224
ரூ. 250
இயற்பியலில் ‘எண்ட்ரொப்பி’ என்றொரு தத்துவம் இருக்கிறது. பொதுவாக, சுடுநீரைவைத்து அதை விளக்குவர். நீரைச் சூடாக்கும்போது அதனுள்ளிருக்கும் அணுக்கூட்டம் தன் இயல்பை உடைத்துக்கொண்டு மீறும். பின் அதனோடு ஒட்டியிருக்கும் ஒவ்வொரு அணுக்கூட்டமும் தம் நிலையைக் குலைத்துக்கொண்டு வேறொரு நிலைக்குத் தம்மை உருமாற்றிக்கொள்ளும். ஒழுங்கிலிருந்து ஒழுங்கின்மைக்கு நகரும் இத்தன்மையை இயற்பியல்வாதிகள் எண்ட்ரோப்பி எனும் சொல்லால் குறிக்கின்றனர். இந்தத் தத்துவத்தின் தன்மையில் அமைக்கப்பட்டுள்ள நாவல் ஆஸ்திரேலிய எழுத்தாளரான லாரா ஃபெர்கஸின் My sister’s chaos. இதனை தமிழில் அனிருத்தன் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார். இது லாரா ஃபெர்கஸின் முதல் நாவல்.
இரண்டு கதாபாத்திரங்கள், ஒரு வீடு, அவ்வப்போது வந்து செல்லும் சில உதிரிப் பாத்திரங்கள் எனக் குறுகிய அளவிலான மனிதர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டு உலகம் முழுவதையும் உள்ளடக்க கூடிய ஒரு கதையை நுண்மையாக எழுதியிருக்கிறார். மானுடத்திற்கு எப்போதும் சவாலாக அமையும் போர் எனும் சொல்லாடல் குறித்த சந்தேகங்களைப் பெருந்தர்க்கமாக உருவாக்க முயல்கிறார். உலகம் முழுக்க நிகழ்ந்திருக்கும், நிகழ்ந்துகொண்டிருக்கும் அத்தனைவிதமான போர்களுக்குமான மையம் என்ன? ஒருவேளை அப்போர் முடிவிற்கு வருமாயின் அவை மனித இனத்திற்கு விட்டுச்செல்வது என்னவாக இருக்கும்? இதுவரை முடிந்திருக்கும் போர்களின் மிச்சங்கள் எதை நினைவுறுத்துகின்றன? ஒவ்வொரு போரின்போதும், போர் முடிந்தபின்னும் கைவிடப்படும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களை எளிதாக அகதி எனும் சொல்லிற்குள் உலகம் அடக்கிவிடுகிறது. அந்த அகதிக்கு இந்த உலகத்தில் எதன்மீது உரிமை இருக்கிறது? எது அந்த அகதியின் சுதந்திரமாகிறது? இவ்வனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் நாவல். அகதியின் அகவாழ்க்கை எதைச் சுற்றி உழல்கிறது எனும் கேள்வியைத் தீண்டுகிறது. இந்தத் தீண்டலே நாவலை அதன் சிடுக்கான வழியில் இயல்பாகப் பயணிக்கவைத்து அதன் புதிர் சுழலில் வாசகனையும் சிக்கவைக்கிறது.
போருக்குப் பின்னர் அகதியாக்கப்படும் ஒரு பெண்ணிடமிருந்து நாவல் தொடங்குகிறது. போருக்கு முந்தைய தருணத்தில் வரைபடம் உருவாக்கும் குழுவில் பணியாற்றியவள் கதையின் நாயகி. உலகளாவிய வரைபடத்தை உருவாக்கும் பணியின் இடையில் போர் அப்பணியை நிறுத்திவிடுகிறது. போரினால் நிறுத்தப்படும் தருணத்தில் அதுவரை தயாரித்திருந்த வரைபடத்தின் சில முக்கிய கோப்புகளை ஒரு பென்ட்ரைவில் சேகரித்துத் தன்னுடன் வைத்துக்கொள்கிறாள். பின் அகதியாக வேறொரு தனித்த இடத்தில் தங்கநேரும்போதும் அவளுடைய வரைபட நிபுணத்துவம் வேறு அர்த்தத்தைப் பூசிக்கொள்கிறது. தான் தங்கியிருக்கும் வீட்டின் ஒவ்வோர் அங்குலத்தையும் அளக்கிறாள்; கணக்கிடுகிறாள். அத்துடன் அவ்வீட்டில் அன்றாடம் ஏற்படும் பௌதீக மாற்றங்களையும் சேர்த்து வரைபடமாகப் பதியத் தொடங்குகிறாள். வீட்டைத் துல்லியமான வரைபடமாக்கும் விதத்தில் தன்னால் இழந்த நாட்டை மீட்டுவிட முடியும் எனும் நம்பிக்கையில் தன்னை உலகிலிருந்து துண்டித்துக்கொள்கிறாள். வீடே அவளது உலகமாகிறது.
நாவலின் மற்றொரு நாயகி மேற்கூறிய பெண்ணின் இரட்டைச் சகோதரி. நாவல் முழுக்கச் சகோதரி எனும் சொல்வழியாகவே அறியப்படுகிறாள். போரில் தொலைந்த, பின் ஏற்படும் தனிப்பட்ட நினைவுகளின் சுமையோடு மீண்டும் தன் சகோதரியை அடைகிறாள். ஓவியத்தின்மீது பற்றுக்கொண்டு இழந்த நிலத்தின் நினைவுகளை, வலிகளை அவ்வப்போது ஓவியமாக்குகிறாள். போரின் இறுதிக் கட்டத்தில் தாய்நாட்டை ஒடுக்கிய ராணுவத்திற்கு எதிரான இயக்கத்தில் பணிபுரிந்திருக்கிறாள். போருக்குப் பின்னர் அவளைப் போன்ற இயக்கத்தவர்களைப் பிடிக்கும் பணியும் சமூகத்தில் தொடங்குகிறது. போரின் இறுதி நாட்களில் அவளுடைய காதலியையும் காதலியின் குழந்தையையும் இழந்து, பின் அவர்களைத் தேடி அதில் தோல்வியையும் தழுவியிருக்கிறாள். இழந்த நிலத்தின் வலியும் தொலைத்த காதலியின் நினைவும் அவளுடைய வாழ்க்கையாகிறது.
நாயகியைத் தேடிச் சகோதரி வருவதில் தொடங்குகிறது நாவல். நாயகியின் தனிமை நாவலின் ஒவ்வோர் அத்தியாயத்தின் வழியே குலைகிறது. இருவேறுபட்ட கருத்தியல்களும் வாழ்க்கை குறித்த பார்வையும் ஒரே இடத்தில் குவிக்கப்படும்போது அவை ஒன்றையொன்று விழுங்கும் முனைப்புடன் நிகழும் முடிவற்ற சமராக உருவம்கொள்கிறது. இருவருமே போரின் வடுக்களைச் சுமக்கின்றனர். அதை நினைவடுக்குகளில் சேமித்துவைக்க வேறு வேறு வடிவங்களைக் கையாள்கின்றனர். ஒருவரிடமிருக்கும் ஒழுங்கு துல்லியமான பதிவுகளை விரும்புகிறது. மற்றொருவரிடமோ போரின் வடுக்கள் அதன் ரணத்துடன் பதிவு செய்யப்படுகின்றன.
நாவலில் எங்கும் எவருடைய பெயரும் குறிப்பிடப்படுவதில்லை. இடங்களின் பெயர்களும் சொல்லப்படுவதில்லை. வீடே நாவலின் களமாக அமைகிறது. பெயர்களற்ற நாவலின் கதைசொல்லல் முறை நாவல் பேசும் அரசியலின் தன்மையைக் கூர்மைப்படுத்துகிறது. போர் குறித்த விவரணைகள் இடம்பெறாவிடினும் குறிப்பால் உணர்த்தப்படும் இடங்கள் பிரம்மாண்டமான கற்பனைகளுக்கு இட்டுச் செல்கின்றன. அதே நேரம் அந்தக் கற்பனைகள் யதார்த்தத்தை மீறாத வண்ணம் அமைவன. இதுவரை நாம் அறிந்திருக்கும் போர்களை நாவலில் சொல்லப்படும் அத்தனை குறிப்புகளோடும் ஒப்புமை செய்ய முடிகிறது. லட்சியங்களுடன் தொடங்கப்படும் போர்கள் அந்த லட்சியத்தைப் பின்பற்றும் மக்களுக்கு எதிரானதாகவே உருமாறும் புதிரும், அவர்களை எதிர்ப்பது ஒற்றை எதிரி அல்ல என்ற தெளிவும், மக்களின்மீது சர்வதேச அமைப்புகளின் வல்லாதிக்க மனப்பான்மையும், போரின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளும் அனைத்து லட்சியங்களாலும் கைவிடப்படும் மக்களின் எளிய வாழ்க்கையும், போருக்குப் பின் சமூகம் கொடுக்கும் பேரமைதியும், சுய வாழ்க்கையில் ஏற்படும் பெருங்குழப்பமும் எல்லைகளுக்கு அப்பால் பேருண்மையாக நிலைத்து நிற்கின்றன. லாரா ஃபெர்கஸின் மொழி அவ்வுண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் தருணங்களில் போர் மனிதர்களுக்கு எதிரானதன்று, மானுடத்திற்கு எதிரானது எனும் தீர்வை நம்பகத்தன்மையுடன் அணுகுகிறது.
நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியான நிலப்பரப்பு இருவரின் போர் நினைவுகளை விவரிக்கிறது. இருவரும் அனுபவித்த போரின் வடுக்களை வேறு வடிவங்களுக்குள் புகுத்த முனைகிறார்கள். அதில் நாயகியின் வரைபடம் யதார்த்தத்தை மீறிய ஒன்றாகச் சகோதரிக்குத் தோற்றம் கொடுக்கிறது. அதற்கான விவாதத்தில் மேம்பட்ட யதார்த்தத்தைத் தன் வரைபடம் பிரதிபலிக்க முயலுவதாக நாயகி விவரிக்கிறாள். மொத்த நாட்டையும் இழந்துவிட்டுப் பின் தான் வசிக்கும் வீட்டை மட்டும் வரைபடத்தின் வழியே மீட்டுருவாக்க முனையும் தன்மையைச் சகோதரி கேள்விக்குள்ளாக்குகிறாள். வீட்டை நாடாகப் பாவிக்கும் குணத்தின் வழியே எல்லைகளையும் போரையும் அதனூடாக விரிவடையும் ஆதிக்க அரசியலையும் விவரித்திருக்கும் பகுதிகள் போரை ஆயுதமாக எண்ணும் அரசுகளைக் கேலிக்குட்படுத்தும் கூற்றுகளாக அமைகின்றன. எல்லைகளை விரிவுசெய்யும் நோக்கில் நிகழ்த்தப்படும் ஆதிக்கமும், அதில் இருக்கும் யதார்த்தமும் வரைபடங்களையும் வரலாற்றையும் காலாவதியாக்குகின்றன. அதிலும் குறிப்பாகக் காலாவதியாகும் எல்லைகளைப் பதிவு செய்வதே வரைபடத்தின் நோக்கம் என்று நாயகி நம்புகிறாள்.
இரண்டாம் பகுதியில் வீட்டைத் துல்லியமாகப் பதிவு செய்வதை ஆசிரியர் விவரிக்கிறார். அந்த வரைபடத்திற்கு ஏதேனும் அர்த்தம் இருக்கக்கூடுமா எனும் சகோதரியின் சந்தேக லயத்தில் அப்பகுதி நகர்கிறது. சகோதரி அவ்வீட்டில் கண்டுபிடிக்கும் நிலவறை நாயகிக்குப் பேரதிர்ச்சியாய் அமைகிறது. அத்தனை நாட்கள் அவ்வீட்டை ஒவ்வோர் அங்குலமாக அறிந்தும் பதிவு செய்தும் தனக்குத் தெரியாத ஒன்றைப் புதிதாய் வந்தவள் கண்டுபிடிப்பதை உணரும் தருணத்தில் வரைபடத்தின் மீதான நம்பிக்கையை இழக்கிறாள். சகோதரிகளுக்கு இடையேயான சண்டைகள் நேரிடையாக நிகழத் தொடங்குகின்றன. அவ்வீட்டின் நிலவறைக்குள் சகோதரி தனித்திருக்க விரும்புகிறாள். நாவல் அதன் நுண்படிம நிலைக்கு இப்பகுதியில் நகர்ந்துவிடுகிறது. தாய்நாட்டிலிருந்து விலகி அகதியாக வாழ நேரும் நாயகியின் வாழ்க்கையும், அந்நாயகி மாபெரும் தேசமெனக் கற்பனைகொள்ளும் அவ்வீட்டிலிருந்து விலகி அதன் நிலவறைக்குள் அகதியாக மாறிக்கொள்ளும் சகோதரியின் வாழ்க்கையும் ஒருவர் மற்றொருவரின் பிம்பம் எனும் நிலைக்குக் கதை நகர்ந்துவிடுகிறது.
பௌதிக ரீதியாக ஒருவர் மற்றொருவரின் பிம்பமாக மாறினாலும் நாவலின் மூன்றாம் பகுதியில் கருத்தியல் ரீதியான பிம்பமாகின்றனர். தனித்து ஒதுங்கிக்கொள்ளும் சகோதரி அவளை அறியாமலேயே நாயகியின் வாழ்க்கையை வாழத் தொடங்குகிறாள். தன் ஓவியத் திறமையையும் நாயகியின் வரைபடத்தையும் வைத்துக்கொண்டு தொலைத்த தன் காதலியைக் கண்டடைந்துவிடலாம் என்று நம்புகிறாள். இதன் மறுபுறம் நாயகி வரைபடத்தின் நம்பிக்கையிலிருந்து அவளை அறியாமல் விலகி யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள நகர்கிறாள். இருவரும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் நாவல் தன் முடிவை எய்துகிறது.
நாவலை வேறுவேறு விதமான வாசிப்புகளுக்கு உட்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருப்பது நாவலின் பெரும் பலம். நவீன கதையாடலின் அரசியலும் வடிவமும் சமகால எழுத்துகளுக்குச் சவாலாக அமைகின்றன. அத்தியாயங்கள் எண்களில் தலைப்பைக் கொண்டிருக்கின்றன. அதில் வரும் சிறுசிறு மாற்றங்களும் கதையின் தன்மைக்கு ஏற்பவே அமையப்பெற்றுள்ளன. நாவலின் குலைந்த வடிவத்தை அது பேசும் அரசியலே தீர்மானிக்கிறது. ஒரே சமயத்தில் மாயப்புனைவாகவும், அரசியல் கதையாடலாகவும், அறிவியல் நுட்பங்களால் நிறைந்த வாழ்க்கையாகவும், தத்துவச் சமராகவும் இந்நாவல் காட்சியளிக்கிறது. நாயகியை மையப்படுத்தியே சொல்லப்படும் கதை நாயகியின் உணர்ச்சியை, பதற்றத்தை வாசகரைச் சேர்ப்பிப்பதிலும் வெற்றியைக் காண்கிறது. ஒழுங்கிற்கும் ஒழுங்கின்மைக்கும் இடையில் நிகழும் பெரும் போரில் பேருண்மைகள் பொதிந்திருக்கின்றன. அவற்றின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக நாவல் கட்டவிழ்க்கிறது. ஒவ்வொன்றின் முடிவிலும் ஒழுங்கின்மை புன்னகைத்தபடி இருப்பது நாவலின் பாடுபொருளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.