திரிபல்ல, விளக்கம்
எதிர்வினை
திரிபல்ல, விளக்கம்
ப. சகதேவன்
ஜூன் 20 இதழில் வெளிவந்த எனது ‘பெங்களூர் குறிப்புகள்’ பகுதிக்கு எதிர்வினையாற்றிய லாவண்யா சுந்தரராஜன் நான் ஆ.இரா.வேங்கடாசலபதியின் கருத்துகளைத் திரித்துக் கூறியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்; இது தொடர்பாக என் விளக்கம்.
எனது கட்டுரை பெங்களூர் பன்னாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியின் நேரடி எழுத்துப் பதிவல்ல. காலச்சுவடு அப்படி என்னைச் செய்யச்சொல்லிப் பணிக்கவுமில்லை. ‘தமிழ்க்கதாபாத்திரங்கள்’ புத்தகத்தை அறிமுகப்படுத்தவும், அதன் புத்தக விற்பனையை மேம்படுத்தவும் மட்டுமே இந்த நிகழ்ச்சி என்று எந்த இடத்திலாவது பெங்களூர் பன்னாட்டு மையம் சொல்லியிருக்கிறதா எனத் தெரியவில்லை. மையம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கிறதா என்பதை லாவண்யா சொல்ல வேண்டும்.
தமிழ்ச் சமூகம், அதன் வரலாறு, இலக்கியம், பண்பாடு குறித்து வேங்கடாசலபதி தெரிவித்த நேரடிக் கருத்துகளுக்கும் உள்ளார்ந்த கருத்துகளுக்கும் நான் வெளிப்படுத்திய எதிர்வினைகளே அவை.
பத்திரிகைச் செய்தியிலிருந்து கருத்துக் களம் என்ற நிலைக்கு எடுத்துச் செல்லப்படும் முயற்சி. ஒரு கல்யாணத்தைப் பார்த்த பிறகு, ‘கலியாணம் நல்லா நடந்துச்சு. . . அய்யிரு நல்லா மந்தரஞ் சொன்னாரு. . . சாப்பாடு சூப்பர் . . .’ என்று சொல்லிவிட்டுப் போவது மாதிரியில்லை இது; மையம் நடத்தும் நிகழ்ச்சிகள் அத்தரத்தவையல்ல.
தாமஸ் டிரவுட்மன், சையது மிர்ஸா நிகழ்ச்சிகள் பற்றிய எனது பதிவை லாவண்யா படித்தாரா எனத் தெரியவில்லை.
‘தமிழ்க் கதாபாத்திரங்கள்’ புத்தகத்தில் சொல்லப்படும் ஆளுமைகளில் பெரியாரை மட்டுமே நான் கவனம் கொண்டிருக்கிறேன். பெரியாரியம், திராவிடம், பகுத்தறிவு பற்றிய தமிழ்ப்புரிதலின் இணைக்கருத்துகளைப் பதிவுசெய்வதே எனது நோக்கம்.
எல்லா சமூகங்களிலும் போலவே தமிழ்ச் சமூகத்திலும் ஒடுக்குதல் தாங்காமல் பலர் கலகக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்காக இந்தக் கலகக்குரல் பிறரால் எழுப்பப்பட்டிருக்கிறது. பெரியார் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். அவரது ஆக்கப்பூர்வமான சமூகச் சீர்திருத்தச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. அதே சமயம் வன்முறையில் நம்பிக்கையில்லாத, ஆழ்ந்த அழகியல் - ஆன்மீகப் பின்னணியுடைய ஒரு சமூகத்தை மிகவும் அருவருப்பான முறையில் விமரிசனம் செய்ததும் பெண்மை, குடும்பம் ஆகியன குறித்து நாகரிகச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாத கருத்துகளைத் தொடர்ந்து கூறிவந்ததும், மனிதனை ‘பகுத்தறிவாளர்’ என்ற குறுஞ்சட்டகத்திற்குள் மட்டுமே அடக்கி வந்ததும், புராண இதிகாசங்கள், காப்பியங்கள், தொன்மங்கள் போன்றவை குறித்துக் கொச்சையான புரிதல்கொண்டிருந்ததும் பெரியார் மீதான விமரிசனக் கோணங்கள். ஆனால் இங்கு எனது அஸ்திரம் நேரடியாக பெரியார் மீதல்ல, வேங்கடாசலபதி மீதுதான்.
எப்படிப்பட்ட வேங்கடாசலபதி?
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்விப்புல வரலாற்றாய்வாளர். கலாச்சார விமர்சகர். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உரைகள் நிகழ்த்தியவர். ரொமிலா தாபர் நூலை மொழிபெயர்த்தவர். தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் தொடந்து எழுதிவருபவர். இப்படிப்பட்டவர் தமிழ்க் கதாபாத்திரங்கள் குறித்தும் தமிழ்க் கலாச்சாரம் குறித்தும் எழுதும்போதும் பேசும்போதும் குரோதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பாரென்று எதிர்பார்ப்பது தவறு என்கிறாரா லாவண்யா?
‘பொருளாதார மற்றும் அரசியல் வாராந்தரி’ (இ.பி.டபிள்யூ) போன்ற இதழ்களில் வெளிவரும் கட்டுரைகள் அறிவியல்பூர்வமாகத் தகுந்த ஆதாரங்களைக்கொண்டு எழுதப்படுபவை. வேங்கடாசலபதியும் அதில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இந்திய அறிவுலகத்தில் இரு பெரும் பிரிவுகள் உண்டு. ஒரு தரப்பினர், ஆங்கிலம் மட்டுமே அறிந்து அதில் மட்டுமே படித்து எழுதுபவர்கள். இவர்களது எல்லாவிதமான புரிதல்களும் ஒரு வரையறைக்குட்பட்டவை.
இதனால் பல சோகங்கள் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க சோகம் இரண்டு வகைப்பட்டது. ஒன்று ஐயர்களால் நிகழ்ந்தது. இரண்டாவது ஐயங்கார்களால் நிகழ்ந்தது. (உதாரணம் ராமச்சந்திர குஹாவுக்குத் தமிழ் தெரியாது; என். ராம் தமிழில் எழுதியதே இல்லை.) அவர்களின் வாசகர்களும் பெரும்பாலும் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்களாக இருப்பார்கள். இரண்டாம் தரப்பினர், மாநில மொழி அல்லது தாய்மொழியில் அதிகப் பயிற்சிகொண்டு அம்மொழியில் மட்டுமே எழுதுபவர்கள். இவர்கள் எழுதுவதை அம்மொழியும் ஆங்கில மொழியும் அறிந்தவர்கள் படிப்பார்கள். ஆனால் இவர்கள் எழுதுவதோ, அந்த எழுத்துக்களுக்கு வரும் எதிர்வினைகளோ ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்களுக்குப் போய்ச்சேராது. ஆங்கிலத்திற்கு அவற்றைக் கொண்டு போய்ச்சேர்ப்பவர்களுடைய விருப்பு வெறுப்புகளுக்குத் தகுந்த மாதிரித்தான் அவை போய்ச்சேரும்.
வேங்கடாசலபதியே அந்த நிகழ்ச்சியில் சொல்லியிருப்பது மாதிரி அவரை விட விவரம் தெரிந்தவர்கள் தமிழ்மொழியில் எழுதுகிறார்கள். பிராந்திய மொழிகளில் எழுதப்படுபவை ஆங்கில மொழியில் எழுதப்படுபவற்றை விட அதிக தரம் உடையவையாக இருக்கின்றன. ஆங்கிலம் அறிந்தவர்கள், சமூக அக்கறை உடையவர்கள் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். கன்னடத்தில் ஏ.ஆர். வாசவி, சுகதா சீனிவாச ராஜூ, மனு சக்கரவர்த்தி, ஹெச். எஸ், சிவபிரகாஷ், சி.என். ராமச்சந்திரன் என்று பலர் இதில் நிறையப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
பிராந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்குத் தகவல்களையும் கருத்தாக்கங்களையும் கொண்டுசெல்பவர்கள் மிகுந்த கவனத்துடனும் நேர்மையுணர்வுடனும் இருப்பது அவசியம். வேங்கடாசலபதி அதில் கொஞ்சம் தவறிவிட்டார் என்று தோன்றுகிறது. அவரது ‘தமிழ்க்கதாபாத்திரங்கள்’ நூலில் சேர்க்கப்பட்டிருக்கும் முதல் கட்டுரை, ‘தெற்கிலிருந்து ஒரு இறைத்தூதர்’ பெரியாரைப் பற்றியது. எந்தவிதத்திலும் அது ஒரு நடுநிலைமையோடு எழுதப்பட்ட கட்டுரையாகத் தெரியவில்லை. பெரியார்மீது அவர் கொண்ட பக்தியையே காண்பிக்கிறது. அடியார்களுக்குப் பக்தி இருக்கலாம். ஆராய்ச்சியாளருக்கு எதற்கு? ‘உங்கள் காணொலி’ (யூ ட்யூப்)யில் ஒரு பதிவு இருக்கிறது. ‘We are proud to be Indian’ என்னும் தலைப்பிலான அந்தப்பதிவு Maniks Srinivasan என்பவரால் 30 Jun 2017 அன்று போடப்பட்டிருக்கிறது. காணொலியில் சிலர் தூக்கு அட்டைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை அது பிராமண எதிர்ப்புப் போராட்டமாக இருக்கலாம்.
அவர்கள் முன்னால் ஒரு மத்தியதர வயதுப் பெண் ஆவேசமாகக் கத்துகிறார்: ‘ஆமா. . . நான் பாப்பாத்திதான் . . . நாங்கள் பாப்பான்தான் . . . எங்களப் பத்தி பேச நீங்க யாரு . . ? உங்களுக்கு என்ன உரிமை இருக்கு . . . நாங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கதான் இருக்கோம்.’
‘நீங்க எங்கள அடிமைப்படுத்தியிருக்கீங்க...’
‘அதுக்கு என்ன ஆதாரமிருக்கு?... இப்ப அக்கிரகாரத்துலே ஒருத்தருமே இல்லே... எங்க பொண்ணுக வேற ஜாதியிலே கல்யாணம் பண்ணீட்டாங்க. நாங்க அவங்கள ஆணவக்கொல பண்றதில்லே...’
‘ஆனா சங்கரராமனக் கொல பண்ணுவீங்க. . .’
‘சுப்பிரமணிய பாரதி பாப்பானில்லியா..?’
‘நாங்க அவரோட ஜாதிவெறியையும் கண்டிக்கிறோம். . .’
அந்தப் பெண்ணின் கணவரோ அல்லது சகோதரரோ அவரை இழுத்துக்கொண்டு போகிறார். அந்தப் பெண்ணின் கோபம் அப்போது மட்டும் திடீரென எழுந்ததாகத் தெரியவில்லை. ரொம்ப நாளாகவே அவரது தன்மான உணர்வு (திராவிட கழகம் பெரிதும் வலியுறுத்துவது) புண்பட்டிருக்க வேண்டும். ஒரு பெண் தனியாக நடுத்தெருவில் நின்று போராடுகிறார். பிரச்சினை தீரவில்லை.
பிராமணர்களில் ஒரு சிலரும் இந்தத் தன்மான உணர்வைக் காலில் போட்டு மிதிக்கத்தான் செய்கிறார்கள்.
ஏன் மிக மேன்மையான மதிப்பீடுகளைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் சிறு பத்திரிகை இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரே தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்களிடம் மனிதக் கழிவை ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு (உயர்சாதிப்பெண்) அனுப்பச் சொல்லவில்லையா? உணர்ச்சிவசப்படுதல் தமிழர்களின் தேசியக்குணம்தான் லாவண்யா அவர்களே! நிகழ்ச்சி பற்றிய எனது குறிப்பு மிகவும் சுருக்கமானது. அதை முழுதும் தெரிந்துகொண்டால்தான் வாசகர் எங்கள் நியாய அநியாயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். எனவே சந்தன் கௌடாவின் கேள்விகளுக்குப் பதில் கூறும்முகமாக வேங்கடாசலபதி கூறிய கருத்துகளின் காணொலி ‘யூ ட்டியூப்’ இணையத்தில் இடம்பெற்றுள்ளது. வாசகர்கள் நேரடியாகப் பார்த்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல்: krishnaswamip@yahoo.com