கடிதங்கள்
கடிதங்கள்
ஆகஸ்ட் 2020 தலையங்கத்தில் இடம்பெற்றிருந்த ‘ஊடகங்களிலும் அடங்காத சாதிய வன்முறைகள்’, ‘கருத்துகள் சொன்னால் கைது?’ கவனம் கொள்ள வைத்தன. இவை சார்ந்து தமிழக ஊடகங்கள், பத்திரிகைகள் தமது எதிர்வினை களை மேம்போக்காக எழுப்பி அடங்கிவிட்ட நிலையில், காலச்சுவடு மட்டுமே உரத்துச் சிந்திக்கும் வகையில் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
7500 பாடல்களை எழுதிச் சாதனை படைத்த கவிஞர் வைரமுத்து 66ஆவது பிறந்தநாளை முன்னிட்டுச் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கும் சூழலில், ‘மீடூ’ பிரச்சினையில் குற்றம்சாட்டப்பட்ட கவிஞரின் பாலியல் அத்துமீறல்களை யாரும் வாயைத் திறக்கவில்லை. இந்நிலையில் பத்திரிகையாளர் கிருபா. கி. நேர்காணலை இதழில் வெளியிட்டிருப்பதையும், பெண்களுக்குச் சமூகத்தின் மேலுள்ள நம்பிக்கையே போய்விட்டது என்ற அவரது ஆதங்கத்தையும் ஒருசேரப் பதிவு செய்திருப்பது
நன்று!
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
கரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து நாடுகளில் உள்ள கல்வி நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன. வளர்ந்த தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட நாடுகளிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கற்றலும் கற்பித்தலும் என்பது இயல்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் அனைவருக்கும் சமமான அளவில் கிடைக்காத சூழலில் நம் நாட்டில் இணையவழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்வி அனைவருக்கும் சமமானதாக இல்லாமல் குழப்பமான நடைமுறைகள் இருந்து வருகின்றன.
இங்கே கல்வி வணிகப் பொருளாகி விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி தனியாரிடம் கொடுக்கப்பட்டதன் விளைவாக, ‘படித்தவன் பாடம் நடத்துறான் படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்,’ போன்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. மற்ற எந்த தொழிலில் முதலீடு செய்வதைக் காட்டிலும் கல்வியில் முதலீடு செய்தால் மிகப்பெரிய அளவில் லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த லாப நோக்கோடு கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுப் பலவும் அதில் கல்விக் கட்டணக் கொள்ளை வெகுஜோராக நடைபெற்று வருகிறது.
பள்ளி, கல்லூரிகள் நடைபெறாதபோதும் மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதற்காக இணையவழியில் பாடம் கற்பிக்கிறோம், புலன குழுவின் மூலம் புதுப்புது வித்தைகளைக் காட்டுகிறோம் என்றெல்லாம் சொல்லி மக்கள் வேலைவாய்ப்பற்றுப் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கட்டணத்தை வசூல் செய்து வருகின்றன.
வீடுகளில் இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்துவிட்டால் அந்தப் பெற்றோர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக உள்ளது. அப்படியே இணைய வழிக் கல்வி மாணவர்களை முறையாக ஒருங்கிணைத்து முறைப்படிக் கற்பிக்கப்படுகிறதா என்று பார்த்தால் அதுவும் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கற்பிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படுகிறதா என்றால் அதுவும் புரியாத புதிராக உள்ளது.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இத்தகைய இணைய வழிக் கல்வியை நினைத்துப் பார்க்கவே கடினமாக உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் பற்றிய அறிதல் இல்லாமல் இருப்பதும் எதிர்காலச் சவால்களைச் சமாளிப்பதற்குப் போதிய திறன் சார்ந்தவர்களை உருவாக்காமல் போய்விடக்கூடிய அபாயம் உள்ளது. இங்கு தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் இருப்பவர்கள், பயன்படுத்தத் தெரிந்தவர்கள் ஒருவிதமான கல்வியைக் கற்று முன்னேறக் கூடிய சூழலும் அதில் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் பின்தங்கி விடக்கூடிய அபாயமும் உள்ளது.
இணையவழிக் கற்றலால் உடல் சார்ந்த பிரச்சனைகள் மனம் சார்ந்த மனவெழுச்சிகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதனை மிகச்சரியாக எதிர்கொள்வதற்குப் பெற்றோரும் மாணவர்களும் முழு முயற்சியாக வீறுகொண்டு எழுந்து வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வெண்டும். கிராம அளவில் இருக்கும் படித்த இளைஞர்கள் சிறந்த வழிகாட்டிகளாக இருந்து கல்வி என்னும் தீபத்தை அணையாமல் பாதுகாக்க வேண்டிடும்.
கூத்தப்பாடி பழனி
தருமபுரி
249ஆவது இதழில் பெட்டிமுடியின் குமுறல் என்ற கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றுமொரு சோக செய்தியை இன்றைய தினம் பார்க்க நேர்ந்தது. கேரள மாநில அரசின் புவியியல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக தாங்கள் வசித்த இடத்தை விட்டு இடம் பெயரும் சூழ்நிலை நேர்ந்துள்ளதை நினைக்கும் பொழுது மனம் பதைக்கிறது. இருந்தபோதிலும் அவர்கள் தங்கள் உயிரைக் காக்கும் பொருட்டு அவ்விடத்தைவிட்டு இடம் பெயர்வது தவிர்க்க இயலாதது. அந்த மக்களின் சோகம் என்றுதான் தீருமோ. கேரளா மாநில அரசாங்கம் தக்க உதவிகள் செய்து மாற்று இடம் கொடுத்து அவர்கள் வாழ்வுக்கு வழி செய்தால் சந்தோசமாக இருக்கும்.
குமார்
கோவை
நிசப்தத்தின் ஆணிவேரைப் பேரிறைச்சலுடன் அசைக்கும் கனமான கனத்தில்தான் கவிதைகள் பிறக்கின்றன. கீதா சுகுமாரன் சமகாலத்திய பேரிடரை மிகவும் நுட்பமாகத் தனது கவிதையில் கையாண்டுள்ளார். ‘அடுக்கு நந்தியாவட்டையில் காம்பு ஒடிந்து பால் வழிந்துகொண்டிருந்தது’ என்ற படிமத்தின் வாயிலாகப் பெண்களின் சமகாலம் கழுத்துகள் துண்டிக்கப்பட்ட தும்பியின் வாழ்வாய் சமையலறையை கடந்துகொண்டிருக்கிறது என்ற பெருங்கவலையை வாசகர்களுக்கு கடத்துகிறது.
“அணில்களும் பறவைகளும் சாலைக்கும் பூங்காவுக்குமிடையில் முகக்கவசமின்றி நகரும் வேளையில்” என்ற வரிகளில் விலங்குகள் எப்பொழுதும் சுதந்திரமாகவும் பேராபத்தின்றியும் அலைந்துகொண்டேதான் இருக்கும், மனிதனின் நிலைதான் கவலைக்கிடம் என்பதையும் மனித மனம் சுருங்கி மனிதனால் மனிதனே அழியும் ஆட்கொல்லியாகிவிட்ட சூழலையும் விளக்குகிறார். வீடு என்பது வீடுமட்டுமன்று அவை மனிதனின் மனக்கூடு என்றும் மனிதனின் மனம் இயங்கும் ஆற்றல் வீட்டில்தான் அளவிடப்படுகிறது என்ற உண்மையையும் மிகச் சிறப்பாக கூறியுள்ளார்.
‘பழங்கதைகளின் களிம்புகளும் தோல் மடிப்புகளின் அதிர்வுகளும் தேவைப்படுகின்றன’ என்று நாம் இழந்த பழைமைகளையும் அவற்றால் ஏற்பட்டுள்ள தீங்குகளையும் வாசகர்களுக்கு நினைவூட்டியுள்ளார். கீதா சுகுமாரனின் கவிதைகள் மனிதன் பழைமையை இழந்து அவன் பெற்ற அவலத்தை அடிக்கோடிடுகிறது.
வீ. பூமிநாதன் செங்கம்
திருவண்ணாமலை