தீக்குச்சிகளின் குடும்பம், ஊற்று
கவிதைகள்
நெகிழன்
Courstesy: siva arpan anand
தீக்குச்சிகளின் குடும்பம்
தூக்கிவீசப்பட்ட தீப்பெட்டி எங்கள் வீடு.
நானும் அவளும் மரக்குச்சிகள்
குழந்தைகளோ
தவறுதலாய்ப் பெட்டி மாறி வந்துவிட்ட
மெழுகுக் குச்சிகள்.
குளிர்கால இரவுகளில்
நாங்கள் ஒருவருக்கொருவர்
பரிமாறிக்கொள்ளும் ஈர முத்தங்கள்
அலாதியானவை.
செவ்வக உலகில்
காகித வானத்தில்
நாங்கள் பார்த்ததேயில்லை
நிலவை
சூரியனை
நட்சத்திரங்களை.
யாரோ ஒருவர் வாயில் பீடியை வைத்துக்கொண்டு
எங்கள் வீடு நோக்கி வருகிறார்.
வீட்டைத் தூக்கி
முதலில் மகனை வெளியேற்றி
உரச
பிறகு மகளை,
மனைவியை,
கடைசியாக என்னை.
முதல் உரசலிலேயே...
சரிதான் இதென்ன கதை
எரியத்தானே பிறந்தோம்.
ஊற்று
எங்கள் ஊரில்
ஒரு புகழ்பெற்ற கிணறிருக்கிறது.
நீர் கீழிறங்கும்போதெல்லாம்
ஒருவர் கல்லைக் கட்டிக் குதிப்பார்.
நீர் சற்று மேலெழும்.
ஒவ்வொரு மாதமும் இப்படித்தான்.
போனமாதம் ரொம்பவும் கீழே போய்விட்டது
ஆகையால்
ஒரு குடும்பமே கல்லெடுத்துக்கொண்டு நீருக்குள் போனது.
ஒவ்வொருமுறையும்
நீருக்குள் போகிறவர்கள்
அதன் ஊற்றைக் கண்டுபிடிக்கிறார்கள்.
அதன் இனிக்கும் நீரைப் பருகுகிறார்கள்.
ஊற்றாய் மாறுகிறார்கள்.
பின் மெல்ல மேலெழும்பி
நீராய்ச் சூரிய ஒளியில் மின்னுகிறார்கள்.
மின்னஞ்சல்: negizhan2016@gmail.com