அந்தி, அநாமி
கவிதைகள்
கல்யாணராமன்
ஓவியம்: பி.ஆர். ராஜன்
அந்தி
நீ ஒரு கிளி என்று
ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் பறந்துவிட்டாள்
நீ ஒரு பனித்துளி என்று
ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் மறைந்துவிட்டாள்
நீ ஒரு பசு என்று
ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் மரத்துவிட்டாள்
நீ ஒரு ரோஜா என்று
ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் குத்திவிட்டாள்
நீ ஒரு வீணை என்று
ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் இறுகிவிட்டாள்
நீ ஒரு மயில் என்று
ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் பொய்த்துவிட்டாள்
நீ ஓர் அருவி என்று
ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் வறண்டுவிட்டாள்
ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொன்று
எல்லாரும் பூரித்திருக்கிறார்கள்
ஒருத்திக்கும் ஒருகுறையுமில்லை
மாலைச் சூரியனையும்
எகிறி வரும் அலைகளையும்
கண்களால் அளந்தபடி
கடற்கரையில் தன்னந்தனியாய் நடக்கையில் தோன்றுகிறது
பொய்யும் ஓர் உண்மையே உண்மையும் ஒரு பொய்யே
அநாமி
இப்போதெல்லாம்
யார் கோலம் போடுகிறார்கள்
என்று கேட்டுவிட்டால் போதும்
துள்ளியெழுந்து திருப்பியடிப்பாள்
இன்று எவனுக்குத்
தனிவீடு வாங்கத் துப்பிருக்கு
அவளிடம் பார்த்துத்தான் பேசணும்
வகுப்பறையில் ஒருநாள்
யுரேகா என்றபடி
நிர்வாணமாய் ஓடிய ஆர்க்கிமிடீஸ்
பற்றிப் பாடம்
சார் ஒரு சந்தேகம்
எந்தக் காலத்தில் ஒரு பெண்
இப்படி ஓட முடியும்
ஒருவாரம் அவள் சஸ்பெண்ட்
ஏழுநாளும் டைட்டானிக் பார்த்தாள்
கடலும் கப்பலும் காதலும் . . .
எளிமைக்கு இடமில்லை
இந்த உலகில் என்றாள்
எப்போதவள் என்ன பேசுவாள்
யாருக்குத் தெரியும்
அவள் வாயே அணுகுண்டு
கற்பூர ஆரத்தி காட்டுகையில்
சிகரெட் பற்ற வைக்காவிட்டாலும்
நவக்கிரகம் ஒவ்வொன்றுக்கும் முத்தமிட்டுப்
பீதி கிளப்பியவளாச்சே
எங்கிருக்கிறாள் இப்பித்தி
என்பதுதானே உங்கள் வினா
வேறெங்கிருப்பாள்
வீடு வீடாகத் தேடுங்கள்
நாலு சுவருக்குள்தான்
நாமம் கெட்டவள் நிற்பாள்
மின்னஞ்சல்: Sirisharam73@gmail.com